கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 17,640 
 

உளுந்தூர்பேட்டையில் நின்ற சில நபர்களை ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்டபோது அநேகமாக எல்லோரும் தூக்கம் என்ற தேவதைக்கு அடிமையாகி இருந்தார்கள். சீதையின் பக்கத்து சீட் மாமி தூங்கி அவள் தோளில் அடிக்கடி சரியலானாள். பஸ் வேகம் எடுத்து முன்னேறியது. சீதையின் நினைவுகள் பின்னோடியது.

மாணிக்கவேலர் நாடகக் கம்பெனி என்றால் அன்று சாதாரணமா என்ன? குரூப்பில் ஒருவனை சோடை என்று விரல் மடக்க முடியுமா? சீதை அதில் தன்னுடைய திறமையைக் கொண்டு நேர்மையாக நாலு காசு சம்பாதித்து வயிற்றைக் கழுவிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான் அதில் நடிகையாக சேர்ந்தாள். எவ்வித சலனத்துக்கும் ஆளாகாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டும் வந்தாள்.

ஆனால், சீதையின் உறுதியைக் குலைப்பவனே போல் நிர்மல். அவனின் அந்த அறிவாற்றல், எல்லாவற்றையும்விட ஒரு அனுதாபம்.

பந்தியில் அமர்ந்து எல்லோரும் சாப்பிடுகையில் நிர்மல் தலைகுனிந்தபடியே இருப்பான். மற்றவர்கள் அவனைக் கிண்டல் செய்வார்கள்.

விசாரித்தால் நாடகம் முடிந்து நேரே வீட்டிற்குப் போனானானால் ‘நாடகக்காரப் பயலே’ன்னு திட்டி ‘வீட்டு வாசப்படி ஏறாதலே நாயே’ன்னு அவன் அப்பா திட்டியது வெளிவரும். ஆயினும் இவன் தந்தையிடம் வைத்திருக்கும் மரியாதை, தம்பிமார்களை நேசிக்கும் அளவு கடந்த பாசம், பலரின் கிண்டலுக்கும் அவன் ஆளாவது தவிர்க்க முடியாதாயிற்று. தவிலு, ஆர்மோனியம், மிருதங்கம், எல்லாமே அவனவன் ரசனைக்குத் தகுந்தாற்போல் கிண்டல் செய்வதை நிர்மல் பொறுத்துக் கொள்வான். எல்லாவற்றுக்கும் ஒரு புன்சிரிப்புதான் பதில். எல்லோருமாகச் சேர்ந்து கொடுத்த பட்டம் ‘தசரத ராஜகுமாரன்!’ அப்பா சொன்னால் போதும், அதுதான் வேதவாக்கு.

சீதைக்கு நிர்மலிடம் ஏற்பட்ட அனுதாபம் முதலில் ‘சாப்பிட்டாச்சா’ன்னு குசலம் விசாரிப்பதில் தொடங்கி நாடக வசனங்களில் அவனுக்கு உதவுவது, பாட்டுக்களுக்கு மெட்டுகள் போடுவதில் உதவுவது, பாடிக் காட்டுவது இப்படியாக வளர்ந்தது. ஒருநாள் சாப்பிட்டு முடிந்ததும் கொட்டகையின் பரந்த தரைப் பகுதியில் நடிகர்களும், அம்மா நடிகைகளும், பலரும் வெற்றிலை குதப்பிக் கொண்டு இருக்கையில், ஒரு ஓரமாக சீதை உட்கார்ந்திருக்க, ஒரு இரண்டு அடி தள்ளி நிர்மல் உட்கார்ந்து கொண்டு முந்தைய இரவில், கோவலனாக நடித்தவன் ‘மாசறு பொன்னே, வலம்புரி முத்தே’ என்று பாடியது சரியில்லை இன்னும் எடுப்பாக இருந்திருக்க வேண்டும் என்று பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது அங்கே வந்த மாணிக்கவேலர் ஒரு கணம் நின்று இருவரையும் மாறிமாறி பார்த்துவிட்டுச் சென்றார். ஏனோ நிர்மல் பாடுவதை நிறுத்திவிட்டான்.

மாணிக்கவேலர் தன்னை வந்து பார்க்கச் சொல்லி சீதையை வரவழைத்தார்.

”ஏன்மா, உன் தகப்பன் ஸ்தானத்திலிருந்து கேட்கிறேன். உனக்கு என்ன வயசு?”

”இருபத்திரண்டு ஐயா”.

”நீ கல்யாணம் பண்ணிக்கிறது நல்லதுன்னு எனக்குப்படுது. நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம நாடகக் கம்பெனியிலே தொடர்ந்து இருக்கலாம். நிர்மல்கிட்டே நான் பேசிட்டேன். அவன் குடும்பத்துமேல் பாசம் உள்ளவன். உன்னையும் ரொம்ப நேசிக்கிறான். நானே அவன் அப்பாகிட்ட பேசிப் பார்க்கலாம்னு இருக்கேன்… நீ என்னம்மா சொல்ற?”

”நீங்கதான் அய்யா எனக்கு அப்பா மாதிரி. எனக்கு எது நல்லதோ நீங்க அதைச் செய்ங்க.”

மாணிக்கவேலர் சீதையின் வீட்டிற்கு வந்து சீதையின் அம்மாவிடம் நடந்தவற்றைச் சொல்லி நிர்மலின் அப்பாவிடம் தான் சென்று வந்ததையும் சொன்னார்.

நிர்மல் தன் வீட்டாரிடம் எதுவும் பேசத் தயாரில்லை. சீதையை இழக்கவும் தயாராயில்லை. தன் வீட்டிலிருந்து யாரும் வரமாட்டார்கள். அதனால் ரிஜிஸ்டர் கல்யாணம் போதும் என்றான்.

”எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அவர் காது கொடுக்கிற மாதிரியே தெரியல்லைம்மா. ரொம்பத் தலைகனம் பிடிச்சவறாயிருப்பார் போல் தெரிகிறது. ஆனால் எதுக்கும் நீங்க கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்”.

சீதையின் அம்மா, ”அவர் வீட்டிலே யாரும் வரலேன்னா அதுக்காக பொண்ணைக் கூட்டிவிட்ட மாதிரி அனுப்ப முடியுமா?”ன்னெல்லாம் சொல்லிப் பார்த்தாள். மாணிக்கவேலரோ சீதையின் அம்மாவை சமாதானப்படுத்தி, தானே சாட்சியாயிருந்து ரிஜிஸ்டர் திருமணம் பண்ணி வைத்தார். அப்படியும் சீதையின் அம்மா நாலு பேர் அறிய ஒரு விருந்து ஏற்பாடு பண்ணி நிர்மலின் வீட்டிற்கும் சென்று விருந்துக்கழைத்தாள்.

விருந்துக்கு அவனது வீட்டிலிருந்து யாரும் வரவில்லை.

அழகிய பெண் குழந்தை. சீதையின் கற்பனையில் எத்தனை எத்தனையோ அழகழகான பெயர்கள். பிரசவம் பார்க்கவும், கஷ்டப்படவும் சீதையின் அம்மா. நிர்மலின் அம்மா வந்தாள். நாகரத்னம்ன்னு அவர் அம்மா பேரைத்தான் வைக்கணும்னு நிர்மலின் அக்கா திருவாய் மலர்ந்தருளினாள். பிறந்த குழந்தைக்கும் பெற்றவளுக்கும் எந்த சம்பந்தமுமில்லாத மாதிரி எல்லோரும் நடந்து கொண்டது சீதைக்கு அதிர்ச்சியாயிருந்தது.

”ஏண்டி, அவா குழந்தை. அவா இஷ்டம்போல பேரு வெச்சுட்டுப் போறா, ஒனக்கென்ன நஷ்டம்?” சீதையின் அம்மா கேட்டதும், ”எனக்கென்ன நஷ்டம்?” குழந்தை மேலே அப்பாவுக்குத்தான் உரிமையா? அம்மாவுக்கு இல்லையா? சரி போகட்டும், அவர்தானாகட்டும், எங்கிட்ட ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை ”உனக்கு இந்த பேரு பிடிச்சிருக்கா”ன்னு கேட்டிருந்தாகூட நான் முகத்துக்கு நேரா பிடிக்கலைன்னா சொல்வேன். அது கூட கேக்கல்லையேம்மா?’’.

”இதெல்லாம் பொறுத்துப் போகப்படாதா?” சீதையின் அம்மாவின் உபதேசம்.

தனிக்குடித்தனம் என்றாயிற்று. அன்று நிர்மல் நிலைகொள்ளாமல் அதைச் செய்வதும், இதைச் செய்வதும்! ”அக்கா வர்றா, முதல் முதலா அக்கா வர்றா. ஏய் சீதை, அதைச் செய்து வை. இதை இப்படி வை.’’ உற்சாகம் கொள்ளை போனதில் அந்த உற்சாக வெள்ளத்தில் சீதையும் இழுத்துச் செல்லப்பட்டாள். அக்கா வர்ற அன்னைக்கு இன்ன புடவை கட்டுவது, குழந்தைக்கு இந்தச் சட்டை போடணும், தான் வீட்டை நல்லா வச்சிருக்கிறதா அவர்கள் சர்டிபிகேட் தரணும்கிறதுக்காக சீதை பட்ட பாடு, வந்த அன்று மத்தியானம் வேலைக்காரியிடம் அக்கா கேட்ட கேள்வி.

”ஏண்டி, நீ இரண்டு வருஷமா இங்கேயே இருக்கியே. இந்தக் குழந்தை என் தம்பிக்குப் பிறந்ததுதானா”ன்னு கேட்டிருக்கிறாள். அக்காவிற்கு இவள் நாடகக்காரிதானேன்னு எண்ணம்.

இதை கேட்டதும் சீதை முதலில் அக்காவின் குணம் இத்தனை மோசமானதா என்று எண்ணினாள். இதை நிர்மலிடம் சொல்வதா? சொன்னால் அக்காவிடம் போய் ஏதாவது சண்டை போட்டால்? அல்லது மனம் இடிந்து போனால்? சொல்வதா வேண்டாமா? சொல்லாமலிருந்தாலும் தன் ஒருத்தியால் இந்த வேதனையை எப்படித் தாங்க முடியும்?

”ஏய், ஏன் அழற.”

”உங்க அக்கா என்ன கேட்டிருக்கா தெரியுமா? நாகரத்தினத்திற்கு அப்பா நீங்கதானான்னு கேட்டிருக்கா?” இருட்டில் நிர்மலின் முகம் என்ன காண்பித்தது என்று சீதைக்குத் தெரியவில்லை.

”இங்க பாரு உன்னைப் பற்றி யாரு என்ன சொன்னா என்ன? நீ என் உயிரல்லவா?” என்று சொல்லப் போகிறான். இதோ நிர்மலின் கைகள் தன்னை அணைக்கப் போகிறது. அவன் மார்பில் சாய்ந்து கொண்டால் தனக்கெல்லாமே மறந்துபோய், மனம் இதமாகி விடாதா? வினாடிகள், நிமிஷங்கள்… ஊஹும். நிர்மல் அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுப்பது உணர முடிந்தது. சீதை ஏமாந்தாள். தன் மனைவியை இழிந்துரைத்தும் மவுனம் சாதிப்பவனுக்கு இருப்பது ஆண்மையா?

***

பஸ் ஒரு பரபரப்பான இடத்தில் வெளிச்சம் நிறைந்த இடத்தில் நிற்கிறது. கண்களைத் திறந்தாள். திருச்சி பஸ் நிலையம். 50 வயதானாலும் நடு இரவில் பஸ்ஸை விட்டிறங்கி காப்பி குடிக்கும் பொம்பிளையை எல்லோரும் விநோதமாகப் பார்க்கிறார்கள்.

நள்ளிரவு கடக்கும் 1 மணி அளவில் பஸ் புறப்பட்டது. சீதை திரும்பவும் கண்களை மூடிக் கொண்டாள். நாகரத்தினத்திற்கு வயது 16. அக்கா ஒரு நாள் வருகிறாள், மகனையும் அழைத்துக் கொண்டு. ‘ஒங்க அத்தான்தான் என்னை இப்படி விட்டு விட்டுப் போயிட்டாரே. அவனாவது ஒழுங்காகப் படிக்கிறானா? போன வருஷம் பி.யு.சி. பெயில். நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ அவனை உங்கிட்டே விட்டுப் போறேன்.’

சீதைக்குத் தெரியும். இது வயத்துல நெருப்பைக் கட்டிக்கிற வஷயம்னு. ஆனால், சீதையிடம் அபிப்ராயம் கேட்பதற்கு அவள் யார்?

அன்று நிர்மல் மத்தியானம் வீட்டிற்கு சாப்பிட வந்து கொண்டிருக்கிறான். கொஞ்ச அடிகளுக்கு முன்னாலேயே சீதையின் குரல் உச்சத்தில் கேட்கிறது. என்னவாயிருக்கும்…

”டேய் ராஸ்கல். இந்த விஷயத்திலே மாத்திரம் இந்த சீதை பொறுமையாயிருப்பான்னு நினைக்காதே. காளியா மாறி உன் குடலையே உருவிடுவேன் கேட்டுக்கோ. ஆட்டைக் கடிச்சு. மாட்டைக் கடிச்சு மனுஷாளைக் கடிக்க வந்த கதை மாதிரி ஒண்ணுமறியாத அந்த சின்ன குழந்தை, என் பச்சப்பசலை… நீ ஒளிஞ்சிருந்தா பாக்கிற? ஏண்டா ஒங்கம்மா முலப்பாலு குடிச்சுதானா வளர்ந்தே. டேய் அவ பாலக் குடிச்சு வளந்தவனுக்கு இந்தப் புத்திதாண்டா வரும். பொறுக்கி ராஸ்கல்.”

நிர்மல் இத்தனையும் கேட்டுக் கொண்டே உள்ளே வருகிறான். தொண்டையைக் கனைத்துக் கொண்டான். ஒன்றையுமே கவனிக்காமல் செருப்பைக் கழட்டிவிட்டு யாதுமறியாதவனைப் போல் குளியலறைக்குச் சென்றான். கதவைத் தாழிடும் சப்தம் கேட்டது. வெளியில் வர வழக்கத்திற்கும் மாறான நேரம் ஆயிற்று. மருமான் மெல்ல அங்கிருந்து நழுவி தன் அறைக்குச் சென்று விட்டான்.

சீதை தானும் மகளும் ஏதோ அனாதைகள் ஆகிவிட்டது போலுணர்ந்தாள். கண்ணீர் பொலபொலவென வடிய அடுக்களைக்குள் போய்விட்டாள். சீதைக்குப் புதிய பயம் பிடித்துக் கொண்டுவிட்டது. கண்டும் காணாததுபோல் நடக்கும் நிர்மலுக்கு அப்படியே நடந்தாலும் நடக்கட்டும், பெண்ணை அவனுக்கே கொடுத்து விடலாமென்றிருக்குமோ? தான் தலையிட்டால்தான் பழி? தானாகவே நிகழும்படி விட்டுவிட்டால்? அப்படியும் இருக்கலாமோ! சீதைக்கு அதன் பின்னர் தூக்கமுமில்லை. பசியுமில்லை.

அவன் ஒரு நாள் கஞ்சா அடிப்பதைச் சொன்னபோது கண்டு கொள்ளாத நிர்மல், அவன் வேலைக்காரியிடம் சில்மிஷம் பண்ணினான் என்று சொன்னால் மாத்திரம் கேட்டிருக்கவா போகிறான். எப்படியோ போகட்டும். தான் பிழைத்துக் கொண்டு விட வேண்டும் என்று கருதினாள் சீதை.

***

மறுபடியும் மாணிக்கவேலர் தன் வயதான காலத்திலும் சீதைக்கு உதவ முன்வந்தார்.

”ஏம்மா சீதை… குழந்தை இப்போதானே பி.ஏ.முதல் வருஷம் போறா முடிக்கட்டுமே?”

”இல்ல அய்யா. என் இக்கட்டான நிலமை உங்களுக்குப் புரியாது. நீங்க ஒருத்தர் சொன்னால் மாத்திரம்தான் இவர் தட்டமாட்டார். அதனாலே இந்தக் கல்யாணத்தை முடிச்சு வைச்சிருங்கோ.”

”சரி. நீ சொல்லிட்ட. இனி கவலைப்படாதே.”

நிர்மல் அன்று சற்று விச்ராந்தியாக இருந்தான். நாகுவின் கல்யாண விஷயமா சீதை அவனிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

”உனக்கு எப்படி இந்த யோசனை வருது? இப்போ என்ன அவசரமாம் கல்யாணத்திற்கு. அதெல்லாம் எனக்குத் தெரியும். போ” என்று எரிந்து விழவே, ஒரு கணம் சீதைக்கு நிர்மல் மேல் வெறுப்புக்கூட ஏற்பட்டுவிட்டது.

மாணிக்கவேலர் நினைத்ததை முடித்துவிட்டார். நாகுவின் கல்யாணம் முடிந்து கணவனுடன் இனிதே அனுப்பி வைக்கப்பட்டாள்.

சீதை நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

”போஸ்ட்”.

சீதைதான் ஓடிப்போய் வாங்கி வந்தாள். சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் நிர்மல் கொஞ்சம் கண்ணயர்ந்திருந்தான். விழித்ததும் சீதை உடைக்காமலே வைத்திருந்த கடிதத்தை கொடுத்தாள்.

”அக்கா கடிதந்தான்.”

”என்னவாம்.”

”அதுதான் சொல்லியிருந்தேனே, அம்மாவுக்கு 80 வயது முடிகிறதினாலே அதை நாமெல்லாம் சேர்ந்து கொண்டாடணும்னு ஏற்கெனவே எழுதியிருந்தாங்களே… நானும், நாம இரண்டு பேரும் வர்றதா எழுதிப் போட்டிருந்தேன். எந்த தேதியில வருகிறோம்னு கேட்டு எழுதியிருக்கா.”

சீதை ”நான் வரல்ல”.

நிர்மல் முறைத்தான்.

”எனக்கு நெஞ்சு வலியிருக்கு. கால் வலி, கைவலி, நான் வரல்ல”.

”உனக்கு எப்போதான் எங்கேதான் வலியில்ல? அதெல்லாம் சரி கிடையாது. நாம போகாம இருக்கிறது சரியில்ல. அவ்வளதான் சொல்வேன்.”

”அதுசரி, எனக்குன்னு ஒரு விருப்பு அல்லது வெறுப்பு இருக்கக் கூடாதா? உங்கள நான் தடுக்கல. எனக்கு வர இஷ்டமில்லேன்னா இல்லதான்.”

… பதில் ஏதும் சொல்லாது முகம் கழுவப் போய்விட்டார் நிர்மல்.

சீதை பின்னாலேயே நடந்தாள். இத்தனை காலம், எத்தனையோ விஷயங்கள் எனக்கு விருப்பமில்லாம இருந்தப்பகூட நான் எவ்வளவோ செய்யலையா?

சீதை வாசல்படியில் கையை கன்னத்தில் ஊன்றியவாறு உட்கார்ந்து விட்டாள்.

அங்கே தனக்கு வரவிருப்பமில்லேன்னா அதைப் புரிந்து கொள்ளக் கூடாதா? சீதை காரணமில்லாமல் சொல்வாளான்னு கூடவா நினைத்துப் பார்க்கக் கூடாது? அத்தனைக்கும் மனைவி என்கிறவள் அல்பமா?

எல்லாவற்றையும் பொறுத்துத்தானே போற நீ. இதையும் பொறுத்துக்கோ என்று மாணிக்கவேலர் சொல்லியிருக்கா விட்டால் சீதை புறப்பட்டே இருக்கமாட்டாள்.

போனது போயாச்சு. அதற்குப் பிறகு எதிலும் பின்வாங்குவது சீதையின் குணமில்லை. சீதை எல்லாவற்றையும் மறந்துவிட்டு வேலைகளில் கலந்து கொண்டாள். பரிமாறுவதில் சேலையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு முழுமூச்சுடன் இறங்கிவிட்டாள். ஒரு சுற்று ஆட்கள் சாப்பிட்டு முடிந்ததும், பின் சென்று கைகால் முகம் கழுவிக் கொண்டு திரும்பியும் வந்தாள். தன் நாத்தனார், ஓர்ப்படிகள் எல்லாரும் உட்கார்ந்து விட்டனர்.

”நீயும் உக்காரு.”

”பரவாயில்ல. நான் கிளம்பறேன்” சாப்பாடு முடிந்தது. எல்லாரும் விடைபெறுவதும், அவர்கள் இவர்களை வழி அனுப்புவதிலும் நேரம் போய்க் கொண்டிருந்தது. வயது 50ஐ நெருங்குகிறதல்லவா? சீதைக்குப் பசியினால் சற்றே தலை சுற்றுவது தெரிந்தது. அடுக்களைக்குப் போனாள். வெஜிடபிள் பிரியாணி இரண்டு பாத்திரம் காலியாகக் கிடந்தது. சீதை என்ன செய்கிறாள் என்று பார்க்கவோ என்னவோ நிர்மலின் அக்கா அடுக்களைக்கு வந்தாள்.

கொஞ்சம் கிசுகிசுத்த குரலில் ”சீதா எல்லாம் ஆகிப்போச்சு போலிருக்கு. அதுதான் உன்ன முதல்லியே உக்காரச் சொன்னேன். நீ கேட்டாதானே. இரு, இரு” என்று சொல்லிக் கொண்டு, ”நீ பழைய சாதம் சாப்பிடுவேல்ல. கொஞ்சம் போல இருக்கு… வா, நான் எடுத்து வைக்கிறேன். இப்படித் தட்டுப்படும்னு நெனக்கல்ல”.

சீதைக்கு அந்நேரம் பழையது பார்த்த உடனே புரட்டுகிற மாதிரி இருந்தது. வைத்துவிட்டு நிர்மலின் அக்கா முன் கட்டிற்குப் போய் விட்டாள்.

சீதை ஒரு கவளம் வாயில் வைக்கப் போகும்போது விருந்தினரைத் தொல்லைப்படுத்திவிடக் கூடாதென்று பின் பக்கம் கட்டிப் போட்டிருந்த நாய் ”எனக்கொன்றுமில்லையா” என்று கேட்பதுபோல் செல்லமாக ஊளையிட்டது. சீதைக்கு பசி மந்திச்சாப்போய் வாந்தி வருகிற மாதிரி இருக்கவே இலையோடு மோர்விட்டு பிசைந்த சோற்றை நாயிடம் கொண்டு வைத்துவிட்டு, கைகழுவி விட்டு வரவும், நாய் திரும்பவும் ஊளையிடுவது மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தாள்.

ஐயோ! கடவுளே! என்ன இது? நாய் ஏன் இப்படிப் பண்ணுகிறது? என்ன ஆச்சு அதுக்கு?

குமரா, ஜோதி, மணி என்று எல்லா குழந்தைகளின் பேர்களையும் சொல்லி அழைத்தாள்.

”இங்க வந்து பாருங்களேன். ஐயோ நாய்க்கு என்னவோ செய்யுதே” இதற்குள் மைத்துனர்மார்களும், நிர்மலும் அந்த இடத்திற்கு வந்தனர்.

”என்னாச்சு? என்னாச்சு?”

இதற்குள் சுருண்டு விழுந்து நாய் தன் கடைசி மூச்சை விடவும் எல்லோரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். நிர்மலின் அக்காவும் அம்மாவும் அந்த இடத்திற்கு வரவேயில்லை. ரொம்ப முக்கியமானவர்களிடம் வெளியே பேசிக் கொண்டிருந்தனர்.

தான் இதைச் சாப்பிட்டு, தனக்கு இது நேர வேண்டியது என்று அவள் யாரிடம் சொல்ல முடியும்?

நிர்மலின் அருகில் சென்ற சீதை, ”ஏங்க, இந்தச் சோற்றை, என்னைச் சாப்பிடச் சொன்னார்கள். நான் திங்கப் பிடிக்காமல் நாய்க்குப் போட்டேன்,”

ஒரு நிமிட மவுனம் நிலவியது.

சீதையைத் திரும்பிப் பார்க்காமலேயே ”இதுக்குப் போய் இப்போ என்னை என்ன செய்யச் சொல்ற?” ஒன்றுமே நடக்காதது போல ஒரு பத்திரிகையைப் புரட்டலானான்.

சீதையின் மனதில் சூறாவளியும் புயலும் கொந்தளித்தது. ”உனக்குப் பிடிக்காவிட்டால் தூரத்தான போடணும். அந்த நாய்க்குப் போய் ஏன் போட்ட?”

சீதையின் காலடியில் பூமி நழுவியது. இரண்டாகப் பிளந்து அவளுக்கு வழிவிட்டது.

சீதை கண் விழித்துப் பார்க்கிறாள். சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறாள். தனக்கு தெரிந்த ஆடல் பாடல் கலைக்கு உயிரூட்டப் புறப்பட்டு விட்டாள். அது அவளால் முடியும்.

மதுரையில் வாங்கிய மல்லிகை நெல்லை பஸ் நிலையம் வரும்போது நன்றாக மலர்ந்து மணம் பரப்புவதை உணர்ந்தாள்.

(பிப்ரவரி, 1991 கணையாழியில் வெளியானது)

பா.விசாலம்

நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். பெண் விடுதலையிலும் மனித நேயத்திலும் தீராத பற்றுக் கொண்டவர். இவருடைய ‘மெல்ல கனவாய் பழங்கதையாய்’ தமிழில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய நாவல். ‘நொய்’ என்கிற முதல் சிறுகதை சரஸ்வதி பத்திரிகையில் வெளியானது. மார்க்ஸிய கருத்தியலின் பால் ஈடுபாடு கொண்டவர். 1952ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கம்யூனிஸ்டான ராஜு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சமூகப் பணியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். 1973ல் இலங்கை, கொழும்புவில் நடந்த பெண்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக பிரதிநிதியாகப் பங்கேற்றார். 1975ல் கிழக்கு பெர்லினில் நடந்த பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். தலைக்கோல் என்ற நாடகக்குழுவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. ‘உண்மை ஒளிர்கவென்று பாடவோ’ நூல் முக்கியமான ஒன்று. தமிழகத்தின் தென்மேற்குப் பகுதியில் கிறிஸ்தவ மதம் வளர்ந்தவிதத்தையும் சொல்லப்படாத வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *