பாக்தாத் பேரழகி அல்லது இட்லி மிளகாய் பொடி செய்வது எப்படி?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 24,092 
 

கதை ஆசிரியர்: சாரு நிவேதிதா.

“ நீங்கள் ஏன் இப்போதெல்லாம் சிறுகதையே எழுதுவதில்லை ?”

நண்பர்களிடமிருந்து அடிக்கடி நான் எதிர்கொள்ளும் கேள்வி இது.

‘ இது என்ன முட்டாள்தனமான கேள்வி ?’ என்று மனதில் தோன்றும். ஆனால் மனதில் தோன்றுவதையெல்லாம் வெளியே சொல்லி விடுகிறோமா என்ன ?

ராஸ லீலாவில் வரும் நூறு அத்தியாயங்களையும் நூறு சிறுகதைகளாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே ?

சிறுகதை என்று தனியாக ஒன்றை எழுத வேண்டுமா என்ன ?

மேலும் , என்னைப் பொறுத்தவரை ஒரு சிறுகதை எழுத வேண்டுமானால் அது என் கையில் இல்லை. அச்சிறுகதை என் கனவில் வர வேண்டும். ஆக , கடந்த ஐந்தாண்டுகளாக நான் சிறுகதை எழுதவில்லை என்றால் கடந்த ஐந்தாண்டுகளாக எனக்குக் கனவே வரவில்லை என்றுதான் பொருள்.

ஆனால் , கனவில் வரும் கதை என்பதற்காக ஒரு விதமான ஸர்ரியல் தன்மை கொண்டதாகவோ , நனவுலகிலிருந்து விலகி வெகு தொலைவில் சஞ்சரிக்கும் ஒன்று என்பதாகவோ தயவு கூர்ந்து நினைத்து விடாதீர்கள். மிகச் சாதாரணமான , எவ்வித அர்த்த முக்கியத்துவங்களும் இல்லாத அன்றாட வாழ்க்கைச் சம்பவங்கள்தான் கனவில் வரும். ஆனால் பன்றி 1 கூட குட்டியாக இருக்கும்போது அழகாகத்தான் இருக்கும் என்றபடி என்னதான் அன்றாட வாழ்க்கைச் சம்பவமாக இருந்தாலும் , அது கனவில் வரும் போது வேறொரு சௌந்தர்ய ரூபத்தைக் கொண்டு விடுகிறது. பால் நெய்யாக மாறும் போது-எத்தனை ஊடக மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை யோசித்துப் பாருங்கள்.

பால்- மோர்-வெண்ணெய்-நெய்

அதே போல் தான் இங்கேயும். கீழ்க்காணும் சமன்பாட்டை கவனியுங்கள்:

அன்றாட சம்பவம் -> ( நிகழ்வு) -> கனவு -> கதை

இவ்வளவுக்குப் பிறகும் என் கதை தட்டையாக இருக்கிறது என்றால் , கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். வேறு என்ன செய்வது ? இவ்வளவு சுற்றுப்புறச் சீரழிவிற்குப் பிறகும் வற்றாத ஜீவ நதியைப் போல் இந்த சரீரத்திலிருந்து சுக்கில நீரைப் பெருக்கெடுத்து ஓட வைத்த இறைவன் கல்பனா சக்தியை மட்டும் வறண்ட பூமியாகப் படைத்து விட்டானே , என்ன செய்வது ? சே . . . இதற்குக் கூட இந்த உதாரணம்தானா என்று அலுத்துக் கொள்வான் அலெக்ஸ். ஆனால் எனக்கு இது ஒரு தீராத பிரச்சினை. பிறகென்ன ? போகம் செய்ய ஸ்த்ரீகள் கிடைக்காத அத்தனை தினங்களிலும் சுய போகம் செய்தாக வேண்டியிருக்கிறது. சமயங்களில் , இரண்டு முறை. அந்த சுக்கில நாயை 2 வெளியேற்றினால்தான் மனம் லகுவாகிறது. இல்லாவிட்டால் அது தேன் கூட்டைச் சுற்றி வரும் தேனீக்களாக தொடர்ந்து இடைவிடாமல் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும். நாயை வெளியேற்றத் தவறினால் ரீங்காரம் அதிகமாகி அதுவே நம்மை அதிகாரம் செய்ய ஆரம்பித்து விடும். இந்த சூட்சமத்தைச் சரிவர அவதானிக்காதவர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபடத் துவங்கி விடுகின்றனர்.

ஸ்திரீகள் கிடைக்காத நாள் என்றா கூறினேன் ? தவறு. அது ஒரு இலக்கணப் பிழை. எங்கே , உங்களுடைய நடு விரலையும் கட்டை விரலையும் கொண்டு ஒரு சொடக்கு போடுங்கள். அடுத்த நிமிடம் உங்கள் கண்ணெதிரே நிற்பாள் ஒரு மொராக்கோ தேசத்து தேவதை.

அவள் பெயர் என்ன ? ம் . . . பொறுங்கள் . . . யெஸ். ஞாபகம் வந்து விட்டது. ஸமீரா. பாக்தாத் பேரழகிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? தமிழ்ப்படம் இல்லை ஐயா! ஆயிரத்தோரு அராபிய இரவுகளில் வரும் பாக்தாத் பேரழகிகளைச் சொல்கிறேன். அப்பேர்ப்பட்ட ஒரு அராபிய அழகி ஸமீரா.

தொழில் : காசு கொடுப்பவருக்கு காதலியாக இருப்பது.

( கிழக்கு ஐரோப்பிய நாடுகள் , ரஷ்யா , மொராக்கோ போன்ற தேசங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் இந்தக் காதலை தங்கள் தொழிலாக ஏற்றுக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். உலகளாவிய காதல்!)

ரூ. 25,000/- கொடுத்தால் உங்களை நிழலைப் போல் பின் தொடர்வாள் ஒரு மொராக்கோ தேசத்து தேவதை. டிஸ்கோவுக்குப் போகலாம் ; தண்ணியடிக்கலாம் ; சே , ஆதார விஷயத்தை விட்டு விட்டு வேறு ஏதேதோ சொல்லுகிறேன் ; போதும் போதும் என்று போகம் பண்ணலாம். இரண்டு மூன்று தினங்கள். முதல் தடவைதான் 25000. அடுத்தடுத்த தடவைகளில் 15000 தான். ஒருமுறை பழகி விட்டால் ஏஜென்டுக்குக் 3 கொடுக்க வேண்டிய 10000 நமக்கு லாபம். நேரடித் தொடர்பு கிடைத்து விடுகிறதே , அப்புறமென்ன ?

என்ன , ஏதோ ப்ராத்தல் ஹவுஸ் விளம்பரம் மாதிரி தெரிகிறதா ? வாழ்க்கை ஐயா வாழ்க்கை . . .

ஒரே ஒரு விஷயம் சொல்கிறேன் , கேளுங்கள். மனிதனுக்கு பசி என்ற ஒரு உணர்வு இல்லையென்றால் , வாழ்க்கை எப்படி இருக்கும் ? இந்தக் கதையைப் படிப்பதை நிறுத்திவிட்டு யோசித்துப் பாருங்கள்.

உலக வாழ்க்கையே ஸ்தம்பித்து விடும் . . . பால் கிடைக்காது ; சோறு கிடைக்காது ; தண்ணீர் கிடைக்காது ; வீடு , கட்டிடம் , ஆஸ்பத்திரி , ஆகாய விமானம் , ரயில் , பஸ் , கார் , சட்டை துணி மணி , ரேடியோ , டிவி , காகிதம் , கதை , பத்திரிகை , அரசியல் , கலாச்சாரம் , கடவுள் . . . எதுவுமே இருக்காது.

காட்டில் கூட வாழ முடியாது. பசி இல்லையென்றால் நீங்கள் விலங்குகளைக் கூட வேட்டையாட வேண்டிய அவசியமிருக்காதே ?

மனித இனமே தற்கொலை செய்து கொண்டு மடிந்து போகும்.

பசிக்கே இத்தனை வலிமை இருக்கிறதென்றால் , காமத்தைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா ? சென்ற மாதம்தான் ஸமீராவோடு அறிமுகம். வழக்கமாக நாங்கள் கூடும் டீக்கடை. நான் பாலு என்கிற பாஸ்கர் அய்யேயெஸ். நிக்கி. ரவி.

( இதில் , நிக்கி தவிர மற்ற பெயர்களெல்லாம் ராஸலீலாவிலேயே அறிமுகமானவை. இதுதான் சிறுகதையில் பிரச்சினை. இவர்களையெல்லாம் இங்கே நான் மீண்டும் அறிமுகப்படுத்தியாக வேண்டும். ம்ஹும். அதை நான் செய்யப் போவதில்லை. பாலு என்கிற பாஸ்கர் அய்யேயெஸ் என்ற பெயர் மட்டும் சற்றே மாறுதலுக்கு உட்பட்டிருக்கிறது. அவனுடைய தற்போதைய பெயர்: கேக்கஸ் பாலு. இதில் ‘ கேக்கஸ் ’ என்பது கக்கூஸ் என்ற சொல்லின் பிருத்தானிய மரூஉ. காந்தி என்ற பெயர் கேண்டி என்று பிரிட்டிஷ்காரர்களால் அழைக்கப்பட்டதை நினைவு கூர்க. பாலு கக்கூஸுக்குப் போனால் வெளியே வர முக்கால் மணி நேரம் ஆவதால் இந்தப் பெயர்.)

ரவி தான் ஸமீராவை அழைத்து வந்தான். ஸமீரா , பாலுவை விட ஆங்கிலத்தில் தேர்ச்சி கொண்டவளாக இருந்தாள்.

Oh God!

My name is Samira

This is good.

This is no good.

I like beer.

I no like whisky.

மொத்தமாக ஒரு 50 வார்த்தைகள் இருக்கலாம். எனக்கு ஒரு 50 அரபி வார்த்தைகள் தெரியும் என்பதால் அதை வைத்து அவளைக் கவர்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

“ அல் கூப்ஸ் என்றால் ப்ரெட் தானே ?”

கண்களில் ஆச்சரியம் பொங்க “ யேஸ் ” என்றாள்.

“ அல் ஹஃபி என்றால் ந்யூட் தானே ?”

மீண்டும் கண்களில் ஆச்சரியம் பொங்க “ யேஸ் ” என்றாள்.

ம்ஹும். ஆட்டத்தில் எங்கோ தவறு இருக்கிறது. இப்படியே போனால் 50 கேள்விகளோடு ஆட்டம் முடிந்து விடும் என்பதால் வேறு விதமாக ஆரம்பித்தேன்.

நான் மொராக்கோ சம்பந்தமாக சுமார் ஐந்து ஆண்டு காலம் தீவிரமாகப் படித்திருந்தேன் என்ற வகையில் அவளிடம் பல சம்பாஷனைகளை உருவாக்கினேன்.

“ நீங்கள் எந்த ஊர் ?”

( காஸா ப்ளாங்க்கா)

“ ரபாத் சென்றிருக்கிறீர்களா ?”

“ அல் கூப்ஸ் அல் ஹஃபி நாவலை எழுதிய முகமத் ஷுக்ரி பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?”

“ உங்கள் பெயரில் ஒரு எகிப்தியப் பாடகி இருக்கிறாரே . . . அவர் பாடல்கள் உங்களுக்குப் பிடிக்குமா ?”

“ ரய் இசை கேட்பதுண்டா ?”

(Oh God! I like!)

“ எந்தப் பாடகரை மிகவும் பிடிக்கும் ?”

( ஷாப் பிலால்)

“ எனக்குப் பிடித்தவர் ஷாப் ஹாஸ்னி. ”

(Oh God! He very good!)

இந்த இடத்தில் பாலு குறுக்கிட்டான்.

“No Calling God. see time.3 O’ clock God eating. sleeping. 4 o’clock get up. Now no distrub God.”

Get up என்று சொல்லும் போது விரலை கண்ணின் மீது வைத்து அகலப் படுத்தி அகலப் படுத்தி காண்பித்தான்.

பியரைக் குடித்துக் கொண்டிருந்தவள் , சிரித்ததால் புரையேறி , அவள் உதவிக்கு நானும் பாலுவும் சென்று , என்னென்னவோ ரகளையாகி விட்டது. சுமார் 10 நிமிடம் சிரித்துக் கொண்டேயிருந்தாள்.

மொத்த பாரும் எங்களையே பொறாமையால் எரித்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் தன் இருக்கையை விட்டு எழுந்த பாலு , ஸமீராவின் பக்கவாட்டில் போய் நின்று கொண்டான்.

‘ என்ன விஷயம் ?’ என்று கேட்டதற்கு “ அண்ணி விழுந்து விழுந்து சிரிக்கும் போது அவளுடைய இடுப்பு தெரிகிறது. அதை பாரில் உள்ள அத்தனை பேரும் வெறித்துப் பார்க்கிறார்கள். அதை மறைத்துக் கொண்டு நிற்கிறேன் ” என்றான்.

ஒரு நாகரிகம் கருதியே பாலு ‘ இடுப்பு ’ என்று சொல்லியிருக்க வேண்டும். மற்றபடி இந்தக் காலத்து மோஸ்தருக்கு ஏற்ப ஸமீரா தன் ஜீன்ஸை தொப்புளுக்குக் கிழே சரியாக ஒரு சாண்விட்டு அணிந்து கொண்டிருந்ததால் , தெரிந்தது இடுப்பு அல்ல ; அவளுடைய புட்டம்தான் அப்பட்டமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

“ அது சரி , அது என்னடா அண்ணி ?” என்று கேட்டதற்கு “ ரவி அண்ணனின் தோழி எனக்கு அண்ணி தானே ?” என்று எதிர்க் கேள்வி போட்டான் பாலு.

பொதுவாக மதியம் 12.30 க்குச் செல்லும் நாங்கள் 3 மணிக்கு டீக்கடையிலிருந்து கிளம்பி விடுவோம். அன்று 4 மணியாகியும் கிளம்பும் எண்ணமே தோன்றவில்லை. விட்டால் அண்ணி , அண்ணி என்று சொல்லி பாலுவே ஸமீராவைக் கவிழ்த்து விடுவான் போலிருந்தது. அந்த ‘Eating Sleeping’ மேட்டருக்குப் பிறகு பாலுவும் , ஸமீராவும் மிகவும் அந்நியோன்னியமாகி விட்டது போல் தோன்றியது. அந்த நேரத்தில் ரவி “ ஒரு சின்ன வேலை ; வந்து விடுகிறேன் ” என்று சொல்லி கையோடு ஸமீராவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

ஸ்காட்ச் எத்தனை சுற்று சென்றது என்ற கணக்கே மறந்து போனது.

அது ஒரு மொராக்கோ தினம்!

பாலுவுக்கு மொராக்கோ எங்கே இருக்கிறது என்ற பூகோள அறிவை ஊட்டுவதற்கான கடமை நிக்கியிடம் வந்து சேர்ந்தது.

சத்யாவிடம் (மேனேஜர்) சொல்லி அட்லஸை எடுத்து வரச் செய்தோம். இரண்டு பேர் சேர்ந்து தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.

நிக்கி , நான் , பாலு மூன்று பேரும் மொராக்காவுக்குள் மூழ்கினோம்.

மொராக்கோ இலக்கியம் பற்றி நீண்டதொரு லெக்சர் கொடுக்க ஆரம்பித்தேன். பாலுவும் , நிக்கியும் ‘ ஒன்றுக்கு வருகிறது ’ என்று சொல்லி நழுவினார்கள்.

ஆறு மணி அளவில் ரவியும் , ஸமீராவும் திரும்பினார்கள். குளித்து , ஆடை மாற்றி ஃப்ரெஷ்ஷாகத் தெரிந்தார்கள் என்பதை நாங்கள் மூவரும் கவனித்து வைத்துக் கொண்டோம்.

இப்போதும் ஸமீராவுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறோம். மொராக்கோவுக்கு வரச் சொல்லி அழைத்துக் கொண்டிருக்கிறாள்-குறிப்பாக பாலுவை.

* * *

பாருங்கள் , ஒரு தவறு நடந்து விட்டது. இந்தக் கதைக்கும் ஸமீராவுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்றாலும் இந்த விஷயமே இத்தனை பக்கங்களை விழுங்கி விட்டது. இதனால்தான் நான் சிறுகதையின் பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை. அதற்குத்தான் போர்ஹேஸ் மாதிரி ஆட்கள் இருக்கிறார்களே . . .

* * *

ஸமீரா வந்து விட்டுப் போன பிறகு-யார் கண்பட்டதோ தெரியவில்லை. நிக்கிக்கு ஒரு பிரச்சினை ஆகிப் போனது.

யெஸ். இப்போதுதான் கதை துவங்குகிறது. அலெக்ஸ் அடிக்கடி சொல்லுவான் , “ இந்த நாட்டில் யாருக்கு , எப்போது , என்ன நடக்கும் என்று யாருமே சொல்ல முடியாது ” என்று. பாருங்களேன் . . . முன்பெல்லாம் “ தோழர் யு.ஜில இருக்கார் ” என்ற ஒரு வாக்கியத்தைக் கேட்டால் ‘ ஒரு புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்த தோழர் அன்டர் க்ரௌண்டில் இருக்கிறார் ’ என்று தானே அர்த்தப்படுத்திக் கொள்வோம் ?

ஆனால் இப்போது ?

ஒரு கோடீஸ்வரனான நிக்கியும் சில தினங்கள் தலைமறைவாக வாழும்படி நேர்ந்தது.

ராஸலீலாவில் நிக்கியின் பெயர் வேறு. இப்போது நாமகரணத்தை மாற்றியதன் காரணம்: தமிழக அரசியலில் நடந்த ஒரு திடீர்த் திருப்பம். அதன் காரணமாக ஒரு மந்திரிக்கும் நிக்கிக்கும் பனிப்போர் ஒன்று தொடங்கியது. மந்திரியைத் தாக்க ஆரம்பித்தான் நிக்கி.

புழுதானே என்று அதை ரொம்பவும் நசுக்கினீர்களானால்- அது புழுவாகவே இருந்தாலும் வாலைத் தூக்கி எதிர்க்கும் அல்லவா ? இந்தப் புழு வாலைத் தூக்கிக் கொண்டு நிக்கியின் காதுக்குள் புகுந்து விட்டது.

திடீரென்று நிக்கியின் புகைப்படம் தமிழர்களிடையே பிரபலமாயிற்று.

சுமார் 20 ஆண்டுகளாக தன்னை அடையாளம் தெரியாதவனாக வைத்துக் கொண்டிருந்தவன் நிக்கி. ஒரே கணத்தில் அந்தக் கண்ணாடி மாளிகை உடைந்து நொறுங்கியது.

காரணம்: ஒரு பெண். அந்தப் பெண்ணுக்கும் நிக்கிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று எனக்குத் தெரியும். ஊருக்குத் தெரியுமா!

இந்த இடத்தில் இன்னொரு விஷயம்: “ அந்த மொராக்கோ பேரழகியிடம் நீ ஏன் ஈடுபாடு காட்டவில்லை ?” என்று நிக்கியிடம் கேட்டபோது “ அவன் , அவன் வேலையைப் பாக்குறான் ; நாம , நம்ம வேலையப் பாப்போம் ” என்று சொல்லியபடி ‘ சரஃபோஜி மகாராஜாவின் நளபாகக் குறிப்புகள் ’ என்ற புத்தகத்திலிருந்த சில அய்ட்டங்களை எனக்குப் படித்துக் காண்பிக்க ஆரம்பித்தான்.

அப்பேர்ப்பட்ட நிக்கி , குறுஞ்செய்தி அனுப்பி தன்னை ஈவ் டீஸிங் செய்வதாக போலீஸில் புகார் செய்து விட்டார் அந்தப் பெண். (ர்-க்குப் பதிலாக ‘ ள் ’ என்று போட்டு என்னை வம்பில் மாட்டி வைத்து விடாதீர்கள் சாமிகளா!)

ஊடகங்கள் மூலமாக உலகெங்கும் பரவியது அச்செய்தி. அமெரிக்கா வாழ் தமிழர்களே சுமார் 100 பேர் எனக்கு போன் போட்டு இது பற்றி எழுதுமாறு வேண்டினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவர் அழுதே விட்டார். நிக்கி ஒன்றும் அவருக்குச் சொந்தக்காரன் அல்ல. ஆனாலும் என் கதாபாத்திரமாக அவருக்கு அறிமுகமானவன்.

நிக்கி தலைமறைவாகி விட்டான். அந்த நிலையிலும் என்னை வேறொரு எண் மூலமாகத் தொடர்பு கொண்டு ஒரு விஷயத்தைச் சொன்னான்.

“ சனிக்கிழமையன்று உன் நண்பன் மித்திரனை நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லியிருந்தேன். தயவு செய்து அவரைச் சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம் என்று சொல்லி விடு. ”

ஐயா , நான் ஸ்த்ரீலோலன்தான் ; ஆனால் இந்த உலகில் யார்தான் ஸ்த்ரீலோலன் இல்லை என்று தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள்.

விவிலியத்தில் என்ன சொல்லியிருக்கிறது. அடுத்த ஸ்த்ரீயை கண்கொண்டு நோக்கினாலே அது விபச்சாரம். இல்லையா ?

இந்த விவகாரத்தைப் பற்றி நினைக்கும் போது எனக்கு ஒரு ஜென் கதை ஞாபகம் வருகிறது. அக்கதை பின் வருமாறு:

அப்படியா ?

ஒரு ஊரில் ஒரு ஜென் துறவி இருந்தார். அதே ஊரில் ஒரு இளம் பெண்ணும் இருந்தாள். பணக்கார வீட்டுப் பெண். திருமணமாகாத அந்தப் பெண் கர்ப்பவதியாக இருப்பதை அறிந்த அவள் பெற்றோர் “ யாரடி அவன் ?” எனக் கேட்க அவள் அந்தத் துறவியைக் கை காட்டினாள். அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உற்றோரும் துறவியிடம் சென்று விஷயத்தைக் கூற அவர் “ அப்படியா ?” எனக் கேட்டார்.

பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. குழந்தையைக் கொண்டு போய் துறவியிடம் கொடுத்தனர் பெற்றோர். அவரும் அக்குழந்தையைக் கண்ணே போல் கருதி வளர்த்து வந்தார்.

சில ஆண்டுகள் சென்று அப்பெண்ணின் மனசாட்சி உறுத்தியது. பெற்றோரிடம் சென்று உண்மையைக் கூறினாள். குழந்தைக்குத் தகப்பன் வேறொருவன். அதிர்ச்சியடைந்த பெற்றோர் துறவியிடம் சென்று விஷயத்தைக் கூறி குழந்தையைத் திருப்பிக் கேட்டனர்.

அதற்கும் துறவி “ அப்படியா ?” என்று கேட்டபடி குழந்தையை அவர்களிடம் கொடுத்தார்.

* * *

நிக்கி தலைமறைவாக இருந்த போது என்னுடைய தொலைபேசியும் உளவுத்துறையின் கண்காணிப்பில் இருந்ததெனத் தெரிந்தது. அப்போது ஒரு நாள் என்னைத் தொடர்பு கொண்ட அலெக்ஸ் , “ என்ன ஒரு துரதிர்ஷ்டம் பார் உனக்கு ” என்றான். “ என்ன ?” என்றேன்.

“ எழுதியவனை விட்டு விட்டு அவனுடைய கதாபாத்திரத்தைத் துரத்திக் கொண்டிருக்கிறார்களே , என்ன ஒரு irony!”

அதாவது , இவ்வளவும் எனக்கு நடந்திருந்தால் at last இந்நேரம் என்னுடைய நாவலாவது பல்லாயிரம் பிரதிகள் விற்றிருக்குமாம்!

உண்மைதான். அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்ததால்தான் நானும் வெளியூர் செல்லும்போதெல்லாம் 6’X6’ அறையில் தங்கி , பொது கக்கூஸில் மல ஜலம் கழித்து , மின்விசிறி இல்லாமல் தூங்கி எப்படியெப்படியோ ட்ரெய்னிங் எடுத்துக் கொண்டிருந்தேன். எல்லாம் வீணாயிற்று.

* * *

பாருங்கள். இன்னமும் இந்தக் கதை மெய்ன் கதைக்கு வராமல் உபகதைகளிலேயே உலவிக் கொண்டிருக்கிறது. இதோ வந்துவிட்டேன் . . .

தலை மறைவு வாழ்விலிருந்து மீண்ட நிக்கியை முந்தா நாள் மதியம் டீக்கடையில் வழக்கம் போல் சந்தித்தேன்.

அன்றைய தினம் நானும் நிக்கியும்தான். தனியாகப் பேசி நாளாயிற்று என்பதால் இருவரும் மட்டுமே சந்தித்தோம்.

டீக்கடையில் எங்களுடைய இருக்கையில்-நாங்கள் வந்தாலும் சரி , வராவிட்டாலும் சரி- எப்போதும் ‘Reserved’ என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருக்கும். அன்றைய தினம் எங்கள் இருக்கையின் பக்கத்தில் இருந்தவர்கள் டாஸ்மாக் பாரில் இருப்பது போல் உரக்கக் கத்திக் கொண்டிருந்ததால் “ இனிமேல் இந்த வரிசை முழுவதுமே Reserved பலகையை வைத்து விடுங்கள் ” என்று சத்யாவிடம் கூறினான் நிக்கி.

அந்த பார் ‘ ட ’ வைத் திருப்பிப் போட்டது போல் இருக்கும். எனவே ஒரு வரிசை எங்களுக்கு. மற்றொரு நீள் வரிசை , டாஸ்மாக் பாரில் இருப்பது போல் உரக்கக் கத்திக் கொண்டிருப்பவர்களுக்கு. கதையின் க்ளைமாக்ஸுக்கு வந்து விட்டோம்.

எனக்கு கேரளத்துச் சிகப்பு அரிசி (உனக்கலரி) தான் பிடிக்கும் என்பதால் அந்த அரிசியை சென்னைக்கு அனுப்பி வைக்கும்படி ஏற்பாடு செய்தான் நிக்கி.

அடுத்து , உனக்கலரியைச் சமைப்பதற்கு சில டிப்ஸையும் தந்தான்.

அந்த அரிசியை நாம் சமைப்பது போல் குக்கரில் வைத்து அவிக்கக் கூடாது. அதற்கென்று கும்மட்டி அடுப்பு இருக்கிறது. Cast iron ஆல் (தேன் இரும்பு) செய்தது. இதில் நிலக்கரியைப் போடக் கூடாது. மரக்கரி தான் போடவேண்டும். அதைப் பற்ற வைப்பதற்கு உதவக் கூடியது. தேங்காய் சௌரி. வெண்கலப் பானையில்தான் உனக்கலரியை உலை வைக்க வேண்டும். பிறகு வடித்து விட்டு மத்தி மீன் குழம்பு ஊற்றி சாப்பிட்டால் . . . வர்ணனை வேண்டாம். சாப்பிட்டுப் பாருங்கள்.

எனக்கு கும்மட்டி அடுப்பு என்றால் புரியவில்லை. “ அண்ணாச்சி அடிக்கடி சொல்வாரே , கேள்விப்பட்டதில்லை ?”

“ என்ன ?”

“ கூதிக்கும் கும்மட்டி அடுப்புக்கும் வித்தியாசம் தெரியாத பய! ”

எங்கள் குழுவைச் சேர்ந்த நார்பர்ட் என்பவனைத்தான் அண்ணாச்சி அப்படிக் குறிப்பிடுவார். அவர் சொல்வதன் அர்த்தம் விளங்குகிறதா , இல்லையா ?

சரி , விளங்காதவர்களுக்கு இது:

மேலே குறிப்பிட்ட இரண்டுமே தீக்கங்குகளாக இருக்கும் என்பதால் நார்பர்ட் ‘ அது ’ என்று நினைத்துக் கொண்டு கும்மட்டி அடுப்பில் ஆணுறுப்பை விட்டு விடுவானாம்! அதாவது , போதை அதிகமாகி விட்டால் நார்பர்ட்டுக்கு ஏற்படும் தடுமாற்றத்தையே அண்ணாச்சி இத்தனை வடிவாகக் குறிப்பிடுவார். ஆனால் இவ்வளவு விளக்கியும் எனக்கு கும்மட்டி அடுப்பு பற்றி விளங்காததால் நிக்கி அதைப் படமாகவே வரைந்து காண்பித்தான் :

கும்மட்டி அடுப்பு , வெண்கலப் பானை , மரக்கரி , தேங்காய் சௌரி எல்லாவற்றையும் என்னிடம் சேர்ப்பித்து விடும்படி தன் உதவியாளர்களிடம் உத்தரவிட்டான் நிக்கி.

அடுத்து , இட்லி மிளகாய்ப் பொடி செய்வது எப்படி என்ற வினா அடியேனால் முன் வைக்கப்பட்டது. தன் தெலுங்குத் தோழிக்கு போன் போட்டான் நிக்கி. அவள் கூறிய செய்முறை பின் வருமாறு:

மிளகாய் , கடலைப் பருப்பு , துவரம் பருப்பு , சீரகம் , தனியா , கறிவேப்பிலை- இது அவ்வளவையும் எண்ணெய் லேசாக விட்டு ( Shallow fry) வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சூடு ஆறியதும் , அதை மிக்ஸியில் போட்டு அடித்து , அத்துடன் புளி , பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்தால் இட்லி மிளகாய்ப் பொடி ரெடி!

* * *

அனுபந்தம்- 1

இந்தக் குறிப்பிட்ட விஷயத்தை கதையின் இண்டு இடுக்கில் எப்படியாவது சேர்த்து விட வேண்டும் என்று பார்த்தேன். முடியவில்லை என்பதால் இங்கே அனுபந்தமாக வருகிறது.

நிக்கி தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் மீண்டும் ஒரு மொராக்கோ தேசத்துப் பேரழகி வந்தாள். இந்த முறை அழைத்து வந்தவன் வேறொரு நண்பன். எங்கள் குழுவைச் சேர்ந்த அத்தனை பேருமே ‘ நிக்கிக்கு கம்பெனி கொடுக்கிறோம் ’ என்று சொல்லி அவனையே தொற்றிக் கொண்டு அவன் கூடவே தலைமறைவாகி விட்டிருந்தனர்.

இந்தப் பேரழகிக்கு நன்றாக ஆங்கிலம் தெரிந்திருந்தது. அன்றைய தினம் பேரழகியுடன் சென்ற நண்பர் பெயர் சேகர். அவருக்கு தினமும் முதுகு தேய்த்து விடுவது அவரது சகதர்மிணி. அந்த மொராக்கோ பேரழகியுடன் சென்ற மறுநாள் வழக்கம் போல் குளியலறையில் அமர்ந்திருக்கிறார் சேகர் அவருக்காக வெந்நீரைப் போட்டுக் கொண்டு எடுத்து வந்த அவரது சகதர்மிணி , அப்படியே அந்த வெந்நீரை அவர் முதுகில் ஊற்றி விட்டார். இப்போது சேகர் முதுகில் காயத்துடன் மருத்துவ மனையில் இருக்கிறார்.

சேகரின் சகதர்மிணி அவர் முதுகில் வெந்நீரை ஊற்றியதன் காரணம் என்ன தெரியுமா ? சேகர் எப்போதும் வெள்ளை ஜட்டிதான் அணிவார். அன்றைய தினம் அவர் அணிந்திருந்தது ஜட்டி அல்ல. பெண்கள் அணியும் பேண்டீஸ். அதுவும் ரோஸ் நிறம்!

அனுபந்தம்- 2

கதையை எழுதி முடித்த பிறகு , அதை எடிட் செய்வதற்காக நிக்கியை மீண்டும் டீக்கடையில் சந்தித்தேன். அப்போது இட்லி மிளகாய் பொடி பற்றிய வேறொரு தகவலைக் கூறினான் அவன்.

திருநெல்வேலிச் சீமையில் சைவப் பிள்ளைமார் சமூகத்தில் இட்லி மிளகாய்ப் பொடி செய்வதே அரியதொரு சடங்காக நடைபெறுவது வழக்கமாம். வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டு சாவகாசமாக மூன்று மணி அளவில் மிளகாய்ப் பொடிக்குத் தேவையான விஷயங்களை வறுத்து எடுத்து கல்லுரலில் இட்டு உலக்கையால் இடிப்பார்கள். அநேகமாக இதைச் செய்வது , வீட்டிலிருக்கும் வயதான கைம்பெண்கள். அவர்களுக்குத்தான் அந்தக் கைப்பக்குவம் வரும். அதே நேரத்தில் இன்னொரு பெண்மணி ஒரு ஈடு இட்லியை வைப்பாள். (மாவை வேட்டி துணியில் தான் இடுவது. இந்தக் காலம் போல் எண்ணெய் தடவி அல்ல.) மிளகாய்ப் பொடி இடிக்கும் சப்தம் , அதன் மணம் இரண்டும் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆண்களை எழுப்பி விடும். இப்போது , உரலிலிருந்து பொடியை எடுத்த பிறகு அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் பொடி வீணாகி விடக் கூடாது என்பதால் இட்லியை உரலில் போட்டு துளாவிப் பிசைந்து எடுத்து ஆளுக்கு ஒரு பிடி கொடுப்பார்கள் பெண்கள். அதற்குள் காப்பியும் தயாராகி விடும்.

“ இன்னிக்கி மெளாப் பொடி தாயராதுகுலே , வந்துரு ” என்பதாக இது பற்றி ஆண்களிடையே அன்றைய தினம் செய்தி பரவும் என்று முடித்தான் நிக்கி. ஆனால் அவன் அதோடு விடவில்லை. மிளகாய்ப் பொடியை கல்லுரலில் இடித்த அந்தப் பெண்களின் வாழ்க்கையோடு இக்காலப் பெண்களை ஒப்பிட ஆரம்பித்தான்.

அந்தப் பெண்கள்தான் எவ்வளவு சுதந்திரமாக வாழ்ந்தார்கள் ; இப்போதய பெண்களைப் போல் ஆபீஸுக்குப் போய் எவனோ முகம் தெரியாத ஒருவனுக்கு சலாம் போட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்ததா ; ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் உழைப்பின் அத்தியாவசியம் ; ஆட்டுக்கல்லைத் தூக்கியெறிந்து புரட்சி செய்த பெண்கள் இப்போது கர்ப்பப்பை பிரச்சினை , மாத விடாய்ப் பிரச்சினை என்று லோல்பட்டு மாதம் 1000, 2000 என்று ஃபீஸ் கட்டி யோகா மையங்களுக்குச் சென்று ஆட்டுக் கல் இல்லாமலேயே ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பது போல் தோன்றும் சக்கி சாலினாஸனாவை பயிற்சி செய்து கொண்டிருக்கும் கொடுமை என்று ஒன்றன் பின் ஒன்றாக விஷயங்களை அடுக்க ஆரம்பித்தான். கடைசியாக வெகு ஆவேசமாகக் கேட்டான் நிக்கி: தமிழ்நாடு பூராவும் பாலிதீன் உறைகளில் கிடைக்கும் இட்லி மிளகாய்ப் பொடியை நீ சாப்பிட்டுப் பார்த்திருக்கிறாயா ? சொல்லி வைத்தாற் போல் மண்ணைச் சாப்பிடுவது போல் இருக்கும். அதே போல் 10 ரூபாய்க்கு பாலிதீன் உறைகளில் கிடைக்கும் இட்லி மாவு. அதற்குப் பேர் இட்லியா ? வெறும் களி . . . களி .. . என்று கத்தினான் நிக்கி.

மை டியர் ரீடர்ஸ் , இனியும் கதையை வளர்த்திக் கொண்டு செல்ல விரும்பவில்லை. கதை இட்லி மிளகாய்ப் பொடியிலிருந்து திசை மாறி ஆணாதிக்கச் சிந்தனைகளின் பக்கம் செல்வதாகத் தோன்றுகிறது. எனவே , வந்தனம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *