தண்புனலும் தறுகண் யானையும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,099 
 

யானை ஒன்று ஊர்க்குளத்திற்கு குளிக்கச் சென்றது. சிறுவர்களும் அதன் பின்னால் திரண்டு சென்றனர்.

யானை, குளத்தில் இறங்கிக் குளித்தது. சிறுவர்களும் குளத்தில் இறங்கிக் குளித்தனர். யானை, அவர்கள் மேல் நீரை வாரி இறைத்தது… சிறுவர்களும் அதன் மேல் நீரை வாரி இறைத்தனர்….

யானை அவர்களைத் துதிக் கையால் தொட்டது. அவர்களும் அதன் துதிக்கையைப் பற்றி இழுத்தனர்.

இவ்வாறு பெரிய அமளி நடந்தது. யானை குளித்து விட்டுக் கரையேறியது. சிறுவர்களும் கரையேறினர். யானையை பாகன் அழைத்துச் சென்றான். சிறுவர்கள் யானையைப் பறிகொடுத்தவர் போல் வீடு சென்றனர்.

ஒரு நாள், தெருவிலே மதம் பிடித்து ஓடிவந்தது ஒர் யானை, அது மரங்களை வேரோடு பிடுங்கி, வீசியெறிந்தது. வேலேந்திய மறவர்களையும் ஓட ஓட விரட்டியடித்தது. அந்த யானையை வீட்டினுள்ளிருந்த ஒரு சிறுவன் கண்டான். தன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை .

அன்று குளத்தில் நம்மோடு குளித்த யானையா இப்படிச் செய்கிறது? அதன் துதிக்கை, மரத்தையே பிடுங்குகிறதே! அந்தத் துதிக்கையைத்தானே அன்று குளத்தில் என் கைகளால் பற்றி இழுத்தேன்!

சிறுவன் இருகைகளாலும், தன் கண்களை மூடிக்கொண்டான்.

இக்காட்சியைக் கண்டாள் ஒளவை. அதியமான் செயலையும் கண்டாள்.

தமிழ்ப் புனலில் எம்மொடு குளிக்கும் தறு கண்யானையே! நீ மதங்கொண்டு மறக்களம் சென்றால் அங்கு மலைகள் உருள்கின்றனவே… பகைகள் வெருள்கின்றனவே…. என்று வியந்தாள்.

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *