மீன் குஞ்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 3,853 
 

கனகன்,கடைக்குத் தேவையான குளித்துப் போட்டு நிற்கிற பெண்களைப் போல நீர்த்துளிகளுடன் சிலிர்த்துக் கொண்டிருக்கிற கிடக்கிற‌ மரக்கறிகளைத் தெரிந்து வாங்கிக் கொண்டு , சங்கானைச் சந்தையிற்கு முன்னால் இருந்த‌ சாமிச்சகோதரர் பலச்சரக்குக் கடையிற்கு சென்று சீனி தொட்டு பருப்பு,அரிசி,மற்றும் தாளினைச் சரக்குகள்…என கமலம் தந்த‌ பட்டியல் நீண்டு கொண்டு போறதைப் பார்த்த போது சிறிது கலக்கமும் தொற்றி விட்டது.இவன் ஓரளவிற்கே பணத்தைக் கொண்டு வந்திருந்தான்.கடைக்கு வாரவர்கள் சொல்லுற சாமான்களைச் சேர்த்திருக்கிறது வழமை தான்.கடைசியாக சந்தைக்கு வந்து சாமான்கள் வாங்கி மூன்று நாள்களாகிறதும் உறைக்கவே செய்தது.

.”அண்ணே ,கொஞ்ச பணம் குறையும் போல இருக்கிறது”என்றான்.முதலாளிக்கு கடைக்கு வார வியாபரிகளைத் தெரியும்.கனகனையும் நன்கு தெரிந்தவர்.எப்பவுமே சரியாய் பணத்தைக் கொடுத்து வாங்கிறவன்,தொழிலே வந்த களையிலே தடுமாறி விட்டிருக்கிறான்.”தம்பி,தேவையானவற்றை வாங்கு.அடுத்த முறை வார போது கொடுத்து விடு”என்று முக மலர்ச்சியைக் காட்டினார்.

ஒரு யாவாரி,வாங்குர யாவாரிகளைப் பற்றிய சுயத்தை எல்லாம் அறிந்து வைக்காமலா இருப்பார்கள்.அவருடைய அப்பரின் படம் சாமிப் படத்திற்குப் பக்கத்திலே ஊதுவத்திப் புகையுடன் அமைதியாக அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு இருக்கிறது.

அவர் தான் சிறிய பெட்டிக் கடையாக சந்தையின் அருகிலே தொடங்கியவர்.அந்த கடையில் வாங்கிறவர்களின் கிராமங்களிற்கெல்லாம் சைக்கிளில் அலைந்து திரிந்து அங்கிருந்தும் ஏதாவது கடைக்கு வாங்கலாமா?என ஆராய்ந்து ஆராய்ந்து வாங்கி எல்லாம் போட்டு வளர்ந்தவர்.வியாபாரிகள் கொண்டு வார பணத்தை விட சிற்சில செலவு சமயங்களில் அதிகமாகி விடும்.ஒரு யாவாரி ,கடன் கொடுப்பான் தவிர வாங்க விரும்ப மனமில்லாதவன்.

தூரம்.திரும்ப இன்னொருக்கா வர வேண்டுமே என்ற ஆயாசத்திலே வேறு வழியின்றி கடனாக வாங்குவார்கள்.

இவரும் அப்பரைப் போலவே கடையை நடாத்துகிறார். அதனால்,கிராமத்தில் இவரைக் காண்கிற போது “நல்ல முதலாளியாச்சே,என்று அவரோடு சந்தோசமாக கதைப்பது மட்டுமில்லை அயலவர்களிற்கும் கூறுவார்கள்.பல கிராமங்களிலிருந்து நெல் அறுவடையின் போது நெல்லு மூட்டை வாங்கிறவர்.சிலசமயம் அவருக்கும் கூட பணம் இடறுபட்டுறது நிகழ்ந்திருக்கிறது.அப்ப கடனிலே கொடுப்பார்கள்.தனது மகன் பகிர்,அல்லது தனபாலிடம் பணத்தை அடுத்தடுத்த நாளே கொடுத்து அனுப்பி விடுற நேர்மை இருக்கிறது.அப்படி வளர்ந்தவருக்கு யாவாரத்தைச் சொல்லியா கொடுக்க வேண்டும்.

இவன் தெற்கராலியிருந்து வருகிறவன்.ஒரு நாள் கறுவாடு தாரது கூட நிகழலாம்.இந்த இனப்பிரச்சனையை சிங்களத் தரப்பால் சுமக்க முடியாத நிலைக்கு வராமலா போகும்?அப்ப அடக்கி ஒடுக்கப்படுற இவர்கள் பெரிய வள்ளத்தில் கடலுக்குள் போவார்கள்.

இவருக்கும், இலங்கையிலும்’ மற்ற நாடுகளில் விடுதலைக்கு போராடுற குழுக்களில் இடம் பெறுகிற தொகை உடைய தமிழ் துவேசம் பிடித்தவர்களே அதிகார மட்டத்திலிருந்து பிரச்சனையை இழுத்துக் கொண்டு போறவர்கள் என்று தெரியாமல் இல்லை.தமது நிலைமையிருந்து இறங்க விரும்பாததாலே “புத்த பிக்குகள் தீர்க்க விடுகிறார்கள் இல்லை” என்ற சாட்டோடு நடை போடுகிறார்கள்.அவருக்கு கூட அரசியலைப்பற்றி நினைக்க‌ ‘சூடு’ ஏறுகிறதே’தனக்குள் சிரித்துக் கொண்டார்.

கனகன் வீட்டிற்கு வந்த போது கறியலிருந்து சாமான்களை இறக்க கமலம் உதவினாள்.பெரிய முதலாளி போல கடை மேசைக்கு பின்னால் இருந்த கதிரையில் மூன்று வயசு வசந்திக் குஞ்சு இருந்து அவனைப் பார்த்துச் சிரித்தாள்.வாழைப் பழச் சீப்பில் பழுத்திருந்த பழங்களில் மூன்றை பிடுங்கி எடுத்து ஒன்றை செல்லத்துக்கும்,கமல‌த்திற்கும் கொடுத்தான்.வசந்தி சாப்பிடுறதைப் பார்க்க இருவருக்குமே சிரிப்பு வந்தது.”என்ர குஞ்சு”என்று கமலம் தூக்கிக் கொண்டாள்.கடை பரப்பியாக்கி விட்டாச்சு.அவன் வசந்தியின் நெற்றியில் முத்தமிட்டு விட்டுப் போய் வீட்டுத் திண்ணையில் கட்டையைக் கிடத்தி விட்டான்.உடனேயே நித்திரையில் ஆழ்ந்து விட்டான். இனி பத்து பத்தரைக்குப் பிறகே எழும்புவான். பிறகு, கிணத்திலே குளியல். அவனும் வசந்தியும் கடையைப் பார்க்க கமலம் சமையலில் இறங்கி விடுவாள்.யாவாரம் ஆகி விடும்.ஒரு மணி போல மூடுற கடையை மூன்றைரைக்குப் பிறகு கமலம் திறப்பாள்.இவன் வாலையம்மன் கோவில் வாசிகசாலைக்கு ஒருக்காய்ப் போய் வந்து வீட்டு வளவில் வலைகளில் சிக்கு பார்க்க இறங்குவான்.ஐஞ்சு மணி போல நடேசன் வந்து சேர்வான்.ஏழு மணிக்கு வள்ளத்தில் ஏறினால்…பிறகு வாரது அதிகாலையில் தான்.மூன்று,நாலு நாளைக்கு ஒருக்கா சங்கானைச் சந்தைக்கு ஓட வேண்டியிருந்தது. அந்நாள்களில் சந்தையிலே மரக்கறிகளையும் வாங்கி வந்து விடுவான்.மற்றைய நாள்களில் பத்திரன் வீட்டிற்கு போய் உள்ளூர் விவசாயிகள் கொண்டு வார உடன் மரக்கறிகளை கடைக்கு வாங்கி வருவான். இப்படியாக …ஓடிக் கொண்டிருக்கிறது.

அடுத்த நாள் களைப்பு அதிகம் இருக்கவில்லை..கடையிலே வசந்தியோட வளையாடிக் கொண்டு யாவாரத்தைப் பார்த்தான்.ஆனால் இருட்டிக் கொண்டிருந்த காலநிலை கடல் குமுறக் காத்திருப்பதைக் காட்ட”நடேசு,இண்டைக்கு காத்தாக இருக்கும் வீட்டை போயிட்டு நாளைக்கு வா”என்று அனுப்பி விட்டிருந்தான்.வலையில் …கை வைக்கவே இல்லை.மன்னியே கமலத்தின் ஒரே சினேகிதி.பக்கத்து வீடு தான்.

அண்ணரும் தொழிலுக்கு போய் இருக்க மாட்டார்.எனவே கடையை மூடி விட்டு அண்ணர் வீட்டிற்கு குடும்பமாகவே போனார்கள்.பிரபாவும்,மஞ்சுவும் வசந்தியும் விளையாடிக் கொண்டிருக்க,கமலமும் ,மன்னியும் என்னென்னவோ உணவு தயாரிக்க‌ ,வாசம் வர அண்ணரும் இவனும்…அலட்டிக் கொண்டிருந்தார்கள்.அம்மாவிற்கு இப்ப ஏலாமல் போய்யிருந்தது.எழும்பி நடமாடுவார்.கயிற்றுக் கட்டிலிலிருந்து அவரும் இவர்களின் பேச்சில் கலந்து கொண்டிருந்தார்.ஒருநேரத்திற்குப் பிறகு குழந்தைகள் அம்மாவிடம் கதை கேட்க சூழ அமர்ந்து விடும்.சக்கரைச் சோறு தான் செய்திருக்கிறார்கள்.வடையும் சுடப்பட்டிருக்கிறது.கடைசியாக டீயையும் குடித்து விட்டு வார போது வசந்தி நித்திரையாகி விட்டிருந்தாள்.அவளை அப்படியே அனுக்காமல் அங்கேயே அவர்களோடு படுக்கையில் கிடத்தி விட்டு அவனும்,அவளும் அடிக்கிற குளிர் காத்துக்கூடாக வீட்டிற்கு வந்தார்கள்.கனகனிற்கு பக்கத்திலே படுத்திருந்த கமலத்தை அணைத்துக் கொண்டு மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சாமியாருக்கு அப்படி என்ன சிந்தனையோ?”சிரித்துக்கொண்டு கேட்டாள்.

“அடுப்பு மேடையை சிறிது நீளமாக்கி விட வேண்டும் “என்றான்.

அவளுக்கு சுள்ளெனக் கோபம் வந்தது.

” இப்ப‌ இருக்கிறது எனக்குப் போதும்.பெரிதாக இன்னொரு அடுப்பு போட்டு ஊரவர்களிற்கா சமைக்கப் போறோம்”என்று கேட்டாள்.

இப்படித் தான் இவன் சம்பந்தமில்லாமல் கனவுலகில் இருந்து பேசுவான்.

“மனுசனுக்கு அடுப்பிலே காதல் வரக் காரணம் என்னவோ?”கேட்டாள்.

“செல்லத்தை நீ வயித்திலே வைத்திருக்கிற போது சாப்பாட்டுக்கு மன்னி வீட்ட தான் ஓட வேண்டியிருந்தது.எனக்கு மட்டும் ஒரு மீன் குழம்பு அல்லது கறுவாட்டுக் குழம்பு வைக்கத் தெரிந்து,புட்டும் அவிக்கத் தெரிந்திருந்தால்…அப்படிப் போய் இருக்க வேண்டியிருக்காது அல்லவா?.ஒரு மீனவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டுமா ?,எனக் கதைக்கிறவர்கள் ஒரு மீன் குழம்பும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும்.விட்டு விட்டார்கள்”என்றான்.

“அது ,சரி!,இப்பவிருக்கிற அடுப்பிலே வைக்கலாமே ஏன்?இனொரு அடுப்பில் வைக்க வேண்டும்”கேட்டாள்

.”அம்மா தொட்டு நீ எல்லாம் எங்களை அடுக்களையில் அனுமதிப்பதில்லை.கல்வீடு கட்டுற போதே இப்படி ஒரு நடைமுறை வந்தால் தான்…வீட்டிலே ஆண் பிள்ளைகளிற்கும் சமைக்கப் பழகிறது…ஒரு சாதாரண விசயமாக வரும்.”என்றான்.தொடர்ந்து”மூன்றடியில் இருக்கிற மேடையை ஐந்தடியாக நீட்டினால் கூட சிமினியில் பெரிதாக மாற்றம் செய்ய வேண்டியதில்லை தான்”என்றான்.

அவளுக்கு ஒரு சந்தேகம் முளைத்தது.”ஏன் ,நான் வைக்கிறது குழம்பாய் இல்லையோ?”என்று கேட்டாள்.

“சுப்பராய் வைக்கிறே.ஆனால் ஒரு மீனவனுக்கு …வைக்கத் தெரியவில்லை என்பது கேவலமாகத் தெரியவில்லையா?”கேட்டான்.தொடர்ந்து அவனே அலட்டினான்.”அறுந்த காலனியாட்சிற்குள்ளாகியதில் கல்வி கற்கிற காலம் இருபது வயசையும் தாண்டி போய்க் கொண்டே இருக்கிறது. முந்தி எல்லாம் இருபது வயசுக்குள்ளே படிப்பு முடிந்து விடும். அப்ப‌ ,சமையல் கூட ஒரு பாடமாக இருந்திருக்கிறது.முக்கியமானது அறிவாளியாகவும் ,வீரர்களாகவும் இளைஞர்கள் இருந்தார்கள்.இப்ப ,பார் !,பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகள்.போதாக் குறைக்கு சிங்கள நாடாக்கும் குள்ள நரித் தனம் அரசிற்கு.நிம்மதி இல்லை.ஒழுங்காய் மீன் பிடிக்க முடியிறதில்லை.சதா சிந்திக்கும்படியாய் தள்ளி விட்டிருக்கிறார்களே”

கமலத்திற்கு அவன் மன நிலை புரிந்தது.”ஆனால் ,ஆண் சமைப்பது வெட்கமில்லையா?”என்று நறுக்கெனக் கேட்டாள்.”வீட்டிலே எனக்கு சமையல் கற்றுக் கொடுப்பது வெளியில் யாருக்குத் தெரியப் போகிறது.”என்றான்.உள்ளுக்குள் ஒரு சமூக அந்தஸ்து கிடைத்திருந்தால் இந்தக் கேள்வி எழுந்திருக்காது..என நினைத்துக் கொண்டான்.

“உங்களிற்கு வெட்கமாகத் தெரியவில்லையா?”என்று விடாமல் கேட்டாள்.

“பழைய வாழ்வு,சிறப்பை எல்லாம் அடிமை வாழ்வில் பறி கொடுத்து விட்டு இருக்கிறோம்.”என்ற பதிலை சலிப்புடன் கூறினான்.

இடையில், “நானும் ஒரு கறியை வைத்தால் உனக்கும் வேலை குறையும் அல்லவா?,உனக்கும் ஒய்வு கிடைக்குமே”என்றான்.”எப்படி?’விளங்காமல் கேட்டாள்.”நீ குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.நீ சமைகிற போது நான் ..குழந்தையைப் பார்க்கலாம்.கவனம் சிதறாதல்லவா”என்றான்.

நடைமுறைக்கு சாத்தியமில்லாதவற்றை எல்லாம் கற்பனை பண்ணிக் கொண்டு எல்லாரையும் குழப்புற பிறவியாய் இருக்கிறானே ‘என்று பச்சாபப்பட்டாள்.”சாமியார் யோசிக்கிறதை மூட்டை கட்டி வைத்து விட்டு நல்ல பிள்ளையாய் நித்திரைக் கொள்ளலாம்”என்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.”ஆகட்டும் தேவியே”என்றான் முகத்தில் நகை படர.வெளிய ஊய்ங் என அடிக்கிற பலமாக காற்று தூங்க விடும் போலத் தெரியவில்லை.எப்படியும் இவளை தாஜா பண்ணி குறைந்த பட்சம் சமைக்கப் பழகி விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.

“இந்த விசர் பேச்சுக்களைக் கேட்காமல் ,குழந்தை என்ன செய்கிறாள்? என்ற பதற்றமில்லாமல் இருக்க‌ அங்கேயே நின்று விட்டிருக்கலாம்’என்ற யோசனையும் அவளுக்கு ஏற்பட்டது.இவள் தலையில் புரட்சிக் கருத்துக்கள் எல்லாம் ஏறாது என்பதும் அவனுக்கு புரியத் தான் செய்தது.அன்றைய நள மகாராசனே சமையல் கலையில் நிபுணனாக விளங்கி இருக்கிறான்.நளவெண்பாவே அவன் வரலாறைக் கூறுகிறது.இன்று ஆண் சமைப்பது வெட்கக் கேடான விசயம்.,இது மாற்ற‌மில்லை, ஒரு சமூகத் தடைச் சட்டம்.

இப்படியான‌ அடிமை விதிகள் எல்லாம் திரும்பத் திரும்ப ஏற்றப் பட்டு சமூகமே திரைந்து போய்க் கிடக்கிறது.ஆண் சமைக்கிறதால் ஒன்றுமே குறைந்து போய் விட மாட்டான். அரச‌ இராணுவக் கட்டமைப்புக்குள் போனாள் சமைக்கிறது ஒரு கட்டாயப் பாடம். பெண்னடிமைத் தனத்தை கமலம் மட்டுமில்லை நம் சமூகப் பெண்களும் ஒருபோதுமே உணர போவதிலை.பெருமூச்சு விட்டான்.

காற்றுச் சத்தம் காதை பிளந்து கொண்டிருந்தது.கமலம் அவனுடன் ஒண்டிப் போய் கிடந்தாள்.அவனுத் தெரியும் .கமலம் அவனுக்கு குழம்பு வைக்கிறதை சொல்லிக் கொடுப்பதை இழுத்துக் கொண்டே போவாள். சொல்லிக் கொடுக்கப் போறதில்லை .மிஞ்சிப் போனால் “காதோடு தான் ரெசிபியைச் சொல்கிறேன்”என்று விளையாட்டாகச் சொல்லலாம்.

பிறகு, குழம்பு சொதியாகி விடப் போகிறது.வைத்தால் கூட அவன் மட்டுமே சாப்பிடக் கூடியதாக இருக்கப் போகிறது.அவள் அவனுடைய பட்ஜைச் சேர்ந்தவள் என்பதால் என்றைக்குமே ஆசிரியையாக முடியாது என்ற விதியும் நெருடுகிறது தான்.அவனுக்கு அம்மாவே சிறு பையனாக இருக்கிற போதே சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்.அதே நிலை தொடரக் கூடாதென்றே அலட்டுகிறான்.அலம்புகிறான்.மன்னியிலே இவளுக்கு பாசம் கூட.அவனை நம்பா விட்டாலும் கூட மன்னியை நம்புபவள்.வசந்தியை அங்கேயே கிடத்தி விட்டு வந்தது அந்த நம்பிக்கையால் தான்.இந்த குமுறல் காற்றிலும் பிள்ளையைப் பற்றி ஒரு பேச்சு வராததிற்கும் அதுவே காரணம்.

ஆனால் ,அவனின் விசர்ப் பேச்சுகள்,மன்னியின் ஐந்து வயசு பிள்ளைக்கு மீன் குழம்பு வைக்கிறதைக் கற்றுக் கொடுக்க வைக்கும்.அவன் இனி கற்று என்ன செய்யப் போறான்?. ஆனால், நாளைய மீனவன் ஒருவன் கற்றுக் கொள்ளப் போறானில்லையா?இப்படித் தான் ஒன்றைச் செய்ய வேண்டுமென்றால் நேரடியாகச் செய்ய முடிவதில்லை.தேவையே இல்லாமல் தலையை சுத்தி,சுத்திப் போய் மூக்கைத் தொட வேண்டியிருக்கிறது

.”சாமியார்,சாமியார் ..”என நக்கலடிப்பைக் காணவில்லையே என்று பார்த்தான்.பாவம் களைத்துப் போய் இருக்க வேண்டும்.அந்த கடும் சத்தத்திலும் நித்திரையாகி விட்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *