மீசைதாத்தாவுக்கு எண்பது வயதுக்கு மேலிருக்கும்.
ஊருக்கு வெளியே வாழைத்தோட்டத்திற்கு அருகே ஒரு குடிசை அவருடையது.
ஊருக்குள் அவர் வந்து பல வருடங்கள் ஆகிறது.
வாழைதோட்டத்திற்கு வேலைக்கு வருபவர்களின் குழந்தைகளுடன் மட்டும் பேசுவார்.
இரவானால் கயிற்று கட்டிலில் படுத்துக்கொண்டு வானம் பார்த்து நட்சத்திரங்களுடன் ஏதேதோ பேசுவார்.
“நிறைய நட்சத்திரம் இருக்கே இதுல நீ எந்த நட்சத்திரம் காமாட்சி” என்று இருபது வருடத்திற்கு முன்பு இறந்த காமாட்சிபாட்டியை நினைத்தபடியே கிடப்பார்.
” நான் டவுசர் போட்ட காலத்துல இருந்து பாக்கறேன்…வானத்துல அப்படி என்னத்ததான் பெரிசு பாக்குதோ” பீடியை பற்றவைத்துக்கொண்டே தன் நண்பனிடம் சொன்னான் பக்கத்து தோட்டத்து காவலாளி முருகேசு.
“இன்னைக்கு கிறுக்கு முத்திப்போச்சுடா, அந்திசாயறதுக்குள்ளேயே பெரிசு வானத்த பார்க்க ஆரம்பிச்சுட்டாரு…” சிரித்துக்கொண்டே மீசைதாத்தாவின் குடிசையை கடந்து சென்றனர் இருவரும்.
இவர்களது உரையாடலை கண்சிமிட்டியபடியே ரசித்துக்கொண்டிருந்தார் நட்சத்திரமாகிவிட்ட மீசைதாத்தா.
– Tuesday, September 18, 2007