கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 7,238 
 

எல்லா வாக்கியங்களையும் என்னால் சுலபமாக நம்பிவிட முடியும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதனை ஈஸியாக நம்பிவிடுகிறவன் நான். என்னால் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் எப்போதும் நம்ப முடிவ தில்லை. ‘நானும் என் அப்பாவும் நண்பர்கள் மாதிரி’ என்று யாராவது சொன்னால், எனக்கு சிரிப்பும் அவநம்பிக்கையும் சேர்ந்தே வரும். காரணம் வெகு எளிமையானது. தனது அனுபவங்களை உலகின் பொது அனுபவங்களாக உருவகித்துக்கொள்வதுதானே மனித இயல்பு? நானும் அப்படித்தான்!

உதாரணமாக, இந்தியாவின் பெரும் பிரச்னை வேலையில்லாத் திண்டாட்டம் என்று நினைத்துக்கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தேன். அதிசயம் பாருங்கள், எனக்கு வேலை கிடைத்தவுடனே அந்தப் பிரச்னை தீர்ந்து விட்டது. தற்போதைய பிரச்னை ‘வேலையின்மை’ அல்ல, எந்த வேலையாக இருந்தாலும் உழைத்து முன்னேற வேண்டும் என்கிற ‘நெருப்பு’ இளைஞர் களிடத்தில் இல்லை. அதுதான் பிரச்னை என்று பார்ப்போரிடம் விவாதித்து வருகிறேன்.

வேலைப் பிரச்னை மாதிரியே அனைத்தையும் பார்த்துப் பழகிய என்னால், ‘தந்தை & மகன்’ நல்லுறவை நிச்சயம் கற்பனை செய்யவோ ஏற்கவோ முடியாது. காரணம் எனது தந்தை. அவருக் கும் எனக்குமான உறவு!

என் அப்பா என்னைப் போல இல்லை. ஆனால், பார்க்கிற எல்லோரிடமும் ‘என் பையன் என்னை மாதிரி’ என்று சொல்லிச் சொல்லி என்னை எரிச்சல்படுத்துவார். பார்ப்பதற்கு நான் அவரை மாதிரி இருக்கலாம். ஆனால், நான் பிறக்கும்போதே புத்திசாலி. என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கியபிறகும் பிழைக்கத் தெரியாத ஒரு தவளை என் அப்பா. அவருக்குத் தெரிந்தது கிணற்றளவு. நானோ பறவை மாதிரி.

அப்பா கிராமத்து மனிதர். அவரைப் பெற்றாரே, தாத்தா என்கிற புண்ணியவான்… அவருக்கு இருந்தது மொத்தம் ஏழு ஏக்கர் விவசாய நிலம். தாத்தா ஏழு ஏக்கரில் எப்பவும் கம்மியான மகசூல் எடுப்பதே வாடிக்கையாம்… ஆனால், வீட்டில் அமோக விளைச்சல். மொத்தம் பனிரெண்டு பிள்ளைகள்! அதில் நாலு பெண்கள். அவர்களைக் கட்டிக்கொடுத்த கடனுக்கு மூன்று ஏக்கரை விற்ற பிறகு நாலு ஏக்கரும் எட்டு ஆம்பளைப் பிள்ளைகளும் மிஞ்சினார்கள். இது விளங்குமா? இந்தியப் பொருளாதாரம் நினைவுக்கு வருகிறதா இல்லையா!

இந்த நசிந்த குடும்பத்தில் கடைசிப் பிள்ளைக்கு முந்தைய பிள்ளையாகப் பிறந்த தவப் புதல்வன் என் அப்பா. நாலு ஏக்கருக்கான விளைச்சலை எப்படிப் பகிர்வது என்கிற சமாதானப் பேச்சுக்கள் அரிவாள், கடப்பாரை சகிதம் அடிக்கடி நடைபெறுமாம். அப்பாவோ பயந்தாங்கொள்ளி. எனவே, அவர் தனக்கான அரை ஏக்கரைப் பற்றி கவலைப்படாமல் பள்ளிக்கூடம் போனாராம்.

ஊரிலிருந்து ஒன்பது மைல் தூரம் நடந்து நடந்து படித்த, ஊரின் ஒரே ஒரு எஸ்.எஸ்.எல்.சி. படிப்பாளி அவர். மேலே படிக்கவேண்டும் என்றால் எழுபத்தைந்து கிலோ மீட்டர் நடந்தால்தான் உண்டு. அங்கேதான் மதுரையும் காலேஜும் இருந்தது. எப்படி நடந்தாலும் தினம் தினம் காலேஜ் ‘லேட்’ ஆகிவிடும் என்று நினைத்தார் போல… தான் படித்த பள்ளிக்கூட வாத்தியார் ஒருத்தரைக் கெஞ்சி… அந்த சின்ன டவுனிலேயே ஒரு வேலையைத் தேடிக்கொண்டாராம்.

வேலை என்றதும் பெரிசாக எதையும் கற்பனை பண்ணிக்கொள்ள வேண்டியதில்லை. பருத்தி வியாபாரி ஒருவரின் கமிஷன் கடையில் கணக்கு எழுதுகிற வேலை. என்னை மாதிரி கௌரவமான உத்தியோகம் இல்லை. காலையில் சீக்கிரமே எழுந்து போய் எட்டு மணிக்கெல்லாம் கடையைத் திறந்து ஊதுவத்தி கொளுத்திவைத்து, கடையைப் பெருக்கி, வருகிறவர்கள் அமரப் பாயை தட்டி விரித்துப் போட்டு, மண் பானையில் தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு உட்கார்ந்தார் என்றால் ராத்திரி ஒன்பது மணி வரைக்கும் சிறிய கணக்குப்பிள்ளை மேஜையின் முன் கேள்விக்குறியாய் வளைந்து அமர்ந்து நாள் பூரா கணக்கு எழுதிக்கொண்டே இருப்பார்.

வேலைக்குவைத்த முதலாளிக்கு அப்பாவை ரொம்பவே பிடித்துப்போய்விட்டதாம். ‘கணக்குல நீ புலிய்யா!’ என்று பாராட்டுவாராம். அது ஓரளவு உண்மைதான். அப்பாவுக்கு கணக்கு நன்றாக வரும். நானே பார்த்திருக்கிறேன். கடையில் அவர் பாட்டுக்கு குனிந்து கணக்கெழுதிக்கொண்டு இருப்பார். முதலாளி, வந்திருக்கும் வியாபாரியிடம் அவர் அனுப்பிய பருத்தி மூட்டை எண்ணிக்கை, விலை நிலவரம் எல்லாம் பேசிக்கொண்டே இருப்பார். திடுதிப்பென அப்பா பக்கம் திரும்பி, ‘‘….. அப்படின்னா இவருக்கு நாம் எவ்வளய்யா தரணும் அழகரு?’’ என்று கேட்பார். வேறு எதையோ எழுதிக்கொண்டு இருக்கும் அப்பா மறு வினாடியே ‘‘பன்னன்டாயிரத்து நானூத்தி இருவத்தேழு வருதுங்க. போன மார்கழில ஒரு நாலாயிரத்துச் சொச்சம் வாங்கினாப்ல… அதைக் கழிச்சுட்டுப் பாத்தா, எட்டாயிரத்தி நூத்தியம்பது தரணும்’’ என்பார். முதலாளி பிரமிப்பார்.

ஆனால், நான் பிரமிக்க ஏதும் இல்லை. ஏதோ கணக்கு நன்றாக வருகிறது என்பதற்காக மட்டும் அப்பாவைப் பிடித்துப்போகுமா என்ன? நான் கேட்ட எதையும் அப்பா உடனே வாங்கித் தந்தது கிடையாது. நல்ல துணிமணி கிடையாது. எதைக் கேட்டாலும் குடும்பக் கஷ்டம் என்று பஞ்சப்பாட்டு பாடுகிறவராக இருந்தார். என் படிப்பு பற்றி ஓயாமல் பேசி அறுப்பார். என் வாத்தியார்களிடம் வந்து நான் இருக்கும்போதே அவர்களிடம் என் படிப்பு குறித்து கேட்பார். ஒரு பையனுக்கு இதைவிட வேற உபத்திரவங்கள் இருக்க முடியுமா?

எப்படியோ இழுத்துப்பிடித்து, பஞ்சப்பாட்டுப் பாடி, என் படிப்புக்கான செலவுகளைச் செய்தார். நானும் ஓரளவு படித்து ஒரு ஆளாகி எனது திறமையில் ஒரு வேலைத் தேடி… ‘மெடிக்கல் ரெப்’பாகச் சேர்ந்து ஏழெட்டு வருஷத்தில் நாலைந்து கம்பெனிகள் மாறி இப்போது ‘ஏரியா சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்’. எனக்குக் கீழ் நாலைந்து ‘ரெப்’புகளை மேய்த்து வருகிறேன். எந்த மாதிரிச் சூழ்நிலையையும் சமாளிப்பேன். என் திறமை முழுவதும் வாயிலும், நான் பேசுகிற இங்கிலீஷிலும்… சற்றும் தயங்காமல் நான் சொல்கிற பொய்களிலும்தான் இருக்கிறது.

நிஜம்தான்… தயங்காமல், தடுமாறாமல் வினாடியில் நூறில் ஒரு பங்கு நேரம்கூட யோசிக்காமல் அனிச்சையாகக் கோவையாக என்னால் பொய்கள் சொல்ல முடியும். மேலதிகாரிகளிடம், சகாக் களிடம், டாக்டர்களிடம், நோயாளி களிடம், சில பெண்களிடம் என்று என் திறமை செல்லுபடியாகி வருகிறது. இதைச் சொல்வதில் எனக்குக் கூச்சம் ஏதும் இல்லை. இது எனது இன்றைய வாழ்வின் நியாயம். நீங்கள்தான் இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சரியாகக் கணக்குகளைச் சொல்வது எப்படி என் அப்பாவின் திறமையோ, அது போலத்தான் இது… இல்லையா?

இப்படியெல்லாம் நினைப்பவன், பேசுகிறவன் நான். ஆனால், போன வாரம் என்ன நடந்தது தெரியுமா?

சென்னையிலிருந்து வேலை விஷயமாகத் திருச்சி வந்தேன். பஸ் பயணம். காலையில் இறங்கிக் கொட்டாவி மணக்க டீ குடித்து சிகரெட் பற்றவைக்கும்போதுதான் கவனித்தேன். என் செல்போனைக் காணோம். ‘சுருக்’கென்றது… பாதி டீயைக் கொட்டிவிட்டு பையெல்லாம் தேடினேன். ‘ம்ஹீம்’… பஸ்ஸோடு போய்விட்டிருக்க வேண்டும். லேசான பதற்றம் பரவ, ‘பூத்’துக்குப் போய் எனது செல்போன் நம்பரை டயல் செய்தேன். ‘நாட் ரீச்சபிள்’ என்று வந்தது. மறுபடி பண்ணினேன். ‘நாட் இன் யூஸ்’ என்று வந்தது. என்ன பண்ணுவதென்று தெரியவில்லை. அடுத்த மூன்று நாட்களுக்கு எக்கச்சக்கமான வேலை இருக்கிறது. எல்லாவற்றையும் ‘பக்கா’வாக முடிக்க வேண்டும். நிறைய அப்பாய்ண்ட் மெண்ட்டுகள் ஃபிக்ஸ் பண்ண வேண்டும்.

யோசனையுடன் பக்கத்து பூத்தில் நுழைந்து போனை எடுத்தேன். மனசு பகீரென்றது. அனைத்து போன் நம்பர்களும் எனது செல்போனில்தான் ஸ்டோர் பண்ணிவைத்திருக்கிறேன். ஒரு நம்பர்கூட எனக்கு ஞாபகத்தில் இல்லை. நான் பார்க்கவேண்டிய டாக்டர்கள், எனது ஸோனல் மேனேஜர், ரெப்ரஸன்டேடிவ்கள் என எந்த எண்ணும் என் நினைவில் இல்லை. விஸிட்டிங் கார்டுகளைத் தேடிப் பையில் துழாவினேன். அதில் இருந்த இருபத்தேழு கார்டுகளும் என்னுடை யவை. என் வீட்டு எண், மொபைல் எண் மற்றும் ஆபீஸ் எண் மட்டுமே அதில் இருந்தன.

ஆபீஸ§க்குப் போன் அடித்தேன். ‘ரிங்க்’ போய்க்கொண்டே இருந்தது. பத்து மணிக்கு மேல்தான் ஆபீஸ் என்பது நினைவு வந்தது. தலை கிறுகிறுத்தது. வீட்டுக்கு போன் செய்தேன்.

‘‘ஏங்க… எவ்வளவு நேரமா உங்க மொபைலுக்கு ட்ரை பண்றது? எங்க இருக்கீங்க!’’

‘‘ப்ச்! மொபைல் தொலைஞ்சிருச்சுடி.. என்ன விஷயம்?’’

‘‘அச்சச்சோ!’’

‘‘இரு, முதல்ல நீ எதுக்குத் தேடினே?’’

‘‘உங்கப்பா இறந்துட்டாராம். ஊர்ல இருந்து போன் வந்துச்சுங்க. உடனே கிளம்பி ஊருக்குப் போங்க… நான் நேரா அங்க வந்துர்றேன்.’’

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்பாவின் மேல் பெரிய பாசம் எதுவும் இல்லைதான். என்றாலும் நன்றாயிருந்த அவர் திடுதிப்பென்று இறந்ததாகக் கேட்டதும் ஒரு மாதிரியாக இருந்தது.

‘‘என்ன பேச்சையே காணோம்? வந்து சேருங்க… கடமையைக் கழிக்கணு மில்ல’’ மனைவி போனை வைத்தாள். மனதில் ஒரு முள் தைத்தது. அப்பா வைப் பற்றி என்றுமே அவளிடம் நான் நல்லவிதமாகப் பேசியதில்லை. பின் அவளை எப்படிக் குறையாக நினைப்பது?

அடுத்து என்ன செய்வதென்ற தீர்மானம் ஏதுமின்றி சட்டையைத் தொட்டுப் பார்த்தேன். நூற்றைம்பது ரூபாய்தான் பர்ஸில் இருந்தது. ஏடி.எம்&மில் பணம் எடுத்துக்கொண்டு… ஆபீஸ் திறந்ததும் தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பலாம் எனத் தோன்றியது. ஏடி.எம்&ஐத் தேடி நுழைந்து என் கார்டை உள்ளே திணிக்கப்போகையில்தான் தோன்றியது. இது புதிய அக்கவுண்ட். பின் நம்பர், இப்போதுதான் வந்தது. அதனையும் மொபைலில்தான் வைத்திருந்தேன். நான்கு இலக்க நம்பர்… இரண்டில் ஆரம்பிக்கும். மனதில் இருந்த எண்களைப் போட்டேன். தப்பாக வந்தது. மறுபடியும் எண்களை மாற்றிப் போட்டேன். இம்முறையும் தப்பு. திரையில் ‘ஸாரி’ என்று எழுத்துக்கள் கேலி செய்தன. அப்பா நினைவுக்கு வந்தார்.

எனது எஸ்.எஸ்.எல்.சி, ப்ளஸ் டூ தேர்வு எண்கள், தான் வேலை பார்த்த கடையின் அத்தனை அக்கவுண்ட்டு களின் எண்கள், நூற்றுக்கணக்கான போன் நம்பர்கள் என்று எல்லாவற்றை யும் தன் மூளையில் பதித்துவைத்திருந்த அப்பா என்னைப் பார்த்து புன்னகை செய்வது போலிருந்தது.

குபுக்கென எனக்கு அழுகை வந்தது!

வெளியான தேதி: 26 மார்ச் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *