சமுதாய விரோதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,543 
 

வருஷந்தோறும் கோடை விடுமுறைக்கு முன்னால் பரீட்சை என்னும் பாதகத்தை நடத்தி முடித்துவிடும் அதிகாரிகளின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியந்து கொண்டே, புஷ்பராஜ் தன்னுடைய சொந்த கிராமமான தாழம்பேடுக்குப் புறப்பட்டான். ஏறக்குறைய இரண்டு மாதகாலம் அங்கே சகலவிதமான சலனமுமின்றி அமைதியுடன் காலத்தைக் கழித்துவிட்டு வரலாம் என்று நினைத்தபோது அவனுக்கு எவ்வளவோ ஆறுதலாயிருந்தது. முன்னாலாவது அந்தக் கிராமத்தில் சிலர் கள்ளையும் சாராயத்தையும் குடித்துவிட்டு வந்து அங்கங்கே சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். இப்போது அதுவும் இருக்காது; ‘காந்தி ராசா’வின் புண்ணியத்தால் மதுவிலக்குச்சட்டந்தான் அமுலுக்கு வந்துவிட்டதே!

இவ்வாறு எண்ணி மகிழ்ந்த வண்ணம் புஷ்பராஜ் தன்னுடைய சொந்த கிராமத்தை யடைந்தபோது இருள் சூழும் நேரம். கிராமக் குடிசைகளெல்லாம் அநேகமாகப் புகைய ஆரம்பித்துவிட்டன. குடிசைகள் புகைய ஆரம்பித்து விட்டன என்றால் அவற்றிலுள்ள அடுப்புகள் புகைய ஆரம்பித்து விட்டன என்று அர்த்தம். அடுப்புகள் புகைந்தால் தானே அந்தக் குடிசைகளில் அடைப்பட்டுக் கிடக்கும் அப்பாவி ஜீவன்களுக்கு அடிவயிறாவது நிறையும்?

புகைந்து கொண்டிருந்த குடிசைகளுக்கு இடையிலே புகையாமலிருந்த சில குடிசைகளும் இருக்கத்தான் இருந்தது. அவற்றைக் கண்டதும் புஷ்பராஜுக்கு என்னவோ மாதிரி இருந்தது. “கள்ளரக்கன் ஒழிந்த பிறகுமா இந்தத் தரித்திரம்?” என்று எண்ணி அவன் ஒருகணம் ஏங்கினான். மறுகணம் “மதுவிலக்கால் மட்டும் மக்களின் வறுமையைப் போக்கிவிட முடியாதல்லவா?” என்று எண்ணியவனாய் மேலே நடந்தான்.

வழியில் ஒரு தேநீர்க் கடை குறுக்கிட்டது. அந்தத் தேநீர் கடையைக் கண்டதும் அதற்கு முன்னால் அங்கே இருந்த கள்ளுக்கடை புஷ்பராஜின் மனக்கண் முன்னால் காட்சியளித்தது. ஆடலும் பாடலும் அடிதடிச் சண்டையுமாக யிருக்கும் இந்த இடத்திலே, இப்போது அமைதி குடி கொண்டிருப்பதைக் கண்டதும் தன்னை மறந்த நிலையில் அவன் தேநீர்க் கடைக்கு முன்னால் சிறிது நேரம் அப்படியே நின்று விட்டான். கள்ளுக்கடை இருந்த நாட்களில் அங்கே கூடும் மனிதர்களைப் புஷ்பராஜ் எத்தனையோ முறை பார்த்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவர்கள் மனிதராகவே அவனுக்குத் தோன்றமாட்டார்கள். அதே இடத்தில் தேநீர்க் கடை இருக்கும் இந்த நாளிலோ, அங்கே கூடியிருந்தவர்களெல்லாம் அவனுக்கு மனிதர்களாகவே தோன்றினார்கள். இந்த அதிசயத்துக்கு மத்தியில் இன்னொரு அதிசயத்தையும் புஷ்பராஜ் காண நேர்ந்தது. அதாவது தேநீரையும் அந்த ‘மாஜிகுடியர்கள்’ கள்ளைப்போல் பாவித்துக் கண்ணை மூடிய வண்ணம் குடித்துக் கொண்டிருந்தனர். அந்தக்காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையா யிருந்ததோடு மட்டுமல்ல, பரிதாபமாகவும் இருந்தது!

அவர்களில் ஒருவன் இன்னொருவனை நோக்கி, “என்ன, இசக்கிமுத்து அண்ணே நம்ம பேச்சிமுத்துவைக் காணவே காணோமே” என்று விசாரித்தான். “அவனுக்கென்னப்பா, மவராசன்!” என்றான் இசக்கிமுத்து.

“நல்லாச் சொன்னே, போ! மவராசனாவது, மண்ணாங்கட்டியாவது காலையிலேருந்து சாயந்திரம் வரை ரெண்டு ரூவாக் காசுக்கு அவன் குப்புக் கொல்லன் பட்டறையிலே என்னோடு சேர்ந்து இல்லே சம்மட்டி அடிச்சிட்டு இருந்தான்?”

இந்தத் தகவலைக் கேட்டதும் “நிசமாவா, நல்ல முத்து?” என்று வியப்புடன் கேட்டான் இசக்கிமுத்து.

“ஆமாங்கிறேன்!” என்றான் நல்லமுத்து.

“அப்படின்னா நான் நெனைச்சது சரிதான்; அவன் துத்தா போட்டுக்கிட்டு வரத்தான் போயிருப்பான்?” என்றான் இசக்கிமுத்து.

இந்த ‘துத்தா’ என்ற வார்த்தையைக் கேட்டதும் புஷ்பராஜ் திடுக்கிட்டான். அந்தப் பக்கத்துக் குடியர்கள் ‘துத்தா’ என்று சொன்னால் ‘கள்’ என்று அர்த்தம். மதுவிலக்கைப் பற்றி என்னவெல்லாமோ எண்ணிக் கொண்டு வந்த புஷ்பராஜுக்கு இந்த வார்த்தையைக் கேட்டதும் எப்படி இருக்கும்? – அவன் முகத்தில் அசடு வழிய இசக்கிமுத்தையும் நல்லமுத்தையும் இமை கொட்டாமல் பார்த்த வண்ணம் மேலே என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தான்.

“என்ன சொன்னே, துத்தாவா? அது எங்கேப்பா இப்போ கெடைக்குது?” என்று கேட்டான் நல்லமுத்து. “உனக்குத் தெரியாதா? – அதுதானே பார்த்தேன்; தெரிஞ்சிருந்தாத்தான் நீயும் அவனோடு துத்தா போட்டுகிட்டு வரப் போயிருப்பயே?” என்றான் இசக்கிமுத்து.

“அவனைப் போல் என்னையும் மானங்கெட்ட பயலுன்னா நினைச்சுட்டே? நெயாயமாப் பார்க்கப் போனா அந்தக் காந்திராசா பேச்சைக்கேட்டு நாமே கள் குடிப்பதை நிறுத்தி இருக்கணும். அதுதான் இல்லேன்னா, காலையும் கையையும் பிடிச்சுக்கிட்டுக் குழந்தைக்கு மருந்து ஊத்தறாங்களே, அந்த மாதிரிக் காங்கிரசு ராசாங்கம் கள்ளுக்கடையை எடுத்த அப்புறமாவது கள் குடிப்பதை நிறுத்தியிருக்கணும். ரெண்டுமில்லாம திருட்டுத்தனமாக குடிக்கிறதுன்னா அது அக்குறும்பு இல்லே?”

“அக்குறும்புதான்; ஆனா அதைக் கேட்க யாரு இருக்காங்க?”

“ஏன் இல்லே? போலீசுஜவானுங்க இல்லையா? அவங்ககிட்ட மாட்டிக்கிட்டா இல்லே சங்கதி தெரியும்?”

“ஊம்….அவனுங்க இல்லே அந்த அக்குறும்புக்காரனுங்கிட்ட மாட்டிகிட்டு முழிச்சானுங்க!”

“என்ன….!”

‘ஆமா அண்ணங்கிறேன்! நேத்து மேலத் தெருவிலே ரெண்டு பயலுங்க குடிச்சுப்பிட்டு வந்து சண்டை போட்டுகிட்டு இருந்தானுங்க. அந்தப் பக்கமாப் போன ரெண்டு ஜவானுங்க அவனுங்களைப் பிடிச்சிக்கிட்டுப் போக ஒட்டமா ஓடி வந்தாங்க – அவ்வளவுதான்; அண்ணே! அந்தத் தெருவாரெல்லாம் ஒண்ணாக் கூடிக்கிட்டு அவனுங்களை அடி அடி ன்னு அடிச்சுப் போட்டுட்டாங்க….!”

“அப்பாலே… ?”

“இன்ச்சுபெட்டரு, அவங்க இவங்க எல்லாம் வந்து அந்தத் தெருவிலே யிருந்த முரட்டுப் பயல்களையெல்லாம் பிடிச்சுக்கிட்டுப் போனாங்க!”

“என்ன புத்தி கெட்ட பயலுங்க பார் அண்ணே. இவனுங்க பெண்டாட்டி பிள்ளை பிழைக்கத்தானே கள் குடிக்க வேணாம்னு சொல்றாங்க அதைக் கேட்டு ஒழுங்கா இல்லாம திருட்டுத்தனமா சாராயம் காய்ச்சறதும், கள் குடிக்கிறதும் என்ன வேலைங்கிறேன்? இப்படிப்பட்டவனுங்களை நாமே பிடிச்சுப் போலீசு ஜவானுங்ககிட்ட ஒப்படைச்சாக்கூடக் குற்றமில்லை தான்! நீ என்ன சொல்றே, அண்ணே?”

“நல்ல ஆளப்பா நீ நம்ம பெண்டாட்டிமாருங்க கழுத்திலே தாலி இருக்கக் கூடாதுங்கிறது உன் எண்ணமா?”

“அட, நீ கூட இப்படிப் பயந்து சாவறியே ஆறிலுஞ் சாவு, நூறிலுஞ் சாவு! – அப்படியா நம்ம தலையை அவனுங்க நறுக்குன்னு கிள்ளி எறிஞ்சிடுவானுங்க?”

“ஒண்ணுந் தெரியாம நீ பாட்டுக்குச் சும்மாப் பேசாதே. யாரு காதிலாச்சும் விழுந்து வைக்கப் போவுது”

“நான் எல்லாம் தெரிஞ்சிதான் பேசறேன் எனக்கு இன்னும் என்ன தெரியணுங்கிறே நீ?”

“நிசமாச் சொல்றேன் அண்ணே இந்தக் கிராமத்திலே திருட்டுச் சாராயம் காய்ச்சறதுக்கு யார் பணம் கொடுக்கிறாங்க என்கிற விசயம் உனக்குத் தெரிஞ்சா நீ இப்படியெல்லாம் பேசவே மாட்டே – ஆமாம்!” என்று முன்னும் பின்னும் பீதியுடன் பார்த்துக் கொண்டே சொன்னான் இசக்கிமுத்து.

“அடடே! அந்த ஆளை உனக்கு மட்டுந்தான் தெரியும்னு நீ நெனைச்சுட்டிருக்கியா – போ அண்ணே, போ அந்தக் குடிகெடுக்கும் மனுசனை எனக்குந்தான் தெரியும்” என்றான் நல்லமுத்து அலட்சியமாக.

அதற்குமேல் அவனுடைய வாயைக் கிண்டிவிட விரும்பாத இசக்கிமுத்து “ஐயையோ நம்ம தலைக்கு ஆபத்து இல்லே வந்துடும் போலிருக்குது அந்த மனுசன் பேரை நீ வெளியே கிளியே சொல்லிப்பிடாதேப்பா!” என்று கத்திக் கொண்டே அவனுடைய வாயை இறுகப் பொத்தினான்.

புஷ்பராஜ் உள்ளம் உடைந்தவனாய்த் தன்னுடைய வீட்டை நோக்கி மெல்ல நடந்தான். அவனுடைய உடைந்த உள்ளத்திலிருந்து ஏனோ ஒரு கேள்வி எழுந்து, எங்கெல்லாமோ சுற்றியலைந்து, பதிலைத் தேடித் தேடித் திரிந்தது. அந்தக் கேள்வி வேறெதுவுமில்லை; இதுதான்:-

“சட்டத்தை மீறிச் சாராயம் காய்ச்சும் அந்தக் குடிகெடுக்கும் மனுசன் யாராயிருக்கும்?”
* * *

வி.க. -15 இசக்கிமுத்தும் நல்லமுத்தும் தேநீர் குடித்து முடிந்ததும், கள் குடித்தவர்கள் போல மீசையை ஒதுக்கி விட்டுக் கொண்டே தங்களுடைய குடிசைகளை நோக்கி விறைப்புடன் நடந்தனர். அந்தச் சமயத்தில் “மருக்கொழுந்து, மருக்கொழுந்து” என்னும் வையம் பெறும் வழங்கோசை எங்கிருந்தோ வந்து, அவர்களுடைய காதில் ‘கணீ’ரென்று விழுந்தது. அந்த ஓசையைத் தொடர்ந்து மருக்கொழுந்தின் வாசமும் வந்தது. அடுத்த விநாடி அவர்களுக்கு எதிரே மருக்கொழுந்து கூடைக்காரி ஒருத்தி ‘இட்டி அடி நோவ ஆனால் எடுத்த அடிகொப்பளிக்காமல் வட்டில் சுமந்து மருங்கசைய’ வந்து கொண்டிருந்தாள். அவளை வழிமறித்து நிறுத்தி “என்ன புள்ளே இந்த மருக்கொழுந்து வாசம் உன் மேலே யிருந்து வீசுதா? இல்லே மருக்கொழுந்திலே யிருந்து வீசுதா?” என்று கேட்டான் இசக்கிமுத்து.

“எப்படி வேணுமினாலும் வச்சுக்கோ!” என்று இடையிலிருந்த கூடையை எடுத்து அவனுக்கு எதிரே நீட்டினாள் அவள்.

உடனே இசக்கிமுத்து அரையனாவுக்கு மருக்கொழுந்து வாங்கித் தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு நல்லமுத்துவைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.

“என்ன அண்ணே, உனக்கும் சோக்குப் பிறந்துடிச்சுப் போல் இருக்குது!” என்றான் நல்லமுத்து.

“நல்லாயிருக்குது அண்ணே, நீ சொல்றது! நான் மட்டும் என்ன உனக்கு மனுசனாகத் தோணலையா?”

“என்னியிலேருந்து நீ மனுசனானே, கள்ளுக்கடையை எடுத்த நாளிலே யிருந்துதானே”

“நீ மட்டும் அதுக்கு முன்னாலேயே மனுசனா யிருந்தியா? போ அண்ணே, போ வெளியே சொன்னாவெக்கக் கேடு; அழுதாத்துக்கக் கேடு. நம்ம அழகை நாமே எடுத்துச் சொல்லிக்கனுமாக்கும்?”

“சரி அண்ணே, நானும் மருக்கொழுந்து வாங்கிக்கிறேன்; எனக்கும் சோக்குப் பிறக்கட்டும்!” என்று சொல்லிக் கொண்டே நல்லமுத்தும் அரையனாவுக்கு மருக்கொழுந்து வாங்கித்தன்மடியில் வைத்துக் கொண்டான்.

இருவரும் மேலே நடந்தனர். சிறிதுதுரம் சென்றதும் எங்கிருந்தோசாராய நெடி ‘குப்’பென்று வந்து அவர்களுடைய மூக்கைத் துளைத்தது. திடுக்கிட்டுத் திருதிருவென்று விழித்துக் கொண்டே இருந்தவாறு சுற்றும் முற்றும் பார்த்தனர். என்ன கண்ணாறாக் காட்சி இது கண்ணுக்கெட்டிய தூரத்தில் பேச்சிமுத்து பேச்சு மூச்சற்றுக் கீழே விழுந்து கிடந்தான்.

இசக்கிமுத்து அவனை நெருங்கி இப்படியும் அப்படியுமாய் இரண்டு உருட்டு உருட்டிப் பார்த்தான்; ஆசாமி அசைந்து கொடுப்பதாயில்லை. நல்லமுத்து ஒரு பெரும் பிராயத்தனம் செய்து அவனைத் தூக்கி உட்கார வைத்தான். அவ்வளவுதான்; ‘கப கப’வென்று பேச்சிமுத்து வாயிலெடுத்துவிட்டான்

இதனால் அவனுடைய மயக்கம் கொஞ்சம் தெளிந்தது. கண்களை அகல விரித்து அவன் தனக்கு எதிரேயிருந்தவர்களைப் பார்த்தான்; இருவர் நால்வராகத் தோன்றினர்.

அடுத்த நிமிஷம், ‘ஐயையோ ஆப்பிட்டுக்கிட்டேன்! ஐயையோ ஆப்பிட்டுக்கிட்டேன்’ என்று அலறிக்கொண்டே அவன் எழுந்து ஓட முயன்றான்.

முடியவில்லை!

“என்னதம்பி இந்த லோகத்திலேதான் நீ இருக்கிறாயா? இல்லை வேறே எந்த லோகத்திலாச்சும் இருக்கிறாயா?” என்று அவனுடைய தலையைப் பிடித்து ஆட்டிய வண்ணம் கேட்டான் நல்லமுத்து.

அவனுடைய கேள்விக்குப் பேச்சிமுத்து ஒன்றும் பதில் சொல்லவில்லை. அதற்கு பதிலாக அவன், “கபர்தார் கபர்தார்” என்று சம்பந்தமில்லாமல் கத்தினான்.

‘கபர்தார்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் இசக்கிமுத்தும் நல்லமுத்தும் ஒருவரை யொருவர் ஜாடையாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

“என்ன அண்ணே, விசயம் புரிஞ்சுதா?” என்று கேட்டான் இசக்கிமுத்து.

“ரொம்ப நல்லாப் புரிஞ்சுது!” என்று தலையைப் பலமாக ஆட்டினான் நல்லமுத்து.

அதற்குள் ஒரளவு சுய உணர்ச்சி பெற்று பேச்சிமுத்து தட்டுத் தடுமாறி எழுந்து நின்று இசக்கிமுத்துவையும் நல்லமுத்துவையும் மாறி மாறிப் பார்த்தான்.
“என்ன, தம்பி நல்லாயிருக்குதா, நியாயம்?” என்று அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கிய வண்ணம் கேட்டான் நல்லமுத்து.

பேச்சிமுத்து தலையைச் சொறிந்துகொண்டே, “குரலைப் பார்த்தா நல்லமுத்து அண்ணனாட்டம் இருக்குது; ஆனா பார்க்கிற பார்வையைப் பார்த்தா போலீசு ஜவானாட்டம் இருக்குதே” என்று முணுமுணுத்தன.

“பயப்படாதே, நல்லமுத்து அண்ணன்தான்” என்றான் நல்லமுத்து.

“நல்லமுத்து அண்ணே நல்ல சமயத்திலே வந்து சேர்ந்தேப்பா – இதோ உன் பக்கத்திலே நிற்கிறாரே, இவர் யாரு?”

“இசக்கிமுத்து அண்ணன்”

“அப்படியா சங்கதி? நீங்க போலீசு ஜவானுங்களாக்கும்னு நெனைச்சி நான் பயந்தே போயிட்டேன்” என்றான் பேச்சிமுத்து.

“அப்படிப் பயந்துகிட்டு இந்த ஜோலிக்கு ஏன் போகணும், தம்பி?”

“என்னமோ, போனேன் மனசு கேக்குதா?” “ஆமாம்; ஆறு மாசம் உள்ளே தள்ளி வச்சாத்தானே மனசு கேக்கும்!”

“அப்படின்னா நீ என்னைப் போலீசுஜவானுங்கக்கிட்ட காட்டிக் கொடுத்துடப் போறியா?”

“பின்னே, அப்போத்தானே உனக்குப் புத்திவரும்?”

“அண்ணே, அண்ணே உன் காலிலே விழுந்து கேட்டுக்கிறேன். அண்ணா! – நீ என்னை வேணும்னா காட்டிக் கொடுத்துடு; அந்த ‘கபார்தார்’ ஐயாவை மட்டும் காட்டிக் கொடுத்திடாதே”

“கொடுத்தா என்ன, தம்பி?”

“ஐயையோ என்தலை போயிடுமே அவரு கொடுக்கும்போதே சொல்லித் தானே கொடுக்கிறாரு அடே, உன் காசு எனக்கு பெரிசில்லே! என்னமோ கஷ்டப்பட்டுக் களைச்சுப் போறியேன்னு கள்ளத்தனமா இந்தச் சாராயத்தை காய்ச்சி கொடுக்கிறேன். குடிச்சிட்டுப் போய்ப் பேசாமக் குடிசையிலே படுத்துக்கிடக்கணும். வழியிலே தப்புத் தண்டாவுக்குப் போய்ப் போலீசு ஜவானுங்கக்கிட்ட மாட்டிக்கிட்டியோ, என் பேரை வெளியிலே சொல்லக்கூடாது. அடியோ, உதையோ, குத்தோ, ஜெயிலோ எதுவாயிருந்தாலும் நீதான் அனுபவிச்சித் தீரணும். அதிலே என்னையும் மாட்டிவிட்டியோ, உன் – தலை என் புழக்கடையிலே கிடந்து உருளும் ஆமாம் ‘கபர்தார்!’ என்று ஒரு தடவை ரெண்டு தடவையில்லே, ஆயிரந்தடவை சொல்லித்தானே கொடுக்கிறாரு?”

“புழக்கடையிலே தலை கிடந்து உருளும்னா அவரு என்ன, இந்த ஊருக்கு ராசாவா?” என்று கேட்டான் நல்லமுத்து.

“சங்கதி தெரியாதுபோல இருக்குது போன வாரம் அவரு வீட்டுப் புழக்கடையிலே புதுசா ஒரு கிணறு தோண்டினாங்களாம். தோண்டத் தோண்ட ஒரே மனுசனுங்க மண்டையும் எலும்புமா வந்ததாம்! அத்தனை பேரை அவரு அக்கம் பக்கம் தெரியாம தீர்த்துப்பிட்டு இருக்காரு, தெரியுமா?” என்றான் பேச்சிமுத்து.

இதைக் கேட்டதும் நல்லமுத்துவுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்துவிட்டது. அவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

இசக்கிமுத்துவுக்கு அவன் சிரித்தது பிடிக்கவில்லை. “உனக்கு எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கும்” என்றான் அவன்.

“நீ கூடவா அண்ணே, அதை நம்பறே? விசயம் என்னான்னா, அவரு வீடு இருந்த இடத்திலே முன்னே இடுகாடு இருந்ததாம். அதுதான் அந்த இடத்திலே எங்கே தோண்டினாலும் மனுசனுங்க மண்டையும் எலும்புமா கெடைக்குதாம் இப்போ தெரியுதா, எது நிசம், எது பொய்ன்னு?” என்று சட்டென்று ஒரு ‘கதை’யைக் கட்டி விட்டுவிட்டு, நல்லமுத்து மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தான்.

“உனக்கு எப்பொப் பார்த்தாலும் இந்த விளையாட்டுப் புத்திதான், அண்ணே! வாயை மூடிக்கிட்டுப் பேசாம வா; வீட்டுக்குப் போவோம்” என்று சொல்லிக் கொண்டே இசக்கிமுத்து நடையைக் கட்டினான். நல்லமுத்து அவனைப் பின்தொடர்ந்தான் பேச்சிமுத்தும் அவர்களைத் தொடர்ந்து பின்னால் நடை நடந்து சென்றான்.
*⁠* ⁠ *

மறுநாள் மாலை கிராம வீடுகளில் சில அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பொழுது தான் புகைய ஆரம்பித்திருந்தது. அவ்வாறு புகைய ஆரம்பித்திருந்த குடிசைகளுக்கு முன்னால் பசியை மறக்கப் புழுதியில் புரண்டு விளையாடிவிட்டு வந்த குழந்தைகள், குதித்துக் கைகொட்டிக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தன. அன்றிரவு நிச்சயம் சோறு கிடைக்கும் என்ற நம்பிக்கை அந்தக் குழந்தைகளை அப்படி யெல்லாம் ஆடச் செய்துகொண்டிருந்தது. ‘மாஜி குடியர்’களில் பலர் தேநீர் கடையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்; அவர்களுடைய விழி ராஜவிழியாயிருந்தது. ‘திருட்டுச் சாராயம்’ குடித்துவிட்டு வருவதற்காகச் சிலர் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றனர்; அவர்களுடைய விழி திருட்டு விழியாயிருந்தது. தலையை வாரி முடிந்து கொள்ளக்கூட நேரமில்லாத – நேரமிருந்தாலும் விருப்பமில்லாத கிராமத்துப் பெண்களில் பலர் நீர்க் குடத்துடன் கிணற்றடியில் நின்று, தங்களுடைய தரித்திரத்தை ஓரளவு மிகையாகவே உருவகப்படுத்தி உலகத்துக்குக் காட்டிக் கொண்டிருந்தனர். திண்ணைக் கச்சேரிகளிலும் மரத்தடிக் கச்சேரிகளிலும் கலந்துகொண்ட பரசிரம ஜீவிகளின் கூச்சலோ பெருங் கூச்சலாயிருந்தது. அவர்களுடைய கூச்சல் பொழுது விடிந்ததும் குளக்கரையில் மல்லாந்து படுத்துவிடும் மழைக் காலத்து மண்டுகங்களின் ஓசை நயத்தோடு கூடிய இரைச்சலை ஒத்திருந்தது. மூன்று மாதத்துக்கொருமுறை, ஆறு மாதத்துக்கொருமுறை காசைக் கண்ணால் பார்க்கும் கிராமத்துச் சுய சிரம ஜீவிகளோ களைப்பின் மிகுதியால் கஞ்சித் தண்ணீருக்காக அடுப்பண்டை காத்துக் கொண்டிருந்தனர். உலர்ந்த வெற்றிலை சருகைப் போட்டுக் குதப்புவதிலேயே இந்த உலகத்தையும் – ஏன் சோற்றையும்கூட மறந்துவிடும் கிராமத்து கிழவர்களும் கிழவிகளும் தங்களுடைய பேரப்பிள்ளைகளை அழைத்துக் கொஞ்சம் வெற்றிலை பாக்கு நறுக்கித் தருமாறு வேண்டிக் கொண்டிருந்தனர். மாடும் மனிதனும் ஒன்றாக ஓய்வு பெறும் அந்த வேளையிலே, புஷ்பராஜ் தன்னுடைய ஆற்றங்கரை பங்களாவின் அழகிய வராந்தாவில் இப்படியும் அப்படியுமாக ‘ராஜ நடை’ போட்டுக் கொண்டிருந்தான்.

கிராமத்தின் ஒரு கோடியில் தனியாக இருந்த அந்தப் பங்களாவின் முன்னால் அவனுடைய கவனத்தைக் கவருவதற்கு எத்தனையோ காட்சிகள் இருந்தன. எனினும் முதல் நாள் எழுந்த கேள்வி அவனுடைய உள்ளத்தில் ஏனோ இன்னும் இடம் பெற்றிருந்தது.

‘சட்டத்தை மீறிச் சாராயம் காய்ச்சும் அந்தக் குடிகெடுக்கும் மனுசன் யாராயிருக்கும்?’
புஷ்பராஜின் சிந்தனை மேலும் மேலும் விரிந்து கொண்டே சென்றது. அவ்வாறு விரிந்த சிந்தனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்தானோ என்னமோ மாஜி குடியன் ஒருவன் அங்கே வந்து சேர்ந்தான்.

அவனைக் கண்டதும், “யார் அப்பா நீ?” என்று கேட்டான் புஷ்பராஜ்.

“பேச்சிமுத்துங்க!” என்றான் வந்தவன்.

‘பேச்சிமுத்து’ என்றதும் முதல் நாள் தேநீர்க் கடையில் நடந்த சம்பாஷணை புஷ்பராஜின் நினைவுக்கு வந்தது. அவன் ஒரு கணம் திடுக்கிட்டான். மறுகணம் இன்னொரு சந்தேகம் எழவே, “அது சரி; உனக்கு இசக்கிமுத்தைத் தெரியுமா?” என்று கேட்டான்.

“தெரியுங்க”

“நல்லமுத்து….?” தூக்கிவாரிப் போட்டது பேச்சிமுத்துக்கு – “தெரியுங்க….!” என்று சொல்ல ஆரம்பித்தவன், “தெரியாதுங்க!” என்று குழறினான். அந்தப் பயல்கள் ஒருவேளை கபர்தார் ஐயாவைப் பற்றி இந்தப் பிள்ளையாண்டானிடம் சொல்லி விட்டார்களோ, என்னமோ என்ற சந்தேகம் வந்து விட்டது அவனுக்கு.

அந்த அப்பாவியின் நிலையை ஒருவாறு உணர்ந்த புஷ்பராஜ் பேச்சை மாற்ற எண்ணி “சரி இப்போ நீ எதற்காக இங்கே வந்திருக்கிறே?” என்று கேட்டான்.

அதற்குள் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டான் பேச்சிமுத்து. “என்னசாமி, ஒண்ணுந் தெரியாத மாதிரிக் கேட்கிறீங்களே! இந்த நேரத்திலே, இப்படிப் பதுங்கிப் பதுங்கிப் பார்த்து முழிச்சுக்கிட்டு வேறே எங்கே வருவேனுங்க?” என்றான்.

“எனக்கு உண்மையிலேயே ஒன்றும் தெரியாது! நான் இந்த ஊருக்குப் புதுசு, நீயே விஷயத்தைச் சொல்லு” என்றான் புஷ்பராஜ். பேச்சிமுத்துவுக்கு மீண்டும் சந்தேகம் வந்துவிட்டது. “அப்படின்னா நீங்க யாருங்க?” என்று கேட்டான்.

இந்தச் சமயத்தில் உள்ளே யிருந்துவந்த ஒரு நெடிதுயர்ந்த மனிதர் “என்னடா, பேச்சிமுத்து அவனை உனக்குத் தெரியலையா?…அவன் என் மவன் புஸ்பராசன் பட்டணத்திலே படிச்சுக்கிட்டு இருந்தான்; இப்போ லீவுலே ஊருக்கு வந்திருக்கிறான்” என்றார்.
“அப்படியா சாமி ? இவரு பட்டணத்திலே படிச்சுக்கிட்டு இருந்தவரா? அதான் இவருக்கு ஒண்ணுமே தெரியலே!” என்றான் பேச்சிமுத்து.

“ஆமாம், உன்னை நான் புழக்கடைப் பக்கமாகத்தானே வரச் சொன்னேன்? நீ ஏன் இந்தப் பக்கமா வந்தே?” என்று கேட்டார் அந்த ஆஜானுபாகு.

“அந்த பக்கமாகத்தான் வந்தேன், சாமி! அங்கே இந்த நல்லமுத்துப் பய இல்லே; அவன் நின்னுக்கிட்டிருந்தான்; அவனுக்கு நம்ம விசயம் தெரிவானேன்னு இப்படி வந்துட்டேன்!” என்றான் பேச்சிமுத்து.

“தெரிஞ்சா, என்னடா அந்தப் பய உன்னை வெல்லத்திலே வெச்சு முழுங்கிடுவானா? அந்த மாதிரிச் சோனிப்பயங்களுக்கெல்லாம் நீ ஒண்ணும் பயப்பட வேணாம். நாளையிலே யிருந்தாச்சும் நீ புழக்கடைப் பக்கமா வா; உன்னைப்போல் எத்தனையே பேர் அந்தப் பக்கமா வரப்போ, நீ மட்டும் இந்தப் பக்கம் வருவானேன்?” என்று ஊக்கமூட்டிய வண்ணம் அவனைப் புழக்கடைக்கு அழைத்துச் சென்றார் புஷ்பராஜின் தகப்பனார்.

இப்பொழுது தான் புழக்கடையில் பூட்டியிருந்த ஓர் அறை புஷ்பராஜின் ஞாபகத்துக்கு வந்தது. முதல் நாள் இரவு அவன் புழக்கடைப் பக்கமே போகவில்லை; மறுநாள் காலையில்தான் அந்தப் பக்கம் போயிருந்தான். அப்போது பூட்டியிருந்த அந்த அறையையும் பார்த்தான். அதற்குள் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள அவனுக்குக் காலையில் விருப்பமில்லை. இப்போது தன்னுடைய தகப்பனார் பேச்சிமுத்தைப் புழக்கடைப் பக்கமாக அழைத்துச் செல்லவே, அந்த அறைக்குள் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள அவன் விரும்பினான்.

ஆனால் தன் மகன் தன்னுடன் வருவதைத் தகப்பனார் விரும்பவில்லை. அவர் அவனைத் தடுத்து நிறுத்தி, “இதெல்லாம் பெரியவங்க காரியம்; நீ ஒண்ணும் கண்டுக்கிடாதே போ, போய் உன் வேலையைப் பாரு இல்லாட்டா, ஏதாச்சும் ஒரு புத்தகத்தை எடுத்து வச்சிகிட்டுப் படி” என்றார்.

“இருக்கட்டும் அப்பா உங்களுடைய வேலையை நானுந்தான் கொஞ்சம் பார்க்கிறேன்” என்றான் புஷ்பராஜ்.

“அப்படின்னா எனக்குச் சந்தோசந்தான் – ஆனா இந்த விசயம் அக்கம் பக்கம் தெரியக்கூடாது ஆமாம், கபர்தார்!” என்று எச்சரித்தார் தகப்பனார். “அக்கம் பக்கத்திலேதான் யாருமே இல்லையே!” என்று சொல்லிக் கையை விரித்துக் கொண்டே அவர்களை தொடர்ந்து சென்றான் புஷ்பராஜ்.

ஐயோ! இது என்ன? அங்கே பூட்டியிருந்த அறை திறந்திருந்தது. அந்த அறைக்கு முன்னால் பத்துப் பன்னிரண்டு பேர் கூடியிருந்தனர். அதற்குள் போட்டிருந்த ஒரு நாற்காலியின் மேல் பெரிய ஜாடி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே பயங்கர ஆகிருதியுடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய கையில் ஓர் அளவுக் கிண்ணம் இருந்தது. அந்த ஆசாமி உள்ளே வந்த வாடிக்கைக்காரர்களுக்கெல்லாம் நாட்டுச் சாராயத்தை அளந்து ஊற்றிக் கொண்டிருந்தான்.

அதாவது, மதுவிலக்குப் பிராந்தியத்தில் அசல் சாராயக் கடை ஒன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.

அருவருக்கத்தக்க இந்தக் காட்சியைக் கண்டதும் புஷ்பராஜின் கண்களில் தீப்பொறி பறந்தது. “அப்பா நீங்கள் தானா சட்டத்தை மீறிச் சாராயம் காய்ச்சும் அந்தக் குடிகெடுக்கும் மனிதர்?” என்று அவன் வியப்புடன் கேட்டான்.

அவன் குரல் நடுங்கிற்று.

“ஆமாண்டா, ஆமாம்!” என்று சொல்லிவிட்டு அவர் ஒரு பயங்கரச் சிரிப்புச் சிரித்தார்.

அவன் தலை சுழன்றது.

“அப்பா இது சட்ட விரோதம்” என்று ஆரம்பித்தான் அவன்.

“அது எனக்குத் தெரியும்; அப்புறம்?” என்று உறுமினார் அவர்.

“மனித தர்மத்துக்கும் விரோதம், அப்பா!”

“அதுவும் எனக்குத் தெரியும்; அப்புறம்?”

“அப்புறமா திருட்டுச் சாராயத்தை காய்ச்சி ஊற்றி இந்த ஊமை ஜனங்களை அணுஅணுவாகக் கொல்வதைக் காட்டிலும், விஷத்தை ஊற்றி ஒரேயடியாய்க் கொன்றுவிடலாம், அப்பா” என்றான் அவன்.

‘’அடேய், என்ன சொன்னே? நேற்று பிறந்த பயல், நீ! நீயா எனக்கு வந்து புத்தி சொல்றே? இதெல்லாம் பெரியவங்க காரியம்; நீ ஒண்ணும் கண்டுகிடாதோ!” என்று நான் உனக்கு முன்னாலேயே சொன்னேனா, இல்லையா? . வீணா என்னுடைய கோவத்துக்கு ஆளாகாதே, போ!”

“இந்த அக்கிரமத்தை நீங்கள் நிறுத்தாதவரை என் உயிரே போவதாயிருந்தாலும் சரி, நான் இந்த இடத்தை விட்டுப் போகவே மாட்டேன்!”

“அட, பெரிய சீமான் இவரு! – சீ, போடா நாயே! இந்தக் ‘கபர்தார் கனகராஜ்’ கிட்டவா வந்து நீ கணக்குப் பண்றே, கணக்கு? இந்த இடத்தைவிட்டு மரியாதையாய்ப் போறியா? – இல்லே, நானே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளட்டுமா?” என்று அவர் சிம்மநாதம் செய்தார்.

அவ்வளவுதான்; மகன் ஆட்டுக்குட்டியாக அடங்கி நின்ற இடத்திலேயே நின்றான்.

கபர்தார் கனகராஜ் கண்கள் ‘ஜிவ்’ வென்று சிவக்க, மீசை முறுக்குக்கலைந்து துடிக்க, அவனை ஏறிட்டுப் பார்த்தார்.

அப்பொழுதும் அவன் அசைந்து கொடுக்கவில்லை!

அடுத்த நிமிஷம் ‘பளிர் பளீர்’ என்று இரண்டு அறைகள் அவனுடைய கன்னத்தில் மின்னலிட்டன.

புஷ்பராஜ் அசந்துபோனான்!

அதற்குப் பிறகு அவன் அங்கே நிற்கவில்லை. கன்னத்தைத் தடவிக் கொண்டே தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

திருட்டுச் சாராயவியாபாரம் எந்தவிதமான இடைஞ்சலுமின்றி வழக்கம் போல் இரவு பத்து மணிவரை தொடர்ந்து நடந்து முடிந்தது.

*⁠**

பத்து மணிக்குப் பிறகு புழக்கடை அறையை பூட்டிக் கொண்டு வந்த கபர்தார் கனகராஜ் நேரே புஷ்பராஜின் அறைக்குள் ஆவேசத்துடன் நுழைந்தார்.

அவருடைய ஆவேசத்தைக் கண்டதும் புஷ்பராஜ் தன்னையறியாமலே எழுந்து நின்றான்.

“அடேய், எனக்கு முன்னமேயே தெரியும் நீ இப்படி ஏதாச்சும் ‘தத்துப்பித்து’ன்னு உளறுவேன்னு! – பேசாம நான் சொல்றதைக் கேளு! உனக்கும் எனக்கும் இனிமே சரிப்பட்டு வராது. பட்டணத்துப் படிப்புப் படிச்சி உன் புத்தி கோணலாப் போயிடுச்சு! ‘காத்துள்ள போதே தூத்திக்கணும்’ என்கிறாப்போல, கள்ளுக் கடையை எடுத்திருக்கிற இந்த நாளிலேதான் நான் நாலுகாசு சம்பாதிக்கணும்னு இருக்கேன். அதுக்கு இடைஞ்சலா நீ இருந்தியோ, எனக்கு ரொம்பக் கோவம் வரும் – ஆமாம், கபர்தார்! – அந்தக் கோவத்திலே நான் உன்னை என்ன வேணுமானாலும் செய்துபிடுவேன்! அதனாலே இன்னிக்கு ராத்திரியே நீ திரும்பிப் பட்டணத்துக்குப் போயிடறதுதான் நல்லது. இந்தா, ஒரு அம்பது ரூவா வச்சுக்கோ அப்புறம் மாசா மாசம் உன் செலவுக்கு நான் வழக்கம் போல் பணம் அனுப்பறேன் – என்ன?” என்று நயத்துடன் பயமும் காட்டிப் பார்த்தார் கனகராஜ்.

“இருக்கிற காசே ஏழு தலைமுறைக்குப் போதுமே அப்பா” என்று மீண்டும் ஏதோ சபலத்துடன் ஆரம்பித்தான் புஷ்பராஜ்.

“இந்த உபதேசந்தானே நான் வேணாங்கிறேன்!” என்று கர்ஜித்தார் கனகராஜ்.

புஷ்பராஜ் அதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் வாயடைத்துப் போனான். கபர்தார் கனகராஜ் அவனுடைய கையில் ஐம்பது ரூபாயைப் பலவந்தமாகத் திணித்தார்.

புஷ்பராஜ் அந்தப் பணத்தையும் அப்பாவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். அதற்குப் பிறகு எதிர்ச் சுவரில் மாட்டியிருந்த தன் தாயாரின் போட்டோவைப் பார்த்தான். ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு, ‘அம்மா இன்று உயிருடன் இருந்திருந்தால்….?’ என்று எண்ணி அவன் மனம் ஒரு கணம் ஏங்கிற்று. மறுகணம் அம்மா இன்று இல்லாமற் போனதே மேல் என்று எண்ணி அவன் மனம் ஆறுதலடைந்தது.

சிற்றன்னையோ அந்தப் பக்கம் தலைகாட்டவேயில்லை; கபர்தார் கனகராஜைக் கண்டால் அவளுக்கு அவ்வளவு தைரியம்!

புஷ்பராஜ் நின்றது நின்றபடி நின்று மேலே என்ன செய்வதென்று யோசித்தான். கபர்தார் கனகராஜ் பொறுமையிழந்து, “என்ன சொல்கிறாய்?'” என்று அதட்டினார்.

“அப்படியே ஆகட்டும், அப்பா” என்று சொல்லிவிட்டான் புஷ்பராஜ். அந்த நிமிஷம் அப்பாவின் யோசனை அவனுக்கு ஒரு விதத்தில் நல்லாதாகவே தோன்றிற்று. ஆனால் அடுத்த நிமிஷம்…?

அவனுடைய மன்திலே ஒரு பெரிய போராட்டம் எழுந்தது. அந்தப் போராட்டத்தின் காரணமாக அவனுடைய யோசனை வேறு திக்கை நோக்கிச் சென்றது. அந்தத் திக்கிலே ஒரு வாயில்லாத பசுவின் கன்றுக்காகத் தன் ஒரே மகனைத் தேர்க்காலில் பலிகொடுத்து நீதி வழங்கிய சோழனை அவன் அகக்கண்ணால் கண்டான்.

அவ்வளவுதான்; அவன் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த எரிமலை வெடித்தது!

அதன் பலன்….?

*⁠**

அன்றிரவே வீட்டை விட்டுச் சென்ற புஷ்பராஜ் மறுநாளை காலை கபர்தார் கனகராஜ் கொஞ்சமும் எதிர்பாராத விதமாகப் போலீஸ் அதிகாரிகளுடன் வீட்டுக்குள் நுழைந்தான். புழக்கடையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அறை கபர்தாரின் உத்தரவில்லாமலே திறக்கப்பட்டது. உள்ளேயிருந்த சாராய ஜாடிகளெல்லாம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன.

கபர்தார் கனகராஜ் கைதியானார்!

அதுவரை தன் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்த புஷ்பராஜ், அப்பாவை அந்தக் கோலத்தில் பார்க்கச் சகிக்காமல் கண்களைக் கைகளால் மறைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதான்.

என்ன விசித்திரமான மனித இதயம்!

*⁠**

அடுத்த சில நாட்களில் கபர்தார்கனகராஜின் வாக்கு மூலத்தைக் கொண்டு மற்றும் பலரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களெல்லாம் கபர்தாருக்குத் துணையாக இருந்து, அவ்வப்பொழுது திருட்டுச் சாராயம் காய்ச்சி கிராமமெங்கும் விநியோகித்துக் கொண்டிருந்தவர்கள் என்ற விஷயம் பின்னால் தெரிந்தது.

காட்டுத் தீ போல் பரவிய இந்தச் சேதி தாழம்பேடு முழுவதையுமே ஒரு கலக்குக் கலக்கி விட்டது. அதன் காரணமாகப் புஷ்பராஜைச் சிலர் வைதார்கள்; சிலர் வாழ்த்தினார்கள். நல்லமுத்தோ அவனைத் ‘தெய்வம்’ என்றே சொல்லி விட்டான்.

எதையும் புஷ்பராஜ் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவனுடைய இதயத்தின் அடிவாரத்தில் மட்டும் இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு வேதனை குடி கொண்டிருந்தது. அந்த வேதனை சிற்றன்னைக்கு என்ன சமாதானம் சொல்வதென்ற வேதனைதான்.

அவளோ அவனை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக ஒரு மூலையில் உட்கார்ந்து ‘துக்கம்’ கொண்டாடிக் கொண்டிருந்தாள்.

புஷ்பராஜ் அவளை மெல்ல நெருங்கி, “சித்தி என்னை மன்னித்து விடுங்கள் சித்தி!” என்று தழுதழுத்த குரலில் வேண்டினான்.

அதே சமயத்தில் பத்திரிகைகளின் மூலம் விஷயத்தை அறிந்த கபர்தார் கனகராஜின் இளைய மாமனார் தாழம் பேடை நோக்கிப் பறந்து வந்து சேர்ந்தார்.

சோகமே உருவாய் உட்கார்ந்திருந்த மகளைக் கண்டதும் அவருக்குப் பகீரென்றது. “ஏன் தம்பி! இப்படிக்கூடச்செய்யலாமா?” என்று அவர் புஷ்பராஜை நோக்கிக் கேட்டார்.

அவரிடம் பணம் இல்லாததால்தானோ, என்னவோ அவருடைய குரலில் ஆத்திரம் இல்லை; அனுதாபம் இருந்தது.

புஷ்பராஜ் ஒன்றும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டான். அவனுடைய கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணிர்த்துளிகள் கீழே விழுந்து சிதறின.

பெரியவர் “அவர் உன்னைப் பெற்று வளர்த்தவர் இல்லையா?” என்று கேட்டார்.

புஷ்பராஜ் குனிந்த தலை நிமிராமல் “ஆமாம்” என்றான்.

“புஷ்பராஜ் என்று அழகாகப் பெயரிட்டு அன்புடன் உன்னை அழைத்தவர் இல்லையா?”

“ஆமாம்”

“நீ படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காகப் பணத்தைத் தண்ணீராப் பாவித்துச் செலவழித்தவர் இல்லையா?”

“ஆமாம்” எல்லாவற்றுக்கும் அவன் “ஆமாம்” என்று சொல்லவே பெரியவர் இன்னும் கொஞ்சம் அவனை நெருங்கி, “அப்படிப் பட்டவரா உனக்கு விரோதி?” என்று கேட்டார்.

“அவர் எனக்கு விரோதி இல்லை…”

“பின்னே யாருக்குத் தம்பி விரோதி?”

“சமுதாயத்துக்கு விரோதி!”

“சொந்த அப்பாவை விடவாசமுதாயம் பெரிது?”

“ஆமாம், அது அப்பாவை விடப் பெரியது; அரசாங்கத்தை விடப் பெரியது” என்றான் புஷ்பராஜ்.

பெரியவர் வீட்டின் முகட்டைப் பார்த்த வண்ணம் ஒரு வினாடி யோசித்தார். பிறகு “பிள்ளையாண்டான் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான்; ஆனால் மனசு கேட்கமாட்டேன் என்கிறதே!” என்றார்.

இந்தச் சமயத்தில் புஷ்பராஜின் சிற்றன்னை எழுந்து நின்று, “பிள்ளையாண்டான் சொல்வது சரிதான், அப்பா! ஆனால் அந்த மனுசன் வெளியே வந்த பிறகு இந்தப் பிள்ளையை உயிரோடு வைத்திருக்க வேண்டுமே!” என்று கண்ணீரும் கம்பலையுமாகத் தன் கவலையைத் தெரிவித்தாள்.

இதைக் கேட்டதும் புஷ்பராஜ் திகைத்துப் போனான். அடுத்த நிமிஷம் அவனுடைய இதய பாரம் குறைந்தது; முகமும் மலர்ந்தது. “சித்தி, எனக்காக நீங்கள் வருந்த வேண்டாம். இதோ நான் இன்றே இந்த வீட்டை விட்டுப் போகிறேன்; எனக்கு அப்பாவின் பணமும் வேண்டாம்; பாத்தியதையும் வேண்டாம். வஞ்சகமின்றி உழைத்து வயிறு வளர்க்கும் கோடானு கோடி மக்களில் ஒருவனாக நானும் வாழ்கிறேன். அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வரும்வரை தாத்தா உங்களுக்குத் துணையாக இருக்கட்டும்!” என்று சொல்லிவிட்டு, அவன் ‘விர்’ரென்று வெளியே கிளம்பி விட்டான்.

அதற்குப் பிறகு புஷ்பராஜ் அந்தப் பக்கம் திரும்பவே இல்லை. இவ்வளவு பெரிய உலகத்தில் அவன் நாணயத்துடன் வாழ இடமா கிடைக்காமற் போயிருக்கும்?

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *