கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 11,177 
 

பாத்திரங்கள் கடபுடவென்று உருள, அஞ்சலையை இழுத்துப் போட்டு அடித்து, காட்டு கத்தலில் கத்தினான் சொக்கன். பத்து வயது பெண்ணான ராசாத்தி, தன் இரண்டு தங்கைகளையும் தன்னோடு சேர்த்து அணைத்து, அப்பனுக்கு பயந்து குடிசை திண்ணையில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள்.
முடிவைத் தேடி“”பொட்ட புள்ளைகளா பெத்து வச்சுக்கிட்டு, வாயா பேசற… இதபாரு… வேலைக்கு போயி நல்லாதானே சம்பாதிக்கிறே… வந்து காசு கேட்டா வாயை மூடிகிட்டு கொடுக்கிறதை விட்டுட்டு, திமிர்த்தனமா பேசற?”
கீழே விழுந்தவளை, காலால் எட்டி உதைத்தான்.
“”நான் கஷ்டப்பட்டு காட்டிலேயும், மேட்டிலேயும் போயி சம்பாதிக்கிறதை, இப்படி குடிச்சு அழிக்க கேட்கறியே… இந்த புள்ளைங்களுக்கு ஒரு நல்ல துணி எடுத்து கொடுக்கக்கூட முடியலை. ஏதோ வயித்துக்கு கஞ்சி ஊத்தறேன். நீ குடும்பத்தை கவனிக்காம, இன்னொருத்தியை வச்சு, கூத்தடிச் சுக்கிட்டு… நாலு நாளைக்கு ஒருக்க வந்து, என்னை இப்படி நாயடி, பேயடி அடிக்கறியே… நீயெல்லாம் மனுஷனா…”
“”நான் ஆம்பளைடி… அப்படித்தான் இருப்பேன். அதை கேட்க நீ யாரு. அழுது வடியற உன் மூஞ்சியை எவன் பார்ப்பான். நீயெல்லாம் இந்த உலகத்தில் வாழ்ந்து என்ன பிரயோசனம். பேசாம நீ பெத்து வச்சருக்கியே… பொட்ட கழுதைங்க அதுங்களை கூட்டிக்கிட்டு, ஆத்திலேயோ, குளத்திலேயோ விழுந்து சாவு. அடுத்த தடவை வரும்போது, இங்கே இருக்காதே; ஓடிப் போயிடு… தரித்திரம்.”
கோபமாக வெளியேறும் அவனை பார்த்து, பயத்தில் நடுங்கியவாறு, ராசாத்தியும், குழந்தைகளும் உட்கார்ந்திருந்தன.
இரண்டு நாட்களாக அஞ்சலைக்கு மனதே சரியில்லை. சை… என்ன வாழ்க்கை. இவனிடம் அடி உதை பட்டு… ஒரு மனுஷியாகவே அவளை மதிக்கவில்லை. பக்கத்து டவுனில், யாரோ ஒருத்தியை கூட்டி வந்து, குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறான். அப்பனும், ஆத்தாவும் வயசானவர்கள். பாரவண்டி இழுத்து, வயித்தை கழுவும் அப்பனிடம், அவள் எதை எதிர்பார்க்க முடியும்.
சின்ன, சின்னதாக மூன்று பெண் குழந்தைகளை எப்படி கரையேற்றப் போகிறாள். மனது வலித்தது. அவன் சொன்னது போல், வாழ்ந்து என்ன பிரயோசனம். இப்படி அடி உதை பட்டு நாயிலும் கேவலமாக வாழ்வதை விட, உயிரை மாய்த்துக் கொள்வது எவ்வளவோ மேல்.
அந்த எண்ணம் அடி மனதில் தோன்ற, இதுதான் ஒரே முடிவு… அவள் மனது தீர்மானமாக சொன்னது. மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு, ஊர் கடைசியில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு, தானும் குதித்து உயிரை விடுவதே ஒரே வழி…
அடுத்த கணம் மனதை இரும்பாக்கிக் கொண்டு எழுந்தாள். அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருந்தது. திண்ணையில் ராசாத்தி, தங்கைகளுடன் உட்கார்ந்து வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தாள்.
“”ராசாத்தி… ராசாத்தி…”
“”என்ன ஆத்தா கூப்பிட்டியா?”
“”இந்தா காசு… நாயர் கடையிலே போயி இரண்டு பாக்கெட் துண்டு கருவாடு வாங்கிட்டு வா.”
“”ஐ… ராத்திரி சோத்துக்கு கருவாடு பொரிக்க போறியா ஆத்தா?”
“”ஆமாம். ரசம் சோறும், கருவாடு வறுவலும்… உங்களுக்கு பிடிச்ச வெஞ்சனம். சீக்கிரம் வாங்கிட்டு, ஓடியா பார்ப்போம்.”
சிட்டாக ஓடினாள் ராசாத்தி. மணக்க, மணக்க கருவாடு பொரித்து, மிளகு ரசம் வைத்து, ஆவலாக சாப்பிடும் குழந்தைகளை கண்களில் நீர்மல்க பார்த்தாள் அஞ்சலை.
“”எல்லாரும் கிளம்புங்க. ஆயாவை பார்க்க ஊருக்குப் போறோம்.”
“”என்னத்தா… நிசமாகத் தான் சொல்றியா. எனக்கு நாளைக்கு ஸ்கூலில் தமிழ் வகுப்பு இருக்கு; லீவு போட முடியாது. டீச்சர் நைட்டிங்கேல் அம்மையார் பாடம் நடத்திட்டிருக்காங்க. இன்னைக்கு பாதி தான் முடிஞ்சுது… மீதி பாடம் நாளைக்கு நடத்துவாங்க. நான் போகணும் ஆத்தா…”
“”ஆத்தா எனக்கு நாளைக்கு கணக்கு பரிட்சை; நானும் போகணும். அடுத்தவள் சொல்ல, “”இங்க பாருங்க… ஒரு நாளைக்கு ஸ்கூலுக்கு போகாட்டி பரவாயில்லை. ஆயாவுக்கு உடம்பு சரியில்லையாம்… பார்த்துட்டு வரலாம்.”
பொழுது சாய்ந்து விட்டது. ஆள் நடமாட்டம் குறைய, கதவை பூட்டி, குழந்தைகளுடன் தெருவில் இறங்கி நடந்தாள் அஞ்சலை.
ராசாத்தி, தங்கைகளை அழைத்துக் கொண்டு முன்னால் நடக்க ஆரம்பித்தாள்.
“”அக்கா, நான் கணக்கு நல்லா போடுறதா டீச்சர் சொன்னாங்க. நானும் படிச்சு டீச்சராக தான் வருவேன். ஆத்தாவுக்கு பிடிச்ச மாதிரி நல்ல பெண்ணா நடந்துக்குவேன்.”
“”எனக்கு அப்பனை பிடிக்காது. ஆத்தாவை தான் பிடிக்கும்; நான் பெரியவளாகி ஆத்தாவை நல்லா பார்த்துப்பேன். நான் படிச்சு பெரிய ஆபிசராக வருவேன். இப்படி ஆத்தாவை நடக்கவிடாம, காரில் தான் கூட்டிப் போவேன்.”
சின்னவள் சொல்ல, “”நான் மட்டும் என்ன. ஆத்தாவை என் கண்ணுக்குள்ள வச்சு காப்பாத்துவேன். நைட்டிங்கேல் அம்மையார் போல, கஷ்டபடற நோயாளிகளுக்கு உதவுவேன்.”
இந்த இளம் பிஞ்சுகளுக்குள் இவ்வளவு கனவுகளா… மனம் நெகிழ்ந்தாள் அஞ்சலை.
“என்ன காரியம் செய்ய துணிந்தேன். பொட்ட புள்ளைங்கன்னு தூற்றினவன் முன்னாடி, இந்த புள்ளைகளை நல்லவிதமா உருவாக்கி வாழ்ந்து காட்டுவேன். எனக்கு கடைசி வரை என் பெண்ணுங்க துணையா இருப்பாங்க. எனக்கு அது போதும். இவர்களுக்காக நான் வாழ்வேன். இனி அந்த குடிகாரன் அடிக்க வந்தால், எதிர்த்து நிப்பேன். தேவையில்லாம என்னை அடிச்சு கலாட்டா பண்ணினா… நான் இருக்கும் போதே… இன்னொருத்தியை வச்சு குடும்பம் நடத்தி, என்னை கொடுமைப்படுத்தறதா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பேன்னு சொல்வேன். புள்ளைங்களுக்கு அப்பனாக வந்துட்டு போறதாயிருந்தா வா… இல்லாட்டி இந்தப்பக்கம் வராதே…’ன்னு கண்டிச்சு பேசுவேன்.
மனதின் எண்ணங்கள், நம்பிக்கையை தோற்றுவிக்க, தூரத்தில் தெரியும் கேணியை பார்த்தாள்.
“”கண்ணுங்களா வாங்க வீட்டுக்கு போகலாம்.”
முன்னால் நடந்தவர்கள் புரியாமல் திரும்பி, ஆத்தாவை பார்த்தனர்.
“”ஸ்கூலில் பாடம் நடத்துவாங்க. பரீட்சைன்னு சொன்னீங்க இல்லையா… வாங்க வீட்டுக்கு போவோம். ஞாயிற்றுக்கிழமை ஆயாவை போய் பார்த்துட்டு வருவோம்.”
அஞ்சலை சொல்ல, ஆத்தாவின் மனமாற்றத்திற்கு காரணம் தெரியாவிட்டாலும், உற்சாக மன நிலையுடன் அவளின் கைகளை பிடித்தபடி வீட்டை நோக்கி நடக்க தொடங்கினர்.

– ஜூன் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *