பெற்ற தாயும் பிறந்த நாடும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 14,106 
 

(1981 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘சீவன் போகமுன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர கண்ணில முழிக்குங்களெண்டு நான் நம்பேல’

– இவள் பாவி என்ன, எடுத்தாப்போல ‘சகுனி’ போலச் சொல்றாள்

‘அது பாவம் மனிசி, பெத்ததுகளைக் கடைசியாப் பாத்திட்டுக் கண்மூடவெண்டு கொட்டுக்க சீவனை வைச்சுக் கொண்டு படுற பாட்டைக் கண்குடுத்துப் பார்க்க கறுமமாக் கிடக்கு’

கள்ளி, மனிசியில் உருகுமாப் போல சும்மா சாட்டுக்கு மாய வித்தை காட்டுறாள்.

‘அது சரி, தந்தி எப்ப குடுத்ததாக்கும்?’

‘வேளையோட குடுத்திருப்பினம் தானே?’

‘அக்காள்….. வாய் புளிக்குது. உந்த வெத்திலைத் தட்டத்தை இஞ்சாலையும் ஒருக்கா அரக்கி விடு’.

‘ஓ, வருத்தம் பாக்கிற சாட்டா, தாக்கற இருந்து. வெத்திலையும் சப்பிக் கொண்டு வியளம் பறைய வந்திருக்கிறாளுகள்.’

‘தந்தி குடுத்து இரண்டு நாளாப் போச்சு இஞ்சால இன்னும் ஒரு மறுமொழியும் வரக் காணன் என்ன சங்கதி?’

‘வயிலசில பேசினாச் சுறுக்கில கிடைக்குமல்லே?’ ‘தந்தி என்னெண்டு குடுத்து துகளோ?’ ‘ஆச்சிக்குக் கடுமை, உடன் புறப்பட்டு வாருங்கோண்டு தான் அடிச்சவையாம்.’

‘ஒரு பிள்ளையளிட்டயிருந்தும் மறுமொழி வரேல்லயாமோ’.

இதேன் இவளவே இதுகளைக் கதைச்சு விசேண்டியத்தை ஊட்டுறாளவையோ தெரியேல்ல.

‘இல்ல…. பாவம், தேப்பன் மனுசன் தந்தி குடுத்துப் போட்டுப் பொஞ்சாதிக்குப் பக்கத்திலயிருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கு’.

வேண்டிப் போட்ட வெத்தில பாக்குச் சமையப் போகுதாக்கும். தேப்பனைத் தின்னியளாட்டம் மனிசனிலயும் பரிவு காட்டிப் பறையிறாளவ.

‘தந்தியள் அந்தந்தத் தேசங்களுக்குப் போய்ச் சேந்ததோ ஆர் கண்டது?’ ஒருத்திக்கு ஒருத்தி கதையில கோசு போகாறாகள் போலத் தெரியுது. ‘தெல்லிப்போமில கதைச்சாலென்ன?’

‘தங்கச்சிமாரே, உங்களைக் கும்புட்டுக் கேக்கிறன். உந்த வாயளை எப்பனுக்கு அடக்கிக் கொண்டு அலட்டாமல் சும்மா கிடவுங்கோ’

புண்ணியவதி, விடாதை உவளவேயின்ர குலுகுலுப்பைய உப்பிடி அடக்கி வையண.

‘வருத்தக்காற மனிசிக்கு ஏதும் பணிவிடை செய்ய வந்தனீங்களோ, உங்கட சலிப்புத் தீர்க்க வந்தனீங்களோ’

நாச்சியார் நல்ல நறவிசாக் கேட்டுக் கிழிக்கிறாள். அச்சா….

டியே, பொறுங்கோடியாத்தை பிள்ளையளக் காண்ற ஏக்கத்தில மனிசி புழுவாத் துடிச்சுப் பதகளிக்குது. உங்கட விடுப்புக் கதையால பொடியன் வரமுந்தியே மனிசி போயிடும். எப்பன் மெல்லப் பறையுங்கோவன்.

‘இதேன் உவள் பாவி இதுக்க சமன்படுத்திறாள்? என்ன சம்பந்தஞ் செய்ய வந்தவளே?’

‘மூத்த பொடியன் எந்த நாட்டிலயாக்கும்?’

‘அங்க பார் பேந்தும் துவங்கியிட்டாளவ. இவளவே சரக்குக் கண்ட இடத்தில பிள்ளை பெறுவாளுகள் போலக் கிடக்கு.’

‘பொடியன் யேமனியில்….. கப்பல்ல வேலை செய்யிதாம்.’

‘ராப்போலாப் படிச்சுப் பாஸ் பண்ணிப் போட்டு, கப்பல்ல வேலை செய்யிறது இங்கிஷையெண்டு மற்றவைக்கு நசுக்கிணாமல் புட்டுக்காட்டுற கெட்டித்தனம்,

அப்புக்காத்துமாரை விட எங்கட ஊர்ப் பெண்டுகளுக்குத்தான் இருக்கு.’

‘நடுவிலான் எந்த நாட்டில?’

‘லண்டன் சீமையில் இஞ்சினியருக்குப் படிச்சுப் போட்டு, அங்க ஏதோ பெரிய வேலையில கொழுவியிட்டானாம்.’

‘அப்ப, இளையவன்?’

‘படிச்சிட்டு வேலையளுக்கு எழுதடாவெண்டு எழுதிப் போட்டு….. களைச்சுப் போய் கடைசியா அந்தப் பொடியும் வெளிநாட்டுக்குப் போட்டானாம்’

பெற்றவள் புண்ணியவதி. ஆனா இவளவைக்குப் பொறாமை பிடிச்சிட்டுது. இவளவே ஒருக்காலும் உருப்படாளவை.

‘எடிய புள்ள, வெத்திலத் தட்டத்துக்க நாறப்பாக்கிருந்தா ஒரு கடி புளவு தாண

இவளவேக்குக் கதை கண்ட இடம் கைலாசம். அஞ்சு நிமிட்டில ஒரு சேனை வெத்தில சமைஞ்சு போச்சு.

‘அது கிடக்க, மோள்காறி எந்த நாட்டிலயாக்கும்?’ ‘பொடிச்சி சிங்கப்பூரில’ ‘அது பெட்டையும் கலியாணம் முடிச்ச கையோட சிங்கப்பூருக்கப் போட்டுது’. ‘ஓ பின்ன, கட்டின மாப்பிளை விடுறானே? கூட்டிக் கொண்டு போட்டான்.’ ‘ஓ, குடுத்திட்டினம். ஆனா, பொடிச்சி பெறுமாதம். எக்கணம் பயணங்கியணம் வைக்க ஏலுதோ?’

‘என்ன இந்தச் சுறுக்காயோ’.

‘அது சில பெண்டுகளின்ர தேகவாசி… தொட்டால் போதும் உடன பத்தியிடும்.’

‘தேகவாசியோ ஊர்வாசியோ ஆர் கண்டது.’

உதேன் ‘தக்கு’ வைச்சுப் பேசுறாளுகள். சொடுகு பொறுக் காட்டி உவளவேக்குப் பொச்சம் அடங்காது.

‘பெட்டை எங்க இருந்தாலும் ஏதோ விக்கினமில்லாமல் சுவமாப் பெத்து, தாய் வேற புள்ள வேறயா வந்தாக் காணும்.

‘இப்ப ‘மோள்க்காறிய நினைச்சுத்தான் மனிசி ஆகத் தவிச்சுத் துடிக்குது’.

‘பெண்ணாப் பிறந்தவளுக்குத்தானே பெண்ணாப் பிறந்த பிள்ளையின்ர அருமை தெரியும். ஆணாப் பிறந்தவன் சேறு கண்ட இடத்தில மிதிச்சு, தண்ணி கண்ட இடத்தில கழுவுற சாதிதானே? தந்தி கண்டதும் பொடிச்சியை அவன் பொடியல்லோ கூட்டியந்து விட்டிருக்கவேணும்.’

‘எப்பிடியோ பெத்தவளுக்குப் பொம்பளப் புள்ளயில் தானே கரிசனை இருக்கும்.’ ‘ஓ பின்ன என்ன. பெத்தவளுக்குப் பெட்டைக் குஞ்சுகளாலதானே ஆத்தி’.

‘ஆயிரம் ஆம்புளையளிருந்தென்ன… வீட்டில ஒரு பொம்பளைக்கு ஈடாகுமா? இப்ப அந்தப் பெட்டைக் குஞ்சு நிண்டால் பெத்தவளின்ர ஆத்துமக் கொதி

எப்பனாவது தணியும்’.

‘உவ அஞ்சாறு பெட்டையள அடுக்கடுக்காப் பெத்துப் போட்டாவாக்கும். அதுதான் வெப்பியாரத்தில் பெருமையடிக்கிறா. அந்தக் காலத்திலேயே அஞ்சு பிள்ளைப் பெத்தா அரசனும் ஆண்டியாவா’ னெண்டு என்னும் பொருதன் பாடியிருக்கிறான். இந்தக் காலத்தில எப்பிடியிருக்கும்.?

‘பணத்துக்கு ஆசைப்பட்டு ஆம்புளப் புள்ளையள் பிறதேசம் போட்டினம். பெத்தவள் விழுந்து கிடந்து தவிக்கேக்க தண்ணிச் சொட்டுக் குடுக்க வீட்டில பிள்ளையளில்ல’.

‘ஆமோ, ஆரும் பொருள் பண்டம் தேடி வசதியாகச் சீவிக்க விரும்புறது புழையே? டியே, இந்த உலகத்தில் பணத்துக்கு ஆசைப்படாதவே ஆர் இருக்கினம்?’ |

‘பின்ன என்ன, இஞ்ச உழைச்சு நேர் சீராய்ச் சீவிக்க ஏலுமெண்டா, தங்கமான பொடியளெல்லாம் சோணாவாரியாக அள்ளுப் பட்டுக் கொண்டு பிறந்த நாட்டைவிட்டு ஏன் பிறதேசங்களுக்கு ஓடுதுகள்?’

பொறுப்பாய்த் தான் கேட்டிருக்கிறாள். வகை சொல்றவே முழிசிக் கொண்டிருக்கினம்.

‘அப்ப உது ஆற்ர சீத்துவக் கேடு?’

எங்க, இதுக்கு மறுமொழி சொல்லுங்கோ பாப்பம்? ஓ….., உது ஆற்ர சீத்துவப் புழை?

‘உதுகளைப் பற்றிப் பறையாமல் மூடி மறைச்சுக் கொண்டு அமசடக்கமா இருக்கிறதால தான் நெடுகலும் இந்தச் சில்லெடுப்பு’.

‘இப்ப பாக்கிறியள் தானே…. பத்து மாசம் சுமந்து நொந்து பெத்து வளத்துச் சீராட்டித் தாலாட்டி ஆளாக்கியவள் படுக்கையில் விழுந்திட்டாள். பெத்த பிள்ளையள் தாயின்ர ஆவத்துச் பம்பத்துக்கு உதவ அருகில இல்ல. இதுவும் ஒரு சீவியமே?’

‘இது ஆற்ற சீத்துவக் கேடு?’

‘நீ என்ன சொல்றாய்: பிள்ளைகளின்ர சீத்துவக் கேடே?’

‘ஏன்? அது பாவங்களில் பழி போடுவான்?’ ‘பின்ன, பெத்ததுகளின்ர பிழையே?’

‘அப்ப….. ஆற்ர குற்றம்?’

‘எல்லாம் உடையான் மூப்பு. எல்லாச் சட்டங்களும் அவன்ர கைத்தடியாப் போச்சு. அதுதான் சங்கதி.’

‘இதுபோலத்தான் எக்கணம் புறந்த நாட்டுக்கு ஆவத்துச் சம்பத்து வந்தாலும் ஆபத்துக்குதவ ஆமான ஆக்களிருக்காயினம்.’

‘சரியாச் சொல்லிப் போட்டாய். இப்ப பெத்த தாய்க்கு நடக்கிறதுதான் நாளைக்குப் புறந்த நாட்டுக்கும் கட்டாயம் நடக்கும்’.

‘உண்ணாண நீதான் தீர்க்க தரிசியாட்டம் சரியாச் சொல்றாய். ஆனா, ஆரும் கேட்பாரில்லை’.

‘இதுகளை உடையான் தெரிஞ்சும் தெரியாதவன் மாதிரிச் சாதுபோல நடக்கிறான். சனங்களும் கெலிச்சுப் போய்க் கண்மூடிக் கொண்டிருக்குதுகள்’.

‘நீ நாரதர் மாதிரி சும்மா இருக்கிறவையத் தூண்டிவிட்டுக் குழப்பப் பாக்கிறாய். தருமர் போல மண்டபத்தில் இருக்கிற உடையானை இதுக்குள்ள ஏன் கொண்டு வந்து மாட்டுறாய்?’

‘உடையான் தானே ஆளுக்கு எட்டுப் பரப்புத் தாறெண்டு மாட்டி வைச்சான் – இந்தச் சூத்திரம் இவளவேக்குத் தெரியலயே’.

‘உடையானைச் சொன்னோடன உனக்குக் கோவம் வருதே, அவன் என்ன ஆகாயத்தில இருந்தே வந்தவன்? எல்லாம் அவன்ர சீத்துவக் கேடுதானே’.

‘நாச்சிமாரே நீங்கள் வருத்தக்காற மனிசியைப் பாக்க வந்தனீங்களோ, உடையார், மணியகாரனைப் பற்றிப் பறய வந்தனீங்களோ?’

‘பாத்தியளே உள்ளதைச் சொன்னால் உங்களுக்கு உடம்பெல்லாம் நோகுது. நோனாக்கள் நோகாமல் பிள்ளைப்பெறப் பாக்கிறியளே’.

‘சீதேவி, கரிநாக்கிச்சியாட்டம் வாய்துறந்து அச்சாக் கேள்வி கேட்டிருக்கிறாள். கலகம் வந்தால் தானே நாயம் புறக்கும்’.

***

‘ஆச்சி என்னைத் தெரியுதே?’

‘ம்…’

மனிசி பிள்ளையளைக் கண்ணில முழிக்கத் தவிக்குது. இதுக்குள்ள பாக்க வாறவே அலட்டி அரியண்டப் படுத்துகினம்.

‘இஞ்ச பாருங்கோ எங்களைத் தெரியுதோண?’

‘ம் ………..

‘நான் உங்கட மூத்த மோனோட ஒண்டாப் படிச்சு இடையில் விட்டிட்டுத் தோட்டஞ் செய்து போட்டு வந்தனான். இப்ப லொறி எடுத்து ஓடுறன்…. மோன் வெளிநாட்டிலயிருந்து அனுப்பின பார்சல்களை ஒருநாள் லொறியில் கொண்டு வந்து தந்தன் நினைவிருக்கே’.

‘இவர் பொருள் பண்ட ஆசைய மூட்டுறார் மனிசி பிள்ளைப் பாசத்தில கிடந்து தவண்டையடிக்குது’.

‘இவை ஆரெண்டு பாக்கிறியளாக்கும். இவ என்ர அவவின்ர தங்கைக்காறி. உங்கட மோளோட ஒண்டாப் படிச்சவ.

‘அதுதான் உங்களைப் பாக்க வந்தவ’.

‘ஆச்சி, இஞ்ச ஒருக்காப் பாரணை’ ‘அங்……’

‘பொம்புளப் புள்ள வாய் திறந்தால் கிளி பேசுற மாதிரிக் கனிவு. மனிசி பொடிச்சிய ஆவலோட பாக்குது’.

‘ஆச்சிக்கு என்ன செய்யுது’ ‘ம்…..’

‘சுடுதண்ணிப் போத்திலுக்க ‘நெஸ்டமோல்ட்’ கரைச்சுக் கொண்டு வந்தனான்….– எப்பன் குடிக்கிறீங்களே?’

‘ம்…. ம்கூ’

‘அப்ப, ஆச்சிக்கு என்ன வேணும்?’

‘ம்…… புள்…..’

புள்ளையளக் கண்ணில முழிக்க வேணுமெண்டு மனிசி ஆவலோட வாய்க்குள்ள அருக்கூட்டிச் சொல்லுதெண்டு தெரிஞ்சும், இவே அதைக் கவனிக்கிற நிலையில் இல்ல.

‘ஆச்சி, இஞ்ச பாத்தியளே உங்கட மோளின்ர கலியாணப் போட்டோவை…….

‘அங்….. இ…’

‘சந்தோஷத்தில ‘சடா’ரெண்டு விரிஞ்ச ஆச்சியின்ற முகம் பிறகு சுருங்குது. கண்கலங்குது. கண்ணீர் பொசிஞ்சு கடைக்கண்ணால் வழியுது. வந்தவேக்கு

ஏன் உந்த விசுப்புளுத்திக் கதையள்?’

‘மக்கள் வருவினம், கண்கலங்காதையண. அங்க பாரண மக்கள் அனுப்பின கார். ரேடியோ ரெலிவிஷன் ‘சீலை, சூட்கேஸ்…. ஆச்சிக்குத் தானே’.

‘உதுகளை என்ன சவத்துக்கு? ஆபத்துக்குதவாப் பிள்ளை. அரும் பசிக்குதவா அன்ன ‘மெண்டு என்னும் பொரு ஊரவன் பாடின கணக்கா, மனிசிக்கு இப்ப பிள்ளையளல்லோ தேவை. அதுக்கு ஏதும் அடுக்குப் பண்ணாமல், வயித்துப் பாட்டுக்குத் தவிக்கேக்க வர்த்தக வலயத்தில் பாவப்பிள்ளை வித்த மாதிரி உப்படி விண்ணானங் கொட்டினா அதின்ர ஆத்மாக் கொதி தணியுமே?

– ‘ஆச்சி, என்னென்ன விதங்களில் சாமான்கள் அனுப்பியிருக்கினமெண்டு பாத்தியளே? எல்லாம் ஆச்சிக்குத்தானே….!’

‘மக்கள், கவ்வைக்குதவாததுகளைக் காட்டி என்ர அவவின்ர சீவனை மாய்க்காதையுங்கோ….. அவ உதுகளை எப்பவோ ஆண்டனுபவச்சவ. அவவில உருக்கமென்டா, அவவைக் காப்பாத்த விரும்பினா அவவின்ர விருப்பத்தை நிறைவேத்த ஏதும் தேவையான அலுவல் பாருங்கோ. உங்களால ஏலாட்டி

அவவுக்குத் தேவையில்லாத பண்டங்களைக் காட்டி அலட்டாமக் கிடவுங்கோ’.

மனுசன் மனம் பொறுக்காமல் இப்பதான் வாய்திறந்துது. உவெயின்ர பவுசுகளை அப்பு செம்மையாகப் புட்டுக் காட்டிப் போட்டார். இப்பதான் அவேக்குச் சங்கதி ஓடி வெளிக்குது.

‘தந்தி…. தந்தி…….!’ |

விடியப்புறம் காகங் கத்தேக்கயே, ‘இண்டைக்குப் பிள்ளையள் வரு’மெண்டு நான் சொல்ல, நீங்கள் காதில் விழுத்தேல்ல. இப்ப பாத்தியளே நான் வாயோச்சமாச் சொன்ன மாதிரித் தந்தி வந்திருக்கு!

‘என்ன புள்ளையள் வருகுதெண்டு தந்தி வந்திட்டுதே?’ ‘ஆ…… ஆச்சி…… தந்தி வந்திருக்கெண’ ‘ம்….?’

‘புறப்பட்டு வாறமெண்டு பிள்ளையள் மறுமொழி வரக்காட்டியிருக்கினமாக்கும்.’ ‘அங்…………….’

ஆச்சி அந்தரப் படுறா. பரதவிக்கிறா. முகந்திருப்பிக் கண்முழிக்கிறா. தந்திக் கடுதாசியில் தான் கண் விழுகுது.

‘தந்தியப் புரியனிட்டக் குடுங்கோ. மனிசன் பாத்துச் சொன்னால் அவவுக்கு எப்பன் ஆத்தியாயிருக்கும்.’

பெத்த வயிறு பூரிக்க ஆச்சி புருசனையே உத்துப் பாக்கிறா. இனி ஆச்சிக்கு என்ன குறை? பிள்ளையள் வரப்போகுதுகள்…. வருத்தம் பறக்கும்.

‘மோன, எனக்குக் கை காலெல்லாம் நடுங்குது. சுறுக்கா உடைச்சுப் பாத்துச் சொல்லுங்கோ’.

ஆச்சி பாயில கிடந்தபடி…. அப்பு அம்பலோதிப் பட்டுக் கொண்டு முத்தத்தில நிண்ட மணியம், பதகளிச்சுக் கொண்டு தந்தி உடைக்கின்ற பொடியன்ர வாயையே அணில் ஏறவிட்ட நாயாட்டம் ஆக்கள் பாக்கினம். பொடியனுக்கு இங்கிலீசு வாசிக்கத் தெரியாதாக்கும். ஒரு களிசான்காரப் பொடியனிட்டக் குடுக்கிறான்.

‘தந்தி என்னவாம்?’ |

தந்தி வாசிச்ச பொடியன் மலாரிட்டு விறைச்சாப் போல சலிச்சுக் கொண்டுபோய் களிசானோட நிலத்தில குந்தியிட்டான். அப்புவின்ற நெஞ்சு பதறுது. முகத்தில துக்குறி படருது. ஆமை மூகறமாதிரிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு ஆகாசத்தைப் பார்க்கிறார். விலாச் சீப்பு ஏறி இறங்குது. கை எடுத்துக் கூப்பிப் பரதவிக்கிறார்.

கதிர்காமம் செல்லச் சந்நிதி கோயில்களுக்கு நேத்தி வைக்கிறார் போலத் தெரியுது.

பெண் புரசுகள், குஞ்சு குருமன்கள் ஓடி ஆடி அந்தரப் படுதுகள்.

‘மோன தந்தி என்ன சொல்லுது?”

பொடியன் கூட்டத்தில் நிக்கிற பெண்டுகளைப் பாத்து அழுமாப் போல சொல்றான் :

‘ஆச்சிக்குப் பொசிப்பில்லை. பிள்ளையள் பாவங்கள், அதுகள் என்ன செய்யும்? திரும்பி வர ஏலாமல் கிடந்து அந்தரப் படுகுதுகள்.’

‘அம்….. அம்ங்………. அம்ங்க்கோ …..’

‘ஆ…… ஆச்சி, ஆச்சி, அய்யோ அதுபாவத்தின்ர பெத்த வயிறு பதறுதே. விலா எலும்புகள் குடைஞ்சு விரியுதே. கண்முழி பிரளுதே’.

‘ஆ……… மூச்சுத் தினறுதே, சேடம் இழுக்குதணே!’

‘தம்பியவே, உதில ஓடிப் போய் பரியாரி சுப்புறுமணியத்தை ஒருக்காக் கூட்டியாருங்கோ’ |

‘ஆ கண்மேல செருகுதடி. அய்யோ எங்கட ஆச்சி எணேய்!’

‘ஆ. கொள்ளையில போவாரே என்னுமடி விடுப்புப் பாக்கிறியள். இஞ்சாலவிடுங்கோடி…… கண் பொத்துங்கோடி’.

‘அ….. அங்…… அங்க்…… அய்யோ என்ர ராசாத்தி, எல்லாரையும் தவிக்க வைச்சு, என்னையும் தனிய விட்டுப் போறியேண. என் பத்தினியே. நீயில்லாமல் நான் ஒரு கணமும் தரியேனனே. என்னையும் உன்னோட கூட்டிக் கொண்டு போண ராசாத்தி’.

மனிசன் பொஞ்சாதியின்ர கால்மாட்டில நெடுஞ்சாணையா அடியுண்டு விழுந்து கிடந்து கதறி அழுகுது. அதின்ர கோலத்தைப் பாக்கப் பெரிய கறுமமாக் கிடக்கு. எக்கணம் மனிசியோட.

‘ஆருமத்த பாவியப் போல – அப்பு இப்ப
அந்தரிச்சுப் போனியோண………..’

‘பாசம் விட்டுப் போன மக்கள் – ஆச்சியின்ர
ஆசை முகம் பாக்கவில்லே……..’

‘ஆச்சியுன்ர செல்வங்கள – கடைசிமட்டும்
ஆவலோடு பாத்திருந்தாய்…….’

‘தேகம் பதறியல்லோ – ஆச்சியுந்தன்
ஆவி பிரிஞ்சதணே……’

‘பெத்தமக்களைப் பிரிச்சு – பெரும் பவுசுசாய்ப்
பிறதேசம் போகவைச்ச……..’

‘மெத்தப் படிச்சவயள் – ஆடுகாடிய
மோசஞ்செய்து போட்டினமே……..’

‘ணேய் அப்பு, ஆச்சியின்ர அந்திரட்டியும் முடிஞ்சிட்டுது. ஒண்டும் தின்னாமல் குடியாமலிருந்தாப் போல, போனவ வரப் போறாவே? இந்த உலகத்தில் பிறக்கிறவே ஒரு நாள் எப்படியும் இறக்கிறதுதானே? அவ சாகேக்க பெத்த பிள்ளையள் இல்லையெண்டு நாங்கள் என்னத்தால குறைய விட்டனாங்கள? அவவின்ர கருமத்தையும் வடிவா ஒப்பேத்தி நீரோசைய முடிச்சனாங்கள் தானே? நாலுபேர் குறை சொல்லாம எல்லாம் செய்தும், நாங்கள் பிறத்தியெண்டு தானே தண்ணி வென்னி குடிக்கவும் ஒஞ்சிச்சு வயிறெக்கிக் கொண்டிருக்கிறியள்?’

மனுசனும் போயிடும் போலத் தெரியுது. இப்பவே மனிசன்ர அரைவாசி வாணால் போட்டுது.

‘யே……. மனிசன் எக்கணம் சாகப் போகுது அது பாவத்தைக் கைத்தாவாத் தூக்கி முத்தத்துக்குக் கொண்டு வாருங்கோ’

‘ஆ…… அப்பு ணேய் உலகத்தில ஆரண சாகிறேல்லை. கொஞ்சம் ஆறியிரணயப்பு’.

‘அப் ணேய்…… அப்பு……..’

அகத்தி ஆயிரங்காய் காய் காய்ச்சாலும் பிரத்தியே பிறத்தி தானே, உவே எப்படி நாக்கு வளைச்சாலும் மனிசியின்ர செத்த வீடு மனிசன் மனிசியின்ர சொத்துப் பத்திலே தானே நடந்தது? வழித் தேங்காயத் தெருப் பிள்ளையாருக்கு அடிச்ச கணக்கா இருக்கு உவேயின்ர கதை காரியம்.

‘அப்பு ணேய், உப்பிடியே கிடந்து எங்களை மனவருத்தப் படுத்தாமல் எழும்பி வந்து ஒரு அவிழ் சோத்துப் பருக்கையெண்டாலும் தின்னணை’.

‘மோன, உங்களைக் கும்புட்டன். என்னை இப்ப தொந்தரவு செய்யாதையுங்கோ. மேலைக்குப் பாப்பம்.’

‘உப்பிடித்தான் நெடுகலும் சொல்லுறியள். அன்னந்தண்ணியில்லாமலிருந்து அழுந்தேக்க, உங்கட பிள்ளையள் வந்து பாத்தால் ஆரைப் பழி சொல்லுங்கள்?’

‘பெத்த தாய்க்கில்லாத பிள்ளையள் தேப்பனைத் தலையில் தூக்கி வைக்கப் போகுதுகளே? தாயைத் தின்னியள் இனிமேல் தேப்பனைத் தின்னியளாயிருக்கட்டன்’.

‘அப்பு, எழும்பி வந்து ஒரு கவளமெண்டாலும் தின்னணை’ ‘மக்கள், இப்ப நீங்கள் போய் தின்னுங்கோ. நான் பிறகு வேணுமெண்டால் பொறுத்துத் தின்றன்’.

அப்புவின்ர அழுங்குப்பிடி, அவற்ர வயித்துக் கொதியால இளகிப் போச்சு. அதை இவளவே, இவனவே கவனிக்கப் போட்டானவ’.

‘அப்படியெண்டா நீங்கள் சாப்பிடு மட்டும், இண்டு துவக்கம் நாங்களும் பிள்ளையளும் கிடக்கப் போறம்’

‘மோன, ஏன் எனக்காகப் பிள்ளையளப் பட்டினி போடுவான்?’ ‘நீங்கள் சாப்பிடாட்டி அதுகளும் தின்னாதுகளாம்’.

அப்பு கடுவலா யோசிக்கிறார். பெருமூச்சு விடுகிறார். அவவ குசாலாப் பாக்கினம். ‘அப்படியே, பின்ன எப்பன் பருக்கையைத் தா மோனே’.

‘ணேய் அப்பு. அங்கபாரண உங்கட மக்கள் நாலுபேரும் காரால றங்கி ஒருமிக்க வருகினம்’

‘அ…… நான் பெத்த என் மக்கள்……..’

‘அய்யோ எங்கட அப்பு…….. எங்களைப் பெத்த தெய்வத்தின்ர கண்ணில முழிக்காமல் விட்ட கறுமக்காறரணே’

அப்புவின்ர சடலம் உசும்பேல்ல. அவற்ர வாணால் போட்டுது. அழ ஏலாமல் தவிக்கிறார். பிள்ளையளைக் கட்டிப் பிடிச்ச படியே கிடக்கிறார். மோள் பெட்டை

தூணோட, சுவரோட தலை தலையெண்டடிச்சு மோதுது. அயலட்டைச் சனங்கள் ஓடிவருகினம். பெண்டுகள் கூவா குளங்கரையெண்டு விழுந்தபடி ஆத்துப் பறந்து ஓடி வருகுதுகள்.

‘ஆ…… செல்வங்களே வந்து சேந்திட்டியளே?’

‘பாசமுகம் பாக்கவல்லோ – ஆச்சியவ ர்

தேசமெல்லாம் தூதுவிட்டா ஆவி பிரியுமட்டும்

செல்வங்களை

ஆவலோடு பாத்திருந்தா…..’ பெண்டுகள் மாரடிச்சு அழுகிற விறுத்தத்தைப் பார்த்தால். ஆச்சி இப்பதான் மோசம் போனவ போலத் தோணுது.

‘நாச்சியாரவே….. ஒப்பாரி வைச்சு அழுதது காணும் இனி ஓஞ்சிருங்கோ . வந்த பிள்ளையள் அந்தரிச்சுத் துடிக்குதுகள். அதுகளை எப்பனுக்கு ஆசறுதியா இருக்க விடுங்கோ’

ஆச்சியின்ற செத்தவீட்டுக் கருமங்களை ஓடியாடி அலுவல் பாத்த பொடியள் சொன்னோடன, பெண்டுகள் ஒப்புச் சொல்லி அழுகிறதை நிப்பாட்டியிட்டினம். வந்து நிண்ட அயலட்டைச் சனங்கள் ‘எங்களுக்கேன் இந்த வில்லங்க’ மெண்டு நினைச்சு அந்தடியாக அவருக்கவரே விலகிப் போறதை, அப்பு தவிச்ச முகத்தோட பார்க்கிறார். கொஞ்ச நேரத்தால பிள்ளையள் தேப்பனோட ஏதோ ‘குசுகுசு’த்துப் பறையக்க, கருமாதியள் செய்த அந்தப் பொடியளுக்கு விசேண்டியாமாக் கிடக்கு.

‘பெத்த தாயின்ர கண்ணிலயும் முழிக்காமலிருந்து போட்டு இப்ப சொத்துப் பத்துக்களைப் பங்கு போடவல்லே வந்திருக்கினம்.’

‘அடிச்சாப் போல இது பிள்ளையளின்ர காதில் விழுந்தது.’

‘உதென்ன! உங்கட எடுப்பான கதையள்? எங்கட அப்பு ஆச்சியின்ர சொத்துக்கள நாங்கள் பங்கு போடுவம் விடுவம். நீங்கள் புறத்தியார், அதுகளில தலையிட்டுக் கதைக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?’

‘அ… அப்படியும் ஆணவமோ? மனிசி சாகுமட்டும் நாங்கள் பாத்து மேச்சுவிட, எங்க கிடந்துபோட்டு ‘உரிமை’ கொண்டாட வெளிக்கிட்டிட்டியளே……? மரியாதையா இப்பவே வெளிக்கிடுங்கோ… இல்லாட்டி இதில எக்கணம் ‘மேடர்’ தான் நடக்கும். ஓ….. சொல்லிப் போட்டம்.’

தேப்பனும் மக்களும் மலாரடிச்சு விறைச்சுப் போய் நிக்குதுகள். அதுகளின்ர கையும் ஓடுதில்லை. காலும் ஓடுதில்லை . அதுகளுக்கு இவங்கட ‘பிளான்’ ஒண்டுமாப் பிடிபடேல்ல. என்ன செய்யிறதெண்டு தெரியாமல் தாயத்தின்னிப் பிள்ளையள் தேப்பனைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு விம்முதுகள். இவங்கள் அமெரிக்கக் காண்டா முறுகமாட்டம் தேப்பனையும் பிள்ளையளையும் வெருட்டுமாப் போல முறைச்சுப் பாக்கிறாங்கள்.

‘உதவி செய்தால் உரிமை கொண்டாட வேணுமெண்டு எந்தச் சட்டத்தில இருக்கு?’

பிள்ளையள் ஒருசாவாய்க் கேக்கினம். சங்கதி வில்லங்கத்தில் வரும்போலக் கிடக்குது. பறப்பார் உந்தப் பிடியை விடாங்கள் போலத் தெரியுது.

‘உதவி செய்யிறதே உரிமை கொண்டாடத்தான். இதுதான் இப்பத்தையச் சட்டம்’.

தேப்பனும் மக்களும் ஓடி முழிக்கினம். பிறத்தியாருக்கு இந்த நீரேத்தம் ஆரால வந்தது! எப்படி வந்தது?

தேப்பன் கோடேறி வழக்காடுற நிலையில்லை. பிள்ளையள் பிறதேசம் போயிடுவினம்…… இது ஆற்ர சீத்துவக் கேடு?

இன்னும் தான் ஒருத்தருக்கும் சங்கதி புடிபடேல்ல.

இது உடையான்ர சீத்துவக்கேடெண்ட சங்கதி இன்னும் தான் சனங்களுக்கு விளங்கேல்ல.

– ஆகஸ்ட் 1981 – மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *