(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முன்னாளிலே பாண்டூர் என்னும் ஊரிலே பல்லவ ராயன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவன் நல்ல உடலாற்றல் அமையப்பெற்றவன். ஓரடி யிலே இரண்டு பேரை அவன் நிலத்திலே வீழ்த்தி விடுவான். ஒருநாள் அவனுடைய ஊரிலே இரண்டு பேருக்குப் பகையுண்டாகியது. வாய்ப் பேச்சிலே தொடங்கிய போர் இறுதியில் கை கலத்தலிலே வந்து முடிந்துவிட்டது. இருவரும் வாய்ப்போரை விட்டு விட்டுக் கைப் போரிலே இறங்கினார்கள். ஒருவனிடம் பேனாக்கத்தி இருந்தது. அதை எடுத்துக்கொண்டான். பகைவன் கத்தியுடன் இருத்தலைக் கண்ட மற்றவன் வீட்டுக்குள்ளே ஓடிச்சென்று ஏதாவது அகப்படு கிறதா என்று தேடிப்பார்த்தான். அவனுடைய கையிலே மண்வெட்டி அகப்பட்டது. அதனைத் தூக் கிக்கொண்டு வெளியே ஓடிவந்தான். இருவரும் ஒரு வரையொருவர் தாக்கிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
அப்பொழுது பல்லவராயன் அந்த இடத்திற்கு வந்தான். போர் முகத்திற்குச் சென்றான். இருவரையும் பார்த்து, “வீணாகப் போரிடாதேயுங்கள்,” என்று அறிவுரை கூறத்தொடங்கினான். சினத்தினால் அறி வுக்கண் மறைப்புண்டிருந்த இருவரும் பல்லவராயன் பகர்ந்ததைக் கேட்கவில்லை. மண்வெட்டியின் வெட்டு ஒன்று பல்லவராயனுடைய வலது கைத் தோள் பட் டையின் மீது பலமாகத் தாக்கியது. அதனால் கையில் பாதி பெயர்ந்துவிட்டது. பல்லவராயன் மருத்துவச் சாலைக்குச் சென்றான். அங்கு அந்தக் கை பழமை போல் கூடிவராதென்றும் அதனை எடுத்துவிட வேண்டும் என்றும் கூறி எடுத்துவிட்டார்கள். அதனால் பல்லவராயன் நொண்டிக் கையனாகிவிட்டான். அவ னுடைய ஆற்றல் எதற்கும் பயன்படாமல் போய் விட்டது.
இரண்டு அரசர்களுக்குள் பகைமை வளர்ந்து போர் மூண்ட பொழுது ஒரு வீரன் தன்னுடைய ஆண்மைகளைப் பேசிக்கொண்டு போர்முனையில் சென்றான். ‘பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி’ என்னும் பழமொழியை அவன் அடியோடு மறந்துவிட்டுச் சென்றதால், ஒரு கணையொன்று அவனைப் படுகாயப் படுத்திவிட்டது. அவன் விரைவில் இறந்துவிட்டான். போர்முகத்தில் துணிந்து செல்லுகிறவர்கள் இவ்வாறு தான் தொல்லைக்கு உள்ளாவார்கள். ஆகையால், எவரும் பகைமூண்டுள்ள இடத்திலே முன்னாற் சென்று நிற்றல் கூடாது.
“முனைமுகத்து நில்லேல்” (இ – ள்.) முனைமுகத்து – போர் முகத்திலே, நில்லேல் – போய் நில்லாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955