கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 14,426 
 

‘இதென்னடா நாய் வண்டி மாதிரி இருக்கு?’

பஸ்ஸில் ஏறினதும் ரங்கா சேட் கேட்டார்.

மகா தப்பு. அவர் சேட் இல்லை. தமிழ்தான். அப்புறம், அவராக பஸ்ஸில் ஏறவில்லை. திடகாத்திரமான நாலு இளவயசுப் பிள்ளைகள் பித்தளை கூஜா, கான்வாஸ் பை சகிதம் அவரை அலாக்காகத் தூக்கி பஸ் உள்ளே போட்டார்கள்.

‘எதுக்கு மாமா கூஜாவும் மண்ணாங்கட்டியும்?’

முந்திரிக்காய் கூஜா மூடி லூசாகி வென்னீர் காலில் சிந்தின அவஸ்தையைப் பொறுக்க முடியாமல் நந்து கேட்டான். ஆறே கால் அடி ஜாம்பவான். நித்தியப்படிக்கு நாலு சிகரெட் ஒளிந்து நின்று ஊதித் தள்ளுகிறதைத் தவிர ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. முதலாவது விடிகாலை கொல்லைக்குப் போக, அடுத்த மூணும் அந்தந்த வேளை ஆகாரம் முடிந்த அப்புறம்.

ரங்கா சேட்டின் ஒரே தங்கை நாச்சியார் கிழங்கு கிழங்காக நாலு பிள்ளைகளைப் பெற்று நல்லெண்ணெய் முழுக்காட்டி வளர்த்து நிறுத்தி வைத்திருக்கிறாள். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த நேரத்தில் அவளுக்குக் கல்யாணம் செய்தபோது சீராகக் கொடுத்த கிழங்கு மாதிரியான முந்திரிக்காய் கூஜாவை மட்டும் இத்தனை வருஷம் போனபிறகு கழித்துக் கட்டிவிட்டாள்.

‘இதை எடுத்துண்டு போய் புழங்கிக்கோடா அண்ணா’

நாச்சியார் களிம்பேறிய அந்தக் கூஜாவை காலையில் விசேஷம் எல்லாம் முடிந்ததும் ரங்கா சேட்டிடம் கொடுத்தாள். நேற்று சாயந்திரம் தேங்காய் நாரை வைத்து தேய்க்கிறேன் என்று பெயர் பண்ணி முனிசிபல் குழாய்த் தண்ணீரில் அலம்பி, சுத்த ஜலம் என்று கொதிக்கக் கொதிக்க ஊற்றி வேறே கொடுத்தாள்.

முந்திரிக்காய் கூஜாவை எப்படிப் புழங்குவது என்று சேட்டுக்குப் புரியவில்லை. உசிர் இருக்கப்பட்ட மனுஷ ஜீவன் என்றாலும் வர, போக, பார்க்க, நாலு வார்த்தை பிரியமாகப் பேச, தலைவலி, கைகால் குடைச்சல் வந்தால் அலுப்பு மருந்து வாங்கி வந்து கொடுத்து, ‘நாளைக்கு சரியாப் போயிடும். ரஸ்க் சாப்பிட்டுத் தூங்கு’ என்று ஆறுதல் சொல்லிவிட்டு வர என்று பழக முடியும். கூஜாவோடு எப்படி உறவாட?

“எஞ்ஜாய் மாமா, தூங்கிட்டே சென்னை”. நந்து உற்சாகமாகச் சொன்னான்.

சேட் திகிலோடு பஸ் உள்ளே பார்த்தார். ரெண்டு வரிசையாகப் படுக்கை. ரயிலில் ஸ்லீப்பர் கம்பார்ட்மெண்டில் ஏறின மாதிரி. ஆனால் இங்கே சுத்தமான பஸ் வாடை, வெளியே அகாலத்தில் பலாச்சுளை விற்கிறவன் குரல், முன்னால் ஸ்டியரிங்கைப் பிடித்து ஆரோகணித்த டிரைவர், மற்றும் கண்டக்டர்.

“இந்த கூஜாவை வேணும்னா உங்க அம்மா கிட்டேயே பத்திரமா”.

ரங்கா சேட் ஜன்னல் வழியே கூஜாவின் முந்திரித் தலையை மட்டும் நுழைத்து மிச்சம் நுழையாத ஏக்கத்தோடு கேட்டபோது பஸ் நகர்ந்திருந்தது.

காக்கி நிஜார் மாட்டிய கண்டக்டர் படுக்கை படுக்கையாக டிக்கெட் விவரம் விசாரித்துக் கொண்டு வந்தான். ரங்கா சேட் எங்கே இருக்கணும்?

“டிக்கட் கொடு சார்”.

அவர் பவ்யமாக கான்வாஸ் பையைத் திறந்து நாமக்கட்டிக்கும் தலைவலி மாத்திரைக்கும் நடுவே வைத்திருந்த டிக்கட்டை எடுத்து நீட்டினார்.

‘சேட்டுன்னு போட்டிருக்கே. யாருக்கு எடுத்தது?’

படுபாவி நந்து. ஊரில் பெயர் புழங்குகிற படிக்கே டிக்கட் எடுத்து விட்டான். முந்திரிக்கா கூஜா என்று புழங்கியிருந்தாலோ?

“உங்க பேரு என்ன”?

முந்திரி. அவசரமாக வார்த்தையை முழுங்கியபடி ரங்கநாதன் என்றார்.

“அப்புறம் ஏன் சேட்டுன்னு வடக்கத்தியாருங்க பேரு”?

பாவ மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம்.

“அது ஒண்ணும் இல்லேப்பா. நாள் முழுக்க ஜர்தாபான் வாயிலே அடக்கிண்டே இருப்பேனா, மார்வாடிப் பெயர் வச்சுட்டாங்க சிநேகிதங்க எல்லாரும்”.

பக்கத்து படுக்கை கொஞ்சம் அசைந்து அதில் பத்து சதவிகிதம் தூக்கத்தில் இருந்தவன் ஒதுங்கிப் படுத்தான். அவன் மேலே ரங்கா சேட் புகையிலை அபிஷேகம் நடத்துவார் என்று தூக்கத்தை மீறின ஜாக்கிரதை உணர்ச்சி.

“பஸ்ஸுக்குள்ளே ஜர்தா குர்தா எல்லாம் போடக்கூடாதுன்னு சொல்லு கபாலி”

டிரைவர் இரைந்தது தன்னைப் பற்றித்தான் என்று ரங்கா சேட்டுக்குப் புரிந்தது.

“நான் ஜர்தா போடறதை விட்டு ஒரு மாமாங்கம் ஆகப் போறது. நீ ஏன் வெட்டியா கவலைப் படறே”.

அவர் குரல் எழுவதற்குள் பஸ் ஹாரன் பெரிசாக முழங்கி அதை விழுங்கிவிட்டது.

“என் சீட் எது”?

ரங்கா சேட் நகர முற்பட்ட கண்டக்டரை அவசரமாகக் கையைப் பிடித்து இழுத்து நிறுத்திக் கேட்டார்.

“அந்தக் கோடி சேட்டு. கடைசிப் படுக்கை. ஏணியிலே ஏறி மேலே போய்ப் படுத்துடு. துப்பிடாதே. சொம்புலே தண்ணி இருந்தா இப்பவே குடிச்சுட்டு”.

“குடிச்சுட்டு”?

“அதையும் உமிஞ்சிடாதே. கபால்னு முளுங்கிடு”.

கபாலி அறிவுரை அருளிய ஒளி முகத்தில் வீச ஞானஸ்தனாக முன்னே நடந்தான்.

கான்வாஸ் பை தோளில் கனக்க, கையில் வென்னீர் கூஜா குலுங்க தேகம் முழுக்க ஆடியபடி ரங்கா சேட் பஸ்ஸின் ஈசான மூலையை நோக்கிப் போனபோது யாரோ விடலைப் பசங்களைப் போல் விசில் அடித்தார்கள்.

பஸ் கம்பத்தைப் பிடித்தபடி மூச்சு வாங்கத் திரும்பிப் பார்த்தார். பஸ் வீடியோ உயிர் பெற்று பெருஞ்சத்தத்தோடு இயங்க ஆரம்பித்திருந்தது. ஒரு சுந்தரிப் பெண்ணை பரட்டைத் தலைப் பையன் பையப் பதறாமல் கொட்டு முழக்கோடு கேலி செய்து பாடிக் கொண்டு போன பாட்டு.

இன்னிக்கு வைகுண்ட ஏகாதசிதான். இந்த இரைச்சலில்.

அவர் மனசு சொல்ல அதை அடக்கினார். முதல்லே எங்கே முடங்கறதுன்னு பாரு.

தனக்குத்தானே உத்தரவிட்டபடி பஸ் கோடிக்கு வந்து விட்டார்.

இருட்டில் கீழ் பெர்த். இங்கேயும் பெர்த்னு தான் பெயர் புழங்குகிறதா? இல்லை வேறே ஏதாவது டெர்மினாலஜியா?

ஏதோ ஒண்ணு. கீழே புளிமூட்டை மாதிரி அடைந்து கிடந்தவன் கொஞ்சம் போல் உட்கார்ந்து எந்த சீட் என்றான்.

“மேலே போகணும்”.

தத்துவார்த்தமாக தான் சொன்னதை தானே ரசித்தார் ஒரு வினாடி.

“செருப்பை இப்படி கீழே விட்டுட்டு ஏணியைப் பிடிச்சு ஏறுங்க”.

கீழே பாதி அறுந்து கிடந்த அவனுடைய ரப்பர் ஸ்லிப்பரை பத்திரமாக ஓரத்தில் நகர்த்தி வைத்தான். அப்புறம் என்னமோ தோன்ற அதைத் தலைமாட்டில் வைத்து செய்தித்தாளுக்குள் பொட்டலம் கட்டிப் பத்திரப்படுத்தினான்.

உலகத்தை, அறுந்து போன ஸ்லிப்பர் மதிப்புக்குக்கூட அவன் நம்பத் தயாராக இல்லை என்று உறைக்க, சேட் மேலே போகிற வழியை அண்ணாந்து பார்த்தார்.

“இப்படி மலைச்சுப் போய் நின்னா, ராத்திரி முழுக்க நின்னுக்கிட்டே கிடக்க வேண்டியதுதான். ஏறு சார் சரசரன்னு”.

பின்னால் கண்டக்டர் குரல். அவன் ரங்கா சேட்டின் தோள்பையைப் பறித்து மேலே வீசினான். கூஜாவைப் பிடுங்கி ஒரு எம்பு எம்பி இருட்டுக் குகைக்குள் வைத்தான். அப்புறம் ரங்கா சேட்டின் இடுப்பில் கைகொடுத்து ஒரு தள்ளு தள்ளி இரும்பு ஏணியில் ஏற்ற, சேட் மேலே சயனப் பொந்தில் அலக்க மலக்க விழுந்தார்.

“ஏம்ப்பா, இங்கே சௌகரியம் எல்லாம்”.

அவர் சரிந்தபடி கேட்டபோது கண்டக்டர் நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன சௌகரியம் வேணும்? ஏசி போட்டு வைச்சிருக்கு. இப்போ ஜிலுஜிலுன்னு ஆயிடும். ஃபேன் இருக்கு. சைடுலே கையை விட்டுத் துளாவினா சுவிட்ச் கிடைக்கும். பிளேட்லே கையை விட்டுக்காம பத்திரமா சுவிட்ச் போடணும்”.

“அது இல்லேப்பா வேறே சௌகரியங்கள்”.

“கம்பளிப் போர்வை இருக்கு. போர்த்திக்கிட்டு தூங்கு. இறங்கும்போது என் கையிலே ஒப்படைச்சுட்டுப் போகணும்.”

“போர்வை கிடக்கட்டும். பாத்ரூம் சங்கதி”.

“அதுக்கெல்லாம் இடம் எங்கே இருக்கு? வண்டி நிக்கும்போது ஓரமாப் போய்”.

அவன் முடிப்பதற்குள் வீடியோ பாட்டு முடிந்து வசனம் ஆரம்பித்திருந்ததால் படுத்தபடி சினிமா பார்க்கிற யாரோ இடைஞ்சலாக இருப்பதாக ஆட்சேபிக்க, அவசரமாக நகர்ந்தான்.

ரங்காசேட் இருட்டுக்குள் பீதியோடு உற்றுப் பார்த்தார். அந்த கூஜா இங்கேதான் புழங்கிக் கொண்டிருக்கிறது. அதற்குள் சுத்த ஜலம். குடித்தால் ஒரு மணி நேரத்தில் பாத்ரூம் போக வேண்டி வரும்.

பஸ் வேகமாக நகர்கிறது. எப்போ நிற்கும்? எதுக்கு நிற்கணும்? இறங்கணுமா? இல்லே பாத்ரூம்.

வருதா? இப்போ வரல்லே.

அப்போ தூங்கு.

அவர் தூங்குகிற மாதிரி பாவனை செய்தார். குளிர் அதிகமாக இருந்தது. கம்பளிப் போர்வை என்று சொன்னானே?

தலைமாட்டில் ஹேர் ஆயில் வாசனையும் புளிப்பு மிட்டாய் வாடையுமாகக் கிடந்த பழந்துணிதானா அது?

அதுதான் போலிருக்கு. உட்கார்ந்து அதை பரிசோதிக்க நினைத்தார்.

எங்கே உட்கார? கொஞ்சம் நிமிர்ந்தால் தலை மேல் கூரையில் முட்டுகிறது. கிடப்பதைத் தவிர வழி இல்லை. சென்னை போகிற வரைக்குமா?

தூங்கினால் இதோ வேகமாக விடிந்து சென்னைதான். தூக்கம் எங்கே வருது?

காலையில் இருந்தே வித்தியாசமாக விடிந்தது சேட்டுக்கு.

அசை போட்டபடி கிடக்க, வீடியோவில் யாரோ செத்துப்போய் மூக்கில் பஞ்சு அடைத்து எடுத்துப் போனது பாதியில் நின்று ஜிகினா ஜிகினாவாக வெளிச்சம்.

“அமர்த்திடுங்க தூங்கணும்”,

யாரோ ஆணையிட அந்த வெளிச்சமும் போய் முழு அந்தகாரம்.

நேற்று வந்து இறங்கினதுமே நாச்சியார் சுவாதீனமாக வேலை ஒப்பித்தாள்.

“தோ பாருடா அண்ணா, நீ தனிக்கட்டை. ரெண்டு நாள் முந்தியே வந்திருக்கலாமில்லே. புது வீட்டுக்கு தரை பாலீஷ் போடறதுக்கும், கரண்ட் சப்ளைக்கும் அலைய ஒத்தாசையா இருந்திருக்கும். என்னமோ போ”.

கல்யாணம், பெண்டாட்டி, பிள்ளை குட்டி தேவை இல்லாமலேயே தாலுக்கா ஆபீசில் சீனியர் அசிஸ்டெண்டாக, அசிஸ்டெண்ட் என்ன, அவர் சேர்ந்தபோதே எழுத்தர்னு கூப்பிட ஆரம்பித்திருந்தார்கள். அப்புறம் முதுநிலை எழுத்தர்.

கிழ எழுத்தராக அவர் ரிடையர் ஆனபோது வட்டாட்சியர் அலுவலகத்திலும் கம்ப்யூட்டர் வந்துவிட்டது. அதுக்குப் பக்கத்தில் நிறுத்தி பிரிவுபசார போட்டோ எடுத்தபோது ஏனோ பெருமையாக இருந்தது. நாச்சியாரிடமும் அவள் பிள்ளைகளிடமும் காட்ட அதை எடுத்து வந்திருந்தார். யாருக்கு அவர் கொண்டு வந்ததைப் பார்க்க நேரம் இருக்கு? வேலை சொல்ல மட்டும் அது உண்டு போல.

நேற்று ராத்திரியே நாச்சியார் கட்டிய புதுவீட்டில் போய்ப் படுத்துக் கொள்ள வேண்டி வந்தது. வீடு இல்லை. ரெண்டாவது மாடியில் எழுநூறு சதுர மீட்டர் ப்ளாட். காலையில் கிரகப் பிரவேசம். வீடெல்லாம் தண்ணீரை அடித்துக் கழுவி, அது காயாமல் பாதி ராத்திரி வரை ஒத்தி ஒத்தி எடுத்து ஈரத் துணியைப் பிழிந்து ஒரு மாதிரி பொழுது போய்விட்டது.

காலையில் வந்து சேர்ந்த எல்லாரும் அவரை லட்சியம் செய்யாமல் புரோகிதருக்கு பிளாஸ்கில் இருந்து காப்பி ஊற்றிக் கொடுத்து உட்கார வைத்தார்கள்.

“பிரமாதமான காப்பி டிபன் கேடரிங்லே சொல்லியிருக்கு. இப்போ வந்துடும்”.

ரங்கா சேட் தேற்றப்பட்டார். ஏழு மணி வரை கேட்டரிங் பற்றிக் கேட்டும் பயனில்லை. காப்பியை யாரும் கண்ணில் காட்டவில்லை. பசுமாடு வந்தாச்சா என்று ஆளுக்கு ஆள் பரபரத்துக் கொண்டிருந்தார்கள்.

“மாமா, இங்கே தெருக்கோடிதான். இப்படியே நடந்து வலதுகைப் பக்கம் திரும்பி அரை கிலோமீட்டர் போனா, அஞ்சனா பண்ணைன்னு போர்ட் தெரியும். யாரைக் கேட்டாலும் சொல்வாங்க. வாயிலே இருக்கு வழி”.

நந்து அவரைக் கிளப்பி விட்டான்.

“நீயும் வாயேன். உன் மோட்டார் பைக்கிலே போய்ட்டு வந்துடலாம்”.

யார்யாரையோ புதுமனை புகுவிழாவுக்கு விருந்தாளியாகக் கொண்டு சேர்க்க அந்த வண்டியை அவன் விடிந்ததிலிருந்து உபயோகித்துக் கொண்டிருக்கிறான்.

அவன் போயிருந்தான். மற்ற மருமகன்களும் கேடரிங் காண்ட்ராக்டர், புரோகிதருடைய உதவியாளர், யாரோ ஒரு மகாலட்சுமி மாமி, சிடியில் விஷ்ணு சகஸ்ரநாமம் முடிந்து பாவயாமி ரகுராமம் என்று சுற்றிக் கொண்டிருந்ததால் அஞ்சனா பண்ணைக்கு அவர் தனியாக நடக்க வேண்டி வந்தது.

அரை கிலோமீட்டர் என்பது மூணரை கிலோமீட்டராக வாய்வழியாக நீண்டு அஞ்சனா பண்ணையில் நுழைந்தபோது, முழுத் தொகையும் அட்வான்ஸாகத் தராத காரணத்தால் பசுமாடு வராது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள்.

அட்வான்ஸ் கொடுத்திருந்த நூறு போக, சிறப்புக் கட்டணமாக ரங்கா சேட் பாக்கெட்டில் இருந்து இன்னொரு இருநூறை வெட்டினார். ஒரு கட்டு மஸ்தான ஆளோடு மாட்டை முன்னும் பின்னும் இழுத்து தட்டி தாஜா செய்து நகர்த்தி ப்ளாட் வந்தபோது எட்டு மணி. கேடரிங் முடிந்து வேன் கிளம்பிக் கொண்டிருந்தது.

“மதியச் சாப்பாடு சீக்கிரமே வச்சுக்கலாம் மாமா”.

“காப்பி?”

பிளாஸ்கைக் கவிழ்த்து ஆறி அவலாகிப் போன அரைக்கப் காப்பியை வாயில் ஊற்றியதும் புத்துணர்வு பெற்றார் சேட்.

“ரெண்டாம் மாடிக்கெல்லாம் மாடு ஓட்டிப் போக முடியாது. க்ரூயல்டி டு அனிமல்”.

அசோசியேஷன் செக்ரட்டரி கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். கட்டு மஸ்தான ஆசாமியும் ஆமோதித்தான். மாடு கூட அதேபடிக்குத் தலையை ஆட்டியது.

நந்து ஒரு நல்ல வழி சொன்னான்.

“பசுமாடு மாடிப்படி பக்கமா நிக்கட்டும். என் ஹேண்டிகாம் வீடியோ காமிராவிலே அதைப் படம் எடுத்துக்கலாம். கேமராவை அப்படியே பிடிச்சுட்டு படியேறி வீட்டுக்குள்ளே போனா, சம்பிரதாயம் நடந்து முடிஞ்ச மாதிரி தானே”.

ரங்காசேட் தான் இதுக்கும் அழைக்கப்பட்டார். பசுமாட்டை சிரத்தையாக எடுத்த ஹேண்டிகாமை கையில் பிடித்தபடி அவர் மாடிப்படி ஏற வேண்டிப் போனது. “மெல்ல”, “ஓடாமப் போங்க” என்று அங்கங்கே சகலரும் அறிவுரைத்தார்கள்.

நாலு படி ஏறுவதற்குள் ரங்கா சேட் தானே பசுமாடானதாக உணர்ந்தார். காலை எடுத்து முன்னால் வைக்கவே கஷ்டமாக இருந்தது. பாத்ரூம் போனால் தேவலை என்று ஒரு தோணல்.

சட்டென்று நினைவுச் சங்கிலி அறுபட்டது. பாத்ரூம். போகணும். போனால் தேவலை. இப்போதும்.

சும்மா கிட. அப்படி ஒண்ணும் இல்லே. வேறே எதையாவது நினை.

மனதுக்குக் கட்டளை இட்டது நாச்சியார் குரலில் இருந்தது தப்பாகி விட்டது. “முந்திரிக்காய் கூஜாவைப் புழங்க வச்சுக்கோடா அண்ணா”.

அது நிறைய வென்னீர். இங்கே தான் பக்கத்தில் இருட்டில் எங்கேயோ. பாத்ரூம் போயே ஆகணும்.

தூங்கு. இப்போ இல்லே. அப்புறம் ஒரு மணி நேரம் கழித்து உட்காரலாம்.

தூக்கமா விழிப்பா என்று தெரியாத நிலை. வயிறு மட்டும் படியேறாத பசுமாடு போல அடம் பிடித்தது.

கீழ் பெர்த்காரன் மேலே நிமிர்ந்து பார்த்தான்.

அவனுக்கு ஒரு குரலை கற்பனை செய்யலாம். நாச்சியார் குரல் வேணாம்.

முப்பது வருடம் முன்னால் அவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜுனியர் அசிஸ்டெண்ட் ஆகச் சேர்ந்தபோது ஆகாசவாணியில் செய்தி வாசித்த குரல்.

சக வருஷம் .. செய்திகள் வாசிப்பது. கடவுள்.

கீழே படுத்திருந்த லுங்கி கட்டிய ஆசாமி சிரித்தான்.

“என்ன வேணும் கேளு ரங்கா. இந்த செருப்பை மட்டும் கேட்காதே”.

செய்தித்தாள் பார்சலில் இருந்து செருப்பை எடுத்து கால் பக்கம் நகர்த்தியபடி ரங்கா சேட்டைப் பார்த்தான்.

கடவுள் தானா? படுத்துக்கொண்டே பயணம் போகிற பஸ்ஸிலா?

ரங்கா சேட்டுக்கு எழுந்து உட்காரணும் போல் இருந்தது. கீழ் பர்த் கடவுள்காரன் ஒரு மாதிரி முதுகு வளைத்து உட்கார்ந்தான். செருப்பைக் கீழே போட்டான்.

பக்கத்தில் ஒரு நசுங்கின ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் இருந்து களக் களக் என்று சத்தம் எழ தண்ணீர் முழுவதையும் குடித்துத் தீர்த்தான். அத்தனை நீரும் ரங்கா சேட் வயிற்றில் இறங்கின மாதிரி இருந்தது.

சேட்டுக்கு இனியும் பாத்ரூம் போகாமல் முடியாது.

உட்காரவும் வழியில்லை. இறங்கி, டிரைவரை நிறுத்தச் சொல்லலாமா?

நகரும் இருட்டுப் பொதிக்குள் அவன் எங்கே இருப்பான் என்று தெரியவில்லை.

பாத்ரூம் போகணும்.

சத்தம் போடலாமா?

மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்ட நாக்கு. பஸ் நகர்கிற இரைச்சலும், ஏணியில் ஏதோ சங்கிலி உரசி உரசி வருகிற ஓசையும் தவிர வேறே சத்தம் இல்லை.

கீழ் சீட்காரன் திரும்ப மேலே பார்த்தான். கடவுள் பேசின மாதிரி இருந்தது.

“சொல்லு ரங்கா. என்ன வரம் வேணும்? என்ன வேணும்னாலும் கேளு, தரேன்”.

“பாத்ரூம் போகணும்”.

அவன் தலையை ஆட்டிக் கொண்டான்.

“கண்டக்டர் நிறுத்துங்க ப்ளீஸ்.”

அவன் இரைந்து அரை நிமிஷம் கழித்து பஸ் நின்றது.

“இறங்கிக்கறேன். திரும்ப ஊருக்குப் போக வேண்டிய அவசரம்”.

மொபைல் போனை சட்டைப் பையில் போட்டுக் கொண்டான்.

“இங்கே இறங்கினா வண்டி கிடைக்காது. யாரும் நிறுத்த மாட்டாங்க”.

கண்டக்டர் சொன்னபோது ரங்கா சேட் கான்வாஸ் பைகூட இல்லாமல் தனியாக ஏணியைப் பிடித்து இறங்கிக் கொண்டிருந்தார்.

“பரவாயில்லே. ரொம்ப அவசரம்”.

கீழ் பெர்த் கடவுள்காரன் செருப்பில் கால் நுழைத்துக்கொண்டபோது ரங்கா சேட் அவன் பக்கத்தில் நின்றார்.

“நீங்களும் இறங்கணுமா?”

கண்டக்டர் கேட்டான். தலையாட்டியபடி லுங்கிக்காரக் கடவுளைத் தொடர்ந்தார் ரங்கா சேட். பசுமாடு மாடிப்படி ஏறுகிற படபடப்பு அவர் நடையில்.

“இதை விட்டுட்டுப் போறீங்களே”.

கான்வாஸ் பையையும், முந்திரிக்காய் கூஜாவையும் நீட்டினான் கண்டக்டர்.

லுங்கிக் காரனும் பின்னால் ரங்காசேட்டும் இறங்கினார்கள்.

சேட் முகத்தில் அலாதி நிம்மதி. இருட்டில் ஓரமாக நின்று கூஜாவை கான்வாஸ் பையில் திணித்துக் கொண்டார். பாத்ரூம் என்றது மனம். இருடா ரங்கா என்றார்.

ஐந்து நிமிடம் கழித்து அவர் புறப்பட்டபோது லுங்கிக்காரன் போன தடம் தெரியவில்லை. இது வந்த வழியா, போக வேண்டியதா?

இருட்டில் எதுவும் புலப்படவில்லை. கடந்து போகிற பஸ் வெளிச்சத்தில் பாதை மட்டும் விட்டு விட்டுத் தெரிந்தது.

முந்திரிக்காய் கூஜாவில் இருந்து தண்ணீர் குடித்தார். அது திறக்கவும், மூடவும் சகஜமாக கைக்குப் பிடித்த பிடிக்கு வந்தது. பழகி விட்டது.

நடக்க ஆரம்பித்தார்.

– கல்கி 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *