ஓடக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 4,903 
 

தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவு புண்ணியம்? எவ்வளவு நல்லது?

ஆனால், நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும்… எப்படி?

காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவரால் அருளி செய்யப்பட, மிக எளிய அற்புதமான கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட, முப்பது வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்து பலன்களையும் பெற்று தரக்கூடிய அந்த ஒன்பது வரிகளை மட்டுமே உடைய ராமாயணம் உலக நன்மைக்காக இதோ:

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்

சிவதனுசாக்ரிஹத் சீதா ஹஸ்தகரம்

அங்குல்யா பரண சோபிதம்

சூடாமணி தர்சனகரம்

ஆஞ்சநேயமாஸ்ரயம்

வைதேஹி மனோகரம்

வானர சைன்ய சேவிதம்

சர்வமங்கள கார்யானுகூலம்

ஸ்ரீ ராமச்சந்திர பால்யமாம்.

இவ்வளவுதான். முழு ராமாயணமும் படித்து முடித்தாகிவிட்டது.

ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்.

சில விஷயங்கள் பாரதத்தில் தேடும்போது கிடைக்காது. ஆனால் பாகவதத்தில் கண்ணில் படும்.

ராமாயண விஷயங்கள் பாகவதத்தில் படிக்கும்போது, அட இதை எப்படி ராமாயணத்தில் நாம் படிக்கவில்லை என்று தோன்றும். அதற்கு எல்லாம் காரண காரியங்கள் அவசியமில்லை. அதில் உள்ளடங்கிய நீதிகள் மட்டுமே முக்கியம்.

ராமனை உலகமே அறியும் எனும்படி அவன் மஹிமைகள், பெருமைகள் எங்கும் பரவி இருந்தது. ராமன் காட்டிற்கு போனபோது அவனுடன் சீதை லக்ஷ்மணன் செல்கிறார்கள். அப்போது கங்கை நதியை கடந்து அவர்கள் அக்கரை செல்ல வேண்டும்.

அந்த சந்தர்ப்பத்தில்தான் படகோட்டி குகன் முதன் முதலாக ராமனைப் பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும் குகனுக்குத் தெரியும். நாட்டை இழந்து தன் முன் மரவுரி தரித்து நிற்கும் ராமனை காண முடியாமல் கண்களில் கண்ணீர்த் திரை.

“என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா?” என பவ்யமாக பக்தியோடு கேட்கிறான் குகன்.

“கங்கையைக் கடந்து அக்கரை செல்ல வேண்டும்…”

அப்போது ஒரு ஓடம் யாரையோ இறக்கி விட்டுவிட்டு புறப்படத் தயாராகியது. கேவத் என்பவன் ஓடக்காரன்.

குகன் அவனை அணுகி, “கேவத் உன் ஓடத்தை இங்கே கொண்டு வா.” என்றான்.

ஓடம் அவர்களை நெருங்கி வருகிறது…

“கேவத் இதோ நிற்கிறார்களே இவர்கள் யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜா ஸ்ரீராமர்; அது அவர் பாரியாள் சீதாதேவி; அது லக்ஷ்மணன் அவருடைய வீர சகோதரன். இவர்களை அக்கரை கொண்டுசேர்…”

கேவத் அவர்கள் அனைவரையும் மரியாதையுடன் வணங்குகிறான். அவன் தினமும் காலையில் எழுந்திருக்கும் போதும், இரவிலும் ராம நாமம் சொல்பவன்.

“ஐயா குகனே, நான் இவர்களை கங்கையின் மறுகரை கொண்டு சேர்க்கிறேன். ஆனால் முதலில் இந்த ராமரின் கால்களை நன்றாக கழுவி விட வேண்டுமே… காலில் தூசு தும்பு இருக்கக் கூடாது.”

“ஓ அவருக்கு பாத பூஜையா, அதை அப்புறம் மறுகரையில் இறக்கி விடும்போது வைத்துக்கொள் கேவத்.”

“அப்படி இல்லை ஐயா… என் ஓடத்தில் ஏறுவதற்கு முன்னால்தான் அதை நான் செய்ய வேண்டும்.”

கோபத்தால் குகனின் கண்கள் சிவந்தது. என்ன பிடிவாதம் இந்த கேவத்திற்கு!! ஆனால் கேவத், குகன் கோபத்தைக் கண்டு கொள்ளாமல் நேராக ராமனை வணங்கிவிட்டுச் சொல்கிறான்…

“மஹாராஜா நான் ஒரு ஏழை ஓடக்காரன். இந்தப் பழைய சிறிய ஓடம்தான் எனக்கு ஜீவனோபாயம். இதில் கிடைக்கும் சிறிய வருமானம் என் மனைவியையும், என்னையும் வாழ வைக்கிறது. என்னிடம் வேறு ஓடம் கிடையாது. இன்னொன்று வாங்க வசதியும் இல்லை…”

ராமர் “எதற்காக இப்படியெல்லாம் பேசுகிறாயப்பா?” என்று கேட்டார்.

“எனக்கு தாங்களைப் பற்றி நன்கு தெரியும். தங்கள் காலில் உள்ள தூசி பட்டால் போதும் கல்லும்கூட பொன்னாகும். என் ஓடமும் உங்கள் கால் தூசி பட்டு பொன்னானால் நான் எப்படி ஓடமில்லாமல் வாழ்வேன்? அந்த ஆபத்து என் ஓடத்துக்கு வரக்கூடாது என்பதற்காகவே, நீங்கள் என் படகில் கால் வைக்கும் முன்பே, உங்கள் கால்களை தூசி இல்லாமல் முதலில் கழுவிட ஆசைப்பட்டேன். என்னையும் என் படகையும் நீங்கள்தான் ரக்ஷிக்க வேண்டும்.”

ராமர், சீதை, லக்ஷ்மணன், குகன் அனைவரும் கேவத்தின் எளிமை, பக்தி, சமயோசிதம் ஆகியவற்றை ரசித்து மனமார மகிழ்கிறார்கள்.

கேவத் அவன் மனைவி இருவரும் கங்கை ஜலத்தால் ஸ்ரீ ராமரின் பாதங்களைக் கழுவி வணங்கி அந்த ஜலத்தை ப்ரோஷித்துக் கொள்கிறார்கள். கேவத் தனது அங்கவஸ்திரத்தால் ஸ்ரீ ராமர் பாதங்களை துளியும் தூசு இல்லாமல் நன்கு துடைக்கிறான். அதன்பிறகு அவர்களை கங்கை நதியின் மறு கரையில் கொண்டு சேர்க்கிறான்.

அவர்கள் மறுகரை வந்து சேர்ந்ததும், ராமரின் பாதங்களை தனது உள்ளங் கையில் முதலில் வைத்துவிட்டு இறங்க வேண்டும் என்று சொல்கிறான். இவ்வாறு ஸ்ரீ ராம பாத சேவை முழுதும் பெறுகிறான் கேவத். கையைப்பிடித்து மற்ற எல்லோரையும் பொறுப்புடன் படகில் இருந்து கரை இறக்குகிறான் கேவத்.

சீதாதேவி, மன நிறைவோடு தனது மோதிரம் ஒன்றைக் கழற்றி ஸ்ரீராமரிடம் கொடுத்து, “இதை அவருக்கு பரிசாகக் கொடுங்கள்” என்கிறார்.

“அம்மா ஸ்ரீராமருக்கும் உங்களுக்கும் சேவை செய்ய பரிசு வாங்கினால், என் புண்ணியம் குறைந்து விடும்…” என பரிசை ஏற்க மறுக்கிறான்.

“ஓ அப்படியா கேவத், நீ இதை பரிசாக ஏற்க வேண்டாம். எங்களை ஓடத்தில் ஏற்றி கங்கையை கடக்க செய்ததற்கு கூலியாக ஏற்றுக்கொள்..” என சிரித்துக்கொண்டே அந்த மோதிரத்தை அவனிடம் நீட்டுகிறார் ஸ்ரீராமன்.

“ஸ்ரீராமா, ஒருவேளை நான் பரிசாகவாவது ஏற்றுக் கொண்டிருப்பேன்… ஆனால் நிச்சயமாக கூலி வாங்க மாட்டேன்.”

“என்னப்பா கேவத் நீ பேசுவது வினோதமாக இருக்கிறதே, ஏன் என்னிடம் கூலி வாங்க மாட்டாய்? நீ எனக்குப் புரியும்படி சொல்லேன்…”

“ஒரு நாவிதன் மற்றொரு நாவிதனுக்கு சேவை செய்யும்போது கூலி வாங்க மாட்டான். துணி வெளுப்பவனும் அப்படித்தான்.”

“புரியவில்லை, விளக்கமாகச் சொல்… எனக்கு நீ அவ்வாறு சேவை செய்யவில்லையே, நீ வெறும் ஓடம் ஒட்டிதானே?

“தாங்களுக்கா புரியாது? என்னைச் சோதிக்கிறீர்கள். நாம் இருவருமே ஓடக்காரர்கள், படகோட்டிகள். நான் ஒரு கரையிலிருந்து இந்த நீரை மட்டும் கடக்க உதவும் வெறும் ஓடக்காரன். தாங்களோ எல்லோரையும் ஜனன மரண துன்பங்களில் இருந்து இந்த ஸம்ஸாரக் கடலிலிருந்து கரை சேர்க்கும் தாரக ராமர்… நாம் இருவருமே ஓடமோட்டிகள்தானே? தொழில் ஒன்றுதானே பகவானே? என்னையும் ஒருநாள் இந்த ஸாரஹீன சம்சார சாகரத்தை கடக்க உதவி செய்யுங்கள்…” ஸாஷ்டாங்கமாக ராமர் காலில் விழுந்து வணங்குகிறான் கேவத்.

ராமர் கண்களின் ஓரத்தில் நீர் கசிகிறது. ஆனந்த பாஷ்பம். என்ன ஒரு அருமையான பக்தன்!!

பகவானிடம் எனக்கு சொத்து கொடு; கார், பங்களா கொடு என்று கேட்காதீர்கள். மஹா பெரிய தனவந்தனிடம், வள்ளலிடம் ஒருரூபாய் காசா எதிர்பார்ப்பது? நமது துன்பங்களைப் போக்கி மாய உலகத்தை நீக்கி அவனுடைய திருவடி தரக் காத்திருக்கிறான். கேவத் நமக்கு இதைப் புரிய வைத்துள்ளான்.

ஒரு படிக்காத ஓடக்காரனிடம் பாடம் படிப்போம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *