இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு திருப்பதிக்குச் சென்று மொட்டை போட்டு வருமாறு கணவனிடம் சொன்னாள் மனைவி.
“நான் வந்தால் செலவு கூடுதலாகும் என்பதால், உங்களை மட்டும் அனுப்புகிறேன். வேறு செலவு எதையும் செய்ய வேண்டாம்”; என்று கூறி. புளியோதரை கட்டிக் கொடுத்து, கணவனை அனுப்பி வைத்தாள் மனைவி.
கணவன் இரண்டு பிள்ளைகளுடன் திருப்பதி சென்று, சவரத் தொழிலாளியிடம் உட்கார வைத்தான். அவன் இருபிள்ளை களுக்கும் மொட்டை அடித்து விட்டான். கட்டணத்தைக்
கொடுத்தான் பிள்ளைகளின் தந்தை.
“நீயும் வந்து உட்கார்! உனக்கும் மொட்டை போட்டு விடுகிறேன்” என்றான் சவரத் தொழிலாளி.
“எனக்கு வேண்டாம்; என்னிடம் அதற்குப் பணம் இல்லை” என்றான் அவன்.
“இரண்டு மொட்டை போட்டால், ஒரு மொட்டை இலவசம்!” என்றான் சவரத் தொழிலாளி.
‘இலவசம்’ என்று அவன் சொன்னதும், அவனும் உட்கார்ந்து, மொட்டை போட்டுக் கொண்டான்.
வீட்டுக்குத் திரும்பினர், மூன்று மொட்டைகளையும் கண்டாள் மனைவி. கோபம் கொண்டு, “நீங்கள் ஏன் மொட்டை போட்டுக் கொண்டீர்கள்? இரண்டு ரூபாய் அதிகச் செலவு ஆயிற்றே” என்று சத்தம் போட்டாள் மனைவி.
கணவன் அமைதியாக, “‘இரண்டு மொட்டைக்கு, ஒரு மொட்டை இலவசம்’ என்றான் சவாத் தொழிலாளி. அதனால் நானும் மொட்டை போட்டுக் கொண்டேன்” என்றான்.
மனைவி அமைதியானாள். ‘இலவசம்’ என்றாலே சிலருக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.