கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 4,567 
 

1

பிரசித்தி பெற்ற பால ஜோசியம் பட்டாபிராமன் பி.ஏ.யைப் பற்றி அநேகர் கேள்விப்பட்டிருக்கலாம். அவனுடைய ஜோசிய விளம்பரங்களையும் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். பட்டாபிராமன் நல்ல புத்திசாலி; குணவான்; யோக்யன்; சுறுசுறுப்புள்ளவன்; யாருக்கும் கெடுதல் நினைக்காதவன்; எல்லாரும் ஒன்றாயிருக்க வேண்டுமென்று நினைக்கப் பட்டவன். இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். எனக்குத் தெரிவதற்குக் காரணம் இருக்கிறது. ஏனெனில் அந்தப் பிரசித்தி பெற்ற பாலஜோசியம் பட்டாபிராமன் என்பது அடியேன் தான்!

இந்தக் காலத்தில் சில பேர் “ஜோசியர்” என்று பெயர் வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிப் பிழைக்கிறார்களே, அந்த மாதிரி மோசக்காரர் கூட்டத்தில் சேர்ந்தவன் நானல்ல. உண்மையாகவே ஜோதிட சாஸ்திரத்தில் அறிவைச் செலுத்தி வெகுவாக ஆராய்ச்சி செய்தேன். அந்த சாஸ்திரத்தில் உண்மைத் தத்துவம் இருக்கிறது என்பதை ஐயமின்றி உணர்ந்தேன். என்னுடைய ஆராய்ச்சி அறிவை நன்கு பயன் படுத்தி, ஜாதகம் முதலியவை நன்கு பார்த்துத்தான் மற்றவர்களுக்குப் பலன் சொல்லி வந்தேன். “ஆமாம் இதெல்லாம் ஏன் இறந்த காலத்தில் சொல்கிறாய்?” என்று நீங்கள் கேட்கக்கூடும். வாஸ்தவம்; இறந்த காலத்தில் தான் சொல்கிறேன். ஏனெனில் ஜோசியத் தொழிலை நான் விட்டு விட்டேன். என் ஜோசிய விளம்பரங்களை நீங்கள் பத்திரிகைகளில் இனிமேல் பார்க்கமாட்டீர்கள். என் சொந்த விஷயத்தில் நான் நம்பிக்கை இழந்த ஒரு சாஸ்திரத்தை மற்றவர்கள் விஷயத்தில் உபயோகப்படுத்தவும், அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் எனக்கு விருப்பமில்லை. என் மனச்சாட்சி அதற்கு இடங்கொடுக்கவில்லை.

ஜோசியத்தில் நான் நம்பிக்கை இழந்தது எப்படி? அதைச் சொல்வதற்குத்தான் முன் வந்திருக்கிறேன். ஆனால், ஜோசியத்தில் நான் ஏன் நம்பிக்கை இழந்தேன் என்று சொல்வதற்கு முன்னால், அதில் எனக்கு நம்பிக்கை வந்தது எப்படி என்பதைச் சொல்ல வேண்டும்.

பள்ளிக் கூடத்திலும் சரி கலாசாலையிலும் சரி, படிப்பில் நான் முதன்மையாகவே இருந்து வந்தேன். எல்லாப் பரீட்சைகளிலும் நல்ல மார்க்குகள் வாங்கி வந்தேன். பி.ஏ. வகுப்பில் படித்த போது எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய துக்கம் நேர்ந்தது. என் தகப்பனார் திடீரென்று காலஞ் சென்றார். அவர் தாலுகா குமாஸ்தா உத்தியோகத்திலிருந்தவர். தமது சொற்ப சம்பளத்தில் பணம் மீத்து என்னைப் படிக்க வைத்து வந்தார். சிறு பிராயத்திலேயே தாயாரை இழந்த துரதிர்ஷ்டசாலி நான். ஆகவே, தகப்பனார் தான் எனக்கு தாயாகவுமிருந்து என்னைக் காப்பாற்றி வந்தார். அவருடைய மரணம் என்னைக் கலங்கச் செய்துவிட்டது. பரீட்சைக்கு ஒரு மாதம் இருக்கும் போது அவர் இறந்தபடியால், அந்த வருடம் நான் பரீட்சைக்குப் போக முடியவில்லை. அடுத்த செப்டம்பரில் பரீட்சைக்குப் போனேன். அது வரைக்கும் எல்லாப் பரீட்சைகளிலும் முதல் வகுப்பிலேயே தேறி வந்த நான், பி.ஏ. பரீட்சையில் மூன்றாம் வகுப்பில் தான் தேறினேன்.

அதற்குப் பிறகு என்ன செய்வதென்று கவலை உண்டாயிற்று. சட்ட கலாசாலையில் படிக்கலாமென்று முன்னால் எண்ணமிருந்தது. இப்போது அது முடியாத காரியமாயிற்று. பணத்துக்கு எங்கே போவது? ஏதாவது உத்தியோகம் தேடுவதைத் தவிர வேறு வழியில்லை. சென்னைப் பட்டணத்துக்கு வந்து உத்தியோகம் தேடத் தொடங்கினேன். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எனக்கு வேலை கிடைக்க வில்லை. முப்பது ரூபாய் சம்பளந்தான் நான் தேடியது. அது கூடக் கிடைக்கவில்லை. என்னைவிடக் குறைந்த படிப்புள்ளவர்களுக்கெல்லாம் கிடைத்தது. எனக்கு மட்டும் கிடைக்கவில்லை. “அவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள், நமக்கு அதிர்ஷ்டமில்லை” என்று எண்ணத் தொடங்கினேன்.

அப்போது நான் அறிந்த இன்னொரு செய்தி அதிர்ஷ்டத்தின் மேல் எனக்கு அதிக நம்பிக்கை உண்டாக்கிற்று. என்னுடன் ஹை ஸ்கூலில் நாலாவது பாரம் முதல் கோபாலகிருஷ்ணன் என்ற பையன் படித்து வந்தான். மார்க்கு வாங்குவதில் அவனுக்கும் எனக்குந்தான் முக்கியமான போட்டி. ஆனாலும், அநேகமாக நான் தான் அவனைவிட அதிக மார்க்கு வாங்குவேன். என் தகப்பனாரின் மரணத்தினால் நான் பரீட்சைக்குப் போக முடியாத வருஷத்தில் அவன் பி.ஏ. முதல் வகுப்பில் தேறினான். அவனுடைய கெட்டிக்காரத்தனத்தைக் கண்ட மயிலாப்பூர் வக்கீல் ஒருவர், தம் பெண்ணை அவன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையின் பெரில், அவனை ஐ.சி.எஸ். பரீட்சைக்குப் படிக்க அனுப்பியிருக்கிறார் என்று அறிந்தேன். இதைப் பற்றி அவனுடைய சிநேகிதர்கள் சிலர் பரிகாசம் செய்தார்கள். “ஐ.சி.எஸ். உத்தியோகத்துக்காக அடிமை ஒப்பந்தம் எழுதிக் கொடுத்துவிட்டான்” என்று சொன்னார்கள். ஆனால், இது பொறாமையால் எழுந்த பேச்சு என்பதை நான் அறிவேன். இன்று இப்படி பரிகாசம் செய்கிறவர்கள், நாளைக்கு அவன் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஸப் கலெக்டராக வந்ததும், அவனிடம் போய்க் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்கள். அதுவரை எனக்கு வேலை கிடைக்காவிட்டால் நானும் அவனிடம் போனாலும் போவேன். ஒருவேளை, அவன், “இப்போது பார்க்கமுடியாது” என்று டவாலிச் சேவகனிடம் சொல்லி அனுப்பிவிடுவான். என்னைப் பார்ப்பதற்கு அவன் மனமுவந்து சம்மதித்தாலும், உத்தியோகம் என்று சொன்னதும், “உத்தியோகத்துக்கு நான் எங்கே அப்பா போவேன்? முன் காலத்திலே போல இப்போது கலெக்டர்களுக்கு அதிகாரம் ஏது? பப்ளிக் ஸர்விஸ் கமிஷன் அல்லவா நியமனம் செய்கிறது? ‘கம்யூனல் ரொடேஷன்’ வேறு இருக்கிறது” என்பான்.

இதை நினைக்க நினைக்க, வாழ்க்கையின் விசித்திரத்தைப் பற்றி எனக்கு மேலும் மேலும் வியப்புண்டாயிற்று. கோபாலகிருஷணன் என்னைவிட எந்த விதத்திலும் புத்திசாலி அல்ல; ஆனாலும், அவன் ஏன் கலெக்டராக வேண்டும்? நான் ஏன் இப்படி வேலைக்குத் திண்டாட வேண்டும்? இதற்கு அதிர்ஷ்டம் காரணமில்லாது வேறு என்ன இருக்க முடியும்? இன்னும், உலகத்தை நான் சுற்று முற்றும் பார்த்து, வாழ்க்கை விசித்திரங்களைக் கவனிக்கத் தொடங்கினேன். கொஞ்சமும் லாயக்கில்லாதவர்கள் எல்லாம் பெரிய பெரிய பதவிகளில் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செலுத்தினார்கள். புத்திசாலிகளும் குணசாலிகளும் ஜீவனோபாயத்துக்கே திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எதிர்பாராத விதத்தில் சிலர் திடீரென்று பணக்காரர்கள் ஆனார்கள்; அதே மாதிரி எதிர்பாராத விதங்களில் சிலர் திடீரென்று ஏழைகளானார்கள்.

நான் உத்தியோகம் தேடி அலைந்த போது, இம்மாதிரி விசித்திரங்கள் பலவற்றை அறிந்தேன். இவற்றையெல்லாம் பார்க்கப் பார்க்க, “நம்முடைய சாமர்த்தியத்தினாலும் முயற்சியினாலும் மட்டும் ஒன்றும் நடப்பதில்லை. மனுஷ்யனுடைய காரியங்களை நடத்தும் வேறு சக்திகள் இருக்கின்றன” என்ற உறுதி பலப்பட்டு வந்தது. இந்த உலக வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் எல்லாரும் தங்கள் சாமர்த்தியத்தினாலேயே வெற்றியடைந்து விடவில்லை; சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு உதவி செய்திருக்கின்றன. தோல்வியடைந்தவர்கள் எல்லாரும், தங்கள் முட்டாள்தனத்தினாலேயே தோல்வியடைந்து விடவில்லை. சந்தர்ப்பங்கள் உதவி செய்யாதபடியினாலேயே தோல்வியடைந்தார்கள்.

இவ்வாறு ஒரு மனுஷனுக்குச் சந்தர்ப்பங்கள் உதவி செய்வதும் செய்யாததும், குருட்டுத்தனமாக நடக்கும் காரியமா? அல்லது, ஏதாவது ஒரு நியதியின்படி நடக்கிறதா? அதாவது அதிர்ஷ்டம் என்பதெல்லாம் குருட்டு அதிர்ஷ்டந்தானா? அல்லது காரண காரியக்கிரமம் உண்டா?

ஒருவனுடைய வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் அவ்வப்போது தற்செயலாகவே உண்டாகின்றனவா? அல்லது, பிறக்கும்போதே, இந்த ஜீவனுக்கு இந்திந்தக் காலத்தில் இன்னின்ன மாதிரி நடக்குமென்று ஏற்பட்டு விடுகின்றதா?

இத்தகைய சிந்தனைகளில் என் மனம் அடிக்கடி ஈடுபடத் தொடங்கியது. அதன் பயனாக, “மனித வாழ்க்கையில், எல்லாம் முன்னால் நியமித்தபடிதான் நடக்கிறது” என்ற ஒரு நம்பிக்கை என் உள்ளத்தில் பலமாக வேரூன்றிவிட்டது. எல்லாம் முன்னால் நியமித்தபடியே நடக்கின்றனவென்றால், அப்படி நடக்கப் போவதை முன்னதாகவே அறிந்து கொள்வது சாத்தியமா? “இது சாத்தியம்” என்பதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அதில் உண்மை இருக்குமோ?

ஒரு மனிதனுடைய பிறந்த வேளையை வைத்துக் கொண்டு அவனுடைய வருங்காலத்தையெல்லாம் நிர்ணயிப்பது சாத்தியமாயிருக்குமோ? கிரகசஞ்சாரத்தைக் கொண்டு மனிதனுடைய வாழ்வை நிர்ணயிக்க முடியுமோ? இவ்வாறு ஜோசியத்தில் என்னுடைய புத்தி பிரவர்த்தித்தது.

உடனே ஜோசிய புத்தகங்களை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். ஆஹா! எப்பேர்ப்பட்ட சாஸ்திரம்! எவ்வளவு நுட்பமான ஆராய்ச்சிகள்! எத்தகைய கணக்குத் திறமை! ஆகா! நமது பெரியோர்களுடைய அறிவுதான் எவ்வளவு ஆச்சரியமான் சக்தி வாய்ந்தது!

கொஞ்சம் ஜோதிட சாஸ்திரத்தில் பயிற்சி ஏற்பட்டதும், என்னுடைய ஜாதகத்தையே பார்த்து ஆராய்ந்தேன். சீக்கிரத்தில் எனக்கு ‘நல்ல காலம்’ பிறக்குமென்று அதில் காணப்பட்டது. ஆனால், அந்த ‘நல்ல காலம்’ எப்படிப் பிறக்கப்போகிறது என்று மட்டும் தெரியவில்லை. ஏனெனில், ஜோசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டதிலிருந்து உத்தியோகம் தேடுவதைக் கூட விட்டு விட்டேன். ஒரு நாள் திடீரென்று ஒரு யோசனை தோன்றிற்று. அன்றைய தினமே, எழும்பூரில் ஒரு வீட்டு மாடியை வாடகைக்குப் பேசி எடுத்துக் கொண்டேன். மறுநாள், அங்கே “பால ஜோசியர் பட்டாபிராமன் பி.ஏ.” என்ற போர்டு தொங்கவிட்டேன். பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்தேன்.

“பால ஜோசியம்; விருத்த வைத்தியம்” என்பதாக நமது தேசத்தில் ஒரு முதுமொழி வழங்கி வருகிறது. வைத்தியர்களுக்கு வயதாகியிருந்தால் நல்லது; ஏனெனில், வயதாக ஆக அவர்களுடைய அநுபவமும் அதிகமாயிருக்கும். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் அல்லவா?

ஜோசியத்துக்கு மட்டும் பால்ய வயது சிலாக்கியம் என்று ஒரு நம்பிக்கை இருந்து வந்திருக்கிறது. இது எதனால் என்று எனக்கு நன்றாய்த் தெரியா விட்டாலும் அந்த நம்பிக்கையை நான் உபயோகித்துக் கொண்டேன்.

இவ்வாறு, ஜோசியத்தின் மூலமாகவே எனக்கு நல்ல காலம் பிறந்தது. கடிதங்கள் வந்து குவியத் தொடங்கின. நேரிலும் பலர் வந்தார்கள். அவர்களுடன் பணமும் வரத் தொடங்கியது.

ஐந்தாறு மாதத்துக்குள் எனக்கு ஒரு நிச்சயம் ஏற்பட்டது. அதாவது, இந்த உலகத்திலுள்ள மக்களையெல்லாம் இரண்டு பிரிவாகப் பிரித்துவிடலாமென்று தோன்றிற்று. ஒரு பிரிவினர், ஜோசியத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்; இன்னொரு பிரிவினர் ஜோசியத்தில் நம்பிக்கையில்லாதவர்கள். நம்பிக்கை கொண்டவர்கள், அந்த நம்பிக்கை காரணமாக ஜோசியம் பார்த்தார்கள்; நம்பிக்கையில்லாதவர்கள், “அதையும் பரீட்சித்துப் பார்த்து விடலாமே?” என்று ஜோசியம் பார்த்தார்கள்! ஆகவே, ஜோசியம் பார்க்காதவர்கள் யாருமில்லையென்று ஏற்பட்டது.

அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்பதற்காக ஜோசியம் கேட்டார்கள். தேர்தலில் ஜெயிக்கும், ஜெயிக்காது என்று முன்னால் தெரிந்துவிட்டால், எவ்வளவு நல்லது பாருங்கள்! எவ்வளவு பணம் மீதியாகும்? உத்தியோகஸ்தர்கள் ‘பிரமோஷன்’ ஆகுமா என்று ஜோசியம் பார்த்தார்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் வருமா என்று கேட்டார்கள். குதிரைப் பந்தயத்துக்குப் போகிறவர்கள் கூடத் தங்களுடைய ஜாதகப் பலன் சரியாயிருக்கிறதா, பணம் கட்டலாமா என்று தெரிந்து கொள்ள விரும்பினார்கள். ஒரு பிரபல காங்கிரஸ்வாதி, தமக்கு இந்த வருஷம் சிறைக்குப் போக ஜாதகத்தில் இடமிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டார். இவர் தம்முடைய ஜாதக பலனைக் கொண்டு, தேசீய இயக்கத்தின் போக்கையே நிர்ணயிக்க முயன்றார்! தம்முடைய ஜாதக பலனில் சிறைவாசம் போட்டிருந்தால், மகாத்மா சத்தியாக்கிரஹம் ஆரம்பிப்பார், இல்லாவிட்டால் மாட்டார் என்று அவர் எண்ணினார். ஒரு பிரபல வக்கீல் தம்முடைய ஜாதக ரீதியின்படி தமக்கு ஒரு மனைவிதானா, இரண்டு பேர் உண்டா என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவல் காட்டினார்.

இப்படி, எத்தனையோ விநோதமான அநுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. அந்த அநுபவங்களில் என்னுடைய வாழ்க்கையையே மாற்றியமைத்து, என்னை ஜோசியத் தொழிலையும் விடும்படி செய்த அநுபவத்தைத்தான் இப்போது சொல்லப்போகிறேன்.

2

ஒரு நாள் மாலை ஐந்து மணி இருக்கும். என்னுடைய அறைக்குள் ஒரு சிறு பையன் வந்தான். அவனுக்குப் பத்து வயதிருக்கலாம். முகம் குறுகுறுவென்று களை வடிந்து கொண்டிருந்தது. அவன் வாழ்க்கையில் மிக மேலான நிலைக்கு வரப் போகிறான் என்று ஜோசியம் சொல்வதற்கு ஜாதகம் பார்க்க வேண்டியதில்லை; முகத்தைப் பார்த்தே சொல்லிவிடலாம்.

“ஸார்! ஜோசியர் நீங்கள் தானா, ஸார்?” என்று கேட்டான். அவன் குரலில் ஒரு கனிவு இருந்தது.

“ஆமாம், அப்பா! உனக்கு என்ன வேணும்?” என்றேன்.

“அம்மாவுக்கு உடம்பு சரியாயில்லை; உங்களைக் கூட்டிக் கொண்டு வரச்சொன்னாள்” என்றான்.

அவனுடைய முகத்தில் தோன்றிய சோகக் குறிக்கும், குரலில் தொனித்த கனிவுக்கும் எனக்குக் காரணம் தெரிந்தது. ஆனாலும், அவன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததற்காக நான் போய் என்ன பிரயோஜனம்?

“நான் வைத்தியனில்லையே, அப்பா!” என்றேன்.

“வைத்தியத்துக்காக இல்லை, ஸார்! ஏதோ ஜாதகம் பார்க்க வேணுமாம்; அதற்காகத்தான். உங்களை அவசியம் வந்துவிட்டுப் போகச் சொன்னாள், ஸார்!” என்றான்.

உடனே நான் அங்கவஸ்திரத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு அந்தப் பையனுடன் கிளம்பினேன்.

“வீடு எங்கே இருக்கிறது, தம்பி!” என்றேன்.

“கிட்டத்தான் ஸார், இருக்கிறது. நான் அழைத்துக் கொண்டு போகிறேன்” என்றான் பையன்.

சாலையில் நடந்து கொண்டே “வீட்டில் அப்பா இல்லையா, தம்பி?” என்று கேட்டேன்.

“எங்க அப்பா செத்துப் போய்ட்டார், ஸார்! ஆறு வருஷம் ஆச்சு” என்றான்.

சற்றுப் பொறுத்து, “உனக்கு அண்ணா இருக்கிறாரா?” என்று கேட்டேன்.

“இரண்டு அண்ணா இருக்கா, ஸார்! ஒருத்தன் தான், ஆகாசப் படையிலே சேர்ந்திருக்கான். உங்களுக்குத் தெரியாதா, ஸார்?” என்றான். அவனுடைய குரலில் பயத்தோடு பெருமையும் கலந்திருந்தது.

எழும்பூரிலிருந்து ஒரு பையன் ‘ஏர் பைலட்டாகச் சேர்ந்திருக்கிறான் என்று நான் முன்னமே கேள்விப்பட்டிருந்தேன். பிற்பாடு அவன் சீமைக்கு ‘ராயல் ஏர் போர்ஸில்’ சேர்வதற்குப் போயிருக்கிறானென்றும் சொன்னார்கள். அவனுடைய தம்பி தான் இவன். அவன் தாயாரைத்தான் பார்க்கப் போகிறோமென்றதும் எனக்கு ஒருவிதப் பெருமை உண்டாயிற்று.

ஜன நடமாட்டம் அதிகமில்லாத ஒதுக்குப்புறமான சாலையில் அவர்கள் வீடு இருந்தது. வாசலில் மதிள் சுவர் தாண்டியதும் ஒரு சின்னஞ்சிறு தோட்டம், அதற்குப் பின்னால் வீடு. வீட்டு வாசலில் சின்னத் தாழ்வாரம் இருந்தது. நாங்கள் வீட்டை அடைந்ததும், பையன், “இதோ நான் போய் அம்மாவிடம் சொல்கிறேன், ஸார்!” என்று கூறிவிட்டு உள்ளே போனான். வெளித் தாழ்வாரத்தில் கிடந்த நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். அடுத்த நிமிஷம் உள்ளிருந்து யாரோ வந்த சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஓர் இளம் பெண் என் முன்னால் நின்றாள். முக ஜாடையிலிருந்து, அவள் பையனுடைய தங்கையென்று ஊகித்துக் கொண்டேன். ஆச்சரியம் நிறைந்த தன் பெரிய கண்களை அகல விரித்து அவள் என்னை நோக்கினாள். என்னுடைய நெஞ்சை என்னமோ செய்தது. இப்படி ஓர் இளம் பெண்ணுடன் நேருக்கு நேர் பார்த்துப் பேசி எனக்கு வழக்கம் கிடையாது. எனவே, கலக்கத்துடன் எழுந்து நின்றேன்.

“நீங்கள் தான் பால ஜோசியரா?” என்று அந்தப் பெண் கேட்டாள்.

உடனே, கொஞ்சம் தைரியம் வந்து, “ஆமாம்” என்றேன்.

அவளுடைய இதழ்களில் ஒரு விஷமச் சிரிப்பின் ரேகை காணப்பட்டது.

“பால ஜோசியர் என்றால், பச்சைக் குழந்தையாயிருப்பீர்களாக்கும் என்று நினைத்தேன்!”

நான் கொல்லென்று சிரித்துவிட்டேன்.

அவள் சட்டென்று தன் வாயைப் பொத்திக் கொண்டதும் என் சிரிப்பு நின்றது. அவள் இரகசியம் பேசும் குரலில், “எங்க அம்மாவுக்கு உடம்பு சரியாயில்லை. அவளுக்கு மன வருத்தம் உண்டாகும்படியாக நீங்கள் ஒன்றும் சொல்லக்கூடாது. உங்களை ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன்” என்றாள்.

என்னைக் கூப்பிட்ட காரணம் ஒருவாறு எனக்குப் புலப்படத் தொடங்கியது.

மறுபடியும் அவள், “எங்கள் அண்ணா ஆகாசப் படையில் சேர்ந்திருக்கிறான், தெரியுமோ, இல்லையோ? அவன் ஜாதகத்தைப் பார்க்கச் சொல்வாள். ஒன்றும் ஆபத்து இல்லை என்று நீங்கள் சொல்லிவிட வேணும் தெரிகிறதா?” என்று மன்றாடும் குரலில் சொல்லி, என்னை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுடைய கண்களில் நீர் துளித்திருப்பதைக் கண்டேன். அந்தக் கண்ணீர்த் துளிகள் என் நெஞ்சைப் பிளந்தன.

பையன் உள்ளேயிருந்து ஓடி வந்து, “அம்மா வரச் சொல்கிறாள், ஸார்!” என்றான்.

உள்ளே போனேன். இதற்குள் மணி ஆறு ஆகிவிட்டபடியால் வெளிச்சம் வெகுவாக மங்கியிருந்தது. அது பழைய நாள் முறையில் கட்டி வீடு. முற்றம், தாழ்வாரம், கூடம் இப்படியிருந்தது. கூடத்தில், ஒரு நாடாக் கட்டில் போட்டிருந்தது. அதில் ஒரு அம்மாள், படுத்திருந்தவர், என்னைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தார். அவருக்கு வயது சுமார் ஐம்பது இருக்கும். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒருவித பயபக்தி உண்டாயிற்று. (அடிக்கடி “ஒருவித” என்று சொல்கிறேனில்லையா? இந்த உணர்ச்சிகளெல்லாம் எனக்கு முற்றும் புதியவையானபடியால் அப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது.)

நான் அருகில் சென்றதும், “நீங்கள் ஏன் அம்மா எழுந்திருக்கிறீர்கள்? படுத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.

“பாதகமில்லை; நீங்கள் உட்காருங்கள்” என்று அந்த அம்மாள் கூறினார்.

கீழே விரித்திருந்த பாயில் நான் உட்கார்ந்ததும், அந்த அம்மாள், “ஒரு ஜாதகம் பார்ப்பதற்காக உங்களைக் கூப்பிட்டனுப்பினேன். எனக்கு உடம்பு சரியாயில்லை. இல்லாவிட்டால் நானே வந்திருப்பேன்” என்றார்.

“அதற்கென்ன, மாமி! எனக்கு வருவதற்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை” என்றேன்.

அந்த அம்மாள் தன் தலைமாட்டிலிருந்து ஒரு சிறு கைப்பெட்டியைத் திறந்து, அதற்குள்ளிருந்த ஒரு ஜாதகத்தை எடுத்தார்.

“பாலா! உள்ளே போய் ஹரிகேன் லாந்தர் ஏற்றி வாங்கிக் கொண்டு வா!” என்றார்.

அந்த வீட்டுக்கு மின்சார விளக்குப் போடவில்லை என்பதை அப்போதுதான் கவனித்தேன்.

“வீட்டுக்காரனிடம் நாங்கள் எவ்வளவோ சண்டைபிடிக்கிறோம், இன்னமும் லைட் போட மாட்டேனென்கிறான்” என்றார் அந்த அம்மாள்.

“அதனாலென்ன, மாமி! ஹரிகேன் வெளிச்சமே போதும்” என்றேன்.

லாந்தர் வந்ததும், ஜாதகத்தை வாங்கிப் பார்த்தேன். வாசலில் எனக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை நன்றாய் ஞாபகத்திலிருந்தது. ஜாதகம் எப்படியிருந்தாலும் அதைப் பற்றி ஒன்றும் கெடுதலாய்ச் சொல்வதில்லையென்று தீர்மானித்துக் கொண்டேன். ஆனால், என்ன ஆச்சரியம்! அந்த ஜாதகத்தில் கெடுதலாக ஒன்றுமேயில்லை! எவ்வளவோ கவனமாக ஆராய்ந்து கணக்குப் போட்டுப் பார்த்தேன். அது ஒரு சாதாரண ஜாதகம். நன்மையோ, கெடுதலோ, பிரமாதமாக ஒன்றுமில்லை. முக்கியமாக, இந்த வருஷத்தில் விசேஷ சம்பவம் எதுவும் ஜாதக ரீதிப்படி நேர்வதற்கில்லை.

எனக்கு இன்னது சொல்வதென்று தெரியவில்லை. உள்ளது உள்ளபடி “ஒன்றுமேயில்லை” என்றால், அந்த மாமிக்கு நம்பிக்கை உண்டாகாது. எனக்கு ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்துப் போகச் சொல்லி விடலாமல்லவா? அவர் என்னைப் பற்றி அம்மாதிரி அபிப்பிராயங் கொள்வதை நான் விரும்பவில்லை. ஆகவே, கொஞ்சம் யோசனை செய்து ‘ரொம்ப உயர்ந்த ஜாதகம் அம்மா! இந்த மாதிரி ஜாதகம் சாதாரணமாய்ப் பார்க்க முடியாது. இந்த வருஷத்திலே ஒரு கண்டம் இருக்கிறது. ஆனால் ஆபத்து ஒன்றும் வராது, நிச்சயம். சுபகிரஹங்களின் சக்தி பலமாய் இருக்கிறது” என்றேன்.

என்னுடைய பேச்சின் பாதியிலேயே அந்த அம்மாளின் முகத்தில் புன்னகை ஏற்பட்டதைப் பார்த்தேன். நான் பேசி முடித்ததும் அது சிரிப்பாக மாறிற்று. பலவீனத்தினால், சிரிப்பு இருமலில் முடிந்தது.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ தப்புப் பண்ணி விட்டோ ம் என்று மட்டும் உணர்ந்தேன்.

“இப்படித்தான் நீங்கள் எல்லாருடைய ஜாதகமும் பார்த்துச் சொல்கிறதா?” என்று அந்த மாமி கேட்டபோது, நான் பதில் சொல்லத் தெரியாமல் சிரித்து மழுப்பப் பார்த்தேன்.

அவர் விடவில்லை “வாசலில் வந்து பத்மா உங்களிடம் என்ன சொன்னாள்? ஒன்றும் ஆபத்தில்லையென்று சொல்லச் சொன்னாளா? அவள் அங்கு அவசரமாய் ஓடி வந்தபோதே எனக்குத் தெரியும்” என்றார்.

நான் மௌனமாயிருந்தேன்.

“பத்மா! இங்கே வா!” என்று மாமி கூப்பிட்டாள். பத்மா, வெண்ணெய் திருடிய கிருஷ்ணன் முகத்தைப் போல முகத்தை வைத்துக் கொண்டு வந்தாள். “ஏன் அம்மா” என்று பரிவாகக் கேட்டாள்.

“உனக்கு எத்தனை வயது இப்போது?”

“புருஷர்களிருக்கும் போது ஸ்திரீகள் வயதைச் சொல்லலாமா அம்மா?” என்றாள் பத்மா குறும்புச் சிரிப்புடன்.

“பாதகமில்லை, சொல்லு!”

“பதினேழு வயது.”

“எனக்கெத்தனை வயது?”

“ஐம்பத்திரண்டு வயது.”

“உன்னை விட எனக்கு முப்பத்தைந்து வயது அதிகமாயிற்றே! என்னைக் காட்டிலும் சமத்து நீயென்று நினைத்துக் கொண்டு காரியம் செய்யலாமா?” என்றார்.

பத்மா என்னைக் கோபமாய்ப் பார்த்தாள்.

“அவர் பேரில் குற்றமில்லை, பத்மா! சாமர்த்தியமாய்த்தான் பொய் சொல்லப் பார்த்தார். ஆனால் ஜாதகமே வேறேயாயிருந்தால், அவர் என்ன செய்வார்? உன் அண்ணா ஜாதகத்தைப் பார்க்க இவரைக் கூப்பிடவில்லை, பத்மா! அதைப் பார்த்து இப்போது என்ன ஆகப் போகிறது? உன் கல்யாணத்துக்காக வந்திருக்கும் வரன் ஜாதகம் இது” என்றார்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. பத்மாவைப் பார்த்தேன். அவள் தலையைக் குனிந்து கொண்டிருந்தாள்.

மாமி மறுபடியும், “நீ போ, பத்மா!” என்றார்.

பத்மா மாடிப் படிகளின் மேல் குதித்துக் கொண்டு ஏறினாள். அவள் போவதையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். மாடித் திருப்பத்தில் சற்று நின்று திரும்பிப் பார்த்தாள். கண்களை ஒரு தடவை சிமிட்டு, தலையை நாலு தடவை இப்படியும் அப்படியும் அசைத்தாள். பிறகு ஓடிப் போனாள். அந்த தலையசைத்தலுக்கு என்ன அர்த்தம்? “ஜாதகப் பொருத்தம் சரியாயில்லை” யென்று சொல்லச் சொல்கிறாளா?

பிறகு நான் பத்மாவின் அம்மாவைப் பார்த்து, “நான் ஏமாந்துதான் போனேன். உங்களையும் ஏமாற்றப் பார்த்தேன். தயவு செய்து மன்னிக்க வேண்டும்” என்றேன்.

“இப்போது சரியாய்ப் பார்த்துச் சொல்லுங்கள்” என்றார் பத்மாவின் தாயார்.

இதில் ஒன்றும் எனக்குக் கஷ்டம் ஏற்படவில்லை. முன்னமே நான் சொன்னதுபோல, அந்த ஜாதகம் ரொம்ப சாதாரண ஜாதகம் விசேஷம் ஒன்றுமே கிடையாது. பத்மாவை நான் பார்த்து அரை மணிக்கு மேல் ஆகவில்லையெனாலும், “அவளுக்குத் தகுந்த வரனில்லை” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டேன். அப்படிப் பட்டவர்த்தனமாய் அவள் தாயாரிடம் சொல்லவில்லை. குறிப்பாகத் தெரியப்படுத்தினேன். மேலும், “இந்த ஜாதகத்திற்கு இந்த வருஷம் கல்யாணம் ஆகுமென்று தோன்றவில்லையே” என்றும் சொல்லி வைத்தேன்.

இந்த ஆராய்ச்சியின் போது, பத்மாவின் தாயாருக்கு ஜோசியம், ஜாதகம் பார்த்தல் முதலியவைகளைப் பற்றி நல்ல பரிச்சயமுண்டென்று தெரிந்தது. இன்னும், அவர் உயர்ந்த படிப்பும், உலக ஞானமும் உள்ளவரென்றும் தெரிந்து கொண்டேன்.

“என் தலையில் இந்தப் பெரிய பொறுப்பைச் சுமத்திவிட்டு அவர் போய் விட்டார். இவளுடைய தமையன்கள் தலைக்கு ஒரு போக்காயிருக்கிறார்கள். எனக்கோ நாளுக்கு நாள் உடம்பு நன்றாயில்லை. இந்தப் பெண்ணுக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட்டால், என் மனம் நிம்மதியடையும். தகுந்த வரன் கிடைக்கமாட்டேனென்கிறது. ஒன்று சரியாயிருந்தால், இன்னொன்று சரியாயில்லை” என்று அந்த அம்மாள் சொல்லிப் பெருமூச்சு விட்டார்.

“உங்களுடைய பெண்ணுக்கு தகுந்த வரனாய்க் கிடைப்பது கஷ்டந்தான்” என்று நான் சொன்னேன். சொன்னவுடனே, ஏதாவது பிசகாய்ச் சொல்லி விட்டோ மோ என்று சந்தேகம் வந்துவிட்டது.

“இன்னும் ஏதாவது பார்க்க வேணுமா, நான் போகலாமா, மாமி!” என்று கேட்டேன்.

“இன்றைக்கு நாழிகையாகிவிட்டது. இன்னொரு நாள் வருகிறீர்களா? என் பிள்ளைகளின் ஜாதகத்தையும் காட்டுகிறேன்” என்றார்.

“கட்டாயம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, நான் எழுந்து சென்றேன்.

நான் வாசல் பக்கம் போய், மதில் சுவரைத் தாண்டியதும், பின்னால், “ஸார், ஸார்” என்று சத்தம் கேட்டது. பாலன் நின்று கொண்டிருந்தான். “கொஞ்சம் இருக்கச் சொல்கிறா, ஸார்!” என்றான். திரும்பிப் போனேன். அதற்குள் பத்மா வந்து தன் கையிலிருந்த ஏதோ ஒன்றைப் பாலனிடம் கொடுத்து, என்னிடம் கொடுக்கச் சொன்னாள். அது ஒரு ஐந்து ரூபாய் நோட்டு. நான் அதை வாங்கி மறுபடியும் பாலனுடைய சட்டைப் பையில் போட்டுவிட்டு, “இன்னொரு நாளைக்கு வரப்போகிறேன். அப்போது வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனேன். மறுபடியும் மதில் வாசலைத் தாண்டும் போது திரும்பிப் பார்த்தேன். பத்மா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்புறம் நான் திரும்பிப் பார்க்காமலே சென்றேன். ஆனால், பத்மாவின் கண்களும், முகமும் என் மனத்தை விட்டகலவில்லை. இது எனக்கு ஒரு புதிய அநுபவமாயிருந்தது. ஒரு பெண்ணின் கண்களுக்கு அவ்வளவு சக்தி உண்டென்று அதற்கு முன் நான் நினைத்ததேயில்லை.

3

மறுநாள் அந்தக் குடும்பத்தைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தேன். பத்மாவின் தகப்பனார் பெரிய உத்தியோகத்தில் இருந்தாரென்றும், ஐந்து வருஷத்துக்கு முன்னால் இறந்து போனாரென்றும் அறிந்தேன். அதற்குப் பிறகு பாகீரதி அம்மாள் எழும்பூரில் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு செட்டாகக் குடித்தனம் பண்ணி, குழந்தைகளையும் படிக்க வைத்து வந்தாள். பையன்கள் இரண்டு பேரும் பி.ஏ.பரீட்சை தேறினார்கள். ஒருவன் ஆகாச விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டு சில மாதங்களுக்கு முன்புதான் 800 ரூபாய் சம்பளத்தில் ‘பைலட்’ வேலையில் அமர்ந்தான். அப்போது ஊரெல்லாம் அவனுடைய சாமர்த்தியத்தையும் அதிர்ஷ்டத்தையும் புகழ்ந்து கொண்டார்கள். பிறகு யுத்தம் வந்தது. கே. ராமஸ்வாமி பிரிட்டிஷ் ஆகாசப் படைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாயும், சீக்கிரம் சீமைக்குப் போகிறதாயும் பத்திரிகைகளில் கொஞ்ச நாளைக்கு முன் பிரசுரமாகியிருந்தது. அவனுடைய சகோதரன் கிருஷ்ணசாமி ஏதோ ஒரு அமெரிக்க வியாபாரக் கம்பெனியில் ‘டிராவலிங் ஏஜெண்ட்’ என்று தெரிந்தது.

இந்தியர்களுக்குள் ஆகாசப் படையில் சேர்ந்தவர்கள் அப்போது வெகு சிலரேயாதலால், மேற்சொன்ன விவரங்கள் எல்லாம் அநேகம் பேருக்குத் தெரிந்திருந்தன.

இப்படியாகப் பிரசித்தி பெற்றிருந்த குடும்பத்திலேதான் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. இரண்டு நாள் கழித்து ஒரு நாள் சாயங்காலம் மறுபடியும் அவர்கள் வீட்டுக்குப் போனேன். வாசற்படியில் வழி பார்த்து நின்றவள் போல் பத்மா நின்றாள். “எங்கள் அம்மாவுக்கு என்னமோ உங்களை ரொம்பப் பிடித்துப் போயிருக்கிறது. முந்தா நாளும் நேற்றும் நீங்கள் ஏன் வரவில்லையென்று கேட்டுக் கொண்டிருந்தாள். இன்று மறுபடியும் பாலனை அனுப்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்” என்றாள்.

உள்ளே சென்றேன். பாகீரதி மாமி முன் போலவே நாடாக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் எழுந்து உட்கார முயன்றார். “ஏன், மாமி நீங்கள் எழுந்திருக்கிறீர்கள்? படுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்னும் உடம்பு சரியாகவில்லையா? யாராவது டாக்டர் வந்து பார்க்கிறாரா?” என்று கேட்டேன்.

“என் வியாதி மனோ வியாதிதான். அதை எந்த டாக்டராலும் தீர்க்க முடியாது. இந்தப் பெண்ணுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிவிட்டேனானால், மனது கொஞ்சம் நிம்மதியடையும்” என்றார்.

அப்போது பத்மா, “போ, அம்மா! உனக்கு எப்போதும் இதுதான் வேலை. இந்தப் பேச்சு எனக்குப் பிடிக்கவேயில்லை” என்றாள்.

“உன்னை யார் இங்கே கூப்பிட்டார்கள்? நீ போ மாடிக்கு” என்றார் பாகீரதி மாமி.

“பாலா, வாடா நாம் மாடிக்குப் போகலாம். அம்மா ஏதாவது உளறிண்டு கிடக்கட்டும்” என்று பத்மா சொல்லிவிட்டு, பாலனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மாடிக்குப் போனாள்.

மாமியைப் பார்த்து, “அன்றைக்கு உங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தைக் காட்டுவதாய்ச் சொன்னீர்கள் அல்லவா?” என்றேன்.

அவர் கைப்பெட்டியை திறந்து ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தார். அதைக் கவனமாக ஆராயத் தொடங்கினேன். ஆரம்பத்திலேயே என் நெஞ்சு துணுக்கென்றது. அது ஒரு விசேஷ ஜாதகந்தான். இருபது வயதில் பளிச்சென்று ஒரு பிரகாசம் உண்டாயிற்று. இருபத்திரண்டாவது வயதில் அது திடீரென்று மங்கி அடியோடு மறைந்தது.

பாகீரதி மாமியின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே எனக்குப் பயமாயிருந்தது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு அவரைப் பார்த்து, “ஆகாசப் படையில் சேர்ந்திருக்கிறானே, அந்தப் பையனின் ஜாதகந்தானே இது?” என்றேன்.

“ஆமாம்.”

நான் மிகுந்த தயக்கத்துடன், “கண்டம் பலமாய்த் தானிருக்கிறது. ஆனாலும் பயமில்லை. ஆயுள்காரகன் நல்ல இடத்தில் இருக்கிறானல்லவா?” என்றேன்.

“அது எப்படி?” என்று கேட்டார்.

நான் ஏதேதோ சொல்லிப் பார்த்தேன். அதற்கெல்லாம் அவர் ஆட்சேபணை சொல்லி வந்தார். கடைசியில், நான், “இதிலெல்லாம் என்ன அம்மா இருக்கிறது? யார் அவ்வளவு சரியாக ஜாதகம் கணித்து வைத்திருக்கிறார்கள்? சாஸ்திரத்தைத் தான் நாம் என்ன பூராவும் கண்டு விட்டோ மோ? ஜோதிடம் பெரிய சமுத்திரம். ஒரு விநாடியை ஒன்பது அம்சமாகப் பிரித்தால், ஒவ்வொரு அம்சத்தில் பிறந்ததற்கும் தனித் தனிப் பலன் உண்டு என்று சாஸ்திரம் சொல்கிறது. அப்படியெல்லாம் பிறந்த வேளையை நிர்ணயித்து யார் ஜாதகம் கணிக்கிறார்கள்?” என்றேன்.

பிறகு அவர் கவனத்தை வேறு விஷயத்தில் திருப்பலாமென்று “ஆமாம், உங்களுக்கு இன்னொரு பிள்ளை இருக்கிறார் அல்லவா? அவருடைய ஜாதகம் இருக்கிறதா?” என்று கேட்டேன்.

“அவனுக்கும் இதே ஜாதகந்தான்” என்றார்.

ஒரு நிமிஷம் எனக்குத் திகைப்பாயிருந்தது. அப்புறம், ஒரு எண்ணம் தோன்றவே, “என்ன சொல்கிறீர்கள்? இரண்டு பேரும்…” என்று தயங்கினேன்.

“ஆமாம், ராமுவும் கிருஷ்ணனும் இரட்டைப் பிள்ளைகள். இரண்டு நிமிஷம் முன் பின்னாகப் பிறந்தார்கள்” என்றாள் பாகீரதி மாமி.

எனக்குச் சொல்ல முடியாத ஆச்சரியம் உண்டாயிற்று. ஏதோ ஒரு ஆறுதலும் ஏற்பட்டது. அந்த விஷயத்தை நினைத்துப் பார்க்கப் பார்க்க, பழைய மனச்சோர்வு மாறி, உற்சாகம் வளர்ந்தது.

“பார்த்தீர்களா அம்மா! இதிலிருந்தே தெரியவில்லையா நம்முடைய ஜோசிய ஆராய்ச்சியெல்லாம் எவ்வளவு அரை குறையானதென்று? இரண்டு பேருக்கும் ஒரே ஜாதகம். ஆனாலும் இரண்டு பேருடைய போக்கும் முழுதும் வித்தியாசமாயிருக்கிறதல்லவா? ஒருவன் யுத்த களத்துக்குப் போக, இன்னொருவன் இங்கே சௌக்யமாயிருப்பானேன்? இவன் எப்போது இங்கே சௌக்கியமாயிருக்கிறானோ, அவனும் சௌக்யமாகத் திரும்பி வந்து சேருவான். ஜாதகத்தைக் கொண்டு வீணாக மனத்தைக் கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள். பகவான் அப்படியெல்லாம் உங்களைச் சோதிக்க மாட்டார்” என்றேன்.

என்னுடைய அனுதாபம் நான் எதிர்பார்த்ததற்கு நேர் எதிர்விதமான பலனை அளித்தது. அவருடைய கண்களில் கண்ணீர் ததும்பிற்று. நல்ல வேளையாக, இச்சமயத்தில் மாடியிலிருந்து பாலன், “அம்மா! அண்ணா வருகிறான்” என்று கூவிக் கொண்டு கீழே ஓடி வந்தான். மாமி சட்டென்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். பாலன் வாசற்புறம் ஓடிச் சற்று நேரத்துக்கெல்லாம் அண்ணாவின் கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு வந்தான்.

“கிருஷ்ணா! வா!” என்றார் மாமி.

கிருஷ்ணசாமி ஸுட்டு தரித்து, தொப்பியணிந்து கொண்டிருந்தான். தொப்பியை எடுத்துச் சுவரிலிருந்த ஸ்டாண்டில் மாட்டிவிட்டு, ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்தான்.

“ஏனம்மா, உடம்பு இன்னும் சரியாகவில்லையா? டாக்டரை அழைத்துக் காட்டலாமென்றால், கேட்கிறதில்லை. தனக்காகவும் தெரியாது. சொன்னாலும் கேட்பதில்லையென்றால், அப்படிப்பட்டவர்களுடன் என்ன செய்கிறது” என்று ஒரு பிரசங்கம் செய்துவிட்டு, சட்டென்று என்னைப் பார்த்து, “இந்தப் பேர்வழி யார்? யாராவது புது ஜோசியரோ?” என்று கேட்டான்.

அதற்கு மாமி “ஆமாம், கிருஷ்ணா! இவர் ஜோசியர் தான். பால ஜோசியர் பட்டாபிராமன் பி.ஏ. என்று பத்திரிகையில் விளம்பரம் வந்தது. நாம் கூட ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தோமல்லவா?” என்றார்.

கிருஷ்ணசாமி என்னை அருவருப்புடன் பார்த்தான். “ஏன் சார்! உங்களுக்கு வேறு வேலை ஒன்றும் கிடைக்கவில்லையோ? ஜோசியத்தில் புகுந்தீர்கள்?” என்றான்.

எனக்குக் கோபமாய் வந்தது. ஆனாலும், மாமியின் நல்ல குணத்தை நினைத்துக் கோபத்தை அடக்கிக் கொண்டேன். வேடிக்கையாகப் பதில் சொல்ல எண்ணி, “பேஷ்! என்னை விடப் பெரிய ஜோசியராயிருக்கிறீரே நீர்? வேறு வேலை ஒன்றும் கிடைக்காதபடியால்தான் உண்மையில் நான் ஜோசியத் தொழில் ஆரம்பித்தேன். இப்போது வேலை நிறைய இருக்கிறது” என்றேன்.

கிருஷ்ணசாமி சிரித்துக் கொண்டு, “நிஜம் சொல்கிற ஜோசியரை நான் இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறேன்” என்றான்.

பிறகு, “போட்டும்! இந்த யுத்தம் எப்படி முடியும். சொல்லும் பார்க்கலாம். உமது ஜோசியத்தில் அது வருகிறதா?” என்று கேட்டான்.

“இங்கிலீஷ்காரன் தான் ஜயிப்பான்” என்றேன் நான்.

“எப்படிச் சொல்கிறீர்? இங்கிலாந்தின் ஜாதகம் உம்மிடம் இருக்கிறதோ?”

“எனக்கு மனுஷ்யர்களுடைய ஜாதகந்தான் பார்க்கத் தெரியும். தேசங்களின் ஜாதகம் பார்க்கும் வித்தை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் பார்த்துத்தான் சொல்கிறேன்.”

“ரொம்ப அழகுதான். பத்திரிகைகளில் வரும் செய்திகள் எல்லாம் வேதவாக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர் போலிருக்கிறது” என்று சொல்லி விட்டு, மாமியைப் பார்த்து, “ராமு சீமைக்குப் போய்விட்டானே, தெரியுமோ இல்லையோ, அம்மா!” என்று கேட்டான்.

“தெரியும். தந்தி வந்தது. பத்திரிகையிலும் பார்த்தேன்” என்றார் மாமி.

“உளுத்துப் போன இந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இவன் போய்த்தான் காப்பாற்றப் போகிறான்!” என்றான் கிருஷ்ணசாமி. இதற்குள், பத்மாவும் மாடியிலிருந்து கீழே வந்து சேர்ந்தாள். அவள் ராமுவின் கட்சி பேசத் தொடங்கினாள். இங்கிலீஷ்காரர்கள் தான் நல்லவர்கள் என்றும் அவர்கள் தான் ஜயிக்கவேண்டுமென்றும் சொன்னாள். இதனால் கிருஷ்ணசாமியின் கோபம் அதிகமாயிற்று. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மேலும் அதற்கு சேவை செய்யப் போயிருக்கும் ராமுவின் மேலும் தனக்குள்ள கோபத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தான். இடையில், “நீர் என்ன கதர் கட்டியிருக்கிறீரே, காங்கிரஸ் வாதியோ?” என்று கேட்டான். நான் “இல்லை” யென்று மறுத்ததும், காங்கிரஸ்காரர்களுக்கெல்லாம் “டோ ஸ்” கொடுக்க ஆரம்பித்தான். சுத்தக் கோழைகள், பயங்காளிகள், உத்தியோகத்துக்கு ஆசைப்பட்டு ஜான் புல்லின் காலில் விழுகிறவர்கள் என்றெல்லாம் திட்டினான். இந்தியா தேசத்துக்கு மோக்ஷம் இந்தக் கையாலாகாத காங்கிரஸ் தலைவர்களால் வரப் போகிறதில்லையென்றும், அதற்கு வேலை செய்கிறவர்கள் வேறே இருக்கிறார்களென்றும், அவர்கள் தக்க சமயத்தில் வெளிக் கிளம்பிப் புரட்சியை நிலை நாட்டுவார்களென்றும், ‘மார்க்ஸீய’த்தினால் தான் உலகத்துக்கே விமோசனம் வரப்போகிறது என்றும் சரமாரியாகப் பொழிந்தான்.

அன்றிரவு எனக்கு நன்றாய்த் தூக்கம் பிடிக்கவில்லை. அந்த அதிசயமான குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் பற்றி மாறி மாறி எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்களுக்குள்ளெல்லாம் பத்மாவின் குதூகலமும் குறும்பும் நிறைந்த முகந்தான் அதிகமாக என் மனக் கண் முன் வந்து கொண்டிருந்தது. அந்த அழகிய முகத்தில் கண்ணீர் வெள்ளமாய்ப் பெருகும் காலம் அவ்வளவு சீக்கிரத்தில் வரப்போகிறதென்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

4

இன்னொரு நாள் சாயங்காலம் பாலன் வந்து என்னை அம்மா அழைத்து வரச் சொன்னதாகக் கூறினான். உடனே நான் கிளம்பினேன். அப்போது நன்றாய் அஸ்தமித்துவிட்டது. வானத்தில் பூரண சந்திரனைக் கண்ட கடலைப் போல் என் உள்ளமும் கொந்தளித்தது. பத்மாவைப் பார்க்கப் போகிறோமென்ற எண்ணந்தான் அதற்கு காரணமென்று சொல்ல வேண்டியதில்லையல்ல்வா?

அன்று மாமி கட்டிலில் படுத்திருக்கவில்லை. கீழே தரையில் உட்கார்ந்திருந்தார்.

“உடம்பு கொஞ்சம் தேவலை போலிருக்கிறதே!” என்றேன்.

“கொஞ்சம் சுமாராயிருக்கிறது” என்றார் மாமி.

“இந்த வீட்டில் இன்னும் ஏதாவது மாறுதல் இருக்கிறதா, பாருங்கள்” என்றாள் பத்மா.

சுற்றுமுற்றும் பார்த்தேன். புதிதாக மின்சார விளக்கு போட்டிருந்தது சட்டென்று தெரிந்தது.

“ஓகோ! விளக்குப் போட்டிருக்கிறதே!” என்றேன்.

பத்மாவும் பாலனும், கூச்சல் போட்டுக் கொண்டு, விளக்குகளை ஏற்றியும் அணைத்தும் விளையாடத் தொடங்கினார்கள்.

“நீங்கள் என்ன பச்சைக் குழந்தைகளா? சும்மா இருங்கள்” என்றார், அவர்களுடைய தாயார். பிறகு என்னைப் பார்த்து, “உங்களை ஒரு காரியத்துக்காக அழைத்து வரச் சொன்னேன். ஒரு ரேடியோ வேண்டும். பார்த்து நல்ல ஸெட்டாக வாங்கித் தர வேண்டும். லண்டன் செய்திகள் நன்றாய்க் கேட்கும் ஸெட்டாய் இருக்க வேண்டும்” என்றார்.

மாமி அடிக்கடி வீட்டுக்கு மின்சார விளக்குப் போடவில்லையே என்று குறைப்பட்டதன் காரணம் அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. ரேடியோ வைக்க வேண்டுமென்று அவருக்கு ஆசை. அந்த ஆசையின் காரணமும் எனக்குப் புலப்படாமல் இல்லை. பிள்ளை சீமைக்குப் போயிருக்கிறபடியால், அவ்விடத்துச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்பினார்.

“அதற்கென்ன? பேஷாகப் பார்த்து நல்ல ஸெட்டாய் வாங்கிக் கொண்டு வருகிறேன். நான் கூட அடிக்கடி வந்து கேட்கலாமல்லவா?” என்றேன்.

“கூடவே கூடாது” என்றாள், தூரத்திலிருந்து பத்மா. “நீங்களே எல்லாவற்றையும் கேட்டுவிட்டால், பிறகு நாங்கள் என்னத்தைக் கேட்கிறது?” என்று விஷமமாகச் சொன்னாள்.

“அவள் கிடக்கிறாள். நீங்கள் கட்டாயம் வர வேண்டும். தினந் தினம் வந்து, யுத்தச் செய்திகளைக் கேட்டு எனக்குத் தமிழில் சொல்ல வேண்டும்” என்றார் மாமி.

பிறகு எல்லாரும் மாடிக்குப் போய், வெண்ணிலாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பாகீரதி மாமி தம்முடைய பிள்ளைகளைப் பற்றியே பேசினார். பேச்சு வேறு எந்தப் பக்கம் போனாலும், மறுபடியும் தமது பிள்ளைகளிடமே அவர் கொண்டு வந்து விட்டார். குழந்தை வயதில் அவர்கள் எவ்வளவு சமத்தாயிருந்தார்கள் என்று சொன்னார். இரட்டைப் பிள்ளை பெற்றது பற்றி ஊரார் தம்மைப் பரிகாசம் செய்ததையும், தாம் வெட்கப்பட்டதையும், ஆனால் குழந்தைகளைச் சேர்ந்தாற்போல் பார்க்கும்போதெல்லாம் தம் மனத்திற்குள் உண்டான சந்தோஷத்தையும் சொன்னார். சின்ன வகுப்புகளில் அவர்கள் ஒரே பள்ளிக் கூடத்தில் ஒரே வகுப்பில் படித்து வந்தார்களாம். கொஞ்சம் வயதான பிறகு அவர்களுக்கு வெட்கம் உண்டாகி வெவ்வேறு பள்ளிக் கூடங்களுக்குப் போய் விட்டார்களாம். படிப்பில் கெட்டிக்காரர்களாயிருந்தது போலவே, எல்லாக் காரியங்களிலும் கெட்டிக்காரர்களாம். வாயைப் போல் கையாம்.

“ஆனால் பிடிவாதம் மட்டும் ரொம்ப அதிகம். அவரவர்கள் பிடித்ததையே சாதிப்பார்கள். யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அன்று மாதிரிதான் இன்றும் என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்” என்று அந்த அம்மாள் சொல்லிப் பெருமூச்சு விட்ட போது, எனக்கு அந்தப் பிள்ளைகள் மீது வெகு கோபம் வந்தது.

“எத்தகைய மூர்க்கர்கள்! இப்படிப்பட்ட தாயாரை சந்தோஷமாய் வைத்திருக்க அவர்கள் கொடுத்து வைக்கவில்லையே! பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்னும் பழமொழி எவ்வளவு சரியாயிருக்கிறது!” என்று எண்ணினேன்.

மறுநாளே நல்ல ரேடியோ ஸெட்டு ஒன்று வாங்கி அவர்கள் வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தேன். ரேடியோக் கம்பெனியிலிருந்து ஆட்கள் வந்து, ‘ஏரியல்’ முதலியவை அமைத்து விட்டுப் போனார்கள்.

“ராமு மட்டும் இருந்தால், இதெல்லாம் அவனே செய்து விடுவான். ஆளையே கூப்பிட மாட்டான்” என்றார் மாமி. அப்படிச் சொல்லும் போதே அவருடைய தொண்டையை அடைத்துக் கொண்டது. தாயின் அன்பு என்பது எவ்வளவு மகத்தானது என்பது எனக்கு மேலும் மேலும் நன்றாய்த் தெரிந்தது. தாயின் அன்பை அறியாத என்னுடைய வாழ்க்கை எவ்வளவு சூன்யமானது என்றும் உணர்ந்தேன்.

ரேடியோ வைத்தது முதல், நான் தினந்தோறும் மாலை நேரத்தில் அவர்கள் வீட்டுக்குப் போகத் தொடங்கினேன். பாதி நாள் அங்கேயே சாப்பிட்டு விடுவேன். இராத்திரி 9.30க்கு லண்டன் ரேடியோச் செய்திகள் கேட்டு மாமிக்குச் சொல்லிவிட்டுப் பிறகுதான் திரும்புவேன்.

இப்படி மூன்று, நாலு மாதங்கள் சென்றன. நாள் போவதே தெரியவில்லை. என் வாழ்க்கையில் இவ்வளவு சந்தோஷமாக இதற்கு முன் நான் இருந்தது கிடையாது. உலகமே மோகனம் பெற்று விளங்கியது. சந்திரன் புதிய ஒளியுடன் பிரகாசித்தான். தென்றல் புதிய இனிமையுடன் வீசிற்று. அந்தி வானம் முன்னெப்போதுமில்லாத அழகு பெற்று விளங்கிற்று. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் என்னைக் கண் சிமிட்டிக் கூப்பிட்டுத் தங்கள் காதல் கதைகளை என்னிடம் அந்தரங்கமாகக் கூறின. புஷ்பங்களின் ஸுகந்தம் என்னைப் பரவசப்படுத்திற்று. பட்சிகளின் கானம் அமுதகீதமாக என் செவியில் பாய்ந்தது. மனுஷர்கள் யாரைப் பார்த்தாலும், நல்லவர்களாகவும் சிநேகத்துக்கு உரியவர்களாகவும் தோன்றினார்கள்.

ஆனாலும், இத்தகைய ஆனந்தம் நிலைத்திருக்க வேண்டும் என்ற பயம் மட்டும் எனக்கு அடிக்கடி தோன்றும். ஏதோ ஒரு பெரிய விபத்து வரப்போகிறதென்று திகிலுடன் கூடிய உணர்ச்சி உள்ளத்தின் அடிவாரத்தில் இருந்து கொண்டேயிருந்தது.

ரேடியோவில் தினம் லண்டன் செய்திகள் தொடங்கும்போது, மாமியின் முகத்தில் ஆவல் ததும்பிக் கொண்டிருக்கும். செய்திகள் முடிந்ததும் அந்த முகத்தில் ஏமாற்றம் காணப்படும். மாமி என்ன எதிர்பார்த்தார்! ரேடியோவில் பிள்ளையைப் பற்றியச் செய்தி வருமென்றா? இது என்ன பைத்தியக்கார ஆசை! இப்படி எண்ணிய நான் சீக்கிரத்திலேயே என் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. ஒரு நாள் லண்டன் பி.பி.ஸி. செய்தி அறிவிப்பின் கடைசியில், “நாளைய தினம் ஒரு விசேஷ சம்பவம். வழக்கம் போல் செய்திகள் முடிந்ததும், ராயல் ஆகாசப் படையைச் சேர்ந்த இந்திய விமானி ஒருவர் தமது அநுபவங்களைச் சொல்வார்” என்று அறிவிக்கப்பட்டது. இது எனக்கே ஒருவிதப் பரபரப்பை அளித்தது. மாமிக்குக் கேட்கவா வேண்டும்? இரவில், அவர் தூங்கவேயில்லையென்றும், பத்மாவை அடிக்கடி எழுப்பி, “ஒருவேளை ராமு பேசுவானோ?” என்று கேட்டுக் கொண்டிருந்ததாகவும் மறுநாள் அறிந்தேன்.

அன்று மாலை மாமி ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாகக் கழிக்கிறார் என்று நன்கு தெரிந்தது. கடைசியாக, 9.30 அடித்தது. லண்டன் செய்தியும் ஆரம்பமாயிற்று. பத்து நிமிஷம் செய்திகள் படித்தானதும், “இப்போது இந்திய ஆகாச விமானி பேசுவார்” என்று அறிவிக்கப்பட்டது. உடனே, தொண்டையைக் கனைத்துக் கொண்டு, ஓர் இந்திய இளைஞனின் குரல் பேசத் தொடங்கியது. ஆகா! அப்போது மாமியின் முகத்தைப் பார்க்கணுமே! ‘கன்றின் குரலைக் கேட்டுக் கனிந்து வரும் பசுப்போல’ என்ற பாட்டின் அர்த்தம் அதற்கு முன்னால் எனக்கு விளங்கியதேயில்லை. அப்போதுதான் விளங்கிற்று.

பேச்சு முடியும் வரையில் மாமி கண் கொட்டாமல் ரேடியோவையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த உயிரற்ற கருவியில், பிள்ளையின் முகத்தையே அவர் பார்த்தது போலிருந்தது. பேச்சு முடிந்ததும், கண்களில் ததும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, தழதழத்த குரலில், “குழந்தை என்ன சொன்னான்?” என்று கேட்டார். நான் சொன்னேன். முதலில் லண்டன் நகர் மீது ஜெர்மன் விமானங்கள் வந்து கண்ட இடத்தில் குண்டு போடும் அக்கிரமத்தை அவன் விவரித்தான். பிறகு, லண்டன் ஜனங்கள் ஸ்திரீகளும் குழந்தைகளும் உள்பட எவ்வளவு தீரத்துடன் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினான். மகாபாரத யுத்தத்தைப் போல் இதுவும் தர்ம யுத்தம் தானென்றும் சொல்லி, இப்பேர்ப்பட்ட யுத்தத்தில் பங்கு எடுத்துக் கொள்ளத் தனக்குக் கிடைத்த பாக்கியத்தைப் பாராட்டினான். கூடிய சீக்கிரத்தில் பகைவர்களுடைய நாட்டுக்குச் சென்று பழிக்குப் பழி வாங்கும் விருப்பம் தனக்கு அபரிமிதமாக இருப்பதாகவும், அதை நிறைவேற்றும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினான். கடைசியாக, இந்திய மக்கள் எல்லாரும் தங்களுடைய சொந்த சண்டை சச்சரவுகளையெல்லாம் மறந்து விட்டு மனித நாகரிகத்தைக் காப்பதற்காகப் போராடும் பிரிட்டனுக்குப் பூரண ஒத்தாசை செய்யவேண்டுமென்று வேண்டிக் கொண்டு பேச்சை முடித்தான்.

இதையெல்லாம் நான் தெரிவித்தபோது, மாமி, பத்மா, பாலன் எல்லாரும் ராமுவையே நேரில் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு, சற்று நேரம் மௌனம் குடி கொண்டிருந்தது.

பத்மா, திடீரென்று, “ஏனம்மா, இந்தப் பேச்சைக் கிருஷ்ணசாமி கேட்டிருப்பானா, அம்மா!” என்றாள்.

மாமி பதில் சொல்லவில்லை.

“கேட்டிருந்தால் கிருஷ்ணசாமிக்குக்கூட மனமும் மாறிப் போயிருக்கும்” என்றாள் பத்மா.

மறுநாள் தான் அவர்கள் வீட்டுக்குப் போன போது, மாமி நாடாக் கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டேன். பழையபடி அவருக்கு உடம்பு அசௌகர்யம் என்று தெரிந்தது.

“அண்ணாவிடமிருந்து வந்த கடிதத்தை வாசித்துக் காட்டு” என்று பத்மாவிடம் சொன்னார்.

“எந்த அண்ணா?” என்று கேட்டேன்.

“ராமு அண்ணாவிடமிருந்துதான். இன்றையத் தபாலில் வந்தது. ஆனால் போஸ்டு பண்ணி ஒரு மாதத்துக்கு மேலாச்சு” என்றாள் பத்மா.

பிறகு, கடிதத்தை வாசித்தாள். கிட்டத்தட்ட ரேடியோவில் பேசியது போலவே கடிதத்தின் முற்பகுதி இருந்தது. கடைசியில், பின்வருமாறு உருக்கமாக எழுதியிருந்தான்.

“அம்மா! கூடிய சீக்கிரத்தில் நான் பகைவர்களுடைய தேசங்களுக்கு விமானத்தில் செல்வேன். ஒரு நாளைக்குத் திரும்பி வராமல் போனாலும் போவேன். சர்க்கார் உனக்கு சமாசாரம் தெரிவிப்பார்கள்.

தாயாருக்குப் பிள்ளை செய்யவேண்டிய கடமை ஒன்றும் நான் செய்யவில்லை. இருந்தாலும், உலகத்தில் தர்மத்தையும் நாகரிகத்தையும் காப்பாற்றுவதற்காக உன் பிள்ளை உயிரை விட்டான் என்றால், அது உனக்குப் பெருமை இல்லையா, அம்மா?

தெரிந்தோ, தெரியாமலோ உன மனதுக்கு வருத்தமுண்டாகும்படியான காரியங்கள் எவ்வளவோ நான் செய்திருப்பேன். அதற்காகவெல்லாம் என்னை நீ மன்னித்து விட வேண்டும்.

சிறு பிராயத்தில் என்னுடைய பிடிவாதங்களையெல்லாம் நீ பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றி வளர்த்தாய். இன்னமும் நான் உனக்குக் குழந்தைதானே? இப்போதும் என்னுடைய பிடிவாதத்தை மன்னித்து விடு.

கிருஷ்ணசாமி, பத்மா, பாலன் எல்லாருக்கும் என்னுடைய அன்பைத் தெரியப்படுத்து, நான் அவர்களுடைய ஞாபகமாகவே இருக்கிறேன். அவர்களுக்கு நான் கொடுத்த தொந்தரவுகளையெல்லாம் மறந்து மன்னித்துவிடும்படி சொல்லு.

இப்படிக்கு உன் பிடிவாதக்காரப் பிள்ளை ராமு.

பத்மா இப்படி வாசித்து முடித்தபோது, அவர்கள் மூன்று பேர்களுடைய கண்ணிலும் ஜலம் தளும்பிற்று.

“பின் குறிப்பையும் வாசி!” என்று மாமி சொன்னார்.

“நான் மாட்டேன்” என்று பத்மா நாணத்துடன் கூறினாள்.

“அப்படியானால் கடிதத்தை அவரிடம் கொடு” என்றார் மாமி.

பத்மாவிடமிருந்து கடிதத்தை வாங்கிப் பார்த்தேன். அதில் கையெழுத்துக்குப் பிறகு பின்வருமாறு எழுதியிருந்தது.

“பத்மாவுக்குக் கல்யாணமாகிக் குழந்தை பிறக்கும் போது, முதலில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு என் பெயரை வைக்கச் சொல்லு – ராமு”

பத்மா கடிதத்தை என்னிடம் கொடுத்தவுடனேயே பாலனுடன் மாடிக்குப் போய் விட்டாள். அவள் வெட்கப்பட்டது இயற்கையேயல்லவா?

பிறகு, மாமி என்னைப் பார்த்து, “உங்களை முதலில் அழைத்து வரச் சொன்னது எதற்கு என்று ஞாபகமிருக்கிறதா?” என்று கேட்டார்.

“ஞாபகமிருக்கிறது. பத்மாவுக்கு வரன் ஜாதகம் பார்க்க” என்றேன்.

“அப்போது ஒரு ஜாதகத்தோடு நிறுத்தி விட்டோ ம். இன்னும் சில வரன்களின் ஜாதகம் இன்று பார்க்கலாமா? பத்மாவுக்குக் கல்யாணம் ஆகி விட்டால், என் மனதிலிருந்து பெரிய பாரம் நீங்கும். எது எப்படியிருக்குமோ?” என்றார்.

நான் சற்று யோசித்து, “அம்மா, நான் ஒரு சமாசாரம் சொல்லட்டுமா?” என்றேன்.

மாமி பேசாமல் என் முகத்தைப் பார்த்தார்.

“வேறு ஜாதகங்கள் என்னத்திற்காகப் பார்க்க வேண்டும்? நானே பத்மாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் சம்மதமாயிருந்தால்” என்றேன்.

மாமியின் முகத்தில் அப்போதுதான் கொஞ்சம் மலர்ச்சியைப் பார்த்தேன். அவர் சற்று நிதானித்து, “எனக்குப் பூரண சம்மதம். ஆனால், உங்களைச் சேர்ந்த பந்துக்கள் – பெரியவர்களைக் கேட்க வேண்டாமா?” என்றார்.

“எனக்கு ஒருவருமேயில்லை. நீங்கள் தான்” என்றேன்.

“அப்படியானால், பத்மாவை மட்டுந்தான் கேட்கவேண்டும். அவளை நீங்களே கேட்டு விடுங்கள். இந்தக் காலத்திலேயெல்லாம் அப்படித்தான் வழக்கமாயிருக்கிறது” என்றார்.

“நான் அவ்வளவு நாகரிகக்காரன் இல்லை, மாமி! நீங்கள் தான் கேட்டுச் சொல்ல வேண்டும்” என்றேன் நான்.

இரண்டு நாள் கழித்து ஒரு நாள் காலையிலேயே பாலன் வந்து கூப்பிட்டான். கிருஷ்ணசாமி அண்ணா வந்திருப்பதாய்ச் சொன்னான். நான் வீட்டுக்குள் நுழையும் போதே, “வாருங்கள், மாப்பிள்ளை!” என்று கிருஷ்ணசாமி அழைத்ததும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

நான் போய் உட்கார்ந்ததும் மாமி, “கிருஷ்ணசாமியிடம் சமாசாரத்தைச் சொன்னேன். அவனுக்குப் பூரண சம்மதமென்கிறான்” என்றார்.

அப்போது, கிருஷ்ணசாமி, “பத்மாவுக்குத் தகுந்த வரனா என்று அம்மா கேட்டாள். ‘நம்ம பத்மாவுக்கு தகுந்த வரன் ஒரு நாளும் கிடைக்கப் போவதில்லை. யார் பண்ணிக்கிறேன்னு வரானோ அவன் கழுத்திலே கட்டி விடு’ என்று சொல்லிண்டிருந்தேன். அதற்குள் நீரே வந்துவிட்டீர்” என்றான்.

“ஒன்றுமில்லை – அவருக்குத் தகுந்த பெண் கிடைக்கிறதுதான் கஷ்டம்” என்றாள் பத்மா.

இப்படிப் பத்மா எனக்குப் பரிந்து பேசியது எவ்வளவோ எனக்கு சந்தோஷமளித்தது. ஆனால், கிருஷ்ணசாமிக்கு என் பேரிலிருந்த அருவருப்பு நீங்கி அவன் கல்யாணத்துக்குச் சம்மதித்தது அதைவிட மகிழ்ச்சியளித்தது.

“பத்மாவுக்குத் தகுந்த வரன் கிடைப்பது கஷ்டந்தான். நீங்கள் தமையன்மார்கள் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். செய்யாதது உங்கள் தவறுதானே?” என்றேன்.

“ஆமாம், மாப்பிள்ளை, ஆமாம்! எங்கள் தப்புத்தான். ஆனால் எங்களுக்கு இதற்கெல்லாம் சாவகாசம் ஏது? நான் தேசத்தைக் காப்பாற்றப் போகிறேன். ராமு உலகத்தையே காப்பாற்றுவதற்குப் போயிருக்கிறான்!” என்றான் கிருஷ்ணசாமி. பிறகு, ராமுவின் ரேடியோப் பேச்சைப் பற்றி திட்டு திட்டென்று திட்டத் தொடங்கினான்.

கடைசியில், “இன்று ராத்திரி நான் மறுபடியும் கோயமுத்தூர், மலையாளம் பக்கம் போகிறேன். வருவதற்கு ஒரு மாதம் ஆகும். அதற்குள் கல்யாணத்துக்கு முகூர்த்தம் வைத்தால், எனக்குத் தந்தி அடியுங்கள். எங்கள் ஆபீஸில் கேட்டால், விலாசம் சொல்வார்கள். ஒருவேளை நான் வராமற் போனாலும், கல்யாணத்தை நடத்திவிடுங்கள். என்னுடைய ஸ்தூல சரீரம் வராவிட்டாலும் சூக்ஷ்ம சரீரத்தில் அன்று உங்களுடன் இருப்பேன்” என்றான் கிருஷ்ணசாமி.

எங்கள் கல்யாணம் நிச்சயமாகி, முகூர்த்தத் தேதியும் வைக்கப்பட்டது. திருவான்மியூர் கோவிலில் கல்யாணத்தை நடத்துவதென்று தீர்மானமாயிற்று.

இதற்குப் பிறகு நாலைந்து நாள் பாகீரதி மாமி வெகு உற்சாகமாக இருந்தார். கல்யாணத்தை அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டுமென்று, திட்டம் போடவும் சாமக்கிரியைகள் வாங்கிச் சேர்க்கவும் ஆரம்பித்தார்.

5

ஒரு நாள் பாலன் திடுதிடுவென்று என் அறைக்கு ஓடி வந்தான். அவன் விம்மிக் கொண்டே, “அம்மாவுக்கு உடம்பு ஜாஸ்தியாயிருக்கிறது; பேச மாட்டேனென்கிறாள்” என்றான். நான் அவனைப் பின்னால் விட்டு விட்டு அதி வேகமாகச் சென்று அவர்கள் வீட்டை அடைந்தேன்.

மாமி மூர்ச்சையடைந்து கிடந்தார். பக்கத்தில் பத்மா நின்று ஹோவென்று அழுது கொண்டிருந்தாள். சமையற்கார அம்மாள் கையைப் பிசைந்து கொண்டு நின்றாள். அந்த மாதிரி அரை மணி நேரமாய்க் கிடப்பதாகச் சொன்னாள்.

நான் நடுக்கத்துடன் மாமியின் கையைப் பிடித்துப் பார்த்தேன். நாடி அடித்துக் கொண்டிருந்தது. மூக்கில் மூச்சும் வந்து கொண்டிருந்தது. கொஞ்சம் தைரியமடைந்து, முகத்தில் இலேசாக ஜலத்தை தெளித்தேன். விசிறி கொண்டு வந்து விசிறினேன். அவர் கண்ணைத் திறந்து பார்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மரணை அடைந்தார். “எனக்கு ஒன்றுமில்லை; ஏன் அழுகிறீர்கள்?” என்று பத்மாவையும் பாலனையும் தேற்றினார்.

நான் கேட்டதற்கு, “என்னமோ திடீரென்று உடம்பில் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. மார்பை அடைத்தாற் போலிருந்தது. அப்புறம் ஒன்றும் தெரியவில்லை” என்றார்.

அன்று முதல், மாமியின் உற்சாகமெல்லாம் போய்விட்டது. கல்யாண ஏற்பாடுகளைப் பற்றிக் கூட அவர் பேசவில்லை. பிரமை பிடித்தவர் போல உட்கார்ந்திருந்தார். கேட்டால், “உடம்பை என்னவோ செய்கிறது. மார்பு படபடவென்று அடித்துக் கொள்கிறது” என்றார். ஆகாரமும் ரொம்பக் குறைந்துவிட்டது.

நான் பிடிவாதம் பிடித்து ஒரு டாக்டரை அழைத்துக் கொண்டு வந்தேன். அவர் பார்த்துவிட்டு, “தேகம் பலவீனமாயிருக்கிறது. வேறொன்றுமில்லை” என்று சொல்லி, டானிக் எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.

மாமிக்கு தேகத்தின் உபாதையை விட மனோ வேதனை அதிகமாயிருந்ததாகத் தெரிந்தது. தினந்தினம் “இன்றைக்குத் தபால் ஒன்றும் வரவில்லையா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியில், தபால் வந்தது. வெறுந் தபாலாக வரவில்லை. தலையில் விழும் இடியாக வந்தது.

அது சென்னை அரசாங்கத்தின் முத்திரையிட்ட தபால். கவர்னரின் அந்தரங்கக் காரியதரிசி எழுதியிருந்தார். ‘பைலட்’ ராமஸ்வாமி அரும் பெரும் தீரச் செயல்கள் பல புரிந்த பிறகு, விமானப் போர் ஒன்றில் உயிர் நீத்ததாகவும், அவருடைய வீர மரணம் இந்தியா தேசத்துக்கே புகழ் தரக் கூடியதென்றும் அதில் எழுதியிருந்தது. அந்த வீரப் புதல்வரின் தாயாருக்குக் கவர்னர் பெருமானின் மனமார்ந்த அநுதாபமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தபால் வந்தபோது நான் இருந்தேன். நான் தான் முதலில் கடிதத்தைப் படித்தேன். படித்துவிட்டு, “ஐயோ, அம்மா! இப்படி இடி போல செய்தி வந்திருக்கிறதே!” என்று கதறினேன்.

மாமி, “ராமு!” என்று ஒரு பெரிய சப்தம் போட்டார். உடனே மூர்ச்சையாகி விழுந்தார்.

முன் தடவையில் போலவே, அரை மணி நேரம் கழித்து அவருக்கு மூர்ச்சை தெளிந்தது. கடிதத்தை வாங்கிப் பார்த்துக் கொண்டேயிருந்தார். நான், தட்டுத் தடுமாறி, “அம்மா! கிருஷ்ணசாமிக்குத் தந்தியடித்துவிட்டு வரட்டுமா?” என்றேன். மாமி பதிலே சொல்லவில்லை.

“இந்தச் செய்தியை அவனுக்குத் தெரியப்படுத்தவில்லை. உடனே வரச்சொல்லி மட்டும் தந்தியடிக்கிறேன்” என்றேன்.

மாமி இதற்கும் பேசாமலிருந்தார். அவருக்குச் சம்மதந்தான் என்றெண்ணி உடனே கிளம்பிச் சென்றேன்.

கிருஷ்ணசாமியின் அப்போதைய விலாசம் தெரிந்து கொள்வதற்காக அவன் வேலை செய்த கம்பெனியை டெலிபோனில் கூப்பிட்டுக் கேட்டேன். அங்கிருந்து பேசியவர் முதலில் “இதோ விசாரித்துச் சொல்கிறேன்” என்றார். சற்று நேரங் கழித்து வந்து, “ஸார், நீங்கள் யார்?” என்று கேட்டார்.

“நான் அவர்களுடைய குடும்ப சிநேகிதன்” என்றதும், “ஏதோ முக்கியமான சமாசாரம் இருக்கிறதாம், உங்களை மானேஜர் நேரில் வரச் சொல்கிறார்” என்றார்.

என் இதயம் திக்திக்கென்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது. அந்தக் கம்பெனியின் காரியாலயத்துக்குப் போனேன். மானேஜர் என்னைப் பார்த்ததுமே, “ரொம்ப துக்ககரமான சமாசாரம், ஸார்” என்றார். பிறகு, அவருக்கு கள்ளிக் கோட்டையிலிருந்து வந்த கடிதத்தை எடுத்துக் காட்டினார்.

கதையை வளர்த்துவானேன்? மேற்குக் கடற்கரை ஜில்லாக்களில், அதிகாரிகளின் உத்தரவை மீறி ஒரு நாள் பல இடங்களில் கூட்டங்கள் நடந்தனவல்லவா? அந்த யுத்த கண்டனக் கூட்டங்களில் ஒன்றில் கிருஷ்ணசாமியும் இருந்தான். அன்று போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் மாண்டு போனவர்களில் கிருஷ்ணசாமியும் ஒருவன்.

இந்தச் செய்தியினால் என் உள்ளம் என்ன நிலைமை அடைந்ததென்று விவரிக்க நான் முயலவில்லை. அதைக் காட்டிலும், மாமியிடம் இந்தச் செய்தியை எப்படித் தெரிவிப்பது என்னும் எண்ணமே எனக்கு அதிக வேதனையையும் பீதியையும் அளித்தது. போகும் போதெல்லாம், செய்தியை மறைத்துவிடலாமா, கொஞ்ச நாள் கழித்துச் சொல்லலாமா என்றெல்லாம் எண்ணிக் கொண்டு போனேன்.

வீட்டுக்குள் நான் நுழைந்ததும், மாமி என்னை வெறித்து நோக்கி, “எங்கே கிருஷ்ணசாமி! இன்னும் வரவில்லையா?” என்று கேட்டார். உடனே என்னுடைய முன் யோசனையெல்லாம் பறந்து போய்விட்டது. “ஐயோ! அம்மா! ஜாதகம் இப்படிப் பலித்துப் போய்விட்டதே!” என்று கதறினேன்.

பத்து தினங்கள் ஆயின. இந்தப் பத்து நாளும் எப்படிச் சென்றதென்று எனக்கே தெரியாது. பத்மாவும் பாலனும் ஓயாத கண்ணீரும் கம்பலையுமாகத்தான் இருந்தார்கள் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதுதான் எனக்கு வேலையாயிருந்தது. ஆனால் மாமி அழவில்லை. அவர் கண்ணிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை. பிரமை பிடித்தவரைப் போல் உட்கார்ந்திருந்தார். ஆகாரமும் கிடையாது தூக்கமும் கிடையாது.

முதலில் அவர் மூர்ச்சையாகி விழுந்த அன்று தான், ராமு, கிருஷ்ணசாமி இரண்டு பேருக்கும் மரணம் சம்பவித்தது. அதற்கு முன்னாடி மாமியைப் பார்த்தவர்கள் இந்தப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு பார்த்தால் அடையாளமே கண்டுபிடிக்க முடியாது. அப்போது அவருடைய தலைமயிர் பழுப்பு வர்ணமாயிருந்தது. இரண்டொரு நரைதான் காணப்பட்டது! இந்தப் பதினைந்து நாட்களில் தலை தும்பைப் பூப்போல வெளுத்துவிட்டது. முன்னே அவரை 45 வயதுதான் சொல்லத் தோன்றும். இப்போது பார்த்தாலோ, 65 வயது. அவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டு விட்டது. ஆனால் இதிலெல்லாம் எனக்கு ஆச்சரியமே கிடையாது. அவர் எப்படி உயிரை வைத்துக் கொண்டிருந்தார் என்பதுதான் எனக்குப் பெரும் ஆச்சரியமளித்தது.

“பத்மாவுக்குக் கல்யாணம் ஆகவில்லை; அவளை இப்படி அநாதியாய் விட்டுவிட்டுப் போகக் கூடாது” என்ற எண்ணமே அவருடைய உயிருக்கு அவ்வளவு பலம் அளித்துக் காப்பாற்றியிருக்க வேண்டும்.

முன்னால் நிச்சயித்த முகூர்த்தத் தேதியிலேயே திருவான்மியூர் கோவிலில், எங்களுக்குக் கல்யாணம் நடந்தது. அந்த மாதிரி அதிசயமான கல்யாணத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். மணப்பெண் அன்றைக்கெல்லாம் அழுது கொண்டேயிருந்தாள். “அழாதே, பத்மா! கிருஷ்ணசாமிதான் வாக்குறுதி கொடுத்திருந்தானே, சூக்ஷ்ம சரீரத்திலாவது வந்து சேருவேனென்று? அவன் வந்திருப்பான்” என்று நான் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தேன்.

கலியாணம் ஆகி பட்டணத்துக்குத் திரும்பி வந்து மாமிக்கு நமஸ்காரம் பண்ணினோம். மாமி, என்னுடைய தலையை தம் கரத்தினால் தொட்டு, கனிவு நிறைந்த குரலில், “ஸ்வாமி என்னுடைய இரண்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டார்; ஒரு பிள்ளையைப் புதிதாய்க் கொடுத்தார்” என்றார். பிறகு, பத்மாவைக் கட்டிக் கொண்டு உச்சிமோந்தார். அவருடைய கண்களில் ஜலம் ததும்பி வழிந்தது. பிள்ளைகள் இறந்த செய்தி வந்த பிறகு அவர் இன்றுதான் முதல் முதல் கண்ணீர் விட்டார். அதைப் பார்க்க எனக்குப் பெரும் ஆறுதலாயிருந்தது.

அவ்வளவுதான் எங்கள் கதை. இன்னும் ஒரே ஒரு விஷயம் தான் சொல்வதற்கு பாக்கியிருக்கிறது. “ஜோசியத்தில் நம்பிக்கை போய்விட்டதாகச் சொன்னீரே அது எப்படி? ஜோசியத்தில் நம்பிக்கை உண்டாகும்படியான காரியமல்லவா நடந்திருக்கிறது?” என்று நீங்கள் கேட்கலாம். இது உண்மையே. ஆனால் எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை போய் விட்டதும் உண்மைதான். ஜோசியத்தில் ஒருவருக்கு நம்பிக்கை இருந்தால், வாழ்க்கையில், எந்தக் காரியத்தில் அந்த நம்பிக்கையைப் பயன்படுத்த வேண்டும்? ஒரு மனிதனுடைய வாழ்வில் கல்யாணத்தைக் காட்டிலும் முக்கியமான சம்பவம் என்ன இருக்கிறது? அதற்கல்லவா அவசியமாக ஜோசியம் பார்க்க வேண்டும்.

எங்கள் கல்யானத்துக்கு நான் ஜோசியத்தின் உதவியை நாடவில்லை. ஜாதகமே பார்க்கவில்லை. மாமியும் “ஜாதகம்” என்ற பேச்சையே எடுக்கவில்லை.

ஆம். ஜோசியத்திலும் ஜாதகத்திலும் எங்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. இப்போது எங்களுடைய நம்பிக்கை பகவானிடத்திலேதான். அவருடைய சித்தத்தின் படி எல்லாம் நடக்கிறதென்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கைப் பெரும் துன்பங்களைக் கடக்க அந்த நம்பிக்கையையே துணையாகக் கொண்டிருக்கிறோம்.

-1930 ஆனந்த விகடன் தீபாவளி மலர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *