மேற்கில் தோன்றிய உதயம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 12,120 
 

கௌசல்யாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உள்ளுக்கும் வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை. அவள் கணவர் வீட்டுக்கு வரும் நாள்! சமையல்காரப் பெண்மணி எடுபிடி வேலை செய்ய.. சமையலில் மும்முரமாக இருந்த சைலஜா இவளைப் பார்த்துவிட்டு கேலியாக சிரித்தாள்.

”பார்த்தியா அங்கே? மேடம், ஐயாவுக்காக பரபரன்னு இருக்கறதை? இந்த வயசிலேயும் அலையுதே!”

”ஆனா, அந்த ஐயா, இந்தம்மாவை கண்டுக்கறதே இல்லையே!” சின்னம்மாவே கேலி செய்வதால் தைரியமாக தன் கருத்தைச் சொன்னாள் சமையல்காரப் பெண் ருக்மணி.

”அவ்ளோ நல்லவங்க போலிருக்கு இவங்க. சரி.. சரி.. மாமா வர்ற நேரமாச்சு.. கிரேவிக்கு அரைச்சிட்டியா?”

மேலும் அரை மணி நேரம் அவளை நடக்க வைத்த பிறகே வந்தார் சிவகுமார்.

வீடு மொத்தமும் அவரை சூழ்ந்து கொண்டது. கௌசல்யா மட்டும் சுவரோரமாக, வாத்சல்யமும் ஏக்கமும் சுமந்து கொண்டு நின்றிருந்தாள். இவளிடம் காட்டாத மரியாதையை, பாசத்தை சைலஜா மாமனாரிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்.

கிஷோரும் மிருணாளினியும் தாத்தாவின் கழுத்தை கெட்டியாகப் பற்றி ஆடிக் கொண்டிருக்க.. தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தான் ரிஷி.

கணவரின் பார்வை தன் மேல் விழாதா என்று பந்துக்குக் காத்திருக்கும் விக்கெட் கீப்பரைப் போல் பார்வையை விலக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் கௌசல்யா.

சாப்பாடு முடிந்து, குட்டித் தூக்கம் போட்டுவிட்டு, மசாலா டீயை சுவைத்து விட்டு புறப்படும் வரை மனைவியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவர்.

”வர்றேன் என் செல்லக் குட்டிகளா.. தாத்தா அடுத்த வாரம் வர்றேன்” என்று எல்லோரிடமும் விடை பெற்று காரில் ஏறிய சிவகுமார், ரிஷியின் பக்கத்தில் நின்றிருந்த கௌசல்யா வைப் பார்த்தார்.

”வர்றேன்!” – உயிர்ப்பே இல்லாத குரலில் வந்தது வார்த்தை.

இது போதுமே..!

சிலிர்ப்புடன் அருகில் வந்தாள்.

”உடம்பைப் பார்த்துக்குங்க.. முன்னைக்கு இப்ப கொஞ்சம்.. மெலிஞ்சிரு..” அவள் சொல்லி முடிக்கும் முன் கார் சீறிப் புறப்பட்டது.

குபுக்கென்று பொங்கிய சிரிப்பை அடக்கியபடி சைலஜா நகர.. உயிர் வரை வலித்தது கௌசல்யாவுக்கு.

அடுத்த வாரத்தில் வழக்கமான உற்சாகம் இல்லை சிவகுமாரிடம். யோசனையிலேயே இருந்தார். கிளம்பும் முன் கௌசல்யாவிடம் வந்தார். நாசூக்காக குழந்தைகளை அப்புறப்படுத்தி நகர்ந்தனர் ரிஷியும் சைலஜாவும்.

”என்னை எப்பவுமே நிம்மதியாவே இருக்க விட மாட்டியா?”

சுரீரென்று வந்து விழுந்த வார்த்தைகளில் சுருண்டு போனாள்.

”நான்.. உங்களை.. என்ன ஆச்சு?”

”நல்ல மருமகளாதான் இருக்கலே. நல்ல மாமியாரா வாவது இருக்க முடியாதா?”

புரிந்தது. சில நாட்களாக சைலஜாவுக்கும் அவளுக்கும் புகைந்து கொண்டிருக்கும் விஷயத்தை, ஊதி பெரிசாக்கி இவரிடம் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்!

”என் மேல எந்தத் தப்புமில்லீங்க. சைலாதான் என்னை மரியாதை- இல்லாம..”

”அடச்சீ.. வாய மூடு! என்னிக்குதான் உன் தப்பை நீ ஒப்புக்கிட்டிருக்கே? உன்கூட மனுஷங்க வாழ்ந்துட முடியுமா? பெத்த புள்ளையக் கூட நிம்மதியா இருக்க விட மாட்டேங்கறே..!”

”நா.. னா?”

”உன் வாயைப் பத்திதான் எனக்குத் தெரியுமே!”

”…….?!”

”வெள்ளிக்கிழமை வர்றேன்.. உன் மூட்டை முடிச்செல்லாம் கட்டிக்கிட்டு ரெடியா இரு!”

கௌசல்யாவினுள் குபீரென்று உற்சாக ஊற்று ஒன்று பொங்கியது.

”என்னை.. என்னை.. உங்க கூடவே கூட்டிட்டுப் போகப் போறீங்களா? இப்ப.. இப்பவே வந்துடறனே?” குழந்தை மாதிரி கேட்டாள்.

”ஏன்.. உனக்கு தீர்க்க சுமங்கலியா போய்ச் சேரணும்னு ஆசையில்லையா?”

அவள் முகத்தில் இருந்த ஆர்வமும் உற்சாகமும் உடனடியாக செத்து மடிந்தன.

”வே.. வேற எங்கே?”

”முதியோர் இல்லத்துக்கு!”

அழுதழுது உள்ளம் மரத்துப் போயிருந்தாள்.

‘என்ன கொடுமை இது? கட்டின புருஷனே, பெண்டாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்ப்பாரா?’

ஆயிற்று.. முப்பத் தைந்து வருடங்கள்! இன்னமும் சிவகுமாருக்கு அவள் மீது நம்பிக்கையோ, கருணையோ வரவேயில்லை. ஊசி மேல் தவமிருந்த அவள் நம்பிக்கை எல்லாம் பொத்தலாகிப் போனது.

இத்தனைக்கும்.. அந்தக் காலத்திலேயே காதல் திருமணம் புரிந்தவர்கள். வாழ்க்கை.. இன்பத்தை சுமந்து கொண்டு தங்குதடையின்றிதான் சென்றது. ஆனால், இவர்கள் வீட்டிலும் மாமி யாருக்கும் மருமகளுக்கும் ஆகாமலே போனது.

கௌசல்யா வளவளவென்று பேசிக் கொண்டே இருப்பாள். எந்தக் கேள்விக்கும் ஒரு பதிலை தயாராக வைத்திருப்பாள். பதிலுக்கு பதில் வாயாடும் அந்த குணம், மாமியார் வத்சலாவுக்கு பிடிக்காமல் போனது. ஏற்கெனவே மகன், அவன் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதும் சேர்ந்து கொள்ள, வெறுப்பு மலைபோல் குவிந்தது.

சிவகுமார் மனைவியை ரொம்ப நேசித்தார். ஆனால், அதைவிட அதிகமாக அம்மாவை நேசித்தார். அதுதான் அந்த அம்மாவுக்கு சாதகமாகிப் போனது. கௌசல்யாவைப் பற்றி ஏதேனும் சொல்லிக் கொண்டே இருந்தார். சிறு உளிதானே பெரிய மலையை உடைக்கிறது? அவர்கள் தாம்பத்யத்திலும் விரிசல் விழுந்தது. பலன்.. சிவகுமார் கௌசல்யாவிடம் பேசுவதையும்கூட தவிர்க்க ஆரம்பித்தார். அப்போது ரிஷி, கௌசியின் வயிற்றில்!

ஒரே அறையில் கணவர் தன்னைத் தள்ளி வைத்த ஏமாற்றம், ‘எல்லாம் இந்த அம்மாவால்தானே’ என்கிற கோபம்.. எல்லாமும் சேர்ந்து ஒரு நாள் சண்டையில் கௌசல்யா வார்த்தைகளை விட்டு விட்டாள்.

”என்னைப் போயா சனியன்னு சொல்றீங்க? நீங்கதான் சனியன்! என் வாழ்க்கையை கெடுக்க வந்த சனியன். உங்களாலதான் புகுந்த வீட்டுலயே வாழாவெட்டியா அல்லாடறேன்” என்று அழுதாள்.

அது போதாதா வத்சலாவுக்கு! ஈறை பெருமாளாக்கி விட்டாள்.

தெய்வமாக தான் வணங்குகிற தாயை இவ்வளவு கேவலப்படுத்திய பின், அவளை மனதிலிருந்து தூக்கி எறிந்தார் சிவகுமார்.

அடுத்த ஆறு மாதத்தில் மஞ்சள்காமாலையில் வத்சலா போய்ச் சேர.. அதுவும் கௌசல்யாவால்தான் என்ற எண்ணம் மனதில் அழுத்தமாக பதிய, அவளைப் பார்ப்பதைக்கூடத் தவிர்த்து விட்டார்.

மனதை பிசினஸில் திருப்ப.. செல்வம் பெருகியது. நிச்சயம் கணவரின் மனம் ஒரு நாள் மாறும்.. தன் உண்மையான அன்பையும் தன்னையும் புரிந்து கொள்வார் என்று காத்திருந்தாள் கௌசல்யா.

ரிஷியும் வளர்ந்து கல்யாண வயதை அடைந்தான். அவன் கல்யாணம் எந்தப் பிரச்னையும் இன்றி நடக்கவே அதுவரை ஒரே வீட்டில் சேர்ந்திருந்த சிவகுமார், ரிஷியின் கல்யாணம் ஆனதும், தனியே கேளம்பாக்கத்தில் உள்ள தன் பண்ணை வீட்டுக்குச் சென்று விட்டார்.கௌசல்யா எவ்வளவோ கெஞ்சியும், அவளை உடன் அழைத்துச் செல்லவில்லை.

”இனியாவது என்னை நிம்மதியா விடு! எனக்கு தனிமை தேவை. என் தாயோடு வாழ்ந்த நாட்களை அசைபோட்டு வாழ தனிமை தேவை! ரிஷி.. நீயும் என்னை வற்புறுத்தாதே!” என்று போய் விட்டார்.

வாரம் ஒருமுறை, பிள்ளையையும் பேரக் குழந்தை களையும் பார்க்க வந்து விடுவார்.

கௌசல்யா கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

தாயின் மீதுள்ள கண்மூடித்தனமான பாசம் கூட இன்னொரு பெண்ணின் ஒரு ஜென்மத்தையே வீணாக்கி விட்டதே!

”அன்புள்ள உங்களுக்கு!

இந்தக் கடிதம் உங்களுக்கு எந்த வகையிலும் அதிர்ச்சியைத் தராது என்பதை அறிவேன்! பேசிப் பேசியே வாழ்க்கையை தொலைத்த நான்.. பேசாமலே உங்களை விட்டுத் தொலைந்து போகிறேன். என்றாவது ஒருநாள் என்னைப் புரிந்து கொள்வீர்கள் என்று காத்திருந்தேன். நடக்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதை மட்டும் கூறிக் கொள்கிறேன்.

மற்றவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் சிறிதளவாவது நீங்கள் என் மீது வைத்திருக்கலாம். விளைவு.. இன்று கணவனே, மனைவியை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அளவுக்கு ஆகிவிட்டது. நீங்கள் நல்லவர். எத்தனையோ குடும்பங்களுக்கு அட்சயப்பாத்திரமாக இருப்பவர். அப்படிப்பட்டவர் இப்படியரு காரியம் செய்து என்னால் பாவச் சுமையை ஏற்றிக் கொள்ளக் கூடாது. அதனால் இந்த வீட்டை விட்டுப் போகிறேன். ஆதரவற்றோருக்கென்று எத்தனையோ புகலிடம் இருக்கிறது. அங்கு மீதி காலத்தை கழித்துக் கொள்கிறேன். என்னால், இனி எந்த சிரமும் உங்களுக்கு வராது.

விடைபெற்றுக் கொள்கிறேன்!

இப்படிக்கு,

எஸ்.கௌசல்யா”

”நோ..” – படித்து முடித்தவுடன், துளிர்த்த கண்ணீருடன் அலறினார் சிவகுமார்.

ரிஷி பதற்றத்துடன் அப்பாவைப் பார்த்தான்.

”என்ன ரிஷி இது? அவளை பத்திரமா பார்த்துக்கு வேன்னுதானே உன்கிட்டே விட்டிருந்தேன்? அவளைத் தொலைச்சிட்டு, லெட்டரை கொண்டு வந்து கொடுக்கறியே..!”

”அ..ப்..பா!” அதிர்வுடன் ஏறிட்டான்.

”கௌசிக்கு எதுவுமே தெரியாதுடா! அவ குழந்தை மாதிரி.. உலகம் தெரியாதவ.. எங்கே போனாளோ.. எப்படி இருக்காளோ?”

ரிஷி இத்தனை வருடங்களில் அப்பாவை இந்தளவு உணர்ச்சிவசப்பட்டு.. அதுவும் அம்மாவுக்காக.. பார்த்ததே இல்லை.

”அப்பா.. அப்புறம் எப்படிப்பா அம்மாவை முதியோர் இல்லத்துல சேர்க்கணும்னு சொன்னீங்க?”

”சொன்னேன்தான்.. ஆனா, அது உன்மேல உள்ள கோபத்துல சொன்ன வார்த்தை. உன்கிட்ட கோபத்தைக் காட்ட சங்கடப்பட்டு, அவகிட்ட கத்திட்டேன்.”

”என் மேல கோபமா.. ஏன்ப்பா?”

”சைலஜாவுக்கு கௌசல்யாவை ஆரம்பத்துலயிருந்தே பிடிக்கலைனு எனக்கு நல்லா தெரியும். ஒரு பொண்ணுக்கு மரியாதை புகழாலோ, அந்தஸ்தாலோ வந்திடறதில்ல. கணவன் அவளுக்குத் தர்ற மரியாதையாலயும், முக்கியத் துவத்தாலயும்தான் கிடைக்குது. நான் கௌசியை ஒதுக்கி வச்சது, சைலஜாவுக்கு இளக்காரமாப் போய்டுச்சு. அது தெரிஞ்சும் என்னோட பாழாப்போன ஈகோவால கௌசியை இத்தனை நாளா ஒதுக்கியே வெச்சுட்டேன்.

எனக்குக் கல்யாணமான புதுசுல எங்கம்மா மேல தப்பு இருக்குனு தெரிஞ்சும் அவங்களை விட்டுக் கொடுக்காம கௌசியைத்தான் குறை சொல்வேன். சண்டை போடுவேன். ஆனா, நீ.. உன் அம்மாவை விட்டுக் கொடுத்து எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்திருக்கே..!”

”அ..ப்..பா!” — குற்ற உணர்வுடன் தலை கவிழ்ந்தான் ரிஷி.

”எத்தனையோ முறை உங்கம்மாகூட பேசணும்னு நினைச் சிருக்கேன். ஆனா, என்னோட ஈகோவால..” என்று தடுமாறியவர், ”அவ மேல உண்மையிலயே வெறுப்பு இருந்திருந்தா, எப்பவோ டைவர்ஸ் பண்ணி யிருப்பேன். அவளை நானும் ரொம்ப நேசிக்றேன்டா! அவளை என் கூட அழைச்சிட்டுப் போக சந்தர்ப்பம் எதிர்பார்த்திருந்தேன். அவளை முதியோர் இல்லத்துல சேர்த்து விடற அளவுக்கு பாவியா நான்? என் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் ஸ்வீட் சர்ப்ரைஸ் தரணும்னு நினைச்சிருந்தேன்.. அதுக்குள்ள..!” என்றபடி கண்களை துடைத்துக் கொண்டார்.

”அம்மா மேல உங்களுக்கு இவ்வளவு பாசமா?”

ஆச்சர்யத்தில் உறைந்து நின்றான் ரிஷி.

”அதான் சொன்னேனே.. எல்லாத்துக்கும் என் பொல்லாத ஈகோதான் காரணம்னு. புருஷன், பொண்டாட்டிக்குள்ள சண்டை வரலாம், அடிக்கலாம், திட்டலாம்.. ஆனா, ஈகோ மட்டும் வந்திடவே கூடாது. அதுக்கு நான்தான் பெரிய உதாரணம். ஆனா, அவ என்னை விட்டு விலகிப் போனதும் ஈகோதான் ஓடிப் போயிடுச்சே.. கௌசியை கண்டுபிடிக்கறது எனக்குப் பெரிய விஷயமில்லே! இன்னிக் குள்ள அவளைக் கண்டுபிடிப்பேன். இனி, என்னால அவளை விட்டுப் பிரியவே முடியாது!” என்றவரின் முகத்தில் அன்பும் ஏக்கமும் நிறைந்திருந்தது.

கடவுள் சிலருக்கு வாரந்தோறும் சம்பளம் கொடுக்கிறார். சிலருக்கு வருடங்கள் பல கழித்துத் தருகிறார். கௌசல்யாவுக்கு போனசும் சேர்ந்து காத்திருக்கிறது.

– பெப்ரவரி 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *