கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2022
பார்வையிட்டோர்: 1,703 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஞானசேகரன். சுருக்கமாக ஞானம். இப்போது ஐம்பது வயது. நாற்பது வயதில் ஓருயிர் ஓருடலாக வந்து சேர்ந்தது சர்க்கரை நோய். கடந்த பத்து வருடங்களாக புகிட்மேரா மருத்துவ மனையில் நிரந்தர சர்க்கரை உறுப்பினர். மூன்று மாதங்களுக் கொரு முறை அவர் மருத்துவமனை சென்றே ஆகவேண்டும். மாத்திரைகளை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். அன்றும் அவர் அப்படித்தான் வந்திருந்தார். காத்திருந்தார்.

அவர் முறை வந்தது. உறுப்பினர் அட்டையை நீட்டினார்.

உங்களின் வரிசை எண் 2108. அரை மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். முடியுமா?’

‘முடியும்.’

‘அப்படியானால் ஒன்பதாம் எண் அறையில் காத்திருங்கள்.’

காத்திருந்தார் ஞானம்.

எவ்வளவு துல்லியமான கணக்கு. சரியாக அரை மணி நேரத்தில் 2108 என்ற எண், அறிவிப்புப் பலகையில் மின்னியது. கதவைத் தட்டிவிட்டு புகுந்தார் ஞானம். அவருடைய பத்தாண்டு வரலாற்றைத் தாங்கிய கோப்பு ஏற்கனவே மருத்துவர் கைகளில் புரண்டு கொண்டிருந்தது.

‘ஞானம். சர்க்கரை நோயாளி. பத்து வருடங்களாக.’

தனக்குள்ளேயே பேசிக்கொண்டார் மருத்துவர்.

‘சரி. மாத்திரை முடிந்துவிட்டது. மீண்டும் மூன்று மாதத்திற்கு மாத்திரை வேண்டும். சரிதானே? வேறு ஏதாவது உபாதை?’

‘இல்லை.’

‘தூக்கம்?’

‘அதிகமாகவே தூங்குகிறேன்.’

‘பசி?’

‘சரியான அளவில்.’

‘மலச்சிக்கல்?’

‘இதுவரை இல்லை.’

‘நன்று. சென்ற முறை நீங்கள் இரத்தப் பரிசோதனை செய்யவில்லை. இரத்த அழுத்தம், இரத்தச் சோதனை முடித்து வாருங்கள். காத்திருக்க வேண்டாம். தட்டுங்கள். திறக்கப்படும்.’

சோதனைகள் முடிந்தன. இரத்த அழுத்தம் சரியாக இருக்க வேண்டிய அளவில் இருந்தது. இரத்தத்தில் சர்க்கரை 7.8 என்றது. கொஞ்சம் அதிகம்தான். ஆனால் கட்டுப்பாட்டிற்குள். மீண்டும் மருத்துவரைப் பார்க்கச் சென்றார் ஞானம். மனைவியிடம் கூட மறைத்து வைத்த இரகசியத்தை இப்போது சொல்லியே ஆகவேண்டும். முடிவு செய்து கொண்டார் ஞானம். இதோ தைரியமாக சொல்லத் தொடங்கிவிட்டார்.

‘இடது காலில் அந்த இரண்டாம் விரலில் உணர்ச்சியே இல்லை அய்யா. நிறமும் மங்கிக் கொண்டு வருகிறது.’

‘சரி. கொஞ்சம் படுங்கள். சோதிப்போம்.’

விரல்களால் தொட்டுப் பார்த்தார். பக்கவாட்டில் அசைத்துப் பார்த்தார். மெல்லிய கம்பியில் கோடு போட்டுப் பார்த்தார்.

‘இப்போது ஏதாவது உணர்கிறீர்களா?’

‘இன்னும் நீங்கள் தொடவே இல்லையே டாக்டர்.’

‘சரி. எழுந்திருங்கள்.’

‘அந்த விரல் செத்துவிட்டது. அங்கே செல்களின் உற்பத்தி இல்லை. இரத்த ஓட்டம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. நிறம் கருத்துக் கொண்டு வருகிறது. தினமும் நான் சொல்கிறபடி நீவுங்கள். ஒரு மாத்திரை சேர்த்துத் தருகிறேன். பதினைந்து நாட்கள் சாப்பிடுங்கள். முடிந்த உடனேயே வாருங்கள். ஒன்றும் முன்னேற்றமில்லை யென்றால் விரலை வெட்ட வேண்டும். இல்லாவிட்டால் மொத்தக் காலும் அழுகிப் போகும்.’

ஞானம் ஜடமானார். ஒரு பல்லைக் கூட இன்றுவரை இழக்கவில்லை. முடிகூட உதிர்ந்ததாகத் தெரியவில்லை. அதே அடர்த்தி. எப்படி ஒரு விரலை இழப்பது? மாத்திரைச் சீட்டை வாங்கிக் கொண்டு மருந்து வாங்கும் பிரிவுக்கு நடந்த போது இரண்டு தடவை தடுமாறினார். சமாளித்துக் கொண்டார்.

மாத்திரை வாங்கும் பகுதியிலும் ஏகப்பட்ட கூட்டம். மருந்துச் சீட்டை தட்டில் கிடத்திவிட்டு காலி நாற்காலியைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் ஒரு சீனர் மருந்து வாங்க எழுந்தார். அவசர அவசரமாக அந்த நாற்காலியை ஆக்ரமித்துக் கொண்டார். அது ஒரு வரிசையில் கடைசி நாற்காலி. அதன் பக்கவாட்டில் சக்கர நாற்காலியில் சிரைக்காத முகத்துடன் ஒருவர். மனைவியும் பக்கத்தில் நின்றபடி. அவர் மனைவியிடம் சொன்னார்.

‘உன்னை உட்காரச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இவர் வந்து உட்கார்ந்து கொண்டார். பாவம் இவருக்கென்ன வேதனையோ?’

புருவம் நெளித்துச் சிரித்தார்.

‘மன்னித்து விடுங்களய்யா. உங்களையோ உங்கள் வார்த்தைகளையோ சுத்தமாக நான் கவனிக்கவே இல்லை. தயவுசெய்து அமருங்களம்மா. மன்னியுங்கள்.’

ஞானம் எழுந்து கொண்டார். அந்த அம்மா அமர்ந்து கொண்டார். அட, இந்த முகம் மிகவும் நெருக்கமான முகமாய்த் தெரிகிறதே. யாராயிருக்கும்? தாடிமீசையைக் கற்பனையில் சிரைத்துவிட்டு அந்த உதடுகளையும் மூக்கையும் தனியாகப் பிரித்துப் பார்த்தார். ஆ. ஆ. வந்துவிட்டது. கேட்டுவிடவேண்டியதுதான்.

‘அய்யா நீங்கள் தமிழாசிரியம் முகுந்தன்தானே?’

‘ஆம்.’

‘உங்களிடம் முப்பது ஆண்டுகளுக்கு முன் மெக்பர்சன் உயர்நிலையில் தமிழ் படித்தேனய்யா. என் பெயர் ஞானசேகரன்.’

‘சர்க்கரை வியாதியால் ஞாபக் சக்தியை இழப்பதாகச் சொல்கிறார்கள். நான் ஞாபகத்தை இழக்கவில்லை. கால்களைத்தான் இழந்திருக்கிறேன். உன்னை நன்றாக ஞாபகமிருக்கிறது.’

சொல்லிவிட்டு அவர் சிரித்ததில் அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தனர். ஞானம் வியந்தார். ஒரு காலை இழந்தவர் எப்படி இவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்.

‘அய்யா. நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள். கடவுள் எதைச் செய்தாலும் கருணையின் அடிப்படையில் மட்டுமே செய்வார் என்று’.

‘ஆம். இப்போதும் சொல்கிறேன். கடவுள் எதைச் செய்தாலும் கருணையின் அடிப்படையில் மட்டுமே செய்வார்.’

அவர் கடித்துக் கொண்டு சொன்ன வார்த்தையுடன் கண்ணீரும் வந்தது.

‘அய்யா, கடவுளின் கருணையைப் பற்றியே பேசும் உங்களின் காலை கடவுள் எடுக்கலாமா?’

ஹ.ஹ்..ஹ.ஹ்.ஹா. இசையாகச் சிரித்தார் முகுந்தன். தொடர்ந்து சொன்னார்.

‘ஞானம். உட்காருவதற்கு ஒரு நாற்காலி கிடைக்காதா என்று கண்களை மேயவிட்டாய். பார்த்தாயா. கடவுள் எனக்கு நிரந்தர சிம்மாசனம் தந்திருக்கிறார். இதில் உட்கார எனக்கு மட்டுமே தகுதியும் உரிமையும் உண்டு என்னைப் பார்க்கும் எல்லாருமே என்மீது அன்பைப் பொழிகிறார்கள். ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று துடிக்கிறார்கள். இது கருணையில்லையா? என்னை வெறுப்பவர்கள் என்று இன்று யாருமே இல்லை ஞானம். நான் ஓடிச் சம்பாதிக்கவில்லை. தமிழைப் பேசித்தான் சம்பாதிக்கிறேன். காலை கடவுள் என் தொண்டையை ஏன் எடுக்கவில்லை? இது கருணையில்லையா? அன்று நான் தேடிச் சென்ற மாணவர்கள் இன்று என் வீடு வந்து படிக்கிறார்கள். இன்றும் அதிகமாகச் சம்பாதிக்கிறேன். இது கருணையில்லையா? காலோடு வாழ்ந்தபோது காலிழந்த வாழ்க்கை கற்பனையில் இல்லை. இன்று காலிழந்தபின் காலுள்ள வாழ்க்கையும் கற்பனையில் இல்லை. இது கருணையில்லையா? கவலைப் படாதே ஞானம். மீண்டும் சொல்கிறேன். கடவுள் எதைச் செய்தாலும் அதில் கருணை மட்டுமே இருக்கும். மீண்டும் ஒரு புல்லாங்குழலாகச் சிரித்தார்

விரலை இழக்கவே பயந்த ஞானம் காலை இழக்கவும் துணிந்துவிட்டார். பதினைந்து நாட்கள் புதிய மாத்திரையையும் தொடர்ந்தார். மருத்துவர் சொன்னபடி தினமும் இரண்டு மூன்று முறை நீவியும் விட்டார். மருத்துவரைப் பார்க்க மீண்டும் வந்தார் ஞானம். கோப்புகள்

புரட்டப்பட்டன. கால் விரல் சோதிக்கப் பட்டது. மருத்துவர் சொன்னார்.

‘புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இரத்த ஓட்டம் கூடியிருக்கிறது. விரலை எடுக்கவேண்டியதில்லை. என்றாலும் நீவுவதை நிறுத்த வேண்டாம். மாத்திரையையும் நிறுத்த வேண்டாம்.’

புதிய மாத்திரைச் சீட்டுடன் விடை பெற்றுக் கொண்டார் ஞானம். முகுந்தன் எதிரே நின்று சிரிப்பதுபோல் உணர்ந்தார். அவர்போலவே கடித்துக் கொண்டு பேசிப்பார்த்தார் ஞானம். ‘கடவுள் எதைச் செய்தாலும் அதில் கருணை மட்டுமே இருக்கும்.’

கன்னம் கடந்து தாவாய் நுனியில் சொட்டிக்கொண்டே இருந்தது கண்ணீர்.

– கட்டை விரல் ஆகட்டும் கல்வி, முதற் பதிப்பு: 2012, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *