வளாக நேர்முகத்தில் தேர்வு பெற்ற மாணவ மாணவியருக்கு நியமனங்களை வழங்கும் விழா அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.
மதிய உணவுக்குப் பின் கலந்துரையாடல். அதன்பின் யார் யாரோ மேடை ஏறிப் பேச கடைசியாக பேசினார் கல்லூரி
நிறுவனத் தலைவர்.
“உங்க எல்லோருக்கும் ஒண்ணு சொல்றேன். வேலைக்கு போங்க, வேணாங்கல, ஆனா உடனே கல்யாணம் பண்ணிக்குங்க.
அதுதான் நல்லது. குடும்பமா இருந்தாதான் பரிவு பாசம் அன்பு எல்லாம் இருக்கறதோட வேலைலயும் கவனம் செலுத்த
முடியும்.’
புரியாமல் பார்த்த மாணவர்கள் கைதட்டி வரவேற்றார்கள்.
இறங்கி வந்த நிறுவனரிடம் கேட்டார் சிறப்பு விருந்தினர்.
“என்ன சார், இப்படி பேசிப்புட்டிங்க. வேலை கிடைச்சதும் கல்யாணம் பண்ணிக்கணுமா, அதனால என்ன ஆகப் போவுது?’
“என்ன ஆகப்போவுதா? நகரத்துல நாலு கல்யாண மண்டபம் கட்டி வைச்சிருக்கேன். அஞ்சு விளையாட்டுப் பள்ளி, துவக்கப்
பள்ளி, உயர்நிலைப் பள்ளினு கட்டி வைச்சிருக்கேனே. இதுங்க கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டிகளை பெத்துப் போட்டா தானே எனக்கு வருமானம் என்ன நான் சொல்றது!’
சிறப்பு விருந்தினருக்கு மயக்கம் வந்தது.
– சூர்யகுமாரன் (ஏப்ரல் 2013)