கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 17,610 
 

என் கூந்தலைப் பிடித்து இழுத்த என் கணவன், தனது பலம் முழுவதையும் வலது கையில் திரட்டி என் கன்னத்தில் ஓங்கி அறைய… நான், “”அம்மா…” என்று கன்னத்தைப் பிடித்துக்கொண்டு சுவரில் சரிந்து அமர்ந்தேன். திருமணம் முடிந்த இந்த ஏழு மாதத்தில் அருண் முதல் முறையாக என்னை அடிக்கிறான்.

அழுது கொண்டிருந்த என் தலைமுடியை இறுக்கமாகப் பிடித்து தூக்கி, “”மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்க” என்ற அருணின் கையை நான் வேகமாக தள்ளிவிட்டேன். தள்ளிவிட்ட வேகத்தில் அவனது கை சுவரில் பட… அருண் இன்னும் ஆத்திரமானான். “”என்னடி… கை நீட்டுற?” என்றவன் என் இரண்டு கன்னத்திலும் மீண்டும், மீண்டும் ஆவேசத்துடன் அறைந்தான்.

பெண் 2014

நான் இரண்டு கன்னத்தையும் பிடித்தபடி, “”அய்யோ… வேணாங்க… வலிக்குதுங்க… நான் ஒண்ணும் கைய நீட்டலங்க… தள்ளி தாங்க விட்டேன்…” என்று சுவரில் உடம்பைத் தேய்த்தபடியே நகர… “”நீ பேசறத எல்லாம் கேட்டுட்டிருக்க நான் என்ன உன் வேலைக்காரனாடி?”
என்ற அருண் என் தொடையில் ஓங்கி உதைத்தான்.

“”இனிமே ஒண்ணும் சொல்லமாட்டேங்க… விட்டுருங்க ப்ளீஸ்… வலி தாங்க முடியலங்க” என்று நான் அழுகையுடன் கெஞ்ச… அருணின் ஆவேசம் கொஞ்சம் தணிந்தது. கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு வேகமாக நகர்ந்து ஷூவை மாட்டிக் கொண்டே, “”இங்க பாரு திவ்யா… என் பேச்சக் கேட்டுகிட்டு இருக்கிறதா இருந்தா இந்த வீட்டுல இருக்கலாம். இல்ல…” என்றவன் கைவிரலை நீட்டி எச்சரித்துவிட்டு, பைக் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

என்னால் வலி தாங்க முடியவில்லை. வாயை நகர்த்த முடியாமல், கீழ்த்தாடை கனமாக வலித்தது. ஈறுகளில் ரத்தம் கசிந்து எச்சில் புளித்தது. “தூ…’ என்று எச்சிலைத் துப்பினேன். ரத்தம் கலந்து லேசான மஞ்சள் நிறத்திலிருந்த எச்சிலைப் பார்த்தவுடன் என் சுய இரக்கம் உச்சத்தைத் தொட…. நான் கதறி, கதறி அழ ஆரம்பித்தேன். எனக்கு விபரம் தெரிந்து யாரும் என்னை கை நீட்டி அடித்ததில்லை. ஏழு மாதத்திற்கு முன்பு என் வாழ்க்கையில் நுழைந்தவன். சுலபமாக அடித்து நொறுக்குகிறான்.
சற்றே அழுகை ஓய… மணியைப் பார்த்தேன். ஒன்பதைத் தாண்டிவிட்டது. இனிமேல் கிளம்பி அலுவலகத்திற்குச் செல்ல முடியாது. மொபைலை எடுத்து அலுவலகத்திற்கு ஃபோன் செய்து லீவு சொன்னேன்.

ஒரு மனிதன், தன்னோடு நெருக்கமாக பழகிக்கொண்டிருக்கும் சக மனுஷியை எப்படி அடிக்க முடியும்? வலியால் ஒருத்தி துடிக்க… துடிக்க… ஒருவன் அவளை மனிதத்தன்மையில்லாமல் அடிக்க முடியுமென்றால் அவனோடு ஏன் வாழவேண்டும்?

அருணின் முதல் அடி விழுந்த கணமே அவள் முடிவு செய்துவிட்டாள். இனிமேல் இந்த வீட்டில் இருக்கப் போவதில்லை.

மொபைலை எடுத்து அம்மா நம்பருக்கு அடித்துவிட்டு, சட்டென்று கட் செய்தேன். அம்மாவே இன்று வரையிலும் அப்பாவிடம் அவ்வப்போது அடி வாங்கி கொண்டிருப்பவள். அவளிடம் போய் இதைச் சொன்னால் சமாதானம்தான் செய்வாள். வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டாள். ஏற்கெனவே புது அண்ணி வந்த பிறகு அம்மா அப்பாவிற்கே அங்கு கஷ்டமாக இருக்கிறது. நான் வேறு வருகிறேன் என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்வாள்? அதுவும் அம்மா, அப்பாவிடம் வாங்கியுள்ள அடிக்கு, நான் அடிபடுவதையெல்லாம் ஒரு மேட்டராகவே எடுத்துக் கொள்ளமாட்டாள்.
அம்மா அடி வாங்குவதை சிறுவயதிலிருந்து நான் பார்த்து வந்திருக்கிறேன். அந்தக் கால ஆணாதிக்கத்தின் மொத்த வடிவமான அப்பா, அம்மாவை அற்ப காரணங்களுக்கெல்லாம் அடிப்பார். இட்லியில் முடி ஒட்டிக் கொண்டிருந்தால் அடிப்பார். சட்னி சரியாக மசியவில்லையென்றாலும் அடிப்பார். அப்பா, அம்மாவை விடச் சற்றுக் குள்ளம் என்பதால் அம்மாவை, “”குனிடி…” என்று கூற… அம்மா குனிந்து தன் முதுகை காண்பிக்க… நங்கு நங்கென்று அடிப்பார். ஒரு முறை அப்பா மிகவும் உடம்புக்கு முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தபோது கூட, அம்மாவிடம், “”கிட்ட வந்து அடிய வாங்குடி…” என்று அழைத்து அடித்திருக்கிறார். நான் வளர்ந்து கல்லூரியில் சேர்ந்த பிறகு இது தொடர்பாக நான் அம்மாவிடம் கோபமாகப் பேசியிருக்கிறேன்.
“”இன்னும் எத்தனை நாளைக்கும்மா அடி வாங்கிகிட்டேயிருப்ப?”
“”எல்லாம் பழகிடுச்சு. விடுடி…”

“”அதுவும் குனியச் சொல்லி அடிக்கிறாரு. நீயும் நல்லா காட்டுற. இந்த அநியாயமெல்லாம் உலகத்துல எங்கயும் நடக்காது. எவ்ளோ நாளும்மா இப்படியே இருக்கப் போற?”

“”வேற என்ன பண்ணச் சொல்ற?”

“”பேசாம வீட்ட விட்டு வந்துரும்மா. நான் வேலைக்குப் போயி உனக்குச் சோறு போடறேன்”

“”இது வெறும் சோறு சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டும் இல்ல திவ்யா. ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க இருக்கீங்க. உங்களுக்கு நாளைக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்”.

“”ரிங்கி பட்டாச்சார்யான்னு ஒரு பெங்காலி ரைட்டர், அடிக்கிற புருஷனோட பிள்ளைங்களுக்காக கூட சேர்ந்து வாழாதீங்கன்னு சொல்லியிருக்காரு”
“”இப்படிக் கண்டதப் படிச்சுட்டுதான் இந்த மாதிரி பேசிகிட்டுத் திரியற…. இதுக்காகப் பொண்டாட்டிங்க எல்லாம் கிளம்பிப் போகணும்னா, நம்ம நாட்டுல முக்காவாசி மனைவிகள் அம்மா வீட்டுலதான் இருப்பாங்க. புத்தகத்துல படிக்கிற மாதிரியெல்லாம் வாழ முடியாது திவ்யா. அதெல்லாம் நீ போற இலக்கிய கூட்டத்துல பேச நல்லாயிருக்கும் அவ்வளவுதான்”
“”இப்படி ஏதாச்சும் சொல்லிகிட்டு, கூடவே இருக்கறதாலதாம்மா இந்த ஆம்பளைங்களுக்கு துளிர் விட்டுப் போயிடுது. என்னையெல்லாம் என் புருஷன் அடிச்சான்னா, அடுத்த நிமிஷம் பெட்டிய எடுத்துட்டு வந்துடுவேன்” என்றேன் ஆவேசமாக. அதற்கு அம்மா பதில் ஒன்றும் சொல்லவில்லை. கசப்பாகச் சிரித்தாள்.

அம்மாவைப் பற்றி நினைத்தபடி எழுந்தேன். மனதில் ஒரே குழப்பம். வீட்டை விட்டுச் சென்றுவிடுவது என்பதில் உறுதியோடு இருந்தேன். ஆனால் அண்ணியை நினைத்தால், வீட்டுக்குப் போக தயக்கமாக இருந்தது. அங்கு அண்ணியின் ராஜ்யம் தான். பேசாமல் ஏதேனும் ஹாஸ்டலுக்குச் சென்றுவிடலாமா? தங்கை ராதிகாவிடம் பேசினால் ஒரு தெளிவு கிடைக்கும் என்று தோன்றியது. ராதிகாவின் அலுவலகம், இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது.

ராதிகாவின் அலுவலகத்திற்கு எதிரேயிருந்த உயர்தரமான அந்த ரெஸ்ட்டாரண்டில் நானும், ராதிகாவும் அமர்ந்திருந்தோம். நான் விஷயத்தைக் கூறி முடித்தவுடனேயே ராதிகா சீற ஆரம்பித்தாள்.

“”ம்ஹ்ம்… இவனுங்க வீரத்த எல்லாம் பொண்டாட்டிகிட்டதான் காட்டுவானுங்க. ரோட்டுல தண்ணியடிச்சுட்டு, தகராறு பண்றவன்கிட்ட போய் வீரத்தக் காட்டச் சொல்லு. பம்மிருவானுங்க. என்ன பிரச்னை? ஏன் அடிச்சாரு?” என்றாள்.

“”போன வாரம் என் நாத்தனார், மதுரையிலிருந்து ஒரு மேரேஜ்க்காக இங்க வந்திருந்தா. இவரு ஆபீஸ் விஷயமா நாக்பூர் போயிருந்தாரு. அதனால நான் மூணு நாள் லீவு போட்டுட்டு நல்லபடியாதான் கவனிச்சு அனுப்பினேன். நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் அழைச்சுட்டுப் போனேன். சினிமாவுக்கு டிக்கெட் புக் பண்ணி குக்கூ படம் அழைச்சுட்டுப் போனேன். சரவணா ஸ்டோர்ஸ் போயி கேட்ட சாமானை எல்லாம் விலையைப் பாக்காம வாங்கிக் கொடுத்துதான் அனுப்பினேன். அப்பவும் மகராசி… என்னக் குறையைக் கண்டாளோ? அவரு நாக்பூர்ல இருக்கறப்பவே போன் பண்ணி ஏதோ வத்தி வச்சிருப்பாப் போல. இன்னைக்கு காலைல வந்தவுடனே சண்டைய ஆரம்பிச்சிட்டாரு. எனக்கும் ஆத்திரம் தாங்க முடியல. இவ்வளவு செஞ்சு என்ன பிரயோஜனம்னு நானும் பதிலுக்குப் பதில் பேசினேன். நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்ல. பேசிகிட்டுருக்கறப்பவே அடிச்சுட்டாரு” என்றபோது நான் அழுதுவிட்டேன்.

“”ஏய்… அழாத… பாக்குறாங்க பாரு…” என்று ராதிகா கூறியவுடன், நான் அவசரமாகச் கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டேன்.

“”பயங்கரமா அடிச்சுட்டாருடி. தாடைய நகர்த்த முடியல. மென்னு சாப்பிட முடியல. தலைமுடிய பிடிச்சு இழுத்ததிலே, தலை பயங்கரமா வலிக்குது. சீப்ப வச்சு தலையை சரியா சீவக்கூட முடியல…” என்ற நான் சர்வர் வருவதைக் கவனித்து பேச்சை நிறுத்தினேன். சர்வர் ஆப்பிள் ஜுசை வைத்துவிட்டு நகர்ந்தவுடன், “”கட்டுன பொண்டாட்டிய சந்தோஷமா வச்சுக்கத் தெரியலன்னா, இவனுங்க எல்லாம் ஏன் கல்யாணம் பண்ணிக்கிறானுங்க?” என்றாள் ராதிகா ஆத்திரத்துடன்.

“”நான் ஒண்ணும் தீவிரமான ஃபெமினிஸ்ட் எல்லாம் கிடையாது . கன்ஸர்வேட்டிவ் ஃபெமினிஸ்ட்தான். நான் ஒரு பெண்ணா எனக்குரிய கடமைகளைச் செய்றேன். பதிலுக்கு நீ என்னை மதிச்சு நடத்தணும்னுதான் எதிர்பாக்குறேன். பெண்கள் பலவீனமானவங்கன்னு உறுதிப்படுத்துற எந்த ஒரு செயலையும் நான் ஏத்துக்கமாட்டேன். இதுக்குப் பிறகு நான் ஏன் அவர் கூட வாழணும்?”
“”கரெக்ட்… நீயும் அம்மா மாதிரி அடிய வாங்கிகிட்டு உக்காந்திருக்காத…”

“”சேச்சே… இதுக்குப் பிறகு அந்தாளு கூட வாழறதப் பத்தி நினைச்சாலே அருவருப்பா இருக்கு. அதான் கிளம்பி வரலாம்னு பாக்குறேன். ஆனா வீட்டுல அம்மா என்ன சொல்வாங்கன்னு தெரியல. அதுவும் அண்ணி வந்தப்புறம் வீட்டுல எல்லாம் அவ எடுக்குற முடிவுதானே அவ வேற என்ன சொல்வாளோ? அண்ணன் அப்படியே தான் இருக்கானா?”

“”பின்ன அண்ணிய பொண்ணு பாக்கப் போனப்ப, அவ நமஸ்காரம் பண்ணினாள்ல… அப்ப அவகிட்ட விழுந்தவன்தான். கல்யாணமாயி நாலு மாசமாவுது. இன்னும் எழுந்திரிக்கல. சாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடனேயே, காந்தம் மாதிரி போய் அண்ணியோட ஒட்டிக்குவான். அவ எங்க போனாலும் பின்னாலயே போவான். நாய் இருக்குற வீட்டுல பிஸ்கெட் பாக்கெட்டோட நுழைஞ்சா, பிஸ்கெட்ட கொடுக்கற வரைக்கும் அந்த நாய்க்குட்டி விடாம நம்ம பின்னாடியே வரும்ல அந்த மாதிரி சமையகட்டு, ரூமு, மொட்டைமாடின்னு அண்ணி எங்க போனாலும், விடாம பின்னாடியே நாய்க்குட்டி மாதிரி போய்கிட்டேயிருப்பான். அதான் நானும், அம்மாவும் அவனுக்கு ஜிம்மின்னு நாய் பேர் வச்சிருக்கோம்” என்று கூறியவுடன் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. முழுமையாகச் சிரிக்கமுடியாமல் தாடை வலித்தது.

“”úஸô… அண்ணி ராஜ்யம்தான்ங்கிற… பேசாம ஏதாச்சும் ஹாஸ்டல்ல போய் தங்கிகிடட்டுமா?”
“”நல்ல கதை. நம்ம மேட்டர்ல எல்லாம் அண்ணி நுழைஞ்சா சிண்ட அறுத்துடவேண்டாம்? நீ வா… ஆனா அம்மாதான் கண்ணக் கசக்குவா. இல்லன்னாலும் டிவி சீரியல பாத்து தினம் அவ கண்ணக் கசக்கிகிட்டுதான் இருக்கா. நீ யோசிக்காம வா… இந்த மாதிரி கிளம்பி வந்தாதான் ஆம்பளைங்களுக்கு புத்தி வரும். நான் சாயங்காலம் ஆபிஸ் விட்டு வர்றப்ப அப்படியே ஏழு மணிக்கு உன் வீட்டுக்கு வர்றேன். ரெண்டு பேரும் சேர்ந்த மாதிரி நம்ம வீட்டுக்குப் போயிடலாம்” என்றாள் ராதிகா தீர்மானமாக.

வீட்டுக்கு வந்து படுத்த நான் அசதியில் நன்கு தூங்கிவிட்டேன். எழுந்தபோது மணி ஐந்து. ஏழு மணிக்கெல்லாம் ராதிகா வந்துவிடுவாள். விறுவிறுவென்று துணிகளை எடுத்து பேக்கில் அடுக்க ஆரம்பித்தேன். அடுக்கும்போதே திடீர், திடீரென்று கண் இருண்டது. லேசாக மயக்கம் போல வந்தது. திடீரென்று குமட்டிக்கொண்டு வர, ஓடிச் சென்று பாத்ரூமில் வாந்தி எடுத்தேன். “”என்னாச்சு?”
என்று யோசித்த எனக்கு அந்த சந்தேகம் வந்தது. போன மாசம் எப்ப வந்துச்சு என்று நாட்களை எண்ணிப் பார்த்தேன். மை காட்… இப்போது ஒரு வாரத்துக்கு மேல் தள்ளிப் போய்விட்டது. அதாக இருக்குமோ… என்று ஒரு கணம் தோன்றியது.

வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் டிஜிஓ டாக்டரிடம் சென்றேன். என்னைப் பரிசோதித்து முடித்த டாக்டர், “”சந்தேகமே இல்ல. ப்ரக்கனன்ஸிதான். ஆனாலும் நாளைக்கு காலைல யூரின் டெஸ்ட் பண்ணி கன்ஃபர்ம் பண்ணிருங்க” என்றாள்.

இரவு மணி ஏழு. காலிங்பெல் அடிக்கப்பட… நான் எழுந்து சென்று கதவைத் திறந்தேன். வெளியே ராதிகா.

“”ஏய்… இன்னும் கிளம்பலையா? அப்புறம் உன் புருஷன் வந்துடப்போறாரு”

“”அது வந்து… ராதிகா… இப்ப ஒரு புது பிரச்னை” என்ற நான் விஷயத்தைக் கூறினேன். ராதிகாவின் முகத்தில் சற்று குழப்பம் தெரிந்தாலும் உடனே தெளிவாகி, “”அதுக்காக… நாளைக்கு யூரின் டெஸ்ட்டு பாஸிட்டிவ்னு வந்தா தங்கிடப்போறியா?” என்றாள்.

“”அப்படின்னு இல்ல… ஆனாலும் ஒரு குழந்தைன்னு வந்துருச்சுன்னா… கொஞ்சம் யோசிக்கணும்”

“”யோசிக்கணும்னாலே அவ்வளவுதான். இங்கயே இருக்கப் போறன்னுதான் அர்த்தம்”

“”ராதிகா… நாம நினைச்சபடில்லாம் வாழணும்னா, பொண்ணாப் பொறந்திருக்கக் கூடாது. எனக்கே என் மேல வெறுப்பா இருக்குடி. எதுக்கும் தைரியமில்லாம, எல்லா அவமானத்தையும் சகிச்சு
கிட்டு… மானங்கெட்ட பொழப்புடி இது” என்ற என் கண்கள் கலங்கிவிட்டன.

“”எக்கேடோ கெட்டுப்போ. என்னால எல்லாம் இவ்வளவு அநியாயத்தப் பொறுத்துக்க முடியாது. நாளைக்கு எனக்கு கல்யாணமாகி என் புருஷன் அடிச்சான்னா, அடுத்த நிமிஷமே பெட்டியத் தூக்கிகிட்டு கிளம்பிடுவேன்” என்று ராதிகா கூற, நான் பதில் ஒன்றும் சொல்லாமல் சிரித்தேன். சட்டென்று அன்று சிரித்த அம்மாவின் சிரிப்புக்கு, இப்போது அர்த்தம் தெரிந்தது.

– ஏப்ரல் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *