இந்த காதலர்களும், கல்லூரியில் பட்டம் வாங்கினார்களோ இல்லையோ, காதலில் தேர்ந்துவிட்டனர். ஆனால் இரு குடும்பத்திற்கும் எந்த பொருத்தமும் இல்ல, நெறைய வேறுபாடுகள் கிராமம் நகரம், சாதி, ஜாதகம், பொருளாதாரமென ராக்கெட் விட்டாலும் எட்டாது, பொருந்தாது. ஆனால் வேறு யாருக்கும், எந்த காதலர்களுக்கும் இல்லாத ஒரு பொருத்தம் ஒன்று இவர்களுக்குள் இருந்தது. அதுதான் பெயர் பொருத்தம். இருவரின் பெயரும் சத்யாதான். இருப்பினும் இருவரும் தயங்கி தயங்கியே மூன்று வருடம் ஆகிவிட்டது. ஆனால் “இனி முடியாது சொல்லியே ஆகா வேண்டுமென” சூளுரைத்து இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்றனர்.
அட ஏங்க, இவ்ளோ பிள்டுஅப் கொடுத்தது வீணாய் போச்சு. ரெண்டு குடும்பமும் சலனமில்லாமல் ஒத்துகொண்டனர். காரணம் என்னன்னா ரெண்டு பேர் வீட்டிலும் இதுவரை அத்தனை காதல் தோல்விகளாம். அப்பா அம்மாவில் ஆரம்பித்து சித்தப்பா சித்தி அத்தை மாமா இவ்வளவு ஏன் வீட்ல வேல பாக்குற வேலகாரங்க வரைக்கும் யாருமே காதலில் சேரவில்லையாம். ரெண்டு குடும்பத்துக்குமே இது முதல் காதல் கல்யாணம்.
சந்தோஷத்தில் இருவருக்கும் தனிதனியாக தோன்றிய ஒரே ஞாபகம் ஓராண்டுக்கு முன்னால் இருவரும் காதல் திருமணம் பற்றி வீட்டில் பேச நினைக்கும்போது, ஒருமித்த கருத்தான “இல்லை.., இல்லை வேணாம் இது நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் சரிபட்டு வராது, அதனால் நாம பிரிஞ்சிடலாம்” என்பதே. இப்போது அதை நினைக்கும்போது சிரிப்புதான் வருகிறது. இருவருக்கும் இந்த சந்தேகம் இருந்ததலால் என்னோவோ அவ்வளவு கண்ணியமாக நடந்து கொண்டிருந்தனர் இருவரும், இருவரின் அதிகபட்ச காதல் வெளிப்பாடு நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருப்பது, அணுஅணுவாய் புரிந்துகொண்டே இருப்பதாய்தான் அதுவரை நடந்தது
இப்போதான் பெண் பார்க்கும் சம்பிரதாயத்திற்கு வேலையில்லையே, அதனால் குடும்பம் கூடும் சம்பிரதாயமாக நிச்சயதார்த்த விழா ஏற்பாடு செய்யபட்டது. இரு குடும்ப உறுப்பினர்களும் கூடினர் பொது கோவிலில், நிச்சயதார்த்த முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது , இரு குடும்பமும் அறிமுகபடுத்திகொண்டனர்.பெரும்பாலும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட கல்யாணத்தில் வேறுபடவில்லை ஆனால் இந்த அறிமுகத்தை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும், பெண்ணின் தந்தையும் ஆணின் தாயும் அறிமுகபடும்போது, அதிர்ச்சியும் அறிமுகமானது. ஆம் இருவருக்கும் ஏற்பட்ட மனநடுக்கம், கோவிலை கொடூரமாக காட்சி படுத்தியது.
சம்மந்திகள் இருவரும் பழைய காதலர்கள், ஆனால் அந்த சந்தோஷத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இருவரும் அந்த காலத்திலேயே தேர்ந்த காதல் நம்பிக்கையில் துளி சந்தேகமும் இல்லாமல் காதலர்களாக மட்டுமே இல்லாமல் சில கணங்கள் கணவன்-மனைவியாகவும் வாழ்ந்தே இருந்தது இன்று இடியாக இறங்கியது இருவருக்கும். இது கொச்சையாக இடம் பெறவில்லை இவர்கள் பிரிவும் தற்கொலையை தாண்டிய வாழ்வியலாகதான் இருந்தது. இந்த மூத்த காதல் ஜோடிகள் சதீஷ்-வித்யா இருவரும், தங்களுக்கு எந்த குழந்தை பிறந்தாலும் “சத்யா” என பெயர் சூட்ட முடிவெடுத்திருந்தனர். அது நடக்காதபோதும், நடத்திகொண்டனர் என்பதற்கு இவர்களின் வாரிசுகளே சாட்சி. இப்போது புரியும் இவர்களின் தீவிர காதல்.
அது முடிந்த கதை. இப்போ சத்யாக்களின் வாழ்க்கை பெரும் கேள்வி குறியானது. சதிசும் வித்யாவும் சேராமல் சேர்ந்து சத்யாக்களை பிரிக்காமல் பிரித்தனர். அந்த பெரிய கோவிலில் இந்த இரு குடும்ப உறுப்பினர்களும் சங்கமித்து களிப்புற்று கொண்டிருக்கையில் ஒரு ஓரத்தில் சதீஷும் வித்யாவும் மனம் கசந்தாலும் எவ்வித சந்தேகமும் இன்றி திருமணத்தை நிராகரிப்பதென முடிவெடுத்தனர்.
இன்றைய காதலர்களும், முந்தைய காதலர்களான நால்வரும் தனியே ஓரிடத்தில் அந்த மலைகோவில் வளாகத்தின் சேர்ந்து பேச முற்படும்போது, காதலர்கள் இருவரும் தங்கள் பெற்றோர், காதலை ஏற்க மாட்டார்கள் என பயந்ததை நினைத்து தற்போது பூரித்து போகின்றனர் ஏனென்றால் சம்மந்திகள் இவ்வளவு சகஜமாக திருமணத்திற்கு முன்னரே பழகுவதும், தங்களுடன் உரையாட சேர்ந்திருப்பதும் அவர்களுக்கு அடுத்த நொடி அவமானத்தை அடையாளமிடவில்லை. சதீஷ் பெரும் தயக்கத்தோடு எதோ உளற, மறைத்து வித்யா உளற, தயங்கி, தயங்கி பேசும்போதும், அதை “என்னடா நடக்குது இங்க” என்பதுபோல் ரசித்து கொண்டிருந்தனர் சத்ய காதலர்கள.
ஒரு வழியாக வித்யா “இந்த கல்யாணம் நடக்காது” என கூற அவ்விருவர் முகத்திலிருந்த புன்னகையும் புண்பட்டது. சதீஷ் “ஆமா, இது நடக்காது எங்களை மன்னிசிருங்க” என இருவரும் கை கூப்பினர். இருப்பினும் அதிர்ந்து பின் சகஜமாகி சத்யா கோரசாக “ஹே சும்மா விளையாடாதீங்க” என்றனர். தர்மசங்கடத்தில் வேகமாக வித்யா, “எங்கள மன்னிசுடுங்க, நான் எல்லாத்தையும் சொல்லிடறேன் ”ன்னு ஆரம்பிக்க, மறித்து சதீஷ், “இரு.., சாரி இருங்க, நானே சொல்றேன், ஆமா, நாங்க ரெண்டு பேரும் முன்னால் காதலர்கள்,.” என அனைத்தையும் , நால்வருக்கும் மயக்கம் வரும் அளவுக்கு சுத்தி சுத்தி சொல்லி முடித்தார். சொல்லி கொண்டிருக்கும்போதே தன்னிச்சையாக சத்யாக்களின் இடைவெளி நெருக்கம் கூடியது. தற்போது நால்வரும் நான்கு மூளையில்.
சதிசும் வித்யாவும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். காதலர்கள் மட்டும் தனிமை எனும் நெருக்கத்தில் தவித்துக்கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் கண் மூட வைத்த கதைகள். மணிகணக்கில் விடாமல் முகத்தில் மட்டுமே முகாமிட்டவர்களுக்கு ஒருவர் முகம் ஒருவர் பாக்க கண் கூசியது. குற்றமறியா குற்றவுணர்வு குவிந்தது. திரும்பி நின்ற இருவரும் இருவேறு பயணங்களுக்கு தயாரானாலும், பயணங்கள் இரண்டும் ஒரே முடிவை தந்தன.
“இன்றைய சந்ததிகளை குறைகூறும் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம், இவர்கள் பிணம்” -தேவா