தக தக தங்க குதிரை இராமநாதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,847 
 

(முன்கதை மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்)

இராமநாதன் காந்தார நாட்டில் கற்சிலை அரசரிடம் விடை பெற்று பட்டு தேசத்தை நோக்கி தன் தேரில் விரைந்தார்.

கற்சிலை மன்னரிடம் பேசிய போது அவர், மந்திரவாதி பல முறை தன் முன்னால் தோன்றிய போது தன்னை மதிக்காத பட்டு தேசத்தையும் தான் பழி வாங்கியதாக சொன்னதாக இராமநாதன் தெரிந்து கொண்டார், ஆக பட்டு தேசம் சென்றால் மந்திரவாதி பற்றிய தகவல்கள் கட்டாயம் கிடைக்கும், மந்திரவாதியை வென்று காந்தார நாட்டிற்கு உதவ வேண்டும் என்று நினைத்தார்.

பட்டு தேசத்தை பற்றி ஏற்கனவே இராமநாதன் பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறார், குருகுலத்திலும் ஆசிரியர்கள் சொல்ல கேட்டிருக்கிறார், சின்ன வயதிலேயே பட்டு தேசத்தின் மீது தனி பாசமுண்டு. பட்டு தேசம் உலக வரலாற்றிலும் மக்கள் நாகரிகத்தில் தனியிடம் பெற்று விளங்கியது, மக்கள் அனைவரும் சுறுசுறுப்பானவர்கள், பட்டு, தேயிலை, கண்ணாடி, கந்தகப்பொடி, காகிதம் போன்றவற்றை உலக நாடுகளுக்கு அவர்கள் தான் எப்படி உபயோகிப்பது என்பதை கற்று கொடுத்தவர்கள். வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்கியவர்கள். அவர்களின் தனிச்சிறப்பு ஏதாவது ஒரு பொருளை பார்த்தாலோ அல்லது கேள்விப்பட்டாலோ உடனே அதை போன்றே உடனே தயாரிக்கும் தன்மை கொண்டவர்கள்.

இராமநாதர் காந்தார நாட்டின் எல்லையை மாலையில் அடைந்த போது வானம் கருமையாக இருண்டு, இடி மின்னலுடன் கடுமையான மழை பெய்தது, அவரும் ஒரு மலையடிவாரத்தில் தங்கிவிட்டார். மறுநாள் காலையில் தன்னுடைய தேரில் ஏறி பட்டு தேசத்தின் எல்லையை அடைந்தார், எங்கே பார்த்தாலும் பச்சை பசேல் என்ற மரங்களும் செடிகளும் புற்களும் நிறைந்திருந்தது, அழகிய பறவைகளும், வனவிலங்குகளையும் ரசித்தார். அங்கே கிடைத்த நல்ல பழங்களையும், காய்கறிகளையும், அம்மா கொடுத்த தனக்கு பிடித்தமான உணவையும் இடையிடையே சாப்பிட்டார்.

அவ்வாறாக இரண்டு நாட்கள் தொடர் பயணத்தின் பின்னர் மாலை நேரத்தில் அவரது பயணம் மொத்தமாக தடைப்பட்டது, காரணம் பட்டு தேசத்தின் மிகப் பெரிய ஆறான மஞ்சள் ஆறு தான். சில நாட்களாக கடுமையாக பெய்த மழையினால் காட்டு வெள்ளத்தால் மஞ்சள் ஆறு கடுமையான வேகத்தில் பாய்ந்து சென்றது. சாதாரண காலத்தில் மஞ்சள் ஆற்றை கடக்க கட்டாயம் வலிமைமிக்க படகு தேவை, இந்நிலையில் படகில் கூட பயணம் செய்யமுடியாது. தன்னுடைய தேரை உபயோகித்து ஆற்றை கடக்க முடியாத இக்கட்டான நிலைக்குள்ளானார்.

சூரியன் மறையும் நேரம் சீக்கிரத்தில் வரும் நிலையில் என்ன செய்வது என்று அறியாமல் விழித்தார், அவர் இருந்த பகுதியில் மக்கள் யாரும் வசிக்கவில்லை, சுற்றும் முற்றும் தன் தேரில் ஏறி பார்த்தார், ஒன்றுமே புலப்படவில்லை.

தன் இஷ்ட தெய்வமான முருகனை மனதில் நினைத்து, “இறைவா! நான் கொண்ட காரியத்தில் வெற்றி கிடைக்க உன்னால் தான் உதவ முடியும், எப்போதும் என்னுடன் இருக்கும் இறைவா! எனக்கு ஒரு நல்ல வழி காட்டு, மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நம்பிக்கையோடு வேண்டினார்”

இறைவனை மனதில் கும்பிட்டு கண்களை திறந்து பார்த்தார், என்ன ஆச்சரியம் தூரத்தில் ஒரு மலையடிவாரத்தில் தங்க நிறத்தில் ஏதோ ஒளி தெரிந்தது. சூரியனின் மாலை நேர கதிர்கள் ஏதோ ஒன்றின் மீது பட்டு எதிரொலித்தது.

இராமநாதனுக்கு மனதில் உற்சாகம் தொற்றிக் கொண்டது, வேண்டிய இறைவன் வேண்டுதலுக்கு செவி சாய்த்துவிட்டார், இனிமேல் எல்லாம் ஜெயம் தான் என்று தான் ஒளி கண்ட இடத்தை நோக்கி தன் தேரில் விரைந்தார்.

அந்த ஒளியானது ஒரு மலையடிவாரத்தின் பின்னால் தெரிந்தது, அங்கே விரைந்த இராமநாதன் ஆச்சரியத்தில் வாயை பிளந்து நின்றார், அங்கே அவர் கண்ட காட்சி அவர் மனதை சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மலையடிவாரத்தில் அடைந்த இராமநாதன் கண்டது தக தக தங்க நிறத்தில் இறக்கைகள் கொண்ட ஒரு குதிரை தான். அருகே சென்ற அவர் தேரிலிருந்து இறங்கி ஓடி போய் குதிரையை பார்த்தார், பார்த்த மாத்திரத்தில் அவரது உற்சாகம் சுதி இறங்கிவிட்டது.

அங்கே இருந்த குதிரையானது உயிரற்ற தங்க குதிரை, குதிரையின் உடல் முழுவதும் தங்கத்தாலும் அதன் கண்கள் சிவப்பு நிற இரத்தின கல்லாலும், அதன் பற்கள் வைரத்தாலும் செய்யப்பட்டிருந்தது.

ஒளி காட்டிய இறைவன் சரியான வழி காட்டவில்லையோ என்று நினைத்த இராமநாதன், குதிரையை சுற்றி வந்தார், ஒன்றுமே புலப்படவில்லை, அதன் கண்களை உற்று நோக்கினார், என்ன ஆச்சரியம், அதன் கண்களில் சில எழுத்துகள் தெரிந்தன.

பட்டு தேச மொழியில் இருந்தாலும் அதை இராமநாதன் சரியாக படித்து அர்த்தம் புரிந்துக் கொண்டார்.

“நினைத்த இடத்திற்கு பறந்து செல்லும் வல்லமை மிக்க இந்த தக தக தங்க குதிரை தங்கள் குதிரையாக வேண்டும் என்றால், மலை உச்சியில் வசிக்கும் மூன்று மந்திர, தந்திர, இந்திர சித்திரக்குள்ளர்களின் மந்திர குடுவையில் இருக்கும் மந்திர நீரை இதன் மேல் ஊற்ற வேண்டும்.

குதிரையின் கண்களில் தெரிந்ததை படித்த பின்னர் இராமநாதனுக்கு தன்னால் தங்க குதிரைக்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது, அதே நேரம் சித்திரக்குள்ளர்களைப் பற்றிய பயமும் ஏற்ப்பட்டது, தனக்கு முன்னர் பலர் இக்குதிரையை பார்த்திருப்பாங்க, அப்போ பலர் முயற்சி செய்தும், இது இன்னமும் தங்க குதிரையாகவே இருக்கிறது என்றால் சித்திரக்குள்ளர்களை தேடி போனவர்கள் கதி அதோ கதியாகி இருக்கும், தனக்கு அது நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து தேரிலிருந்த தன்னுடைய வாளை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டார். தான் கொண்டு வந்த உணவு மூட்டைகளையும், அத்துடன் எதுக்காவது உதவும் என்று கொண்டு வந்த காக்கா முத்துக்களில் சில எடுத்து பையில் போட்டுக் கொண்டார்.

மிகவும் கஷ்டப்பட்டு மலையின் மேல் ஏறினார், மலை உச்சியை அடையும் போது சூரியன் மறையும் நேரமாகிவிட்டது, ஒரு வழியாக உச்சியில் ஏறிய பார்த்தால் அங்கே பளிங்கு நிறத்தில் பெரிய மாளிகையே இருந்தது, இராமநாதன் தான் நினைத்தப்படியே எல்லாம் நடக்குது, எப்படியும் சித்திர குள்ளர்களுக்கு தெரியாமல் மந்திர நீர் இருக்கும் குடுவையை மட்டும் எடுத்துக் கொண்டு ஒடி விட வேண்டும் என்று நினைத்தார்.

அதனால் வேகவேகமாக பளிங்கு மாளிகையை நோக்கி விரைந்தார், மாளிகையின் கதவை அடைய இன்னும் 3 அடி தூரம் தான் இருக்கும், திடிரென்று எங்கிருந்தோ வந்து விழுந்த வலையில் மாட்டிக் கொண்டார் இராமநாதன். எவ்வளவோ முயற்சித்தும் தன்னை விடுவிக்க முடியவில்லை, வசமாக மாட்டிக் கொண்டார். என்ன செய்வது என்றே தெரியவில்லை, சித்திரக்குள்ளர்களிடம் மாட்டிக் கொண்டோம், இனிமேல் மற்றவர்களுக்கு ஏற்ப்பட்ட கதி தான் தனக்கும் ஏற்ப்படும் என்று நினைத்த இராமநாதன் மயங்கி விழுந்து விட்டார், ஏற்கனவே மலையை ஏறி வந்த களைப்பு, மனதில் ஏற்ப்பட்ட பயம் இரண்டும் சேர்ந்து அவரை மயக்க நிலைக்கு கொண்டு சென்றது.

கண் விழித்து பார்த்த இராமநாதன் எதிரே கண்ட காட்சியை கண்டு மிரண்டு போய் மீண்டும் மயக்க நிலைக்கு ஆளானார்.

இராமநாதன் கண்ட காட்சி என்ன? சித்திரக்குள்ளர்களிடமிருந்து தப்பினாரா?

தொடரும் …

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *