கதையாசிரியர்:
தின/வார இதழ்: அம்புலிமாமா
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 11,609 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

Ambulimama_Tamil_1991_02_0025-pic

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து, “மன்னனே! சுகமாகப் பஞ்சணையில் படுத்து இந்த வேளை யில் தூங்கவேண்டிய நீ யாருக்காகவோ இப்படிப் பாடுபடுகிறாயே. அவன் உனக்கு நன்றி செலுத்தக் கூட முன் வருவானோ, மாட்டானோ? யார் கண்டார்கள்? இதை விளக்க உனக்கு சியாமளா என்ற பெண்ணின் கதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்” என்று கூறிக் கதை சொல்ல ஆரம்பித்தது.

வெகுநாட்களுக்கு முன் மேலூ ரில் மாணிக்கம் என்ற மாடு மேய்ப்பவன் இருந்தான். அவனுக்கு இசையில் மிகவும் விருப்பம். அவனது குரலும் கேட்க இனிமையாக இருக்கும். அவனுக்குள்ள சிறு வீட்டில் அவன் தாய் இருந்தாள். பகலெல்லாம் மாடுகளை ஓட்டி மேய்த்து வந்துவிட்டு இரவில் சாப்பிட்ட பின் கொல்லைப்புறத்தில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுப் படுத்துக் கொள்வான். பிறகு அவன் பாடிக் கொண்டிருக்கும்போது பாட்டைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிவரும். அதற்குக் காரணம் சியாமளாதான்.

சியாமளா பணக்காரன் பாஸ்கரனின் மகள். பாஸ்கரனின் மனைவி சியாமளாவை இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும் போது விட்டுவிட்டு இறந்து போனாள். அதன்பிறகு பாஸ்கரன் வேறொருத்தியை மணந்து கொண்டான். சியாமளாவின் சிற்றன்னை அவளைக் கொடுமைப்படுத்தி வேலைக்காரியிலும் கேவலமாக நடந்தி வந்தாள். சியாமளாவின் ஒரு கால் பலவீனமானது. அதனால் அவள் நொண்டி நொண்டி நடந்து எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி இருந்தது. நாள் முழுவதும் வேலை செய்து விட்டு இரவில் படுக்க அவளும் தன் வீட்டுக் கொல்லைப்புறத்திற்குத்தான் வருவாள். அப்போது அவள் தன் கஷ்டங்களை நினைத்து வாய்விட்டு அழுவான். இந்த அழுகை அப் பணக்காரனின் வீட்டின் பக்கத்திலுள்ள மாணிக்கம் பாடிக் கொண்டிருக்கும்போது ஆரம்பமாகும். அதனால் அவனால் பாட்டைப் பாதியில் நிறுத்த வேண்டிவரும்.

அவளது அழுகை நிற்கவும் தான் தன் இஷ்டப்படி பாடவும் என்ன செய்யலாம் என்று மாணிக்கம் யோசிக்கலானான்.

Ambulimama_Tamil_1991_02_0026-picமாணிக்கம் ஒருநாள் தன் மாடுகளை ஓட்டிக் கொண்டு காட்டில் வெகுதூரம் சென்றான். அங்கு பரந்த புல்வெளியில் மாடுகளை மேயவிட்டு அவன் ஓரிடத்தில் உட்கார்ந்தான். அங்குள்ள இயற்கைக் காட்சி அவன் மனதை உல்லாசப்படுத்தியது. அதனால் அவன் தன் இனிய குரலில் பாடலானான்.

அவன் எவ்வளவு நேரம் பாடி னான் என்பது அவனுக்கே தெரியாது. அவன் பாட்டை நிறுத்தி விட்டுப் பார்த்தபோது ஒரு முனிவர் தன் எதிரே உட்கார்ந்திருப்பதைக் கண்டான். உடனே அவன் எழுந்து அவரை வணங்கி “சுவாமி. தாங்கள் இங்கு வெகுநேரமாக உட்கார்ந்திருக்கிறீர்களா?” என்று பணிவுடன் கேட்டான்.

முனிவரும் “அப்பனே! இசை தான் மனதிற்கு எவ்வளவு ஆறு தலை அளிக்கிறது! நான் உன் இனிய கானத்தை ஒரு மணி நேரமாகக் கேட்டு அப்படியே மெய் மறந்து விட்டேன். உனக்கு ஏதாவது வேண்டுமானால் கேள். கொடுக்கிறேன்” என்றார்.

அப்போது மாணிக்கம் “சுவாமி! நான் இந்த உலகில் மிகவும் விரும்புவது இசையையே. பகல் முழுவதும் அலைந்து திரிந்துவிட்டு இரவில் படுத்துக் கொண்டு நிம்மதியாகப் பாடலாம் என்றால் அது கூட என்னால் முடியாமல் போகிறதே” என்றான் சலிப்புடன்.

அதைக்கேட்ட முனிவர் ஆச்சரியப்பட்டவராய் “ஏன் முடிய வில்லை?” என்று கேட்டார். அப்போது அவன் சியாமளாவைப் பற்றிக் கூறி “நாளுக்கு நாள் அவள் அழுகை அதிகரித்துக் கொண்டு தான் போகிறது. நான் பாடிக் கொண்டிருக்கும்போது அவளது அழுகை அபஸ்வரமாக ஒலிக்கிறது. அதனால் என்னால் தொடர்ந்து பாட முடிகிறதில்லை” என்றான்.

முனிவரும் சற்று யோசித்து விட்டு “சரி. அவளை நீ என் ஆசிரமத்திற்கு அழைத்து வா, அதனால் அவளுக்கு நன்மையே ஏற்படும். எவ்விதக் கெடுதலும் ஏற்படாது. நீ அவளது தாய் தந்தையரிடம் விவரமாகச் சொல்லி அழைத்து வா. அதோ தெரிகிறதே. அதுதான் என் ஆசிரமம்” என்று கூறி எழுந்து சென்றார்.

மாணிக்கம் காட்டிலிருந்து திரும்பி வந்து அன்றிரவே பாஸ்கரனையும் அவனது இளைய மனைவியையும் கண்டு காட்டிலுள்ள முனிவர் பற்றிக்கூறி சியாமளாவை அவர் சில நாட்கள் தம் ஆசிரமத்திற்கு வந்து இருக்கச் சொன்னதைக் கூறி அதனால் அவளுக்கு நன்மை ஏற்படும் எனச் சொன்னான்.

Ambulimama_Tamil_1991_02_0027-picஅதைக்கேட்ட பாஸ்கரன் கொஞ்ச நாட்களுக்காவது சியாமளா அவளது சிற்றன்னையின் கொடுமைகளிலிருந்து தப்பட்டுமே என்று எண்ணி அவளை அனுப்பச் சம்மதித்தான். சியாமளாவின் சிற்றன்னையோ மறுநாளே அவளை அனுப்ப ஏற்பாடுகளைச் செய்தாள். மறுநாள் மாணிக்கம் சியாமளாவை அழைத்துக் கொண்டு முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான். முனிவரும் சியாமளாவை அன்புடன் வரவேற்று பரிவுடன் தடவிக் கொடுத்து “கவலைப்படாதே மகளே! உன்னை என் சொந்த மகளைப் போல நினைத்து கவனித்துக் கொள்கிறேன். பதினைந்து நாட்களுக்கு இங்கேயே இரு” என்றார். அவளும் சம்மதிக்க மாணிக்கமும் பிறகு வருவதாகக் கூறிச் சென்றான்.

மாணிக்கம் ஒரு மாதத்திற்குப் பிறகே அந்த முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான்.

அப்போது அவன் அந்த ஆசிரமத்தை ஒட்டி பனை ஓலைகளால் மேயப்பட்ட பெரியதொரு குடிசையைக் கண்டான். அதன் முன் ஆண்களும் பெண்களுமாய் பத்து பேர்கள் உட்கார்ந்து கூடைகள் தட்டிகள் என்று மூங்கிலால் வித விதமான பொருள்களைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் யாவரும் உடல் ஊனமுற்றவர்களே.

மாணிக்கம் அக்காட்சியைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். அவர்களில் ஒருவனிடம் முனிவர் ஆசிரமத்தில் இருக்கிறாரா என்று கேட்டான். அவன் தான் ஊமையும் செவிடும் என்றும் சொல் வதைச் சற்று உரக்கக் கூறுமாறும் சைகை காட்டினான். மாணிக்கமும் சைகைகளால் அவனுக்குச் சொல்லவே அவனும் ஆசிரமத்துள் போய் முனிவரை அழைத்து வந்தான்.

மாணிக்கம் முனிவரைக் கண்ட தும் அவரை வணங்கி “சுவாமி! இதெல்லாம் என்ன? தாங்கள் தவம் செய்யவில்லையா? சியாமளா இப்போது எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டான்.

Ambulimama_Tamil_1991_02_0028-picமுனிவரும் புன்னகை புரிந்தவாறே “இதுபற்றி எல்லாம் நான் சொல்வதற்கு முன் என்னைப் பற்றி உனக்குக் கூற வேண்டும். அப்படி அந்தப் பாறை மீது உட்கார்ந்து பேசலாம் வா” என்று கூறி அவனோடு சென்று ஒரு பாறை மீது உட்கார்ந்தார். பிறகு அவர் தம்மைப் பற்றிக் கூறலானார்.

“என் பெயர் ஞானானந்தர். நானும் சிறுவயதில் சியாமளாவைப் போல என் சிற்றன்னையின் கொடுமைகளுக்கு ஆளானவனே. ஒருமுறை அவள் கோபம் கொண்டு சூட்டுக் கோலால் என் உடல் முழு வதிலும் சூடு இழுத்து விட்டாள். அப்போது எனக்கு வயது ஏழு. வலி பொறுக்க முடியாமல் காட்டிற்குள் ஓடினேன். அப்போது இந்த ஆசிரமத்தில் மகானந்தர் என்ற முனிவர் இருந்தார். அவர் என் உடலிலுள்ள தீப்புண்களைக் கண்டு அதற்கு என்ன காரணம் என்று கேட்டார்.

நானும் என் சிற்றன்னையின் கொடுமைகளைப் பற்றிக் கூறினேன். அவர் என் மீது இரக்கப் பட்டு ஏதோ பச்சிலைகளைக் கொண்டு வந்து அதன் சாற்றை என் உடல் முழுவதும் தடவினார். என் உடல் காயங்கள் எல்லாம் ஒரு வாரத்தில் ஆறிவிட்டன. அன்று முதல் நான் அவரது சீடனாகி அவருக்குப் பணி விடைகள் செய்து வந்தேன். அவர் கற்றுக் கொடுத்த எல்லா சாஸ்திரங்களிலும் நல்ல தேர்ச்சி அடைந்தேன். மூலிகை, பச்சிலை வைத்திய முறைகளைத் தெரிந்து கொண்டேன். அவர் எனக்கு ஞானாந்தர் என்ற பெயரை வைத்து இந்த ஆசிரமத்தையும் என்னிடம் ஒப்படைத்து விட்டு உயிர் நீத்தார்.

Ambulimama_Tamil_1991_02_0029-picஅவர் இறந்த பின் நான் இங்கேயே இருந்து தவம் செய்தவாறு காலம் கழித்து வருகிறேன். இந்த நிலையில்தான் நான் உன்னைச் சந்தித்தேன். அதன்பின் சியாமளா இங்கு வந்தாள். அவளது காலை குணப்படுத்தி நன்கு நடக்கும்படி செய்தேன். அவளது உடலில் ஏற்பட்ட காயவடுக்களை முழுவதும் போக்கி விட்டேன். இதன் பிறகு அந்த ஊமை வந்தான் அவன் ஒரு ஆற்றங்கரையில் நினைவு இழந்து விழுந்து கிடந்தான். அவனைக் கண்ட சியாமளா அவனது மயக்கம் தெளிவித்து அவனை இங்கு அழைத்து வந்தாள். அவன் மூங்கிலைக் கொண்டு எவ்வளவு அற்புதமாய் விதவிதமான பொருள்களை செய்கிறான்!

அதன் பின் உடல் ஊனமுற்ற வேறு சிலரும் வந்தார்கள். எல்லோருக்கும் நான் சிகிச்சை அளித்து கொண்டிருக்கிறேன். சியாமளா இப்போது முற்றிலும் குணமடைந்து விட்டாள். அவள் எப்போது வேண்டுமானாலும் அவளது வீட்டிற்குப் போகலாம். அவள் விரும்பினால் இங்கேயே இருந்தும் விடலாம்”.

மாணிக்கம் அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது சியாமளா ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருந்தான். மாணிக்கம் அவளைக் கண்டு பிரமித்துப் போனான். அவள் உடலில் ஒரு காய வடு கூட இல்லை. உடல் தங்கம் போல மின்னியது. அவள் நொண்டவில்லை.

மாணிக்கத்தைக் கண்டதும் சியாமளா குடத்தை இறக்கி வைத்து விட்டு பணிவுடன் அவனை வணங்கி தன் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டான். மாணிக்கத்திற்கு அவளிடமோ, முனிவரிடமோ என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவன் உடனே திரும்பிச் சென்றான்.

அன்றிரவு முழுவதும் மாணிக்கத்திற்குத் தூக்கமே வரவில்லை. அவன் தன் முன் சியாமளா தோன்றிக் கொண்டிருப்பது போலக் கண்டான். மறுநாள் அவன் ஞானானந்தரின் ஆசிரமத்திற்குப் போய் “சுவாமி! சியாமளாவைப் பற்றிய நினைவே நேற்றிரவு முழுவதும் எனக்கு இருந்தது. அவள் மறுபடியும் தன் வீட்டிற்குப் போனால் அவளது சிற்றன்னை அவளை ஒரு வேலைக்காரி போலத் தான் நடத்துவாள். அவளை இந்த ஆசிரம வாழ்க்கையை மேற் கொள்ளச் செய்வதும் சரியல்ல. எனவே உங்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை என்றால் அவளை நான் மணந்து கொண்டு என் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன்” என்றான்.

Ambulimama_Tamil_1991_02_0030-picஞானானந்தரும் “எனக்கு ஆட்சேபணை இல்லை என்றாலும் சியாமளாவின் அபிப்பிராயத்தைத் தெரிந்து கொண்டு அதன்படி நடப்பதே சரி” எனக்கூறிவிட்டு அவர் தம் குடிலுக்குள் சென்றார். இரண்டு நாழிகை நேரம் கழித்து அவர் திரும்பிவந்து “மாணிக்கம்! சியாமளா உனக்கு ஏற்றவள் இல்லை என்பதை பணிவுடன் தெரிவிப்பதாக உன்னிடம் சொல்லச் சொன்னாள். நீ நேற்று கண்ட அந்த ஊமையைத்தான் மணந்து கொள்ளப் போகிறாளாம்” என்றார். பிறகு அவர் ஒரு புல்லாங் குழலை எடுத்துக் கொடுத்து “இது சியாமளாவை மணக்கப் போகிறவன் செய்தது. அவர்கள் இருவரும் இதனை உனக்கு அன்பளிப்பாக அளிக்கிறார்கள்” என்றார். மாணிக்கம் அதனை வாங்கிக் கொண்டு மௌனமாக அங்கிருந்து சென்றான்.

வேதாளம் இக்கதையைக் கூறி “சியாமளா மாணிக்கத்தை மணக்காதது அவன் செய்த உதவிக்கு நன்றிக் காட்டாததுதானே. அவள் செய்தது சரியா? இக்கேள்விக்கு விடை தெரிந்தும் நீ கூறாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும்” என்றது.

Ambulimama_Tamil_1991_02_0031-picவிக்கிரமனும் “மாணிக்கம் சியாமளா விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே சுயநலத்துடன் நடந்து வந்திருக்கிறான். அவளது அழுகை தன் இசைக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்ற காரணத்தால் தான் அவளை மாணிக்கம் முனிவரது ஆசிரமத்தில் சேர்ததான். அவள் மீது இரக்கப்பட்டு அவ்வாறு செய்யவில்லை. நொண்டியாயும் உடல் முழுவதும் தழும்புகள் கொண்டிருந்தும் இருந்த சியாமளாவை அவன் மணப்பதாகக் கூறவில்லை. ஆனால் அவளது தழும்புகள் மறைந்து, கால் சரியாகி தளதளவென மேனி மின்னுவதைக் கண்ட பிறகே அவன் அவளை மணக்க விரும்பினான். ஒரு பெண் உடல் ஊனமுற்று இருந்த போது மணக்க முன் வராத ஒருவனை அவளது உடல் ஊனம் மறைந்த பின் அவன் மணக்க முன் வந்தால் அவனை எந்தப் பெண்ணும் நிராகரிப்பாள். எனவே சியாமளா நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்ளவில்லை” என்றான்.

விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பி மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.

– பெப்ரவரி 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *