கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,755 
 

இரண்டு நாட்களாக யாரிடமும் பேசவில்லை. எப்படி பேசுவது? பேசுவதற்கு ஆள் வேண்டுமே?

தொடர்ச்சியான மழையில் வெள்ளம் வந்ததில் மொத்த நாடும் அழிந்துபோனது. கடல் கொந்தளிப்பும் சேர்ந்துகொண்டதில் எங்கு பார்த்தாலும் தண்ணீர்.

ஆபத்து காலத்தில் பயன்படுமென்று நான் வாங்கி வைத்திருந்த ரப்பர் படகு இருந்ததால் தப்பிக்க முடிந்தது. துடுப்பு வலித்து வலித்து உள்ளங்கை மரத்துப்போய்விட்டது. இனியும் என்னால் இந்தப் படகை ஓட்ட முடியாது. எங்கே போகிறோம்,எங்கே சென்று சேருவோம் எதுவும் தெரியாமல் ஏதோ ஒரு நம்பிக்கையில் மிதந்து கொண்டிருக்கிறது என் படகு. பசி உயிர் போகிறது.

மயக்கம் வருவது போலிரு……. விழித்துப் பார்த்தபோது தூரத்தில் பச்சை பசேலென்று மரங்கள் தென்பட்டன. சிறிய தீவு போலிருந்தது. வேகவேகமாக படகை செலுத்தினேன்.

நிலம்! நிலத்தில் இறங்கி மரங்களை நோக்கி ஓடினேன். நிறைய மாமரங்கள் இருந்தன.மரத்தை சுற்றிலும் மாம்பழங்கள் விழுந்து கிடந்தன. பொறுக்கி எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.

ஏழு பழங்கள் உண்டுமுடித்தபின் பயணக்களைப்பில் அப்படியே படுத்து உறங்க ஆரம்பித்தேன். நான் விழிப்பதற்கு முன் என்னைப் பற்றி அடைப்புக்குறிக்குள் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

[என் பெயர் எக்ஸ். ஆங்கிலத்தில் டபிள்வியூக்கு பின் வரும் எக்ஸ். செயற்கை மழை உருவாக்க அமைக்கப்பட்ட சர்வதேச குழுவின் தலைமை விஞ்ஞானி.

கேல்சியம் குளோரைடு,கேல்சியம் கார்பைடு,கேல்சியம் ஆக்ஸைடு, அமோனியம் நைட்ரேடும் கலந்த கலைவையை காற்றில் செலுத்தினால்,காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி மழை வருவிக்கும் தன்மை உடையவை. மாதம் நான்கு முறை எட்டுமணி நேரம் செயற்கை மழை பொழியவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

என் சிறுவயது முதலே பிற உயிர்களை கொன்று இன்பம் காண்பது எனக்கு பிடிக்கும். ஓணான்,அணில்,புறா,கிளி,குயில் இவையெல்லாம் சிறுவயதில் நான் வேட்டையாடி கொன்றது. பிற உயிர்கள் சாகும்போது கிடைக்கின்ற இன்பத்தை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. இதுதெரியாமல் இந்த குழுவிற்கு என்னை நியமித்தது இந்த அரசின் தவறு!. மாதம் நான்கு முறை உருவாக்க வேண்டிய மழையை தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்வதுபோல் உருவாக்கிவிட்டு நான் மட்டும் தப்பித்துக்கொண்டேன். த்ரில்லாக பயணம் செய்ய வேண்டும் என்று எண்ணியதால் ஒரு ரப்பர் படகு மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன்.ஓரிரு நாட்கள் பயணித்துவிட்டு உலகை அழித்தவன் நான் என்று சத்தம்போட்டு கத்திவிட்டு நானும் செத்துவிடவேண்டும் என்பதே என் திட்டம்.இப்போது நிம்மதியாக மாம்பழம் சாப்பிட்டுவிட்டு உறங்கிக்கொண்டிருக்கிறேன்]

உறக்கம் கலைந்து விழித்தபோது இருட்டிவிட்டிருந்தது. உலகை அழித்துவிட்டேன் என்றல்லவா நினைத்தேன். எப்படி இந்த இடம் மட்டும் எப்படி தப்பித்தது.இங்கே மட்டும் மழை பெய்யவில்லையா? கடலில் பெய்துகொண்டிருக்கும் மழை இந்த சிறிய தீவை மட்டும் நனைக்காமல் பெய்துகொண்டிருக்கிறதே!

ஆச்சர்யத்துடன் நடக்க ஆரம்பித்தேன். செடிகளையும் மரங்களையும் தவிர வேறொன்றும் இல்லை.

பூச்சிகளின் சத்தமும், உயர்ந்த மரங்களிடையே வசிக்கும் பறவைகளின் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன.

இவைகளை அழிக்க என்னால் இயலாமல் போய்விட்டதே என்று வருத்தம் ஏற்பட்டது.

கவலையுடன் ஒரு பாறையில் சாய்ந்து உட்கார்ந்தேன். பாறைக்கு அருகே இருந்த மரத்திற்கு பின் சலசலப்பு கேட்டது. ஒருவித பயம் தொற்றிக்கொண்டது. ஏதேனும் காட்டுமிருகமாக இருக்குமோ என்றெண்ணியபடி கையில் ஒரு நீண்ட குச்சியை எடுத்துக்கொண்டு அந்த மரத்தின் அருகே சென்றேன்.

அங்கே….

ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளது உடலை மூட்டுவரை நீண்ட கருங்கூந்தல் மூடியிருந்தது. வேறு உடைகள் இல்லை. அவள் அருகில் நீண்ட தாடியும் இறுகிய உடலுடன் ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

இவர்கள் இருவரையும் கொன்று விட்டால் போதும். உலகை அழித்தவன் நான் என்கிற சந்தோசத்தில் நானும் மரித்துவிடலாம். சற்றுத் தொலைவில் கூரிய கல்லொன்று கிடந்தது. அதை எடுக்க வேகமாக ஓடியதில் கால் இடறி அந்த கல்லில் விழுந்துவிட்டேன். நெஞ்சிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது.

என் அருகில் அவர்கள் இருவரும் வந்து நின்றார்கள்..

மரண வலியுடன் “உன் பெயர் என்ன?” என்று அந்த இளைஞனை கேட்டேன்.

“இரண்டாம் ஆதாம்” என்று அவன் சொன்னதை கேட்க நான் உயிருடன் இல்லை.

[வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]

Print Friendly, PDF & Email

0 thoughts on “மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *