ஊன்பொதி பசுங்குடையார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 27, 2021
பார்வையிட்டோர்: 21,098 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழறிந்த பெரியார் ஊன்பொதி பசுங்குடையார் என்பவர். இவர் மிகுந்த வறுமையுற்றிருந் தார். எக்காலத்திலும் தம் உறவினருடனேயே இருப்பார். பரிசிலாகக் கிடைத்த பொருளைத் தமக்கென்று கொள்ள மாட்டார். உற்றாருக்கும் பகிர்ந்து கொடுத்து அவர்கள் உண்டு மகிழ் வதைக் கண்டு தாமும் மனம் மகிழ்வார்.

இவரிடத்தில் உயர்ந்த குணங்களெல்லாம் குடி புகுந்திருந்தன. பிறர் குற்றத்தை எடுத்துப் பேசுகின்றவர்களைக் காண்பதற்கும் கூசுவார். அத் தகையோர் சொற்கள் அறவே தள்ளத்தகுந் தன என்று அவற்றை ஏற்றுக்கொள்ளமாட்டார். தீக் குணம் ஒருவனிடம் இருக்கக் கண்டால் அக் குணத்தை எவ்வாறேனும் ஒழித்து வாழும் வண்ணம் அக்குணமுடையவனைத் தூண்டுவார். பிழை செய்தோர் தாம் செய்தது பிழை என்று உணர்ந்தால், அவர்களுக்கு ஆகும் நலன்களைச் செய்வார்.

இவர் பரிசில் பெறுதற்காக மன்னர்களிடம் செல்வார். அப்பொழுதெல்லாம் தனித்துச் செல்வது இவர் வழக்கம் இல்லை; உறவினருடனே தான் செல்வார். இளஞ்சேட் சென்னி என்ற சோழ மன்னனை அடைந்தார். அவன் செருப்பாழி என்ற ஊரை வென்று தன் கீழ் அடக்கியவன்; ஆதலி னால், செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்று அழைக்கப்பட்டான்.

சென்னி, சிறந்த போர்வீரன். போர்க்களத்தை ஏர்க்களமாகக் கொண்டவன். உழவர் ஏர்க் களத்தில் நெற் கதிரை அரிவர்; பின்னர் அவற்றைப் போராகக் குவிப்பர்; எருதினைப் பூட்டி அக்கதிரின் மேல் ஓட்டி நெல் வேறு வைக்கோல் வேறு எனப் பிரிப்பர். அவ்வாறே சென்னி போர்க் களத்தில், பகை வீரர் குரல்வளையை (கழுத்தை) அரிவன்; பிணப்போரைக் குவிப்பான்; யானையை எருதென்று கொண்டு வாளாகிய மடலை வீசுவான். இங்ஙனம் போரில் சிறந்த வீரன் இளஞ்சேட் சென்னி.

‘பழுத்த மரம் எங்கே இருக்கின்றது என் பதை அறிந்து வௌவால்கள் அங்கே செல்லும். அவ்வாறே கேட்டார்க்கு இல்லை என்னாது தரும் வள்ளல்கள் இருக்கும் இடத்தைத் தேடிப் புலவர் களும் செல்வர். இளஞ்சேட் சென்னி பழு மரத்தை ஒத்தவன் என்பதைப் புலவர் அறிந்தார். ஆதலின், அவன்பால் தன் சுற்றத்தினருடன் சென்றார்.

“தெற்குத் திசையிலுள்ள குறுநில மன்னர், வடக்குத் திக்கில் வாழ்ந்த வடுகர், இவர்தமை சங்க இலக்கியக் கதைகள் வென்ற வேந்தனே!” என்று அரசனின் வெற்றியைப் புகழ்ந்து சுற்றத்தாருடன் பாடி நின்றார் பசுங்குடையார். புலவர்தம் புலமையைச் செவ்வையாக மன்னன் அறிந்தான்.

அரசன், தன் நிதிக்கொட்டிலிலிருந்து சிறந்த அணிகளையும், பெருஞ் செல்வத்தையும் கொணர்ந்து புலவருக்கும் அவருடனிருந்த பிற ருக்கும் கொடுத்தான். அணிகளைக் கண்ட அவருடைய சுற்றத்தார் அவற்றை அணியும் முறை அறியாது, விரலில் அணிய வேண்டியவற்றைச் செவியில் அணிதற்கு முற்பட்டனர். இடுப்பிற் குரிய அணிகளைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியவைகளை இடுப்பிலும் அணி செய்கின்றனர். ஊன் பொதி பசுங்குடையார் இதனைக் கண்டதும் மகிழ்ந்து சிரித்தார். அவை யிலிருந்த அரசனும் பிறரும் விலா எலும்பு முறியும்படி சிரித்தனர்.

இக் காட்சியைக் கண்ட புலவருக்கு மற் றொரு கதைப் பகுதி நினைவிற்கு வருகின்றது. அதனைப் பின்வருமாறு கூறுகின்றார்: “வஞ்சகமாக இராவணன், இராமனைச் சீதையினிடமிருந்து பிரித்தான். சீதையைச் சிறை செய்து கொண்டு சென்றான். அப்போது சீதை தான் சிறைப்பட்டதை ஒருவாறு இராமனுக்கு அறிவிக்க விரும்பினள். ஆதலின், தான் அணிந்திருந்த அணிகளைக் கழற்றி ஒன்றாய்ச் சேர்த்துக் கீழே எறிந்தாள். இவ்வணிகளைச் சுக்கிரீவனைச் சேர்ந்த குரங்குகள் கண்டன. ஒவ்வொரு குரங்கும் சில அணிகளை எடுத்துக்கொண்டு அவற்றை அணியும் இடத்தில் அணியாது தாம் விரும்பிய வெவ்வேறான இடங்களில் அணிந்து மகிழ்ந்தன. அவ்வாறே என் உறவினரும் இன்று காணப்படுகின்றார்கள்.”

புலவரின் வறுமையொழிந்தது. அவர் உறவினர் இலம்பாடும் நீங்கிற்று. இளஞ்சேட் சென்னியை நெடிது வாழ்த்தி யாவரும் மகிழ்ந்தனர்.

– சங்க இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *