(2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காட்டுராஜா சிறுத்தையை அடித்துக் கொன்றது. அது வழக்கம்போல், சிறுத்தையின் ஈரலை மட்டும் உண்டுவிட்டு அப்பால் சென்றது. அதனை மறைவிலிருந்து, அச்சவிழிகளால் பார்த்துக்கொண்டிருந்த குள்ளநரி ஒன்று, விரைந்து சென்று, மீதமிருந்த சிறுத்தையின் எச்சில் மாமிசத்தைப் புசிக்கலாயிற்று.
வயிறு நிறைந்த மகிழ்ச்சியில், பெரிதாக ஊளையிட்டது.
மரக்கிளை வழியாக தாவிவந்த மந்தி ஒன்று, இதனைப் பார்த்துவிட்டு வியப்புடன் வினாவியது.
“சிறுத்தையை நீயா கொன்றாய்?’
குள்ளநரிக்கு மின்னலென மூளையில் பொறி தட்டியது. பலமாகத் தலையசைத்தபடி, இதென்ன கேள்வி?……. பார்த்தாலே தெரியவில்லையா?…. கொன்றேன்…. தின்றேன்… உனக்கும் பங்கு வேண்டுமா?” எனக்கேட்டது.
மந்தி, அச்சப் பயத்துடன் கிளைகளில் தாவியது.
குள்ளநரியின் தீரச்செயல் காடெங்கும் பரவியது. அவ்வழியால் மீண்டும் வந்த காட்டு ராஜா கூட நரிக்கு மரியாதை செய்து, பாதைமாறிப் போகத்தொடங்கியது.
– குறுங்கதை நூறு (செம்பியன் செல்வன்), டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.