இளம் கன்றுகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 8,651 
 

சென்னை ஈ.ஸி.ஆர் சாலையில் பற்பல அடர்த்தியான மரங்களுக்கு அப்பால் ஓசையின்றி இயங்கிக் கொண்டிருந்தது, அந்தப் பிரபலமான ட்ரைவ்-இன் ரெஸ்டாரண்ட்.

ஆங்காங்கு ஒழுங்கற்ற வரிசைகளில் பல்வேறு இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஓய்வுடன் நின்றிருந்தன. அந்த வெளிர் நீல நிற புத்தம் புதிய இன்னோவா க்ரெஸ்டா காரில் ட்ரைவிங் சீட்டில் வினோத் அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றிலும் அந்தக் காரில் அவன் நண்பர்கள் ஐந்து பேரும் கையில் புகையும் சிகரெட்டுடன் அமர்ந்து பெண்களைப்பற்றி வம்படித்துக் கொண்டிருந்தார்கள். .

நண்பர்கள் அனைவரும் முரட்டுப் பணக்காரர்கள். வளர்ப்பு சரியில்லை. அதனால் இளம் வயதிலேயே எல்லாக் கெட்ட பழக்கங்களும் அத்துப்படி. தவிர நண்பர்கள் அனைவருக்குமே வயசுப் பெண்களின் சகவாசம் உண்டு.

அவர்கள் அனைவருக்குமே புரிதலுடன் கூடிய பண்பான, மரியாதையான காதல் என்றால் என்னவென்றே தெரியாது. வயசுப் பெண்களை பட்சி; பறவை; டுபுக்கி; பியர்ஸ் என்று அந்த நேரத்திற்கு என்ன தோன்றுகிறதோ அப்படித்தான் அழைப்பார்கள். பட்சி பறந்துடிச்சி; பட்சி சிக்கிடுச்சி; பறவை படுத்திடிச்சி; பியர்ஸ இன்னிக்கி கிஸ்ஸடிச்சேன் என்று பண்பாடே இல்லாமல் பேசிக் கொள்வார்கள்.

ஜெகன், தான் படித்த செக்ஸியான மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக் சொல்ல, அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதனால் உற்சாகமான ஜெகன், “கடவுள் ஒருத்தன் முன்னால வந்தாராம். உனக்கு ஒரு வியாதியை தண்டனையாக தரப்போறேன். கைகள் நடுங்கும் பார்க்கின்ஸன் வேண்டுமா; அல்லது அடிக்கடி மறந்து விடக்கூடிய அம்னீஷியா வேண்டுமா என்பதை இப்போதே நீ முடிவு பண்ணிச் சொல் என்றாராம். நம்ம ஆளு ரொம்ப யோசிச்சி எனக்கு கைகள் நடுங்கும் பார்க்கின்ஸனே கொடுத்து விடுங்கள் என்றானாம்.

கடவுள் எதற்காக இந்த முடிவு என்று நான் தெரிந்து கொள்ளலாமா என்றாராம். உடனே நம்ம ஆளு அம்னீஷியா என்றால் விஸ்கி பாட்டில் எங்கே வைத்தேன் என்பதே மறந்து விடும். பார்க்கின்ஸன் என்றால் விஸ்கி க்ளாஸ் நடுங்கி பாதி விஸ்கி வேஸ்டானாலும் மீதி விஸ்கியை குடித்து விடுவேனே” என்றானாம். கடவுள் ‘ங்கே’ என்று விழித்தாராம்.

மறுபடியும் அனைவரும் சிரித்தனர்.

வினோத்துக்கு விக்கல் எடுத்தது.

“யார்ரா வினோத் உன்னை நினைக்கிறா?”

“அதை யார் கண்டா?”

“ஒருவேளை நளினி நினைக்கிறாளோ என்னவோ?” கரண் வம்பிற்காகவே கேட்டான்.

நளினி இரண்டொரு தமிழ்ப் படத்தில் சின்ன ரோல்களில் வந்திருக்கிறாள். பிக் பாஸ் முதல் எபிசோடில் வந்தாள்.

“எங்கேடா அவளை, ஆள் அட்ரஸையே காணோம்?”

“நீதான் அவளைக் கழட்டி விட்டுட்டியே – வேணாம்னு…”

“அவளைப் போன வாரம் நம்ம அருண் பார்த்தானாம்டா.”

“எங்கே பார்த்தானாம்?”

“அது தெரில, பார்த்தேன்னான்.”

“எப்படிரா இருக்காளாம்?”

“ரொம்ப டல்லாயிருந்தான்னு சொன்னான். ஆனா, உன்னை ரொம்பவும் விசாரிச்சதா சொல்லச் சொன்னாளாம்.”

“அதெல்லாம் வக்கணையா விசாரிச்சிடுவா… ஆனா எனக்குத்தான் சரிப்பட்டு வரலை…” வினோத் புதிய சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தபடி சொன்னான்.

“ஆமா, உனக்கு எவதான் சரிப்பட்டு வந்திருக்கான்னு சொல்லு பார்க்கலாம்?”

“பல்லி மாதிரி இருக்காடா…”

“வினோத், இந்த வார்த்தையை நம்ம குள்ளன்கிட்ட மட்டும் மறந்துபோய்க் கூடச் சொல்லிராதே… அந்த இடத்திலேயே உன்னைச் சப்பிடுவான் சப்பி…!”

“கிழிச்சான்.”

“உனக்குக் குள்ளனைப் பத்தித் தெரியாதுரா வினோத்… குள்ளன் பயங்கர கட்ஸ் உள்ளவண்டா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே மயிலாப்பூர்ல நளினிக்காக பெரிய ரசிகர் மன்றமே ஓப்பன் பண்ணினவன் அவன்! ஞாபகம் வச்சுக்க.”

“ஆமா, குள்ளனை நீதான் மெச்சிக்கணும். சரியான மடையண்டா அவன்! இன்னும் சொல்லப்போனா கொஞ்சம் மரை கழண்டவன்! அந்தப் பயலைப் பத்தி நீ என்கிட்ட வந்து பேசறே…! சரிசரி எவன் எவளுக்கு ரசிகர் மன்றம் ஓப்பன் பண்ணினா எனக்கென்ன…” என்ற வினோத் சில நிமிடங்கள் மெளனமாக இருந்து விட்டு, “அருண் வேற என்னடா சொன்னான், நளினி பத்தி?” என்று கேட்டான்.

“எவனோ கோயமுத்தூர் காரணாம்… ஸ்டான்லில மெடிகல் படிக்கிறானாம். நளினி இப்ப அவன் கூடத்தான் அதிகமா சுத்தறாளாம்…”

“என்னைக் கேட்டாக்க, நளினி ரொம்ப பாவம்னுதான் சொல்லுவேன். வெளியில சொல்ல முடியாத ஏதோ பெரிய ப்ராப்ளம் அவளுக்கு இருக்கணும்… அதான் கிடந்து இப்படி அலையறா…” என்றான் சிவா.

“எவனுக்குத்தான்டா இல்லை ப்ராப்ளம், அதுக்காக இப்படியா?” வினோத் கொஞ்சம் கோபத்துடன் கேட்டான்.

“வினோத், கொஞ்ச நாளாவே உன்னைக் கேட்கணும் கேட்கணும்னு நெனச்சிக்கிட்டே இருந்தேன். இன்னிக்குத்தான் அதுக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு… நளினி என்கிட்ட ஒருநாள் சொன்னாடா… என்னமோ திடீர்னு ஒருநாள் நீ அவளைப் பார்த்து என் தங்கை மாதிரின்னு சொல்லிட்டியாமே, நெஜமாவா?” கரண் கேட்டான்.

நண்பர்கள் சிரித்த சிரிப்பில் இன்னோவா குலுங்கியது.

வினோத் சிரிக்கவில்லை. பதில் சொல்லாமல் மிகக் கவனமாக சிகரெட் புகையை வளைய வளையமாக ஊதிக் கொண்டிருந்தான்.

“ஏய் மச்சி, கேக்கறது காதில் விழுதா இல்லையா?”

“விழுது விழுது.”

“அப்ப பதில் சொல்லேன்!”

“அதான் நளினியே உன்கிட்ட சொல்லிட்டான்னு சொல்றியே… அப்புறம், என்ன மயிருக்கு என்னை வந்துவேற கேக்கறே…?”

கரண் சில நிமிடங்கள் வினோத்தையே ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏண்டா திடீர்னு அவகிட்ட அப்படி மடையன் மாதிரி சொன்னே?”

“என்னமோ தோணிச்சி.”

“அதெப்படித்தான் தோணுமோ? திடுதிப்னு…”

“ஏ வினோத், அங்கே தூரத்திலே பாரேன். வேகமா ஓடி வர்ரது நம்ம அருண்தானே? – கரண் பட படப்புடன் கேட்டாள்.

“ஆமா… அருண்தான் வரான். ஏன் இவ்வளவு ஸ்பீடா ஓடி வரான்?”

“சம்திங் ராங்டா…”

அருண் மூச்சிரைக்க பதற்றத்துடன், “வினோத், நம்ம நளினி செத்துட்டாடா…” என்றான்.

“சும்மா எதையாவது உளறாதே… நளினியாவது சாகிறதாவது…” நண்பர்கள் எல்லாருமே நம்ப முடியாமல் மறுத்தார்கள்.

“ப்ராமிஸாடா… இப்பத்தான் நளினியோட தம்பியே என்கிட்ட சொன்னான். அதுதான் ஓடி வரேன்.”

“என்னடாது அநியாயமா இருக்கு. அப்படி எப்படிரா ஒருத்தி திடீர்னு செத்துருவா?”

“தற்கொலை எதுவும் பண்ணிக்கிட்டாளா?”

“அபார்ஷனாம்டா!”

“அய்யய்யோ!”

“எவனோ ஒரு அனுபவம் இல்லாத டாக்டர்கிட்டே அபார்ஷன் பண்ணிக்கப் போயிருக்கா. அதுவும் கொஞ்சம் லேட்டா வேற போயிருக்கா. அந்த டாக்டர் அவன் பாட்டுக்கு யூட்ரெஸ்சையே ரப்ச்சர் பண்ணிட்டான். இந்த லட்சணத்துல அதைச் சரியா சுத்தமும் பண்ணாம விட்டுட்டான் போல… நிறைய பீஸ்ஸஸ் உள்ளேயே இருந்து – நேத்திக்கி அது ரொம்ப சீரியஸாகி, இன்னிக்கி மார்னிங் செத்துட்டாளாம்…”

நண்பர்கள் அனைவரும் சிறிது நேரம் நிசப்தமாக இருந்தார்கள். மரத்திலிருந்த காக்காய் ஒன்று பெரிதாக கரைந்தது.

“நளினி கன்ஸீவ் ஆனதுக்கு எவன்டா காரணமாம்?”

“அதை யார்கிட்டே போய் கேட்க முடியும்?”

“அநியாயமான சாவுடா…”

“அதுவும் நளினிக்குப் போய் இப்படி ஒரு சாவுன்னா நம்பவே முடியலை.”

“குள்ளனுக்கு தெரிஞ்சா உயிரையே விட்டாலும் விட்டுருவான்!”

“அபார்ஷன் அவ்வளவு சிக்கலான விஷயமாடா கிட்டி?”

மெடிகல் படிக்கும் கிட்டி, “இன்ஸ்ட்ரூமெண்ட் யூஸ் பண்ற நிலைமைக்குப் போயிடுச்சுன்னா கவனமாகத்தான் செய்தாகணும்… இல்லேன்னா இப்படித்தான் ஆகும். இன்ஸ்ட்ரூமெண்டை யூட்ரெஸ்ல போட்டு அந்த ‘கன்செப்டிவ் ப்ராடக்டை’ பிச்சுப் பிச்சு எடுப்பானுங்க. அதுவும் ‘நீ செஸ்ட்’ பொஸிஷன்ல ஸ்பைனல் அனஸ்தீஷியா மெதட், ரொம்பக் கொடுமையா இருக்கும் பார்க்கிறதுக்கு…”

“சொல்லாதரா ப்ளீஸ்…”

“பொறுப்பாளி எவன்னு தெரியலை… கையை வீசிகிட்டு ஜாலியா அவன் பாட்டுக்கு போயிட்டான். மாட்டிக்கிட்டு உயிரை விட்டது நளினிதான்….”

“அவகிட்ட நான் எத்தனையோ தடவை படிச்சிப் படிச்சி சொல்லியிருக்கேன்டா கிட்டி… நளினிதான் காதிலேயே போட்டுக்கலை, அஸால்டா இருந்துட்டா…!” வினோத் மிகவும் வருத்தத்துடன் சொன்னான்.

“கிட்டி, நீ உன்னோட மெடிகல் கோர்ஸ் முடிச்சி ப்ராக்டீஸ் பண்றப்ப – இந்த மாதிரி எவளாவது அபார்ஷன் கிபார்ஷன்னு வந்தாக்க கொஞ்சம் ஒழுங்கா பார்த்துப் பண்ணுடா…”

“முடிஞ்சா பீஸ் கூட வாங்காமே இலவசமாவே பண்ணிவிடு… ஏதோ நம்மால் முடிஞ்ச சேவை!”

“இப்ப நாம் என்னடா பண்ண, நளினியோட தம்பியைப் பார்த்து துக்கம் எதுவும் கேட்கணுமா?”

வினோத், “நான் வரலை துக்கம் கேக்கறதுக்கெல்லாம்…” என்றான்.

“மச்சி, இது ஒரு பார்மாலிட்டிதாண்டா.”

“ஆமா நளினியே போயாச்சு!”

“அவன் வரலேன்னா கிடக்காண்டா, நாமெல்லாம் போகலாம்.”

“மணி என்ன ஆகுது?” வினோத் அலுப்புடன் கேட்டான்.

“ஏழு…”

“மார்னிங் எட்டு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினேன்…”

“சரிடா அலுத்துக்காத… வா, இப்பவே நேரா நளினியோட வீட்டுக்குப்போய் அவளோட ப்ரதரைப் பார்த்து துக்கம் கேட்டுட்டு வந்துரலாம். எதுக்கு வம்பு? போய்க் கேட்கலைன்னா தப்பா நெனச்சாலும் நெனச்சிடுவான்…”

“இப்பவேவா போகணும்… எழாயிடுச்சேடா மணி.”

“பரவாயில்லை, கிளம்பு போகலாம்…” எல்லோரும் கிளம்பினார்கள்.

நளினியின் சகோதரனைப் பார்த்து துக்கம் விசாரித்துவிட்டு வினோத் வீட்டை அடைந்தபோது மணி இரவு பத்து.

அம்மா காத்துக் கொண்டிருந்தாள்.

“காலேஜ் இருந்தாத்தான் க்ளாஸ்; ட்யூஷன் அது இதுன்னு சொல்லிட்டு லேட்டா வருவே. இப்ப காலேஜ் லீவு… இப்பவும் லேட்டா வரே…”

“என் ப்ரென்ட் ஒருத்தி செத்துட்டாம்மா… துக்கம் கேட்டுட்டு வர்றதுக்கு லேட்டாயிடுச்சி…”

“யார்ரா அந்த ப்ரென்ட்? எப்படிச் செத்தா?”

“அபார்ஷன்.”

அம்மாவின் முகத்தில் கலவரம் படர்ந்தது.

“சரி வா, சாப்பிடு… தட்டு எடுத்து வைக்கிறேன்.”

“இல்லம்மா எனக்கு எதுவும் வேண்டாம்…. மனசு சரியில்லை.”

வினோத்தின் தாமதமான வருகையை, அவனுடையை அம்மாவின் பின் மெளனமாக நின்றபடியே கவனித்துக் கொண்டிருந்த அவனின் அப்பா, அவனை எதுவும் கேட்க ஆரம்பிப்பதற்கு முன்பே, வினோத் வேகமாக மாடிப்படியேறி அவனது அறைக்குள் போய் கதவைத் தாளிட்டுவிட்டு அப்படியே படுக்கையில் விழுந்தான்.

நளினியைப் பற்றிய சம்பவங்கள் ஒவ்வொன்றாக ஞாபகத்தில் வந்தன. தூக்கம் வராமல் அவளை நினைத்தபடியே புரண்டு கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

1 thought on “இளம் கன்றுகள்

  1. ஆர்வத்துடன் தொடங்கி சோகத்தில் முடிந்தது, இந்தக் கதை. ஏதோ ஒரு பெரிய கதையில் ஒரு பகுதி மட்டும் படிச்ச மாறி இருக்கு. படிச்ச பின் பெரிய “?” தான் மனதில் மிச்சம், கதையின் ஒரு முக்கிய பாத்திரத்திற்கு ஏன் இந்த விளைவு என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *