ரம்மியமான காலங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 21, 2021
பார்வையிட்டோர்: 3,854 
 

நான் எழுபதுகளில் திருநெல்வேலி திம்மராஜபுரத்தில் படித்து வளர்ந்தேன்.

டெக்னாலஜியில் டெலிபோன்; மொபைல்; கலர் டிவி; வாட்ஸ் ஆப்; முகநூல் என உலகம் சுருங்கி விட்டாலும், பல நல்ல ரம்மியமான சங்கதிகள் நம்மைவிட்டு விலகி விட்டன.

என்னுடைய சிறு வயது முதல் இளமைக் காலம் வரை, எங்கள் ஊரில் பெரும்பாலும் தனி வீடுகள்தான் இருந்தன.

பிரிட்ஜ், டிவி, வாஷிங்மெஷின் போன்றவைகள் எங்கள் வீடுகளில் கிடையாது. கிரைண்டர், மிக்ஸி, டூ வீலர் போன்றவையே அப்போது ஆடம்பரம்தான். ஏ.ஸி.யா? அப்படீன்னா என்ன? என்று கேட்ட காலம்.

சூப்பர் மார்க்கெட் என்னும் கான்செப்ட் அப்போது கிடையவே கிடையாது. எல்லோரும் பக்கத்தில் இருக்கும் நாடார் கடையிலோ, செட்டியார் கடையிலோதான் மாதாந்திரக் கணக்கில் சாமான்கள், மளிகைப் பொருட்கள் வாங்குவார்கள். அதற்கென்று ஒரு குட்டி நோட்டு உண்டு. அந்தக் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் தர மாட்டார்கள்.

நாம்தான் சாமான்கள் வாங்க துணிப் பையும், எண்ணெய் வாங்க தூக்கும் கொண்டு செல்ல வேண்டும். எனவே அப்போதெல்லாம் தெருக்களில் நிறைய சாமான்கள் கூவி கூவி விற்றுக்கொண்டு வருவார்கள். விதம் விதமான தொனிகளிலும், குரல்களிலும் தங்கள் பொருட்களை விற்றுக்கொண்டு போவதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும்.

வீடுகளில் அம்மியும் ஆட்டுக்கல்லும் மட்டுமே இருந்ததால், “ஆட்டுக்கல் குத்தலையோ, அம்மிக்கல் குத்தலையோ” (பொள்ளுவதை குத்தலையோ என்பார்கள்) என்றபடி தலையில் ஒரு சிறிய சாக்குப் பையை வைத்துக்கொண்டு ஒருவர் கூவிக்கொண்டே செல்வார்.

ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பகல் மூன்று மணி அளவில், பதை பதைக்கிற வெயிலில் கடிகாரம், பேனா ரிப்பேர் செய்வதாக ஒரு பெரிய மரப் பெட்டியைச் சுமந்துகொண்டு ஒருவர் வருவார். அதில் கலர் கலராக, வித விதமான பேனாக்கள் வைத்திருப்பார்.

கடிகாரத்தை சர்வீஸ் செய்யக் கொடுத்தால், கண்களில் ஒரு பெரிய லென்ஸை மாட்டிக்கொண்டு, “பார் எத்தனை அழுக்கு” என்று நம்மிடம் காட்டுவார். “ஸ்பிரிங் சரியில்லை, முள் சரியில்லை” என்று ஏதேதோ கூறி, என்னவோ செய்து கடிகாரத்தை ஓட வைத்துவிடுவார்.

அந்தக் கடிகாரம் நம்முடன் இருக்கும்போது கொஞ்சநேரம் ஓடும். பிறகு நின்று விடும். சரி, அவரிடமே காட்டலாம் என்றால், கொஞ்ச நாள் அந்தப் பக்கமே அவர் தலையைக் காட்ட மாட்டார்.

இவரைத் தவிர, பூட்டு ரிப்பேர்; கொடை ரிப்பேர் என்று கூவியபடி ஒரு ஆள் அடிக்கடி வருவார். மழைக் காலங்களில் சிலர் அவரிடம் தங்கள் வீட்டுக் குடைகளை ரிப்பேர் செய்து கொள்வார்கள்.

அது தவிர, ஞாயிறுகளில் ஒருவர் ‘ஓம வாட்டர்’ விற்றுக்கொண்டு வருவார். அதை வாங்கிக் குடித்தால் வயிற்றில் உடனே பசியுடன் குழி பறிக்கும்.

வெள்ளிக்கிழமை என்றால் காலையில், “உப்பு, உப்பு” என்று ஒரு பழைய கை வண்டியில் கல் உப்பை தள்ளிக்கொண்டு வருபவரிடம் பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் உப்பு வாங்குவார்கள். வெள்ளிக்கிழமை உப்பு வாங்க வேண்டும் என்பது அந்தக் காலத்தில் ஒரு ஐதீகம்.

வாரத்தில் இரண்டு முறை கெரசீன் ஆயில் விற்றுக்கொண்டு வருபவர், அந்த வண்டியில் உள்ள மணியால் ஒலி எழுப்பும்போது தாய்மார்கள் சப்தத்தை வைத்தே தெரிந்து கொள்வார்கள், கெரசீன் என்று… அப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும் கேஸ் அடுப்பு கிடையாது.

கேஸ் சிலிண்டருக்கு புக் பண்ணிவிட்டு, கனெக்ஷனுக்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும், சிலிண்டர் தீர்ந்து விட்டாலும் புது சிலிண்டர் அத்தனை சீக்கிரம் வந்துவிடாது. எனவே எல்லோர் வீட்டிலும் மண்ணெண்ணைய் அடுப்பும், அதற்கான தேவைகளும் இருக்கும். மண்ணெண்ணையை ட்ரம்மில் வாங்கி வைத்துக் கொள்வார்கள். அதிலிருந்து ஒரு பாட்டிலுக்குள் இறைத்து வைத்துக் கொள்வார்கள். வசதியாக இறைத்துக்கொள்ள எல்லோர் வீடுகளிலும் அதற்கென்று ஒரு பிரத்யேக பம்பும் இருக்கும்.

1970-75 கால கட்டங்களில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இருந்தது. விற்பவர் ஒரு வீட்டிற்கு இரண்டு லிட்டருக்கு மேல் விற்க மாட்டார். எனவே மண்ணெண்ணெய்க்காக காத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, அந்த வண்டியின் மணிசத்தம் இன்பத் தேன் வந்து காதில் பாய்ந்தது போல இருக்கும்.

இதைத் தவிர, அந்தந்த ஸீசன்களுக்கு ஏற்றார்போல வடு மாங்காய், கோலமாவு எல்லாம் தெருவில் வரும். ஜாதிமல்லி, கனகாம்பரம், தாழம்பூ போன்ற பூ விற்கும் பெண்கள் மாலையில்தான் வருவார்கள். மல்லிகைப்பூ சீசனில் மதியம் மூன்று மணிக்கே உதிரிப் பூவை வாசனையுடன் சைக்கிளில் விற்றுக்கொண்டு வருவார்கள்.

பால்காரர்கள் பெரும்பாலும் சைக்கிளில்தான் வருவார்கள். சைக்கிள் பாரில் சற்று பெரிய மணியைக் கட்டி வைத்து அதை அசைத்துதான் ஒலி எழுப்புவார்கள். ஒவ்வொரு பால்காரரின் மணியும் வித்தியாசமாக ஒலிக்கும். காலை, மாலை என இருவேளை மட்டுமே பால் கிடைக்கும்.

பாக்கெட் பாலும் கிடையாது; அதை வைத்துக்கொள்ள குளிர்சாதன பெட்டியும் கிடையாது. நடுவில் யாராவது வீட்டிற்கு விருந்தாளிகள் எதிர் பாராமல் வந்து விட்டால், அக்கம் பக்கத்தில் யார் வீட்டிலாவது பால் கிடைக்குமா என்று கேட்க வேண்டும்.

பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் கூட சிறிய மணியை ஒலி எழுப்பியபடிதான் வருவார்கள். இரவில் எட்டு மணிக்கு மேல், கடலையை வருத்தபடி செல்லும் வண்டிக்காரர், அந்த இரும்புச் சட்டியில் தட்டி ‘டங் டங்’ என்று ஒலி எழுப்புவார்கள். பத்து பைசாவுக்கு ஒரு பொட்டலம் தருவார்கள். கடலைகளின் அடியில் ஒரு சிறு வெல்லத் துண்டும் போட்டு கொடுப்பார்கள்.

தலை நரைத்து, வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டு வெண்ணெய், நெய் கொண்டுவரும் கவுண்டர் பெண்மணியின் அருகில் சென்றாலே வெண்ணை வாசம் அடிக்கும். வெண்ணை அளந்து போட்ட பிறகு, கையை நீட்டினால் ஒரு சிறிய உருண்டை வெண்ணை கையில் போடுவார்.

பெரும்பாலும் மதியத்தில்தான் ‘பழைய சேலைகளுக்கு பாத்திரம்; பிளாஸ்டிக் பக்கெட்” என்று குரல் எழுப்பியபடி எவர்சில்வர், அலுமினிய பாத்திர வியாபாரிகள் வருவார்கள்.

விடுமுறை நாட்களில், வண்டியில் குச்சி ஐஸ்க்ரீம் விற்பவர்கள் மற்றும் பலூன்காரர்கள் வருவார்கள். சிறு குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் அவ்வளவுதான்… வீட்டின் முன்பு நின்றுகொண்டு ‘பாம் பாம்’ என்று ஹாரன் ஒலி விடாது எழுப்புவார்கள். குழந்தைகள் ஓடிச்சென்று அவரைச்சுற்றி நின்றுகொண்டு நம்மை ஏக்கத்துடன் பார்ப்பார்கள்.

பாத்திரங்கள் துலக்க அரப்புத்தூள் கொண்டுவரும் பெண்மணி, பசலைப் பொடி என்று பச்சை நிறத்தில் ஒரு பொடி கொண்டு வருவார். அது கொஞ்சம் கொழ கொழப்பாக இருக்கும். அதை சிகைக்காயோடு சேர்த்து தலைக்கு தேய்த்துக் குளிப்போம்.

இதைத் தவிர, காவடி போல நீண்ட கழியின் இரு புறங்களிலும் தொங்க விடப்பட்டிருக்கும் பானைகளை சுமந்தபடி “பதனி, பதனி” என்று விற்றுக்கொண்டு செல்லும் பதநீர் வியாபாரிகள்.

காலை வேளைகளில் கீரைகள்; காய்கறிகள் இவைகளைக் கொண்டு வருபவர்களின் அழைப்பு…

ஒரு கைப்பிடி அரிசிக்கு ஒரு கட்டு கொத்தமல்லி அல்லது கருவேப்பிலை தரும் பாட்டி. இதே ஒரு கைப்பிடி அரிசிக்கு இலந்தைப் பழம்; க்ளாக்காய்; கொடுக்காய்புளி எல்லாம் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறோம்.

இதில் விளக்குமாறு விற்பவர்களும், ஒட்டடை கம்பு விற்பவர்க்களும்தான் பரிதாபத்திற்குரியவர்கள். எல்லோரையும் போல அவர்களும் தங்கள் பொருளின் பெயரைக் குறிப்பிட்டுதான் கூவுவார்கள். நாமும் சிறிதும் இங்கிதம் தெரியாமல், “ஏ விளக்குமாறு; ஏ ஒட்டடைக்கம்பு” என்று அழைப்போம். கொஞ்சம்கூட பாதிப்படையாமல் அவர்கள் நம்மை நோக்கி வருவார்கள். சாதரணமாக யாரையாவது இப்படி அழைத்துவிட முடியுமா?

எண்பதுகளின் இறுதியிலிருந்து நிலைமை மாற ஆரம்பித்தது. மிக்ஸியும், கிரைண்டரும் ஆடம்பரம் என்பதிலிருந்து ‘அத்தியாவசியம்’ என்னும் நிலைமைக்கு மாறத் துவங்கின.

தொண்ணூறுகளின் இறுதியில் ஐடி பூம் ஏற்பட்ட பிறகு, குளிர்சாதன பெட்டியும் வாஷிங்மெஷினும் அத்தியாவசியமாகி விட்டன.

கடன் அட்டைகள் புழங்க ஆரம்பித்தபிறகு, நாடார் கடைகளின் இடத்தை சூப்பர் மார்க்கெட்டுகள் பிடித்துக் கொண்டன. தனி வீடுகள் குறைந்து கேட்டட் கம்யூனிட்டிகள் பெருகிய பிறகு, வீதியில் சாமான் விற்றுக்கொண்டு வருபவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அமேஸான், ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் அட்டைப் பெட்டிகளில் அழகாக டெலிவரி செய்து விடுகின்றன. பசித்தால் சாப்பாடுகூட ஆப்பில் ஒத்தி ஆர்டர் செய்யலாம்!! மாற்றங்கள் ஒன்றே மாறாதது போலும்!

இந்த மாறுதல்களின் விளைவு, நம்முடைய எல்லா நொடிகளுமே மொபைலை மட்டுமே நம்பிக்கொண்டு ஒட்டுமொத்த கமர்ஷியலாக மாறி விட்டோம்.

நம்முடைய ரம்மியமான ஒப்பற்ற உன்னத கலாச்சாரம் சிதைந்து போனது என்பதைத் தவிர வேறு எந்த ஒரு நன்மையையும் விளைவிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *