யுத்த தேவதையின் திருமுக மண்டலம்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 5, 2023
பார்வையிட்டோர்: 2,303 
 

கதைமூலம்: தாமஸ் வுல்ப், அமெரிக்கா

ஈவிரக்க மற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ் டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின் போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவயல்: விமான மைதானத்தில் உள்ள குத்தகைக் கம்பெனியின் ஷெட்டுகளிலிருந்து ஒரு நீக்ரோ ஜாதியான் சர்வ ஜாக்கிரதையாக அடிமேல் அடியாகப் பின்புறம் கால் எட்டி வைத்துப் பின்வாங்குகிறான். பீதியும் வெறுப்பும் அவன் முகத்தில் பயங்கரமாக பல்லிளிக்கின்றன. வாட்டசாட்டமான உடல் ஆகிருதி: மனிதக்குரங்கு மாதிரி தாவவோ ஓடவோ லாவகம் படைத்த கட்டமைதி. கரத்தையும் கருப்புப்பா தங்களையும்- அவற்றைமுஷ்டி என்று சொல்லு வதுபொருத்தமல்ல. அகன்றபடி விரித்து, ஆகஸ்ட் மாதச் சூரியன் கன்னக்கனிந்த கருப்பில் பளபளக்க சர்வ ஜாக்கிரதையாகப் பின்வாங்குகிறான். காய்ந்து கருங்கட்டையாகப் புல்லற்று மலடடித்துப்போன களிமண்கட்டாந்தரை மீது கால் ஊன்றிப் பின் வாங்குகிறான். வெள் விழிகள் ஆழங் காண முடியாத, மூங்கையான வெறுப்பும் பீதியும் கொப்புளிக்கிறது. அவனை விரட்டிக்கொண்டு தென்னாட்டு வெள்ளையன் – காங்கித் தலைவனோ ஓவர்ஸீயரோ-கொழுப் பேறிய சதைப்பற்று மிகுந்த கைகளில் தடியேந்தி, சளக்கு பளக்கென்று அவனைத் தொடர்கிறான். அவனுடைய அடித் தொண்டை கொலையையும் ரத்த வெறியையும் குமுறிக் கனைக்கிறது. ‘கருப்புக் கூத்தியாமவனே, ஒன் கொடலைக் கொதறிப்புடறேன் பாரு; நாசமாப்போன மூளையைச் சிதற அடிக்கிறேன் பாரு.’ தடி நீக்ரோவ் மண்டை யில் பொட்டு பொட்டு என்று விழுந்து மைதானம் முழு வதிலும் கேட்டது. கட்டை உயிரடிக்கும் எலும்பில் அடித் துக்கொண்டிருந்தது. இந்தத் தொந்தி பருத்த வெள்ளைய னுக்குப் பின்புறம் உலகத்தின் தலையாட்டிப் பிராணியான ஆபீஸ் குமாஸ்தா, ஷர்ட் போட்டு நடமாடும் எலிமாதிரி தொடர்ந்து கொண்டிருந்தது. ஆபத்து என்றால் எலி மாதிரி பொடுக்கென்று ஒளிந்து கொள்ளும் திறமையும், ஆபத்து அகன்றது என்றால் அசகாய சூரத்தனத் தோடு கொல்லவரும் தன்மையும் படைத்த ஜந்து இது. இது எலிப் பல்லை இளித்துக் கொண்டு, தன்னைப் பாதுகாப்பவன் நிழலில் தொடர்ந்து வந்தது. பயத்தின் தலையாட்டும் அடிமை, கொலையின் குனிந்து கொடுக்கும் மெய்க் காவல், இரக்கமோ தயவோ இல்லாமல் அடியோடு கொல்ல வேண்டும் என்ற கோழையின் ஆசையோடு கூடி எலிப்பல்லைக்காட்டிக் கொண்டு வந்தது. ஈவிரக்கமற்ற சூரியன் கைப்பட்டனிலும், கஞ்சியேறி மொட மொடக்கும் ஷெர்ட் அணிந்த கையில்,அது ஏந்திய மங்கிய நீலக் கைத் துப்பாக்கிமீதும் பிரகாசித்தது. துப்பாக்கியை ஏந்திய அவன்கை நடுநடுங்கியது. ரத்த வெறி கொண்ட எஜமா னுக்குத் துப்பாக்கியை நீட்டி ‘இந்தாருங்க… இந்தாருங்க மிஸ்டர் பார்ட்லட், பய எதுத்தா தாட்சண்யமில்லாமல் சுட்டுத்தள்ளுங்க’ என்று காதில் ஓதியது.

இந்த நிலையில் நீக்ரோ ஜாதியான் க்ஷணங்கூட நிற் காமல் பின்வாங்கி நடந்து கொண்டே இருக்கிறான். பயங்கரமான அவனுடைய வெள்ளை விழிப்பார்வை, பீதியும் வெறுப்பும் குடிகொண்ட பார்வை, எதிரியைப் பார்க்க வில்லை, அவனுக்கும் பின்னால் பளபளத்த மங்கிய நீல உருக்குக் குழலை இடைவிடாமல் பார்த்தது. அவனுடைய கரங்கள் குருட்டுத்தனமாக, பயனற்ற ரீதியில் முன்னுக்கு நீண்டு மறித்தன. வெறும் காற்றைத்தான் மறித்தன. அவன் வெறுப்பைக் கொட்டிக் கொண்ட எதிரி, மேலுக் குமேல் அடித்துக்கொண்டே வந்தான். அவனுடைய கருப்பு முகத்தில் வாய்க்கால் வாய்க்காலாக சிகப்பு ரத்தம் பிரவாகமெடுத்தது. மண்டையில் பொட்டுப் பொட் டென்று குறுந்தடி விழுந்து கொண்டிருந்தது.

‘ஒங்க… நாசமாப் போன கருப்புக்களுக்கு…நாப்பய மவனே.’ கொலை நிரைத்துக் குமுறியது அந்தக் குரல். எப்பிடி இருக்கணும்னு சொல்லிக் குடுக்கேன் பாரடா. படார். தடி மூக்கந்தண்டில் விழ சில எலும்பு சரசர வென்று நொறுங்கியது. நாசமாப்போன கருங்களுதே வெள்ளக்காரனை எதுத்துப் பேசரதா?-படார். பக்கவாட்டாக சரிந்து வாக்கற்று விழுந்த அடி வாயை ஒரே ரத்தக்குமையலாக்கி விடுகிறது. உருக்குக் குழலின் நீலப் பளபளப்பில் வைத்த கண் மாறாமல், அந்த நீக்ரோஜாதி யான் நொறுங்கித் தூளாகி விட்ட பற்களைத் துப்புகிறான். அந்த நாசமாப் போனபய மண்டையை உடைத்துத் தரு கிறேன்பாரு. கழுசடைக் கருப்புக் கூத்தியாமவனெ-என்ன மாச் சொல்லிக் கொடுக்கிறேன் பாரு. படார். சுருண்டு வளர்ந்த மயிர் நிறைந்த மண்டையோட்டின் மத்தியில் இப்பொழுது அடி விழுந்து குறுகிய நெற்றிக்குமேல் மாங்காய் மாதிரி பிளந்துவிட்டது. சக்தி துளும்பும் கருப்புருவம் ‘கிறங் கித் தள்ளாடிமுழங்கால் வளைய, தலைகுனிய, கரங்கள் இன்னும் முன்போல் பரசலாக விரிந்தபடி, முதலில் ஒரு முழங் காலைவளைத்து, ஒரே ரத்த மயமான தலையை நெஞ்சில் மடி யத்தொங்க விட்டபடி, கால் பூட்டுகள் குருட்டுத்தனமாகத் தள்ளாட, அடியற்றது போல் மண்ணில் குப்புறச் சரிந்து விழுந்தான். அடிக்குடலோடு குமட்டலெடுக்கும் இந்தக் கோரத்தனத்தின் சிகரமாக, பிரக்ஞை இழந்து ரத்தச் சகதியாக நைந்த முகத்தில், பூட்ஸ்காலின் கொலைகார உதைவிழுந்தது. அப்புறம் யாவும் ஒடுங்கிய நிசப்தம். பார்க்கவோ கேட்கவோ ஒன்றுமில்லை. வெள்ளைத்தொந் தியில் முட்டிமுட்டித் திக்குமுக்காடி எழும் சுவாசமும் எலிப் பல்லைக் காட்டிய வெள்ளை எலி மூஞ்சியின் பீதி முடிந்த மூச்சும், மங்கி நீலம் இமைக்கும் விஷமுண்ட உருக்குந் தான் மிச்சம்.

அப்புறம்.

பீதியும் வெறுப்பும் குடி கொண்ட கோழையின் நெஞ்சு, தனக்கு ஆபத்து வராமல் கொல்ல விரும்பும் ஏக வழியில் செல்லும் கோழையின் கொலைக்காமம், சுயமதிப்புக் கப்பல் உடைந்ததும் எலி சாயுஜ்யத்தைப் பெற, கையில் துப்பாக்கி ஏந்தி, காக்கியணிந்து, அதிகாரக் குதி ரையில் ஆரோகணித்து இங்கு இப்போது கொலைத் தொழில் நடத்துகிறது. மூன்று பையன்கள்: எல்லோருக்கும் அந்தக் குத்தகைக் கம்பெனியில் தான் வேலை. இராத்திரிச் சாப்பாடு முடிந்த பின், கருக்கிருட்டில், இருளின் வருகையில் விமான மைதானத்தின் ஓரத்தின் பக்க மாக நடந்து செல்லுகிறார்கள். தண்ணீர்க் கரையோர மாக சமதளமான சதுப்பு மண்வழியாக, வீட்டைப் பற்றியும் ஊரைப்பற்றியும் படித்த படிப்பைப்பற்றியும், வாரக் கடைசியில் சம்பளம் வாங்கியதும் கடற்கரைக்கு உல்லாசப் பயணம் போவது பற்றியும் பேசிக்கொண்டு போகிறார்கள் : சர்க்கார் வெள்ளோட்டம் பார்த்து பரீட்சை செய்துகொண்டிருக்கும் போர் விமானம் நிறுத்தப்பட் டிருக்கும் கொட்டடியண்டையில் வந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட இரகசிய இடம்என்பது அவர்களுக்குத் தெரியாது. திடீரென்று அந்த இடத்தைக் காவல் காத்து நிற்கும் சோல்ஜர் இடுப்புப் பெல்டில்தொங்கும் ரிவால்வரில் கை வைத்தபடி அவர்களை நெருங்குகிறான். திருட்டு விழிகள் இமைகளை ‘இடுக்கிக்’ கொண்டு பார்க்கின்றன. நகர எலிகள் மூஞ்சி, சாம்பல் பூத்து வரண்டு, திருட்டுப் பார்வை போட்டு, உதப்பும் உதடு சலசலத்து, மலடு தட்டி, ஜீவனற்ற சரசல் பேச்சை உதிர்க்கிறது.

‘என்ன செய்யிரீங்க-தேவடியா மகனுகளா. இங்கே யாரு வரச்சொன்னா?-கொட்டடியைச் சுத்தி ஏன் வட்டம் போடுறே ?’

தெற்குக் கீழ் பிராந்தியங்களிலிருந்த சிறுவன் ஒரு வன், செக்கச் சிவந்து அழகு குடிகொண்ட முகம், நேசமும் பரிவும் பேச்சில் குழைய, தயங்கித் தயங்கிப் பதில் சொல்ல முயன்றான்.

‘ஏனையா, இப்படிப் போகலாம்…’

மின்வெட்டுப் போல, அந்த எலி, பையனை வாயில் அறைந்தது, பையனுடைய செக்கச் சிவந்த கன்னத்தில், அழுக்குக் கரைபிடித்த விரல் நுனிகள் முத்திரையிட்டன. அவன் ஜீவனுடைய முக மண்டலத்தில் அழித்துத் துடைக்க முடியாத அசிங்க முத்திரையை வைத்தன.

‘பதில் பேசாதேடா. நீ என்ன நெனைச்சா எனக்கென்னடா. மறு வார்த்தை பேசினா சுட்டுக் கொதிக்க வச்சுப்புடுவேன், ஹும் யாருகிட்டே. அவன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவித் தயாராகக் கையில் எடுத்துக் கொண்டான். மந்தித்த பீதி, மந்திரம் போல் கட்டுண்ட நம்பிக்கையின்மை கவிந்து ஒரே சொருகாக நீலக் குழலின் மங்கிய பளபளப்பின் மீது மூன்று சிறுவர்களின் பார்வையும் தைத்தது.

‘சரிதாண்டா. போங்கடா’ என்று பையனை அறைந்த வீரன் கதாவன மற்ற கைவைத்து அவர்களை நெட்டித் தள்ளுகிறான். ‘எல்லாரும் ஓடிப்போங்க இல்லாட்டாக்க-‘ அந்த மகா பெரியவர் உறுமுகிறார். கண்கள் பாம்பு மாதிரி பளபளக்கிறது. முகம் பயமுறுத்தி அவர்களை நெருங்குகிறது.

நெருங்குகிறது. ‘இன்னும் பேசினா சுட்டுத் தள்ளுவேன். ஓடுங்கடா. சுட்டு தளரத்துக்கு முன்னாலே ஓடிப்போங்க.’

மூன்று சிறுவர்களும் திக்பிரமையடித்து, மனங்குழம்பி வெட்கத்தால் குன்றிப்போய், ஒரு கணத்திற்கு முன் நெஞ்சில் சுனையூரிய சந்தோஷம், நம்பிக்கைகளும் அஸ்தமித்து விட, திரும்பி, மௌனமாக மரத்துப் போய் வெட்கச் சுமையால். முதுகு குனிய, யுத்தம் சாகுபடி செய்த மிருகத்தனமான, உள்ளத்தைக் கரும்பும் குரோதம் உள்ளத்தைச் செல்லரித்துத் துளைக்க நடந்தார்கள்.

இனியும்…

மனிதனுடைய ஆசை நிர்வாணமாக, மிருகத்தனமாக, அதிகாரத்துடன் பற்றி யிழுத்து, கண்ட கண்ட உணவை எல்லாம், பசியின் அகோரத்தால் கிழித்துக் குதறி எதையும் சட்டை செய்யாது தன் வசமாக்கும் அடி மாண்டு போன நிலையில் இங்குபோல அங்கும் நிலவுகிறது.

பாலத்துக்கு அப்பால், ரயில் பாதையைத் தாண்டி, நியூபோர்ட் நியூஸ் நீக்ரோச் சேரியில் முடை நாற்றமெடுத்து வரண்டு புகையடித்து துரு ஏறிய குடியிருப்புகளிலும் குப்பங் குடிசைகளிலும் இது சஞ்சரிக்கிறது. வர்ணம் பூசாத மொட்டை மொழுக்கென்று பைன் மரப் பலகைகளை இணைத்துத் தைத்து யுத்தத்தின் அதிரடி வேகத்தில், எழுப்பப்பட்ட குரல்: பசியைப்போல் தெவிட்டுதல் காணாது வாழ்வைப்போல் வயசுற்ற மிருகத் தனமான குருட்டாசையைத் திருப்திப்படுத்த அதே அகோரரூபத்தில் அமைந்து நிற்கிறது. உலக மாத்யந்தமும் உலாவித் திரியும் நேசமற்றோர் வீடற்றோர் தேவையே இது.

கரடு முரடான, புதுத் தன்மை மங்காத அழுக்கு மண்டும் இந்த இடத்தின் முன் பகுதி சாப்பிடும் அறை, பானம் அருந்தும் முன் கூடம் என்று இரண்டாகப் பலகை அடைத்துப் பிரிக்கப்பட்டிருக்கிறது. உள்ளே நாலைந் மேஜைகள். சாப்பாட்டு லிஸ்ட் காட்டி. ஈ மொய்த்திருக்கும் கார்ட்கள் அதன் மேல் குத்தி நிறுத்தப் பட்டிருக்கின்றன. வந்தா தரிப்போர் அதை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. மரப் பலகை கணக்கு மேஜை என்று ஒரு புறம் அத்துவான வனாந்தரமாக, அதன் ஜோடனைகளுடன். வெதுப்பு இறங்கும் சோடா ஸிரின்ஜ், நாலைந்து சிகரெட் பெட்டி, ஒரு சுருட்டுப் பெட்டி, முதலிய வகையராக்களை த் தன்னுள் அடக்கும் ஒரு கண்ணாடி கேஸ். நாற்றமெடுத்த பாலேடும் பன்றிக் கறியும் கொண்ட கண்ணாடிப் பெட்டி- முதலிய ஜோடனைகளுடன் அங்கே நிற்கிறது. பாலேடும் பன்றிக் கறியும் கடை வைத்த நாள் முதல் குடிபுகுந்து வாழுகின்றன. யுத்தம் முடியுமட்டும் அப்படியே அங் கேயே குடி வாழும்.

அறை முழுவதிலும் வேசிகள், மெல்லிய நீண்ட அங்கி போட்ட வேசிகள், பறிமாறுவோராக கூட்டத் திடை இடைவிடாது சஞ்சரித்துத் தம் தொழிலை நடத்துகின்றனர். அங்கு உட்கார்ந்திருந்த மனிதர்கள் யாவரும் வகுப்பு வள முறைக்குள் அடங்காத வர்க்கம். திசையற்று ஜீவநதியிலே மிதந்து செல்லுகிறவர்கள். இன்று உழைப்பு நாள், ஓய்ச்சல், மறுபடியும் திறையற்ற மிதப்பு, பட்டினி, சற்று சிறைவாசம், சற்று வெளிவாசம் அழுக்கும் அடிமாண்ட வரட்சியும் பட்டினியும் பசியும் பிய்த்துத் தின்ன அதிர்ஷ்டமிழந்து, ரயில் வண்டிகளில் அடிக் கம்பிகளைத் தொத்திக்கொண்டோ, அல்லது மிருக ராசிகளுக் கான குட்ஸ் பெட்டிகளிலோ சவாரி செய்து, ஊர்ப்பயணம் செய்து கொந்தளித்து வெந்து காயும் நாடோடிக் கானகத்தில் உணவு பறித்து உயிரைப்பற்றி உலாவித்திரியும் உடலங்கம். திடீரென்று பணமும், அற்ப சுபிட்சமும் அவர்களைத் தலைதெறிக்க வைத்துவிடும். அர்த்தராத் திரியில் குடைபிடித்து விடுவார்கள். ஜீவநதியிலே மிதந்து செல்லும், பெயரற்ற, வீடு வாசலற்ற வேரூன்றா வர்ஜா வர்ஜமற்ற வகுப்பு இந்த மனிதப் பிராணிகள். இவை தேசத்தை மொய்த்துச் சுற்றுபவை.

இவர்கள் இந்தபூவுலகத்திலே மனிதக் கரிப் பிண்டங் கள். எரிந்து கருகிப்போன கரிக்கட்டைகள். கருப்போல் வரண்டு, அழுக்கேறி, வருஷம் வரையும் கோடுகள் சுமந்த முகம் பெற்று, வேற்றுமை காட்டாது வறுமையின் ஏக ஜாடைபெற்று அலைபவர்கள் இவர்கள். அன்றுகாலை தான் வேறு நகரத்து ரயில்ஸ்டேஷனில் கூட்ஸ்வண்டியிலிருந்து ஊர்ந்து வெளியே வந்த ஜந்துக்கள் போலத் தோன்றும். சற்றும் கவலையற்றுப் பார்த்துக்கொண்டு கையில், அட்டைப் பெட்டி ஒன்று சுமந்து (ஒரு ஷர்ட், இரண்டு காலர் ஒரு கழுத்துப்பட்டி இவைதான் அதிலுள்ள ஆஸ்தி) நடமாடுவார்கள் இந்தப் பிராணிகள். எங்கிருந்தோ நெடுந் தூரம் கடந்துவந்தவர்கள் என முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும். அவர்கள் அனாதைப்பட்டது போன்ற ஒரு அவலம் அவர்கள் முகத்தில் தெறிக்கும். துரு ஏறி இயங்கும் ஒரு மனிதப் புள்ளி நிர்வாணமாக, அவனைக் கவித்து மூடும் வரட்சியுள்ள வானத்தின் கீழே அகோரமான மகா கானகம் என்ற பூலோகத்தில் எற்றுண்டு கூட்ஸ் வண்டியடிக் கம்பிகளில் ஓட்டித் தொங்கும் துருவாக இயங்குகிறது.

நிர்வாகனமாக, பெயரற்று வேரற்று, ஒரு ஜீவனுடன் பொருந்தியுள்ள தனித்தன்மையும் அந்தரங்கமும் வாய்ந்த விசேஷங்கள் யாவும் உறிஞ்சப்பட்டு, துரு இரும்பு – வியர்த்தம் என்ற வரம்பற்ற சூன்யத்திலே, ஏகாங்கியாக தொடர்பற்ற தொலைவுகளிலே உந்தப்பட்டு இயங்கும் மனிதக் கரிக்கட்டைகள் இந்த ஜீவராசிகள்.

கடைசியாக இந்த மனித அணுக்கள் இந்தக் கண்டத்தின் கண்ணற்ற இடத்தில், கொல்லிப் பாவையின் கண்ணெதிரில் உயிரைக் கக்கி வெடித்து மடிகின்றனர். தடத்தில் தெரிந்தரத்தமும் அலறிக் கழலும் சக்கரக் குமுரலில் இடுங்கி மடியும் மனிதக் கிரீச்சுக் குரலும் ரயில்வண்டி யின் அடித்தண்டுகளில் சுற்றித் தொங்கும் குடலும் ரயில் பாதைக் கட்டையில் என்னவென்று அடையாளம் பிரிக்க முடியாதபடி மூளையும் சதையும் எலும்பும் ரத்தமும் சொட்டுச் சொட்டாகத் தெரியும் தடங்களுமே அதன் சமாதி. அல்லது நகரத்துத் தலைவாசலிலோ பாலத்து அடியிலோ, சுருண்டுவடிவம் மாறி அழுக்குக் கந்தை சுற்றிய மனித மூட்டையாக விரைத்துப்போய் ஜீவனற்று, போலீஸார் வந்து வண்டியிலேற்றி அகற்ற, வாழ்விலே பெயரற்று மறக்கப்பட்டு அலைந்ததுபோல் சாவிலேயும் அந்தப்படியே அகற்றப்படும்படி காத்திருக்கும்.

இப்படிப்பட்டவர்களே இந்த மேஜைகளருகில் சூழ விருந்தனர். இந்த அவசர ஆசைக்கொட்டிலில் அமர்ந்து இருந்தார்கள். திருட்டு விழி போட்டு வலைபோட்டு அரிப்பதுபோல் கணக்கெடுக்கும் பாவனையில் தயங்கி, கோணல் சிரிப்போடு ஆட்டு விழிவிழித்து அமர்ந்திருந்தார்கள்.

அவர்களுக்குப் பரிமாறியவர்களோ, வடக்கு, மத்ய கிழக்குமாகாணங்களிலிருந்து திரட்டிக்கொண்டுவரப்பட்ட வேசிகள். மிலேச்சப் பேராசையும், பேய்ப்பசியும், சோர்வுற்ற கண்ணும், வரண்ட முகமும், தம்முடைய ஜீவனோ பாயமான தொழிலில் யந்திரம்போல் இயங்கி, இடம் கொடுத்து சொற்ப அவகாசத்திற்குள் கிடைத்ததைச் சுருட்டுவதையே ஏக நம்பிக்கையாகப் பற்றிப் பிடித்து உயிர் வாழும் ஜாதி அது. குரல் கரடுமுரடாகத் துரு வேறிக்கிறீச்சிட்டது. வேண்டுமென்றே அசிங்க வார்த்தைப் பாராயணம் பண்ணித் தன்னை முரடியாய்க் காட்டிக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முயன்றது. பெரிய நகரத்துச் சேரிக் குடில்களில் வசிக்கும் ஜீவராசிகளின் குணம் அது. அங்கு தழைக்கும் குழந்தைகளிடமும் அதைக் காணலாம்.

ஓயாத ஆணை, ஓயாத வசவு, ஓயாத கேலி, நை யாண்டி, நாக்கில் நரம்பற்றுப் பேசுவது, ஓயாத பீதி, ஓயாத கொடுமை- இவை யாவும் அவர்களைச் சூழ உலா வித்திரியும் பேய்ப் பசியின் பிடுங்கலின் விளைவாகப் பிறந் தவை. கைத்துப் போன வாழ்வில் கையில் பட்டதை ‘கல்நார் உறிச்சு’ எப்படியோ காலந்தள்ளும் ரீதியில் நடமாடித் திரிவதால் இவர்கள் தம்மிடம் நல்ல தன்மை இருப் பதாக இளகிய மனசு குடி கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ளப் பயப்படுகின்றனர். இந்தக் குணங்கள் இவர் களை ‘இவர்கள் போன்ற சகாக்களான ஆபத்துக்களில் சிக்க வைத்து அவர்களது தாக்குதல், கொடுமை, ஜபர் தஸ்து முதலியவற்றிற்குத் தம்மை ஆட்படுத்தி விடலா காது’ என்பதே இவர்களது ஓயாத கவலை.

இந்தப் பெண்டுகளும் அப்படித்தான். புகை மண்டும் அந்த அறையில் அவர்களது கமறல்குரல், கரகரத்துக் கேலி மண்டும் சிரிப்பு ‘அட, சேங். அடகிருஸ்து’ ‘எனக் கென்ன ஆத்தரண்டா வாயேன். இப்பொ என்னடா பண்ணப் போறே, எனக்கு வேறே வேலையில்லை’வேணும்’னா காசெக் களத்து இல்லாட்ட கம்பியை நீட்டு’ என்று வாய்க்கு வந்தபடி யெல்லாம் வெடிபடும் பேச்சு இவை தான் இவர்கள் சரக்குகள்.

இப்படியிருந்தும், இந்த நைந்து போய் மிருகமாகி, பீதி உந்த நடமாடித்திரியும் ஸ்திரீ ஜாதியில், வாழ்விலி ருந்து நசுக்கி தேய்த்து விட முடியாத தொன்று பரிதாபகரமாகக் கனிந்து கொண்டு இருக்கத்தான் செய்கிறது. உள்ளுக்குள்ளே புதைபட்டு சமாதியாகிக்கிடக்கும் பரிவு, பீதி யோடு, நேசத்தை, உள்ளன்பைத் தேடித் துழாவும் மனசு,மென்மை, ஏன் அன்புகூட, இந்த நாசமாகி அஸ் தமித்துப் போன மனிதக் கரிக்கட்டைகளிடத்தே தேடித் திரிகிறது.

தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும், வெளிக்கு அகோர கேலிக்கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும் போது சர்வ ஜாக்கிரதையோடு எட்டி எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது. இப்படியாக, இவர்களிடம் வைது முரட்டுத்தனமாகப் பேசுகிறவனிடத்தில்-அது தான் இங்கே சாதாரண வழக்கம். அதேரீதியில் அவனுக்குப் பதில் சொல்லுவார்கள். ஆனால் அதற்கு மாறாக அமைதியாகப் பேச்சுக் கொடுத்தால், சற்றுப் பரிவோடு ‘பார்வை விட்டால்’ அவர்கள் தங்கள் கமரல் குரலை அடக்கி, மூச் சாக வெளிவரும் குசுகுசுப்புப் பேச்சோடு, அவனை இடித்துக்கொண்டு பயங்கரமான, பரிதாபகரமான குழைவு காட்டி, வர்ணமேற்றிய மூஞ்சிகளை அவனருகில் கொண்டு வந்து, கவர்ச்சிப்பாவனை யைக் காட்டி நடப்பார்கள். இது மாதிரி.

‘ஹெலோ, பெரிய தம்பி. ஏண்டா தனியா குந்திக்கினு நிக்றே, சும்மானாச்சு உக்காந்து மடியிரே’.

‘பேச்சுத் தொணைக்கி ஆளு வாணாம். உம்.’ வர்ண மேற்றிய உதட்டிடை பல்லிளித்துக் காட்டி அவன் மீது ஒண்டிச் சாய்ந்து கொண்டு ‘வெள்ளாட வாரியா கண்ணுக் குட்டி. வாடா எந்தொற மவனே வாயேன்’… என போஷகன் கை பிடித்திழுத்து, ‘பொளுது களியுதே தெரி யாது’ என அழைப்பார்கள்.

இந்த மாதிரி ஒரு கூத்தில் சிக்கிய ஒரு பையன் மேஜையை விட்டு எழுந்து, ஒருத்தியுடன், புகைமண்டும் அறையைவிட்டு ஒரு பக்கத்தில் செல்லும் ஒடுங்கிய பாதைக்கப் புறமிருந்த கதவைத் திறந்து கொண்டு பின் புறமிருந்த விபசார விடுதியின் – தனிக்கொட்டிகளுக்குப் போனான்.

இங்கே, காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. எதிரிலிருந்த தனி அறைகளில் ஆட்களிருப்பது சப்தம் கேட்டது. இந்த இட வசதி நோக்கி ஜோடி ஜோடியர்க ஆடம்பர வெறி ‘சக்தி-சிவங்கள்’ காத்து நின்றன,

இந்த ஜோடி உள்ளே நுழைந்ததும் அங்கு நின்ற ஒருத்தியைப்பார்த்து. ‘ஹல்லோமே. கிரெஸைப் பார்த்தியா?” என்றாள்.

வாயிலிந்து புகைப்படலத்தை வெளிவிட்டுக்கொண்டு ‘ஏழாம் நம்பரிலே பாரு. ஒரு வேளை அங்கே இருப்பா’ என்றான்.

இப்படித் தனக்குத்தெரிந்த தகவலை ‘மெட்டாக’வெளி விட்டு விட்டு தன் பக்கத்திலே நிற்கும் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த முரட்டு மாலுமியைப் பார்த்து, ‘ஏண்டா பையா காத்துக் காத்து கால்கடுத்துப்போச்சா?’ என்று கேலி செய்தாள். ‘இன்னம் நேரமாவாது. அடுத்த நிமிசம் நாம் போவோம்’ என்றாள்.

இந்த ரீதியிலே பேச்சுப் பாவனையும், காமம் மண்டும் கேலியும், சிரிப்பும் அந்த வரிசையில் ஒயாது எழுந்தது. வேறு சிலர், உள்ளிருப்பவர்களைக் கதவைத்தட்டி முடுக்கிக் கொண்டிருந்தார்கள்.

அது வெந்து வழியும் ஆகஸ்ட் இரவு… என்பதில் துளிக்கூட ஐயமில்லை. ஹால் வெந்து ஒழுகியது. கும் மிப் போன முடை நாற்றம் எண்ணைக் கசடு பிசுபிசுத்துக் குமட்டலெடுக்க வைத்தது. அறை முழுவதும் நாற்றம் பிடித்த சிகரட் புகை வெளிச்செல்லாது மண்டிச்சுருண்டு, மனிதர்களுடைய உடலின் கற்றாழை, நாற்றம் பெண்டு கள் போட்டிருந்த மூக்கை அறுக்கும் வாசனை, கடைசியாக நிர்வாணமாக மிலேச்சத்தனமாக மனிதனுடைய காமக் கரும்பு மறக்க முடியாத நாற்றமாக உருவெடுத்து, தைத்துக் கோத்த பைன் பலகைச் சாவடியில் மரக்கந்தத்துடன் கலந்து மனதில் அதே அகோர ரூபத்தில் ஒட்டிக் கொண்டது.

கடைசியாக, இந்த மூச்சுத் திக்கு முக்காடும் ஹாலில் நெடு நேரம் காத்திருந்து அதனிடை எத்தனை ஜோடியோ வெளியே வந்தது. எத்தனை ஜோடியோ உள்ளே சென்றது-பையனும் பெண்ணும் வரிசையின் முதல் ஸ்தானத் தைப் பெற்றார்கள். பின்னால் ஓயாது அலப்பிக்கொண்டிருக்கும் ஜோடி வகைகள், முன்னால் குருட்டுக் காமக் குமுறல்.

கடைசியாக அவர்கள் காத்து நின்ற கதவு திறந் தது. ஒருவன் வெளியேறிப் பின்னால் கதவையடைத்துக் கொண்டு சென்றான். பிறகு ஒரு கணம் நிசப்தம். மறுபடி யும் வாயசப்பல். ‘இன்னும் என்ன செய்துகொண்டிருக்கி றாள்’ என்ற ஜோடியின் முணமுணப்பு. கடைசியாக அந் தப் பெண் ‘ஏண்டி. உள்ளே யாரு. வாயேண்டி வெளியே. வளியை மறிச்சுக்கிட்டு கிடக்காதே’ என்று உறுமினாள்.

உள்ளிருந்து ஒரு ஸ்திரியின் சோர்வுக்குரல் கேட்டது.

‘சரிதாண்டி. ஒரு நிமிசத்திலே வாரேன் சித்த பொறுத்துக்கோ’ என்றது.

‘ஓ’ என்றாள் அந்தப் பையனுடன் நின்ற பெண்.

அவள் மார்கெரட்டு. பாவம் சோந்து களைச்சுப்பூட்டிருக்கும்’ என்று இளகிய குரலுடன் சொன்னாள்.

‘குட்டியம்மா. என்னமா இருக்கு? ஒத்தாசைக்கு வரட்டுமா?’ என்று பரிவுடன் குரல் கொடுத்தாள்.

‘அதெல்லாம் வேண்டாம்’ என்று சர்வ சோர்வுடன் தள்ளாடியது உள்ளிருந்த பெண்குரல், ‘ஒரு நிமிசத்திலே வந்துடுறேன். ஏன் நீயுந்தான் வாயேன்’ என்று குரல் கொடுத்தது.

அந்தப் பெண் மெதுவாக ஓசைப்படாமல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். கொதிப்பேறிப் பச்சைக்கழைபோல் சீர்குலைந்து பயங்கரமாகக் கிடக்கும் அந்த அறையின் சீர்வரிசைகளைச் சொல்லி முடியாது ஒரு நாற்காலி. அதற்குப் பக்கத்திலே குலைந்துகிடக்கும் படுக்கை. பக்கத்திலே ஒரு குட்டி மேஜை. மேஜையின் பேரில் ஒரு பொம்மை. இடுப்பில் ஒரு ரிப்பன் கட்டியிருந் தது. பக்கத்தில் அதனுடன் சேர்த்துக்கட்டின ஒரு மாலு மித்தடியன் போட்டோ. ‘எனக்கு நிசமாகக்கிடைத்த ஒரே சினேகிதி மார்கெரட்டு’-எட்டி நின்ற ஷரத்துகள் நின்றது. பக்கத்திலே ஒரு சிகரட் பெட்டி, மேலே ஒரு மின்சார விசிறி ஆடியது. புழுங்கி வழியும் காற்றைச் சுருட்டிச் சுருட்டியடித்தது.

அடிக்கடி அந்த விசிறிகள் சுழற்சியில் ஒரு கோணத்தில் வரும்போது, கட்டிலிலே களைப்பே உருவாய் அல்லித் தண்டுபோலக் கிடந்த பெண்ணின் முகத்திலே வீசியது. அப்போது பட்டுப்போல் மென்மையான கபோல ரோம ராசி ஒன்றைத் தலைசுற்றி ஆட வைத்தது.

அந்தப் பெண் சற்று நெட்டையாக, ஒல்லியாக, கட்டி லிலே நீட்டிப் படுத்துக் கிடந்தாள். ஒருபுறம் மறிந்து கிடந்த கையில் சோர்வு கொழுத்தோடியது. மற்றொரு கையைமடக்கித தலைக்கடியில் வைத்துப் படுத்திருந்தாள். முகம் அழகு குடிகொண்டிருந்த இடமாற்றும் சோர்வும் பட்டினியும் வதங்க வைத்துவிட்டது. அவள் ஒருபுறமாகக் கண்களை மூடிக் கைகளை முட்டுக்கொடுத்துக் கிடந்தாள். கண் இமைகள் ரத்த ரேகையைக் காட்டின. சோர்வால் நொந்துகிடந்தன.

வந்தவள் மெதுவாகச்சென்று கட்டிலில் அவள் பக்கத் தில் உட்கார்ந்து, பரிவோடு பேச ஆரம்பித்தாள். படுத்துக் கிடந்தவள் கண்ணைத் திறந்தாள். சிரித்தாள். போதையில் தூரத்தில் அலைந்த புத்தி தயங்கித் தயங்கி குடிபுகுவது போல இருந்தது அந்தச் சிரிப்பு.

‘என்னம்மா, என்ன கண்ணே சொன்னே. எனக்கு ஒன்றுமில்லே’ என மெதுவாகச் சொன்னாள். உட்கார்ந்திருந்தவள் ஒத்தாசையுடன் எழுந்து உட்கார்ந்தாள். நாற்காலியில் கிடந்த உடையை இழுத்துப் போட்டுக் கொண்டாள். பிறகு புன்சிரிப்போடு எழுந்து நின்றாள். மேஜையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டாள். வெளிவாசலண்டை காத்து நின்ற பையனைப் பார்த்துக் கிண்டலாக ‘இப்ப உள்ளே வர லாண்டா’ ஜார்ஜியா என்றாள். அவள் குரலில் கமரல் லேசாகத் தொனித்தது. இருந்தாலும் மகிழ்ச்சியோடு பேச்சு வெளிவந்தது என்பதை தொனிப்பு காட்டியது. போஷகர்களை எல்லாம் ‘ஜார்ஜியா’ என்று குத்துமதிப் பாக ஒரு பேர் வைத்துக் கூப்பிடுவது வழக்கம்.

அவன் தயங்கித் தயங்கி உள்ளே வந்தான். பார்வை யில் திக்பிரமை வெறித்துக்கொண்டு தெறித்தது. அவனைப் பார்த்த நிமிஷத்திலேயே அவனை அடையாளம் கண்டு கொண்டுவிட்டாள். அந்தப் பையன் படித்த சர்வ கலாசாலை இருந்த ஊரிலே ஏழைகளானாலும் நாணயமாக ஜீவித்த குடும்பத்தில் பிறந்தவன்தான் அவன். நகரத்தில் எல்லோருக்கும் தெரிந்த குடும்பம் அது. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் அவன் திடீரென்று எங்கோ மறைந்து போனான். அங்கே படித்த மாணவனோடு ‘தப்புத் தண்டாவில் சிக்கிக்கொண்டவன்’ என்ற வதந்தி சற்று அடிபட்டது. அதற்கப்புரம் அவனைக் கண்டதோ கேட்டதோ கிடையாது.

‘ஊரிலே எல்லாரும் எப்படி? சௌக்கியந்தானே’ என்று கேட்டாள் அவள்.

சாம்பல் வர்ணத்தில் பள பளத்த அவன் கண்கள் கடினம் காட்டியது. மெலிந்து வாடிய சின்ன முகத்துச் சின்னவாய் கத்திபோல் கடினம் காட்டியது. குரல் கடினங் காட்டி ஈட்டிபோல் கிண்டி, கிண்டல் செய்தது. ஆனால் எதிர்த்து அடிக்கும் பாவனையிலும் ஒருஅபூர்வமான பரிவு ஒட்டி இயங்கியது. அவனுடைய தோளில் மெலிந்த கைகளைப் போட்டாள். அன்னியமான உலகத்திலே எதிர்பாராதபடி தெரிந்த முக தரிசனம் கிட்டியதால் ஏற்படும்,ஞாபகத்துடன் இயங்காத, திடீர் பரிவு அச்செயல்.

‘அவர்கள் சௌகரியமாகத்தான் இருக்கிறார்கள்’ என்று குழறினான் அவன். தட்டுக்கெட்டு நிற்பதால் முகம் சிவக்க ஆரம்பித்தது.

‘எனக்குத் தெரிஞ்சவர்களைப் பார்க்க நேர்ந்தால், எனக்காக அவர்களிடம் குரல் கொடுத்து நானும் நன்றாகத்தான் இருக்கிறேன்’ என்று சொல்லு. என் அன்பைச் சொல்லி அனுப்பி வைத்ததாகச் சொல்லு’ என்றாள்.

‘சரி அப்படியே ஆகட்டும். நிச்சயமாகச் செய்கிறேன்’ என்றான் அவன்.

‘ஜார்ஜியா ஒம்மேலே கன கோவம் எனக்கு. வந்தவன் எனக்குச் சொல்லி அனுப்ப வாண்டாம்? அடுத்த தரம் வந்தா என்னைக் கூப்பிட்டுவிடு. இல்லாட்ட எனக்குப் பெரிய கோவம் வரும். ஒரு ஊருக்காரர் ஒண்ணா ஒட்டி வாழாமெ முடியுமா? மார்கரெட்னு கேளு. எங்கேயிருந்தாலும் ஓடியாந்துடறேன்-தெரிஞ்சுச்சா?’ என்று மறுபடியும் உத்யோக – கொச்சையில் இறங்கினாள்.

‘சரி ஆகட்டும். ஒன்னையே கூப்பிட்டு விடுகிறேன்’ என்று குழறினான் அவன். அவள் அவனை ஒரு கணம் கடின பார்வையுடன் நோக்கினாள்.கசந்த, அபூர்வங் கலந்த சிரிப்புக் குலையவில்லை. விரல்களை அவன் சிகைகளில் விட் டுக் கோதிக்கொடுத்தாள். மற்றவளைப்பார்த்து ‘அவனைப் பரிவாப் பார்த்துக்கொள். எங்கூர்க்காரன். போய்ட்டு வாரேன் ஜார்ஜியா. அடுத்த தடவை வந்தா எம்பேரைச் சொல்லிக் கேக்கணும். போய்ட்டுவாரேன்’ என்று விட்டு வெளியேறி, மூச்சுத்திணறி முடைநாற்றம் வீசி, குருட்டாசை கைகாட்டிஅழைத்துத் திரியும் குறுகிய உழலுக்குள் நைந்த மெல்லிய உடம்பை ஆயிரத்தோராந்தடவை விற்பனை செய்ய அங்காடிக் கடைக்குள் மறைந்துவிட்டாள். கூப்பிடவும் கைப்பற்றவும், வந்தவரை அங்கீகரிக் கவும் அந்த இருட்டென்ற நாழி குலுக்கிப் போடும் ஆயிர மாயிரம் பெயரற்ற பிராணிகளில் ஒன்றைப் பொறுக்கி எடுக்க மறைந்துவிட்டாள்.

அதன் பிறகு அவன் அவளைப் பார்க்கவே இல்லை. யுத்தம் என்ற சுழிப்பு அவளைத் தன்னுள் இழுத்துச் சொருகிவிட்டது. விஸ்தாரமான, குரூரமான மந்திரோச் சாடனம்போன்ற மகா அமெரிக்கா என்ற ஆழங்காண முடியாத பாதாளம், குருட்டாட்டமாடும் குழப்பத்தினுள் அவளை இழுத்துக்கொண்டுவிட்டது. அங்கேதான் நாமும் ஜீவிக்கிறோம். அன்னியராக நடமாடுகிறோம். அங்கேதான நாமும் குள்ள மனிசர்களாக, தனிமைப்பட்டு, கைவிடப் பட்டு, கடைசியாக ஒரே கவளமாக உள்ளிழுக்கப்பட்டு, பெயரற்ற அனந்த கோடிகளின் சமாதியான இருளுக்குள் மறக்கப்பட்டு மறைகிறோம்.

இதுதான் யுத்ததேவதையின் பேரழிவு என்ற மூன்றாவது முகமண்டலம். ஆசையின் உருவச்சிலை. யுத்தத்தின் முகம்.

அப்புறம்…

யுத்தத்தின் திடீர் தீர்மானத்தின் வேகம், அவசரம், கொடுமை, மிருகத்தனமான ஹாஸ்யம்….

வேர்த்து வடியும் மத்யானம்.

நியூபோர்ட் நியூஸ் நகரத்தில் வெடிமருந்து ஏற்றுமதி செய்யும் துறைமுகம். அங்கே ஒருபையன் தணிக்கைக் கணக்கனாக வேலை செய்கிறான். துறைமுகத்துக்குள் இருக்கும் பெரிய ஷெட்டில் உள்ள 110 டிகிரியில் மூச் சைத் திக்குமுக்காடவைக்கும் வெக்கை, மௌனமாடும் புழுக்கம். அழுக்கேறி காற்றில் தூசித்தூள் மிதக்கிறது. உயரமாக நிற்கும் சூட் யந்திரத்திலிருந்து தான்யவகை ஓயாத பிரவாகமாக கீழே விழவிழ சாக்குச் சாக்காகக் கட்டப்பட்டு அம்பாரம் அம்பாரமாக அடுக்கப்படுகிறது. இந்தத் தான்யத் தூசிதான் தகதகவென்ற தங்கத்தூள் மாதிரிக் காற்றைக் கொழுக்கவைக்கிறது.

துறையில் மற்றொரு பக்கத்தில் யுத்தத்தின் கருவி கள் கோபுரமெடுக்கிறது. பெரிய பெரிய கிரேட்டுகள் (மரப் பெட்டிகள்) நிறைய சகலவிதமான உணவு வகைகளும் கறி, பழம், பயறு, வெடிமருந்து-வாழ்வையும் மரணத்தை யும் போஷிக்கும் சகலவிதமான உணவு வகைகளும் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. தொலையிலே தீராப் பசியோடு வாங்கி வாங்கி உண்ணுகிறது அரசு செலுத் தும் யுத்த தேவதை.

கொதித்துக் குமையும் வெப்பக் காற்றில் சகல வித மான மணங்கள் கமழ்கின்றன. தான்யக் கமறல். நைந்த சாக்குச் செடி, புதிதாக அறுத்துத் தைத்த கிரேட்டுப் பலகை வாசனை, போழை போல் கதம்பக் கமறலாக பல் லாயிரங் கோடி அடை படா அசுத்தங்கள். நாற்றங்கள் இறங்குதுறையில் முட்டித் ததும்பி முளைத்தெழும் சோதி யாய் சர்வ பரிபூரணமாய் நினைவில் குடியேறித் தனியரசு செலுத்துகிறது. அதிலே தண்ணீரில் கிடந்து கிடந்து ஈரங்கசிய நாறும் மர. உத்தர வீச்சம் வேறு.

இப்போது வேலை எல்லாம் ஓய்ந்து விட்டது. னுடன் அந்தத் துறைமுகத்தின் சந்தடியும் ஓய்ந்து விட் டது. டிரக்கு வண்டிகளின் கடமுடா, கப்பல் மேல் தட்டில் தறையிட்டு நிற்கும் சாமான் தூக்கும் யந்திரச் சங்கிலியின் சணசணப்பு. சாமான் ஏற்றுமதியில் காணப்படும் சகல சந்தடிகளும் ஒடுங்கி விட்டன. அதற்குப் பதிலாக காலையிலிருந்து, துறைமுகத்துக்குள் காக்கியுடை அணிந்த தளவரிசைகள் சாரை சாரையாகக்கப்பலுக்குள் ஏறி அதன் வயிற்றுள் அஸ்தமனமாகி விடுகின்றனர். அந்தக் கப்பல் இன்னும் இன்னும் என்று காத்து நிற்கிறது.

நீக்ரோ மாட்டுக்காரர்கள் மூட்டைமேல் சரிந்து கண் ணயருகின்றனர். கணக்கர்கள் மூட்டைக் கிடுவலில் குமைந்து ஜன்னி வேகத்தில் சூதுருட்டுகிறார்கள்.

துருப்புகள் பட்டாளம் பட்டாளமாக வந்து குவிகின் றன. சாரை சாரையாகவரும் வரிசைகள் இடையில் சற்று நிற்கின்றன. முதுகுச் சுமைகளை நகர்த்திவிட்டு வலியை நகர்த்திக் கொள்ளுகின்றன. தொப்பியை அகற்றுகின்றன. நெற்றியில் வடியும் வேர்வையை புறங்கையால் துடைக்கின்றன. தனக்குள் வைது கொள்ளுகின்றன. மறுபடியும் சாரை ஊர்வதற்காகப் பொறுமையுடன் காத்து நிற்கின்றன.

கப்பலின் பக்கத்தில், ஏறுபாதை ஓரத்தில் சில ஆபீஸர்கள் மேஜையருகில் உட்கார்ந்து துருப்புகள் கப்பலுக்குள் ஏறும்போது ஒவ்வொருவருடைய தஸ்தாவேஜி யையும் பரிசீலனை செய்துகொண்டு கையெழுத்தைக் கிறுக்கி, உடமஸ்தன் ஆசைப்பட்டுத் தவிக்கும் யாத்திரைக்கு, புதிய தேசத்துக்கு, அவன் வேட்கை கொண்ட புகழுக்கு, சண்டையின் கணக்கிட முடியாத அபாயங் களுக்கு, மரணத்திற்கு, வியாதிக்கு, விவரம் தெரியாத பீதிக்கு, குமட்டலுக்கு அவனை ஏற்றிச்செல்லக் காத்திருக்கும் கப்பல் என்ற சாயுஜ்ய பதவி கிட்டும்படி செய்விக்கிறார்கள்.

இப்போது கருப்பர்கள் பட்டாளம் (நீக்ரோக்கள்) ஒன்று வருகிறது. டெக்யாஸ் நீக்ரோ ரெஜிமெண்டின் ஒரு பகுதி. பலாட்டியர்களான மனிதர்கள்; ஆனால் எதைக்கண்டும் ஆச்சரியப்பட்டு நிற்கும் களங்கமற்ற குழந்தைகள்; ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குச் சற்றும் ஒவ்வாதவர்கள். தளத்திலிருந்த ஒவ்வொருவனும் எதையோ மறந்தான், எதையோ இழந்தான், என்ற தொல்லை தான். ஒருவன் தலைக்குல்லாயை இழந்துவிட் டான். இன்னொருவனுக்கு இடுப்பு பெல்ட் போய்விட்டது. மற்றவன் சட்டையில் இரண்டு பொத்தான்கள் காணோம். இன்னொருவன் தன் மூட்டையிலிருந்த சாமான்களில் பெரும்பகுதியைத் தொலைத்துவிட்டான். எப்படிப் போச்சு என்பது அவனுக்குப் புரியவேயில்லை. தன்னிடம் இருந்த ஏதோ ஒன்று தொலைந்தது. ஏதோ தப்பிதம் செய்து விட்டோம் என்பது தவிர வேறு ஒரு பிரக்ஞையும் கிடையாது.

துறைமுகத்தில் காத்து நிற்கும்போது ஒவ்வொரு வனும் தன்னுடைய கவலையைச் சொல்லி அழுகிறான். வெப்பப் புழுக்கத்தில் கருப்புக் குரல் சளசளப்பு அதிக ரிக்கிறது.

இவர்களது அங்கலாய்ப்புக்களும்; தொல்லை களும் குவிக்கப்படுவதற்காகக் காலடியைக் காட்டி நிற்குங் வெள்ளைக்காரக் கமாண்டர், சீறிச் சீறி விழுகிறான். ஒவ் வொருவனும் தான் சிக்கிக் கொண்டிருக்கும் தப்பித வலையை வெட்டிவிட வேண்டும் என்று அவனைக் கெஞ் சிக் கூத்தாடிக் குழைகிறான். கமாண்டரோ வெறித்துக் கொண்ட காளைபோலத் துறை முகத்தில் உலாவுகிறான். அவனுடைய சர்வசக்தியில் பரிபூர்ணநம்பிக்கை கொண்டு பொறுமையுடன் காத்திருக்கிறது இந்த மனித சிசுக்கள்.

கமாண்டர் கழுத்துப் பட்டியைப் பிய்த்துக்கொள்ளுகிறான். அவர்களுடைய தொல்லைப் பரம்பரை அம்பாரம் அம்பாரமாகக் குவிந்து கோபுரமெடுக்க. கோபம் மீறிப் பேய்ச் சிரிப்புச் சிரிக்கிறான்.

அப்படியிருந்தும் அவனிடம் நம்பிக்கையிழக்காமல், குழந்தைகளின் நிச்சயத் தன்மையுடன் ‘எஜமான் சொன் னால் எல்லாம் சரியாகிவிடும்’ என்று தம் குறைபாட்டைப் பிரலாபிக்கிறார்கள். ஒருவன் காணாமற்போன பெல்டைக் கதைக்கிறான்; இன்னொருவனுடைய தகரப்போணி-மற்ற வனுடைய காலிப்பை, எல்லாரும் ஆசையோடும் பரிவோடும் ‘எசமானே, எசமானே’ என்று அழைக்கிறார்கள். இவர்களுடைய பேச்சுக்கள் அவனை வசவுக்குள் இறக்கி விடுகிறது.

‘அட வாலில்லாக் கொரங்குகளா. கட்டி மூளைக் களி மண்ணே. குருட்டுக் கழுதைக்கு அண்ணன்மார்களா. நாய்க்குப் பொறந்த கொரங்குமூஞ்சிகளா. குருவிமூளைக் கோட்டான்களா. மூளையிருக்கிற எடத்திலே வெடிமருந்து வச்சா, மூக்கைச் சிந்தினாக்கூட வெடிக்காதே. ஆந்தைக்கி அண்ணாத்தை மகனுகளா. பாருங்க ஒங்களே மொதல் லயன்லே நிறுத்தி அந்த ஜெர்மன் தேவடியா மகன்களை வைத்துச் சுட்டுத் தள்ள வைக்கிறேன்’ என்று வைது கொழிகிறான்.

‘எஜமானே’ என்கிறது ஒரு குரல்.

‘எத்தனை தரண்டா மாரடிக்கிறது. எஜமானே. எஜமானேன்னு சொல்லாதேடா சொல்லாதேன்னு எத்தனை தரம் சொல்லித் தொலைக்கிறது’ என்று கதறுகிறான்.

‘எனக்குத் தெரியும் எஜமான். ஆனாக்க என் பெல்டு அறுந்துபோச்சே. ஒங்ககிட்டே சின்னக் கயறு இருக்கா’ என்று கெஞ்சுகிறது அந்தக்குரல்.

‘கயறு இருக்கா.’ கமாண்டர் தொண்டை கம்முகிறது. ‘கயறு இருக்கா’ என்று பினத்திக்கொண்டே சொல்லி முடியாத கோபத்தால் தன் தொப்பியைக் காலடியில் போட்டுத் துவைத்து மிதிக்கிறான்.

இதைவிட இன்னும் பெரிய பேரிழவு ஒன்று அவனுக்காகக்காத்திருக்கிறது. கப்பல்பக்கத்தில் பரிசோதனை நடத்தும் ஆபீசர்கள், வரிசையில் சென்ற ஆறுபேரை வெளியேற்றித் தடுத்து விடுகிறார்கள்.

அவன் தொப்பியைத் தூக்கிக்கொண்டு ‘அட ஆண்டவனே, அங்கே யென்ன தொல்லை’ என்று கோஷிக்கிறான். ஆறு பேரும் சோகமே உருவெடுத்ததுபோல கண்ணீர் மாலை மாலையாக வடித்துக்கொண்டு நிற்கிறார்கள். ஆபீசர்களை ஆத்திரத்தோடு கேட்க விஷயம் புலனாகிறது. இந்த ஆறுபேரும் சிற்றின்ப வியாதிக்காக முகாமில் சிகிச்சை பெற்று வந்தார்கள். உடம்பு குணமாகுமுன் எப்படியோ ‘டபாய்’த்துக்கொண்டு உடம்புசரி என்ற அத் தாட்சியில்லாமல் இதுவரை வந்துவிட்டார்கள். இப்போது அவர்கள் திருட்டுத்தனம் வெளிப்பட்டது. போகப் படாது என்று தடுக்கப்பட்டு விட்டார்கள். கமாண்டர் சொன்னால் எல்லாம் சரியாகிவிடும் என்ற பரிதாபகர மான நம்பிக்கையுடன் குழைகிறார்கள். கூழைக் கும்பிடு போட்டுக் கெஞ்சிக் கூத்தாடுகிறார்கள்.

‘எசமானே, எங்களுக்கு ஒண்ணுமே இல்லே. ஒண் ணுமே இல்லே. இந்த நாசமாப் போன ஊருலே இருக் கவே மாட்டோம். ஒங்ககூட பிரான்ஸுக்கு போகத்தான் ஆசை. ஒங்ககூடக் கூட்டிக்கொண்டு போய்ட்டா என்ன வேணும்னாலும் செய்ரோம்’ என்று கருத்த பலாட்டியன் அழுதழுது கெஞ்சினான்.

‘நீங்க எக்கேடும் கெட்டு நாசமாப் போங்கடா. இப்ப வந்து கடசி நிமிஷத்திலே சொல்லித் தொலைச்சாஎன்னடா பண்றது’ என்று கொழிக்கிறான். அவர்களுக்கிடையில் பாய்ந்து வெறிகொண்ட காளை மாதிரி வைது ஒழிக்கிறான். அவர்கள் கெஞ்சலும் அழுகையும்தான் மிஞ்சிவிடுகிறது. காதைப் பொத்திக்கொண்டு ‘நாய்ப் பயமகனுவ எல்லாரையும் அவன் கொன்று தொலைக்கணும்’ என்று கத்திக் கொண்டு பரிசீலனை ஆபீசர்களிடம் வாதம் செய்து தன் கட்சிக்குத் திருப்புகிறான்.

பெத்லத்திலேயே பரிசோதித்துச் சரியாக இருந்தால் அனுமதிப்பது என்று தீர்மானமாகிறது. சிகப்பு மூஞ்சி ஆபீசர் ஒருவன் அவர்களை மறைவிடத்திற்கு அழைத்துச் செல்லுகிறான்.

சுமார் பத்து நிமிஷம் கழிகிறது.

நீக்ரோவர்கள் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடி வருகிறார்கள். அவர்களது கருப்பு முகம் பெரும் களிப்புக்களை கொப்புளிக்கிறது. குழந்தைகள் மாதிரி எஜமானைச் சுற்றி வட்டமிட்டுக் கொம்மாளமடிக்கிறார்கள்.

நெட்டை நெட்டென்னு கறுத்து நின்ற ராணுவ வைத்ய பரிசோதகனும் இருக்கிச் சிரித்துக்கொண்டு நேர் பார்வை போட்டுத் திரும்புகிறான். அந்தச் சின்னக் கமாண்டர் இன்னும் வையத்தான் செய்கிறான். ஆனால் அவன் வசவில ஒரு பரிவும் பாசமும் கலந்திருக்கிறது.

கடைசியாக மனிதச் சாரையும் ஊர்ந்து ஊர்ந்து கப்பலுக்குள் குடிபுகுந்துவிட்டது. துறைமுகத்தில் அது இழந்த சப்தமும் மௌன முந்தான் குடிகொண்டிருக்கின்றன. மெல்லிய, இதழ் பூத்த மாலை சகலரையும் தழுவித் தன்னுள் மறைக்கும் ஆழ்ந்த நெஞ்சுடைய இருளின் வரவைக் கட்டியங்கூறிக் குளிர்வித்தது.

– தெய்வம் கொடுத்த வரம், தமிழில்: புதுமைப்பித்தன், முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *