முடிவுகள் திருத்தப்படலாம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 13,452 
 

மனைவியின் மூலமாக சாமிநாதன் காதுக்கு அந்தச் செய்தி வந்தபோது ‘ஏய் அதெல்லாம் இருக்காது’ என்று மறுத்தாலும் கொஞ்ச நாளாவே ஊருக்குள்ளே அரசல்புரசலாக பேசுறதை அவர் அறிவார்.

“அட ஏ நீங்க வேற… ஊரே பேசுது… ஒங்களுக்கு தெரிஞ்சாலும் நொள்ளைன்னுதான் சொல்லுவியா… நெருப்பில்லாம பொகயாதுங்க…” அரிவாள்மனையில் கத்திரிக்காயை வெட்டியபடி பேசினாள் சவுந்தரம்.

“அட இவ ஒருத்தி… நெருப்பில்லாம பொகயாது… சட்டியில்லாம வேகாதுன்னு… நாலு பேரு நாலுவிதமாப் பேசுனா உண்மையாயிருமா என்ன..?”

“உண்மையிருக்கக்கண்டிதானே பேசுறாக… வடக்கித் தெருப்பக்கமெல்லாம் நாலஞ்சி நாளா கூகூன்னு கெடக்கு… நம்ம பக்கந்தேன் வெசயந் தெரியாம இருந்திருக்கு…”

“இங்கேரு… தப்புச் சொல்றது சொலபம்… ஆனா அது உண்மையா பொய்யான்னு ஆராயாமச் சொல்லப்படாது… இஞ்சரு… சம்முவம் கம்மாயில குளிச்சிக்கிட்டு இருக்கான்னு நீ கம்மாக்கரையில நின்னு சொன்னியன்னா… ஒவ்வொரு ஆளு காதுக்கும் மாறி மாறிப் போயி கடைசியில அவன் வீட்டு வாசல்ல நிக்கிற அவனோட ஆத்தாவுக்கு சம்முவம் கம்மாயில குடிச்சிக்கிட்டு இருக்கான்னு போயிச் சேரும்… இதுல எது உண்ம… குளிக்கிறதா… குடிக்கிறதா… அப்புடித்தான் இதுவும்… உண்ம தெரியாம ஊரு பேசுதுன்னு நாமளும் பேசப்படாது… அது தப்பு… நமக்கும் புள்ளகுட்டிக இருக்கு”

“ம்க்கும்… பெரிய்ய அரிச்சந்திர மவராசா பரம்பர… ஒங்களையும் போயி ஊருக்கு அம்பலம்ன்னு வச்சி, நீங்க சொல்றது செரியின்னு போறானுவளே அவனுகளச் சொல்லோணும்…” என்று சவுந்தரம் சொன்னதும் சிரித்துக் கொண்டார்.

சாமிநாதன் அந்த சிறிய கிராமத்தின் அம்பலம்… ஊரில் நல்லது கெட்டது எது என்றாலும் அவருக்குத்தான் முன்னுரிமை… விவசாயக் கூட்டமா… திருவிழாக் கூட்டமா… சொத்துப் பிரச்சினையா… அடிதடி தகராறா எதாயிருந்தாலும் அவர் சொல்றதுதான் முடிவு… அதுக்காக நாட்டாமை மாதிரி சொம்பெடுத்துக்கிட்டு வேப்பமரத்து நிழல்ல உக்காந்துக்கிட்டு ‘ம்… சொல்லுவே’ அப்படின்னு எல்லாம் இருக்கமாட்டாரு… இருக்கவும் முடியாது… எல்லாரும் உக்காந்து பேசுவாக… எல்லோருடைய கருத்தையும் கேப்பாரு… அப்புறம் எல்லாத்தையும் யோசிச்சு ஒரு முடிவு சொல்வாரு… அதை ஊர் ஏத்துக்கும்… எப்பவுமே ஊருக்கு சாதகமான முடிவைத்தான் எடுப்பார். நான் சொல்றதுதான் என்று நிற்கமாட்டார். போன பஞ்சாயத்து எலெக்சன்ல ஊரே சேர்ந்து அவரை நிக்கச் சொன்னப்போ அதெல்லாம் சரிவராதுன்னு மறுத்து மேலக்கட்டிவயல் பரமானந்தத்தை ஆதரிச்சி ஜெயிக்க வச்சு ஊருக்கு தேவையான வசதிகளை செய்ய வச்சிக்கிட்டு இருக்கார். அவர் மேல எப்பவும் ஊருக்குள்ள ஒரு நல்ல பேர் உண்டு.

“என்ன சாமிநாதா… சேதி தெரியுமா..?” கம்மாய்க்கு குளிக்கப் போனவரிடம் குளித்துக் கொண்டிருந்த கருப்பையா இப்படிக் கேட்கவும் “என்ன சேதி கருப்பையாண்ணே… திடீர்ன்னு சேதி தெரியுமான்னு கேக்குறே?” என்றபடி கரையில் நின்ற வேப்பமரத்தில் குச்சி ஒடித்து பல் விளக்க ஆரம்பித்தார்.

“ஊரே பேசுது… தெரியாத மாதிரி கேக்குறே… நீ எப்பவும் இப்படித்தாம்பா… போட்டு வாங்குறதுல கில்லாடி…” என்று சிரித்தவர் லைப்பாய் சோப்பை போட்டு முதுகில் வரட்டு வரட்டுன்னு தேய்த்தார்.

“ம்… அதுவா… நேத்து ஏ வீட்டுக்காரி சொன்னா… அது உண்மையா இருக்கும்ன்னு எனக்குத் தோணல… விசாரிப்பம்…”

“அட அம்புட்டுப் பேரும் சொல்றானுவ.. முருகேசன் மவன் சிவாப்பய நேர்லயே பாத்திருக்கான்…”

“சிவா பாத்தானாமா..?”

“அட ஆமாங்கிறேன்… அவ ஆத்தா வெளிய சொல்ல முடியாம தவிக்கிறா… இந்தப்புள்ள இப்படிப் பண்ணலாமா…? யாருக்குள்ள யாரு… அசிங்கமா இல்ல…”

“அண்ணே டப்புன்னு பொட்டப்புள்ள மேல தப்புச் சொல்லப்படாது… ஊரு பேசுறது உண்மதானான்னு முதல்ல விசாரிப்பம்… அது உண்மயின்னா ஊர்க்கூட்டத்தைப் போட்டு என்ன பண்ணலாம் ஏது பண்ணலாம்ன்னு யோசிப்போம்… எது எப்புடியோ ரெண்டு பேருக்கும் கட்டிக்கிற மொறதான…”

“ஏப்பா… கட்டிக்கிற மொறயின்னாலும் இப்ப இருக்க நெலம என்னன்னு அந்தப்புள்ள யோசிக்கலயே… செரி… செரி… நீ சொல்றே… இதுவும் சரியின்னுதான் படுது… இருந்தாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்தியா வருதுப்பா..” என்றவர் முகம் முழுவதும் சோப்பை தடவிக் கொண்டு தண்ணிக்குள் இறங்கினார். சாமிநாதனும் துண்டைக் கட்டிக் கொண்டு குளிக்கத் தயாரானார்.

“வா… வாங்க மாமா… என்ன திடீர்ன்னு… ஆபீசுக்கு வந்திருக்கீக… இங்க எதுனாச்சும் வேலையா..?” சாமிநாதனை அங்கு எதிர்பார்க்காத ராமமூர்த்தி பயத்தோடு கேட்டான்.

“அட எதுக்கு மாப்ள பயப்படுறே…? ஏ மச்சின மவளப் பிஎல் சேக்கிறதுக்கு வந்தாக… என்னயும் கூப்பிட்டான்… இப்ப என்ன வெவசாய வேலயா என்ன… ஆடு மாட அவுத்து விட்டா மேஞ்சிட்டு வந்துரும்… சரியின்னு கெளம்பி வந்தேன்… ஓ ஆபீசுக்கு முன்னால ஒரு தடவ வந்திருக்கேனா… இங்ஙன பக்கத்துலதான் பிஎல் காலேசு… சேத்தாச்சு… அவனோட கொழுந்தியா வீட்டுக்கு பொயிட்டுப் போவோம்ன்னு சொன்னான்… நீங்க பொயிட்டு வாங்க… எங்க ஊரு மாரியப்பன் மவனோட ஆபீசு இங்கதானிருக்கு… பாத்துட்டு இங்ஙன நிக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்..”

“ம்… சரி வாங்க மாமா ஜில்லுன்னு ஜிகர்தண்டா சாப்பிடலாம்…” என்றதும் இருவரும் மாடியில் இருந்து கிழிறங்கி ரோட்டின் எதிர்ப்பக்கமிருந்த கடையில் ஜிகர்தண்டா ஆர்டர் பண்ணிவிட்டு சேரில் அமர்ந்தனர்.

பொதுவாக பேசிக்கொண்டே வந்தவர் “ஏம்மாப்ள… நம்ம காவேரி மவ எமுனா இங்கதான் வேல பாக்குதாமே… அப்புடியா..?” மெல்ல ஆரம்பித்தார்.

“யா…யாரு மாமா..?”

“என்ன மாப்ள தெரியாத மாதிரி கேக்குறிய… அட நம்மூரு காவேரி மவ, ஒங்க சின்னையா பேத்தி எமுனா…”

“ஓ… நம்ம யமுனாவா…. இங்கதான் இருக்கு…”

“இங்கனா… பக்கத்துலதானா…?”

“இ…இல்ல மாமா… சிட்டிய விட்டு வெளியில அவங்க கம்பெனி…”

“ஓ… எங்க தங்கியிருக்கு…?”

“கம்பெனிக்கிட்ட ஒரு அபார்ட்மெண்டுல நாளஞ்சு பொண்ணுகளோட பிளாட் எடுத்து தங்கியிருக்கு…”

“ம்… நல்லபுள்ள அது… அதோட வாழ்க்கை இப்படியாகிப்போச்சு… பரவாயில்ல… தைரியமா அதுல இருந்து மீண்டு வந்ததே பெரிய வெசயமில்லையா…”

“ம்…” என்றவனின் போன் அடிக்க, கட் பண்ணி விட்டான்.

“நீ அந்தப்புள்ளய பாப்பியா…?”

“இ…இல்ல…. நம்மூருக்கு வரும்போது பாத்தாத்தான்… எனக்கு ஆபீசு முடிய ஒம்போது மணிக்கு மேலாகும் மாமா… சண்டே மட்டுந்தான் லீவு… தொவைக்க குளிக்கன்னு எங்கிட்டும் போ முடியாது மாமா… எப்பவாச்சும் போன் பண்ணிப் பேசும்… எனக்கிருக்க வேலயில நா இதுவரைக்கும அதுக்கு போன் பண்ணினதில்ல… அதுதான் கூப்பிடும்” என்றவனின் போன் மறுபடியும் அடிக்க, கட் பண்ணினான்.

“யாரு மாப்ள… எதுக்கு கட் பண்றே…? பேசு… அவுகளுக்கு என்ன அவசரமோ…”

“இல்ல மாமா பிரண்டுதான்… ஆபீஸ் போயி பேசிக்கலாம்…”

“மாப்ள நாங்கேக்கிறேன்னு தப்பா நெனக்காதே… நீயும் எமுனாவும் இங்க ஒண்ணாச் சுத்துறதா…” மெல்ல இழுத்தார்.

“மாமா…” சத்தமாகச் சொன்னவன் சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு தலை குனிந்தபடி “அப்படியெல்லாம் இல்ல மாமா… பெரிய மனுச நீங்க… நீங்க மத்தவங்க சொல்றதைக் கேட்டுப் பேசலாமா..?” என்றான்.

“இங்க பாரு மாப்ள… ஒலவாய மூடலாம் ஊர்வாய மூட முடியாது… ஊருல விடிஞ்சா எந்திரிச்சா ஒங்க பேச்சுதான்… நாங்கூட ஒங்க அத்த சொன்னப்ப நம்பலை… ஆனா சிவாப்பய நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வண்டியில போறதை பாத்திருக்கான்… அவன் கூட அவனோட தொழில் வெசயமா அடிக்கடி இங்க வருவாங்கிறத்தான் ஒங்களுக்குத் தெரியுமே… அவன் சொன்னான்னு கருப்பையா அண்ணன் சொன்னப்போ நம்பாம இருக்க முடியல… ஏன்னா அவன் கதகட்டி விடுற பய இல்லை…”

“….”

“இங்கேரு மாப்ள… இது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சிக்கத்தான் மச்சினன் கூப்பிட்டப்ப நா இங்க வந்தேன்… சொல்லு… எதாயிருந்தாலும் சொல்லு… நா இருக்கேன்… உங்க அப்பனாத்தா பத்தி கவலயில்ல… ஆனா காவேரி, புருசனில்லமா பொட்டப்புள்ளய வளத்து படிக்க வச்சி உங்கப்பன் ரெண்டு பொட்டப்புள்ள இருக்கு அப்படின்னு சொல்லி உனக்கு கட்டிக்கமாட்டேன்னு சொன்னதும் ஒரு இடத்துல புடிச்சிக் கொடுத்தா… ஆனா அவ வாழ்க்க மாதிரி புள்ள வாழ்க்கயும் ஆயிப் போச்சு… அத்துக்கிட்டு வந்து மூலையில முடங்கிக் கெடக்காம படிச்ச படிப்ப வச்சி இன்னைக்கு நல்ல வேலயில இருக்கா… கை நெறய சம்பாதிக்கிறா… சந்தோசந்தே… ஊரு அசிங்கமாப் பேசுறதக் கேட்டு அவ அம்மா காவேரி உக்கிப் போயித் திரியிறா… அது உனக்குத் தெரியுமா…?”

“ம்…தெரியும்… யமுனா சொன்னுச்சு…” என்றவனின் போன் அடிக்க, இந்தமுறை எடுத்து “முக்கியமான ஒருத்தவங்களோட வெளியில இருக்கேன்… ஆபீஸ் வந்துட்டு கூப்பிடுறேன்” என்று சொல்லி வைத்தவன் “உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன மாமா… எல்லாம் சொல்றேன்…” என ஆரம்பித்தான்.

“இப்ப சாட்டர்டே, சண்டே யமுனா எங்கூடத்தான் என்னோட வீட்ல இருக்கா மாமா… அவள நான் லவ் பண்றேன்… உங்களுக்கெல்லாம் தெரியாது… படிக்கிற காலத்துல இருந்து அவ மேல எனக்கு லவ்… அத்த அப்பாக்கிட்ட எனக்கு கட்டணும்ன்னு கேட்டப்போ, அப்ப ஒத்துகலை… என்னால அவங்ககிட்ட சண்டை போட்டு யமுனா கட்டிக்க முடியல… ஏன்னா எங்கம்மா மருந்தக் குடிச்சிருவேன்னு சொல்லி மிரட்டினாங்க… எனக்குப் பின்னால ரெண்டு தங்கச்சிங்க இருந்தாங்க… அப்படியிருந்தும் ஓடிப்போயிடலாம்ன்னு அவகிட்ட சொன்னேன்… ஆனா அதுக்கு அம்மா செத்துருமுன்னு அவ ஒத்துக்கலை… நல்ல இடம்ன்னு பாத்துத்தான் அத்த கட்டுச்சு… ஆனா அவங்க… அதான் உங்களுக்கே தெரியுமே… பஞ்சாயத்துக்கு எல்லாம் போனியதானே… உங்களுக்குத் தெரியுமா… நாங்க லவ் பண்ணுனது ஊருக்கு மட்டுமில்ல எங்க வீட்டுக்கும் தெரியாது… தெரியாத வரைக்கும் நல்லதுதான்னு விட்டுட்டு அவங்க அவங்க வாழ்க்கைப் பாதையில பயணிச்சோம். எங்கிட்ட கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் போன்ல பேசுவா… நானும் பேசுவேன்… சத்தியமா அதுல காதல் இல்ல மாமா… அத்த பொண்ணு… மாமா மகன்கிற உறவு மட்டுமே இருந்துச்சு… ஆனா விதி வலியது மாமா… ” பேச்சை நிறுத்தி ஜிகர்தண்டாவை கொஞ்சம் குடித்து குளிர்ச்சியாகிக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“ஆமா விதி வலியதுதான் மாமா… இல்லேன்னா அவ ஏன் இங்க வேலைக்கு வரணும்… எங்கிட்ட போன் பண்ணி மணிக்கணக்குல மனசுல உள்ள பாரத்தை எல்லாம் சொல்லி அழணும்… அவளுக்கு ஆறுதலா பேசினேன்… அவளைப் பார்க்கப் போனேன்… தோள்ல சாஞ்சி ஓன்னு அழுதா… கல்யாணமாகி ஆறு மாசத்துல அத்துக்கிட்டு வந்தவ… அவளோட மனபாரத்தை சுமக்க ஒரு தோள் தேவைப்பட்டுச்சு… சத்தியமாச் சொல்றேன் மாமா… அவளைக் காதலிச்ச மனசு… அவ பட்ட கஷ்டத்தைக் கேட்டப்போ…” பேச்சை நிறுத்தி கண்ணைத் துடைத்துக் கொண்டான்.

அவர் பேசாமல் ஜிகர்தண்டாவை கையில் வைத்தபடி அமர்ந்திருக்க, அவனே தொடர்ந்தான்.

“ம்… உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்… புருஷன் பொண்டாட்டிக்கு ஒத்துவரலை…. அதனால பிரிவு… இதுதானே…. இதேதான் அவ அம்மாவுக்கும் எங்க வீட்டுக்கும் தெரியும்… ஆனா அவபட்ட வேதனைகள்… வலிகள்… ரணங்கள்… யாருக்கும் தெரியாது மாமா… அது எனக்கு மட்டுந்தான் தெரியும்… என்னோட தோள் சாஞ்சவ சொல்லச் சொல்ல எனக்கு ரத்தக் கண்ணீர் வந்திருச்சு மாமா…. நீங்க பெரியவுக… உங்ககிட்ட எப்படிச் சொல்றது…? கேவலமா நடந்துக்கிட்டு இருக்கான்னு மட்டும் சொல்லிட்டு கடக்க முடியாது மாமா… நீங்க உலகம் புரிஞ்சவங்க…. நாலு நல்லது கெட்டதுக்கு பஞ்சாயத்து பண்ணுறவங்க… அடுத்தவங்க நல்லாயிருக்கணும்ன்னு நினைக்கிறவங்க… உங்ககிட்ட சொல்றது தப்பில்ல மாமா… என்னைத் தப்பா நினைக்காதீங்க…” பேச்சை நிறுத்தி மீண்டும் கண்ணீரை துடைத்துக் கொண்டான். ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றிவிட்டு தொடர்ந்தான்.

“யமுனா சாதாரண வேதனையை அனுபவிக்கலை… அவ… அவ… தொடையில… மார்பகத்துல எல்லாம் சூடு வச்சிருக்காங்க மாமா… வயித்தைச் சுற்றிலும் சிகரெட் சூடு… இவ்வளவு ஏன் அவ அழகான கால்ல கத்தியால கீறிக்கிறி வச்சிருக்கான்… சாடிஸ்ட்…” கத்தினான்.

சாமிநாதனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை… அவனைப் பார்த்தபோது அவரின் கண்களும் கலங்கியிருந்தன. “ஒரு பொம்பளப்புள்ளய இப்படியெல்லாமா கொடுமப் படுத்துவாங்க… மனுசங்களா… மிருகங்களா… இதை அன்னக்கி நமக்கிட்ட சொல்லியிருந்தா அவங்கள உண்டு இல்லன்னு பண்ணியிருக்கலாமே…”

“செஞ்சிருக்கலாம்… ஆனா எல்லாரோட பரிதாபப் பார்வையும் அவ மேல விழும்… அவளுக்கு அது பிடிக்கலை… அவனுக்கிட்ட இருந்து விடுதலை வேணும்… அம்புட்டுத்தான்…. அவ உடம்புல எத்தனை ரணமிருந்தாலும் சிறகை விரிச்சிப் பறந்தாப் போதும்… கூண்டுக்கிளியா சிறகு ஒடிக்கப்பட்டு அடைபட்டுக்கிடக்க விரும்பலை… அவ உடம்புல இருக்க வடுக்களெல்லாம் இவனுக்கு எப்படித் தெரியும்ன்னு நினைப்பீங்க… இந்த ஆறு மாசமா நாங்க கணவன் மனைவியாத்தான் வாழுறோம்… இது தப்புன்னு நீங்க சொல்லலாம்… தப்புத்தான்… அவபட்ட வேதனைகளை தீர்க்கிற மருந்தா நான் இருக்கணுமின்னு ஆசைப்படுறேன்… என்னோட காதலி… இன்னொருத்தனுக்கு மனைவியானப்போ ஒதுங்கியிருந்தவன், அவ வலிகளோட வந்தப்போ ஆறுதல் மட்டும் சொல்லிட்டு விலக விரும்பலை… அவளை அணைச்சிக்க… வாழ்நாள் பூராம் சந்தோஷமா வச்சிக்க… ஆசைப்பட்டேன். எங்கப்பா சத்தியமா ஒத்துக்கமாட்டாரு… காவேரி அத்த கூட ரொம்ப யோசிக்கும்… அதான் இப்படி ஒரு முடிவு… ரெண்டு நாள் முன்னாடிதான் செக்கப் பண்ணுனோம்… அவ கன்சீவ் ஆயிருக்கா…”

“என்ன மாப்ள இது…. முழுகாம இருக்கான்னு சர்வ சாதாரணமாச் சொல்றே…? ஒங்க எளமப்பசிக்காக… தப்பு பண்ணிட்டிங்களே… ” பதறினார்.

“நீங்க சொல்ற மாதிரி நான் பண்ணுனது தப்புத்தான் மாமா… ஆனா இது இளமைப்பசி இல்ல மாமா… எங்க வீட்ல ஒத்துக்க வைக்க இதைவிட சரியான வழி வேற எதுவும் இல்லைன்னு எங்களுக்குத் தோணுச்சு… இதுல ரெண்டு பேருக்கும் முழுச் சம்மதம் மாமா…”

“ம்ம்ம்ம்ம்… எது மாப்ள சரி… என்ன சொல்றதுன்னு தெரியல… பாதிக்கப்பட்டவளுக்கு வாழ்க்க கொடுக்க நெனக்கிற… நெனக்கிற என்ன… கொடுத்த உன்னய நெனச்சா சந்தோசமாத்தானிருக்கு… இருந்தாலும் வேற வேற சாதி, மதம்ன்னாக்கக்கூட இது சரியின்னு சொல்லமாட்டேன்… அப்படியிருக்க ஒறவு மொறக்குள்ள இது ரொம்பத் தப்பு… நீங்க பழகுறீங்கன்னு ஊருக்குத் தெரியும்… ஆனா அவ வயித்துல கொழந்த இருக்குன்னு ஒங்களப் பெத்தவுகளுக்குத் தெரிஞ்சா… நெனச்சிப்பாரு… அதுவும் காவேரி… அவ சின்ன வயசுல இருந்து கஷ்டப்பட்டவ… ஒத்தப் பொட்டப்புள்ளய எப்படி வளத்தா தெரியுமா..? கட்டிக்கொடுத்து அது பட்டுப்போயி வந்தப்போ அவ பட்ட வேதன… சொல்லிமாளாது… இன்னிக்கும் ஒதட்டளவு சிரிச்சாலும் மனசுக்குள்ள தெனம் தெனம் வெந்து செத்துக்கிட்டிருக்கா… அவகிட்ட நீ நேர போயி நாங்கட்டிக்கிறேத்தேன்னு சொல்லி, உன் வீட்டுல சம்மதிக்கலன்னாக் கூட ஊரே நின்னு செஞ்சி வச்சிருக்கும்… இப்ப வயித்துல புள்ளயக் கொடுத்துட்டேன்னு தெரிஞ்சா அவ செத்துருவாளே மாமே… அவ அப்புடிப் புள்ளய வளக்கலையே… அவ வயித்துல பொறந்தது இப்படின்னா… அவள நெனச்சிப்பாத்தியளா…”

“சாரி மாமா… எங்களுக்கு இது சரியான வழியின்னு தெரிஞ்சிச்சு….”

“எது செரியான வழி… இதுவா… படிச்சும் முட்டாளாயிருக்கீங்க… அன்னக்கி உங்காத்தா செத்திருவேன்னு சொன்னதும் காதல விட்ட… இப்ப அதையே மறுபடியும் உங்காத்தா சொன்னா வயித்துல பிள்ளையோட அவள விட்டுட்டுப் போயிடமாட்டேன்னு என்ன நிச்சயம்…? சின்னப்புள்ளய வெள்ளாம வீடு வந்து சேராதுன்னு சொல்வாக… நீங்க பண்ணியிருக்கதும் அப்படித்தான் இருக்கு” சற்றே கோபமாகக் கேட்டார்.

“மாமா… சத்தியமா இனி அப்படி ஒரு காரியம் செய்யமாட்டேன்… யமுனாவுக்காக எதையும் இழக்கத் தயார்…”

“ம்… செரி… இனி உன்னப் பேசி என்னாகப் போகுது… அவ உண்டாகியிருக்கது நமக்குள்ள இருக்கட்டும்… அவ உண்டாகியிருக்கான்னு ஊருக்குத் தெரியுறதுக்கு முன்னால நாம ஒரு முடிவு பண்ணனும்… இந்த வாரம் ரெண்டு பேரும் வாங்க… ரெண்டு வீட்லயும் பேசி ஒரு முடிவு பண்ணி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவோம்… என்ன உங்கப்பன் குதிப்பான்… கலியாணம் பண்ணுனவளைக் கட்டுறதான்னு கத்துவான்… நானாயிருந்தாலும் கத்தத்தான் செய்வேன்… என்ன செய்ய… காவேரியோட வேதனை போகணும்… அவ பிள்ள தப்பாப் பொயிட்டான்னு ஊரு பேசக்கூடாது… எதாயிருந்தாலும் நா பேசுறேன்… எப்படியும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்னி வக்கிறேன்… எம் பேச்சுக்கு ஊருக்குள ஒரு மரியாத இருக்குல்ல… ம்.. பேசுவோம்… எல்லாஞ் செரியாகும்… செரியாக்குவோம்.” என்றபடி எழுந்தார் சாமிநாதன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *