(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
அறிவுடையவரை அவமதித்து ஒழுகாமை
பாண்டியன் நெடுமாறன், தன் உடலை வருத்திய காட்டுத் தீப்போன்ற வெப்பு நோயினின்றும் பிழைத்தான். ஆனால் தவமுனிவராகிய திருஞான சம்பந்தர்க்குத் துன்பம் செய்த சமணர்கூட்டம்; தோற்று மேலும் பிழைத்து வாழ மனம் இல்லாமல் அடியோடு அழிந்தார்கள். இதையே வள்ளுவரும் “நெருப்பினால் சுடப்பட்டாலும் பிழைக்கலாம்; பெரியோர்க்குத் தவறு செய்தவர்கள் அழிவார்கள்” என்று கூறியுள்ளார்.
எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார். (67)
எரியால் = காட்டுத் தீயால்
சுடப்படினும் = கொளுத்தப்பட்டாலும்
உய்வு உண்டாம் = ஒருவழியில்) உயிர்பிழைத்தல் கூடும்
பெரியார் = (தவத்தால்) மேலோர்க்கு
பிழைத்து ஒழுகுவார் = குற்றம் செய்து நடப்பவர்
உய்யார் = எவ்வித வழியாலும் உயிர்பிழையார்.
கருத்து : காட்டுத்தீயைக் காட்டிலும் பெரியவர் கோபத்தீ உயிர்க்கு அழிவை உண்டாக்கும்:
கேள்வி: பெரியார்க்குப் பிழை செய்பவர் அடையும் தீமை என்ன?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.