ஆவி வருது…!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: July 3, 2022
பார்வையிட்டோர்: 33,258 
 

அந்த கிராமம் முழுக்க அதே பேச்சாக இருந்தது. பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், இளசுகள், சிறுசுகள் வரை அது பரவி இருந்தது. எல்லோர் மனதிலும் பயப் பிராந்தி அட்டையாக ஒட்டி முகம் பீதி, கலக்கத்தில் குழம்பிக் கிடந்தது.

முன்னிருட்டு நேரத்தில் கூட அந்த கிராமத்தின் மொத்த மக்களும் வெளியே வர பயப்பட்டார்கள்.

தற்போது…. சுப்ரமணி கூட தன் இளவட்டங்களோடு ஊர் ஒதுக்குப் புறமாய் இருக்கும் ஆலமரத்தடியில் இது பற்றி பேசிக் கொண்டிருந்தான்.

“ராத்திரி ஒண்ணுக்கு வருதுன்னு எழுந்திரிச்சப்ப நான் கூட பார்த்தேன்டா.. ! ஜல் ஜல்ன்னு கருப்பா போய்க்கிட்டிருந்தது.” என்று முகம் முழுக்க திகில் பரவ சொன்னான்.

“டேய் ! புருடா விடாதடா ! அதெல்லாம் சும்மா.” என்றான் வினோத்.

“சும்மாவா..?! நான் சொல்றதை நம்பலேன்னா இன்னைக்கு என் வீட்டுத் திண்ணையில வந்து என்னோட படுத்துப் பாரு. நான் காட்டறேன்.” என்றான் இவன்.

அவ்வளவுதான் ! உயிர் பயத்தில்…. .

“நான் வர்லப்பா !” என்று நழுவி பின் வாங்கினான் அவன்.

“ஆவி எப்படிடா இருந்துச்சி…?”

“கருப்பா ஒரு உருவம் காலில்லாமல் நடந்துச்சு.”

“காலில்லாமலா…?” விபரம் புரியாமல் பார்த்தான் செல்லக்கினி.

“ஆமா. அது அப்படித்தான் போகும். !” என்று அடித்துச் சொன்னான் சுப்ரமணி.

“முகம் எப்படி இருந்துச்சி…?” திரும்ப அவனே கேட்டான்.

“அது யாருக்குத் தெரியும்..?”

“எனக்குத் தெரியும். முகம் அகோரமாய் இருக்கும்ன்னு எங்க அப்பா சொன்னார்.”

“எதிர்ல வர்றவங்க பயந்து ரத்தம் கக்கி செத்துப் போவாங்கலாம்.”

.”ஆள் கண்ணுல பட்டா அறையுமாம். அந்த அறையிலேயே ஆள் வாய், மூக்கு வழியே ரத்தம் வந்து செத்துப் போவாங்கலாம். !”

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் இந்தப் பேச்சைத் தொடர…

அந்தி மங்கிய அந்த மசக்கை வேளையில்கூட ஒருவரோடொருவர் இன்னும் நெருங்கி உட்கார்ந்து கொண்டு தங்களின் பயத்தை வெளியிட்டனர்.

“ஆமா… செத்துப் போனவங்க ஆவி எதனால வருது..?” என்று விபரம் புரியாமல் கேட்டான் குண்டுமணி.

“எல்லாம் வாழனும் என்கிற ஆசையிலதான் !” என்று அவனுக்குப் பதில் சொன்னான் சப்பாணி.

“அதான் உயிர் போயிடுச்சே. அப்புறம் எப்படி வாழனும் என்கிற ஆசையில வரும்..?” திரும்ப அவனே தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“உயிர் போனாலும் நாம இன்னும் உயிரோடதான் இருக்கோம் என்கிற நெனப்புல உலாவும்.”

“அப்படியா..??!!” அவன் கிலியில் வாய் பிளந்தான்.

“அதுவும் இல்லாம எங்க ஆத்தா சனிக்கிழமை அன்னிக்குச் செத்துப் போயிடுச்சா.. சனிக்கிழமை செத்த உயிருக்கு ஆசை அதிகமாம். தன்னோட இன்னும் நிறைய பேர் சாகனும், சுடுகாட்டுக்கு வரனும்ன்னு ஆசையாம். அப்படி ஆகக்கூடாதுன்னுதான் ஒரு கோழிக்குஞ்சையும் பாடையில கட்டி எடுத்துக் போனாங்க.’அதனாலதான் சனிப் பொணம் தனியா போகாது என்கிற சொலவடை வைச்சு…” என்றான் சுப்ரமணி.

“ஆமாம் . ஆத்தா பாதையில கோழிக்குஞ்சி தலைகீழாய்த் தொங்கினதை நாங்க பார்த்தோம் !” என்றார்கள் சுற்றியுள்ளவர்கள் கோரசாக.

“அந்த ஆத்தா ஆவி உங்க வீட்டுக்கு வருதா..?” என்று தன் சந்தேகத்தை கேட்டான் முத்து.

“ம்ம்ம் .. வருதே. !” பலமாய் தலையாட்டினான் சுப்ரமணி.

“எப்படி..?” என்று திகிலுடன் கேட்டு அவன் முகத்தைப் பார்த்தான் வெள்ளையன்.

“ஆத்தாவை எடுத்துக்கிட்டுப் போய் சுடுகாட்டுல பொதைச்சிட்டு வந்த ராத்திரி ஆத்தா உயிர் விட்ட இடத்துல மணலைப் பரப்பி, அது மேல லட்சுமி விளக்கைக் கொளுத்தி வச்சிருந்தாங்க எங்கம்மா. நான் காலையில எந்திரிச்சிப் பார்த்தப்போ மணல் மேல் பூனைக் கால் போல தடயம் இருந்துச்சி.

“ஏம்மா ! மணல் மேல் பூனை ஓடிடுச்சா. !?” கேட்டேன்.

“அதெல்லாம் உனக்குத் தெரியாதுடா !” ன்னு சொல்லி, அப்பாவை அழைச்சுக்கிட்டு வந்து,…

“ராத்தரி உங்க அம்மா வந்து போன தடயம் இருக்கு பார்த்தீங்களா..?” ன்னு காட்டுனாங்க. அப்பாவும் அதைப் பார்த்துட்டு” ஆமா..”ன்னு தலையாட்டிப் போனார். அப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன் மணல் மேல இருந்தது பூனைக் காலடி இல்ல, ஆத்தாவோட ஆவி, அவிட்டக் காலடின்னு விளங்கிச்சு.” என்று சுப்ரமணி சொல்லி முடிக்க…

“ஆவியை நான் கூட பார்த்தேன். ஒன்னுக்கு விடப் போறப்போ.. எங்க வீட்டுக் கொல்லைக் கடைசியுள்ள இருக்கிற மாமரத்துக்கு அடியில கருப்பா நின்ன மாதிரி தெரிஞ்சுச்சு. நான் பயந்து உள்ளாற ஓடிட்டேன்.” என்று தன் அனுபவத்தைச் சொன்னான் முத்து.

“பாவம் ! பங்கஜத்து வீடு. அவுங்க வீட்டு மேலதான் அது அடிக்கடி கல்லெறியுதாம். எல்லாரும் அவுங்க வீட்ல பயந்து கிடக்காங்க.” என்று பரிதாபப்பட்டான் ஊர் கதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளும் சப்பாணி.

“பங்கஜத்துப் பாட்டியும் எங்க ஆத்தாவும் அந்த காலத்துல இருந்தே நெருங்கி பழகினவங்க. அந்த பழக்கத்தினால் அங்க போனாலும் போவும்..”என்று தன்னுடைய அனுமானத்தைச் சொன்னான் சுப்ரமணி.

“ஆமாமா. நேத்து ராத்திரி கூட அவுங்க வீட்டு மேல கல்லெறிஞ்சதா காலையில் பேசிக்கிட்டாங்க. ஒன்னுவிட்டு ஒருநாள் கல் விழுதாம். தோழி மேல அவ்வளவு பாசம், நேசம் போல” என்று சொன்னான் மருதை.

“ஆமா ஆமா தினம் அங்கே போகும். ஆவி நடமாட்டம் தினம் இருக்க வாய்ப்பு இருக்கு. ஆனா என்னிக்கு வருதோ இல்லியோ சனிக்கிழமை மட்டும் கண்டிப்பா வருதுப்பா.” என்று கண்டிப்பாய்ச் சொன்னான் சுப்ரமணி. கண்களில் பயத்தை வைத்துக் கொண்டு.

“ரொம்ப இருட்டிப் போச்சு. அதுவும் இன்னைக்கு சனிக்கிழமை வேற. வாங்கப்பா, வீட்டுக்குப் போகலாம் !” என்றான் மிகவும் பயந்து போன முத்து.

எல்லோரும் களைந்து போனார்கள்.

அந்த சொக்குப்பட்டி கிராமத்தில்…… இது உண்மையோ, வதந்தியோ… ! பரவலாக பலவாறாக ஆளாளுக்கு கண், காது, மூக்கு வைத்து பேசி, பரவ… எல்லோரும் ஒட்டு மொத்தமாய் பயந்தே கிடந்தார்கள்.

சனிக்கிழமை நாடு நிசி. மணி 12.00

கருப்பாய் ஒரு உருவம் தெருவில் நடந்து சென்று பங்கஜத்து வீட்டின் கொல்லைக் கடைசியிலிருக்கும் வைக்கோற் போரில் மறைந்தது.

சற்று நேரத்தில் அங்கிருந்து இரண்டொரு கற்கள் அந்த வீட்டின் மீது விழுந்தது.

சிறிது நேரம் கழித்து…அந்த வீட்டினுள் இருந்து இன்னொரு கரு உருவம் கொல்லை வாசல் வழியே வந்து… அதே வைக்கோற் போரில் மறைந்தது.

அடுத்த நொடி அங்கிருந்து….

“உங்க ஆத்தா செத்துப் போனது நமக்குத்தான் வசதியாப் போச்சு.” இது மெலிசாய் பங்கஜத்தின் குரல்.

“ஆமா ! ஆத்தா ஆவியா வர்றாள்ன்னு ஊர் பூரா பொரளியைக் கிளப்பி விட்டு.. பயப்பட வைச்சு, அர்த்த ராத்திரியில பயப்படாம உன் வீட்டுக்கு வந்து உன்னை வர வழைக்கிறதுக்கு உங்க வீட்டு மேல கல்லெறிஞ்சி, உங்க அப்பனையும் ஆத்தாளையும் பயத்துல இன்னும் கவுந்தடிச்சி படுக்க வச்சு… ம்ம் அப்புறம் தானே நாம நம்ம காதலை இப்படி வளர்க்க முடியுது ! கிராமத்து மக்கள்கிட்ட இந்த ஆவி பயம் இருக்கும்வரை நம்ப கலியாணம் முடியிற வரை நம்ப சந்திப்பு இப்படித்தான் ” என்று சொல்லி அவளை இறுக்கி அணைத்துக் கொண்டது சுப்ரமணி உருவம் .

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஆவி வருது…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *