சிவப்பு நிற ரோஜா

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 21,224 
 

விவேக்கின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. அவள் எப்படி இருப்பாள்? அழகாக இருப்பாளா? மெல்லிசாக இருப்பாளா? என மனது பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டது.
அவளை அவனுக்கு கடந்த மூன்று வருட காலமாகத் தெரியும். ஆனால் அவளை அவன் பார்த்ததில்லை. இருந்தாலும் அவர்கள் இருவரும் அன்று சந்தித்துக்கொள்வதென்று தீர்மானித்திருத்தார்கள். கொழும்பு ரயில்வே ஸ்டேசனில் காலை ஒன்பது மணிக்கு. இப்போது எட்டு மணி ஐம்பது நிமிடங்களாகின்றன. இன்னும் பத்துநிமிடங்களில் அவளைச் சந்தித்து விடலாம். அவளைக் கண்டுபிடிக்க அவன் ஏற்பாடு செய்திருந்த அடையாளம், அவள் தனது கையில் ஒரு சிவப்பு ரோஜாவுடன் கண்டி டிக்கட் கவுண்டருக்கு வெளியில் நிற்க வேண்டும்.
அவர்கள் இருவருக்கிடையிலும் ஏற்பட்ட பழக்கம் வித்தியாசமானது. அவன் ஒருமுறை அவன் நண்பன் வீட்டுக்குச் சென்ற போது அங்கே கவிஞர் வைரமுத்துவின் கவிதைப் புத்தமொன்றைக் கண்டு இதனை இரவல் வாங்கிக் கொண்டுவந்தான். அதனை புரட்டிப் படித்தபோது புத்தகத்தில் காணப்பட்ட வெற்றிடங்களில் எல்லாம் பென்சிலில் மெலிதாக, முத்தான கையெழுத்தில் பல குறிப்புகள் காணப்பட்டன. அவற்றைப் படிக்க அதனை எழுதியது யார் என்று அறிய ஆர்வம் ஏற்பட்டது. அவன் புத்தகத்தை மீண்டும் ஆரம்பம் முதல் புரட்டிப் பார்த்தான். நூலின் இரண்டாம் பக்கத்தில் சொந்தக்காரியின் பெயரும் முகவரியும் அதே கையெழுத்தில் இருந்தது. கட்டாயம் அவள் கவிதையில் ஆர்வமுள்ளவளாகத்தான் இருக்க வேண்டும். அவன் மனம் கூறியது.

அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தனக்குத் தெரிந்த ஒரு கவிதையும் வைத்து அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதனை அவன் தபாலில் போட்டு விட்டு அதற்கு பதில் வருமா? இல்லையா? என தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தான். வீட்டுக்கு வெளியில் தபால்காரன் சைக்கிள் பெல்லை அடித்த போதெல்லாம் தனக்கும் கடிதம் வந்திருக்குமா என்று அவன் மனது துடியாய்த் துடித்தது. இப்படித் தவிர்த்துத் தவிர்த்து ஏமாந்து போய் நம்பிக்கையை கைவிட்டிருந்த போதுதான் அவளிடம் இருந்து பதில் கடிதமொன்று வந்தது.

அந்தக் கடிதத்தைத் திறக்கும் போது அப்பப்பா அவன் மனது பட்டப்பாடு, அதனை விவரிக்க முடியாது. அதனைத் திறந்து படிக்கும் முன்னரே அவன் ஆவல் அவனை முந்திக் கொண்டு, அவள் என்ன எழுதியிருப்பாள் என்று யோசித்து கலவரம் கொண்டது. ஆனால் அந்தக் கடிதத்தில் அவனைக் கவரக்கூடிய விதத்தில் ஒன்றுமே அவள் எழுதியிருக்கவில்லை. யாரோ முகந்தெரியாத ஒரு அந்நியனுக்கு எழுதும் கடிதம் போல் பட்டும் படாமலும் அவள் மிகுந்த கவனத்துடன் எழுதியிருப்பது போல் அவன் மனதுக்குப்பட்டது. இருந்தாலும் அதுவே அவனது ஆர்வத்தைத் தூண்டுவதற்குப் போதுமானதாகவும் இருந்தது.

அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் அவர்கள் நூற்றுக்கணக்கான கடிதங்களைப் பறிமாறிக் கொண்டார்கள். இதற்கிடையில் விவேக் தனது உயர் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பை முடித்திருந்தான். அவனுக்கு பொறியியலாளராக கொழும்பில் வேலையும் கிடைத்திருந்தது. அவளுக்கும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்றில் பதவி கிடைத்துள்ளதாகவும், அத்துடன் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தும் மேற்கொள்வதாகவும் எழுதியிருந்தாள்.

அவர்கள் இருவருமே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமது கடிதங்களில் காதல் என்ற வார்த்தையைத் தப்பித் தவறியும் கூட பயன்படுத்தவில்லை. எனினும் அவர்களுக்கிடையில் ஏதோ இனந்தெரியாத புரிந்துணர்வு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டது போல் உணர்ந்தனர். அவன் அவளுக்கு எழுதிய கடிதமும் அவள் அவனுக்கு எழுதிய ஒவ்வொரு கடிதமும் அவர்கள் இதயங்களில் நன்கு போஷாக்குள்ள ஈரநிலத்தில் வேர்விட்டு முளைகொண்டன.

அந்த எல்லாக் கடிதங்களுமே தண்டவாளத்தில் மெல்ல நகரும் ரயில் பெட்டிகளைப் போல ஒரே புள்ளி நோக்கியே அவர்களை நகர்த்திச் சென்றன. அந்த புள்ளிதான் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள வேண்டுமென்பது. ஒரு முறை அவளது புகைப்படம் தனக்கு வேண்டுமென அவன் அவளைக் கேட்டிருந்தான். ஆனால் அவள் அதற்கு மறுப்புத் தெரிவித்து எழுதி ஒரு காரணத்தைக் குறிப்பிட்டிருந்தாள். அவன் அவள் மீது அத்தனை கரிசனை மிக்கவனாக இருப்பதாக இருந்தால் தனது உருவம் எப்படி இருந்தால் தான் என்ன? என்று அவனிடம் பதில் கேள்வி கேட்டிருந்தாள். அதனைப் படித்தவுடன் அவனுக்கு என்னவோபோல் இருந்தது. அவள் தன்னை தவறாகக் கருதியிருப்பாளோ? என மனவருத்தப்பட்டான்.

அவர்கள் இருவரும் ஒரு போதும் தமது வயது என்ன என்பதையோ, பிறந்த திகதி என்ன என்பதையோ கேட்டுக் கொண்டதில்லை. ஆனால் தாம் ஒருவருக்கென ஒருவர் படைக்கப்பட்டவர் என நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு கிடைக்கப்போகின்றது. அவன் தன் மனதில் தீபமேந்தி சுடர்வளர்த்துக் கொண்டிருந்தவளை இன்று இன்னும் சில நிமிடங்களில் சந்திக்கப் போகின்றான்.

அவன் சரியாக மணி ஒன்பது என்பதை உறுதி செய்து கொண்டவுடன் கண்டி டிக்கட் கவுண்டரை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தான். அவன் தன்னை அவளுக்கு அடையாளம் காட்ட அந்த நீலநிற அட்டையுடன் கூடிய வைரமுத்துவின் கவிதைப் புத்தகத்தை கையில் வைத்திருந்தான். அப்போது ஒரு அழகிய பெண் அவனை நோக்கி வந்தாள். விவேக்கின் மனதில் ஆயிரம் வண்ணக்?????? பளிச்சிட்டன. அவன் முகத்தில் தான் என்ன ஒரு பிரகாசம், அகன்ற நெற்றி, மின்னலென சிறிய பொட்டு, நீண்ட கருவிழிகள் அவற்றில் தீட்சண்யமான பார்வை. கூராக தீட்டப்பட்ட புருவங்கள் உதடுகளில் அலட்சியமான புன்முறுவல் அவள் ஓரக்கண்ணால் அவனையும் அவன் கையில் வைத்திருந்த புத்தகத்தையும் பார்த்தாள். அவள் அந்தத் தோற்றத்தை இறுக்கமாகப் அவன் மனதில் பதித்துவிட்டு அவனைக் கடந்து சென்று விட்டாள்.

விவேக்கின் மனம் மின்னல் தாக்கத்தில் இருந்துவிடுபட்டது போல் இருந்தது. அவன் அவள் சென்ற இடத்தில் இருந்து தன் பார்வையைத் திருப்பி இவள் வந்த இடத்தை நோக்கினான். அங்கே ஒரு பெண் கையில் சிவப்பு நிற ரோஜாவுடன் நின்றிருந்தாள். அவளுக்கு நாற்பது வயதிருக்கும். தலைமுடி இலேசாக நரைக்கவாரம்பித்திருந்தது. அவளைக் கண்டதும் விவேக் ஏமாற்றமடைந்தான். அவனால் அவன் மனதையே நம்ப முடியவில்லை. அவன் அவள் அருகில் சென்று உங்கள் பெயர்தான் தேவிகாவா? என்று சந்தேகத்துடன் வினவினான்.

அந்தப்பெண் கலகலவெனச் சிரித்தாள். பின் அந்தச் சிவப்பு ரோஜா பூவை அவன் கையில் திணித்து சற்று முன் பச்சை சுடிதார் உடுத்து அவ்விடத்தில் இருந்து சென்ற பெண்தான் தேவிகா என்றும், அவள் அதோ தெரியும் ஐஸ் கிறீம் பார்லரில் காத்திருக்கின்றாள் என்றும் அவனை அங்கே வரச்சொன்னதாகவும் கூறி அந்த ஐஸ்கிறீம் பார்லரை சுட்டிக்காட்டினாள். அதைக் கேட்டதும் விவேக்கின் முகத்தில் அசடு வழியத் தொடங்கியது. சிறிது வெட்கமும் ஏற்பட்டது.

அவன் மனம் அந்த சிவப்பு ரோஜாவுடன் அந்த ஐஸ்கிறீம் பார்லரை நோக்கி வானத்தில் பறக்கத் தொடங்கியது.

Print Friendly, PDF & Email

1 thought on “சிவப்பு நிற ரோஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *