தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 12,171 
 

ஜெயராமும் கார்த்தியும் நண்பர்கள். வகுப்பில் ஜெயராமுக்கும் கார்த்திக்கும் சின்னத் தகராறு ஏற்பட்டது. தவறு ஜெயராம் மீதுதான். அதனால் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

இரண்டு நாட்களாகவே தனியாகப் பள்ளி செல்லும் கார்த்தியிடம் காரணம் கேட்டார் அம்மா. அவன் நடந்ததைக் கூறினான்.

“என் கணக்கு நோட்டை ஜெயராம் வாங்கிட்டுப் போனான். மறுநாள் பள்ளிக்கு நோட்டைக் கொண்டு வர மறந்துவிட்டான். அதனால் கணித வகுப்பு முழுவதும் நான் வெளியில் நின்றேன். செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவித்த கோபத்தில் அவனைத் திட்டினேன். அதிலிருந்து அவன் என்னுடன் பேசுவதில்லை… நானும் பேசவில்லை…’ என்றான் கார்த்தி.

தூசியைப்“உன்னோட நண்பன்தானே! நீதான் விட்டுக் கொடுத்துப் போகக்கூடாதா?’ என்றார் அம்மா.

“தப்பு செய்த அவனே என்னிடம் பேசாமல் இருக்கும்போது, நான் ஏன் அவனிடம் பேச வேண்டும்?’ என்று எதிர்க்கேள்வி கேட்டான் கார்த்தி.

“சரி, உங்க சண்டையை அப்புறம் பார்க்கலாம். நாளைக்கு உங்க தாத்தா, பாட்டி வர்றாங்க. பரண் மேலே போட்டு வச்சிருக்க பாத்திரங்களை எடுத்துக் கொடு. நாளைக்குத் தேவைப்படும்’ என்றார் அம்மா.

நாற்காலி ஒன்றைப் போட்டு, அதன் மேல் எறி நின்று ஒவ்வொரு பாத்திரமாக எடுத்துக் கொடுத்தான் கார்த்தி.

“அய்யோ! பாத்திரமெல்லாம் ஒரே தூசியாய் இருக்கிறது. இப்ப என்ன பண்றது?’ வருத்தம் மேலிடக் கேட்டார் அம்மா.

“இதுல என்னம்மா பிரச்னை? தூசியைத் துடைத்துவிட்டு, கழுவி பயன்படுத்த வேண்டியதுதானே!’ என்றான் கார்த்தி.

“அதே மாதிரிதான் உன் நல்ல நண்பன். தூசியைப் போல சின்ன தவறு செஞ்சிட்டான். அதை மன்னித்துப் பேச வேண்டியதுதானே!’ என்றார் அம்மா.

கார்த்திக்குத் தனது தவறு விளங்கியது.

“சரியாச் சொன்னீங்க அம்மா! சின்ன தவறுக்காக நல்ல நண்பனை இழக்க இருந்தேன். இப்பவே ஜெயராம் வீட்டுக்குப் போய் வீட்டுப் பாடம் எல்லாம் செஞ்சிட்டு வர்றேன்’ என்றபடி உற்சாகமாக ஓடினான் கார்த்தி.

– கா.முருகேஸ்வரி, கோவை.(ஆகஸ்ட் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *