கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,427 
 

(1953 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆயிரந் தலைகளையும் உயர்த்திக்கொண்டு சீறி வரும் தாகேந்திரனைப் போலக் கடல் பொங்கி குமுறியடித்துக் கொண்டு இருந்தது. அநாதியான கடவுளைப் போல ஓயாது குமுறியடித்துக் கொண்டு இருக்கும் பொங்குமாங் கடலின் இரைச்சலோடு போட்டியிட்டுக் கொண்டு, மரக் கலந் தரும் செல்வப்பொருட்டால் தாம் பிறந்த நிலத்தை விட்டுப் போந்த பரதேசிகள் பலரின் குரலும் சேர்ந்து ஒலித்தது. பொன்னும் மணியும், தூசுந் துகிரும், பூவும் புகையும், சுண்ணமுஞ் சாந்தமும் விற்பவர்கள் வீதியைப் பரப்பிக்கொண்டு வெகு வேகமாகப் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர். யவனர், துலக் சர், மிலேச்சர், தமிழர்… அப்பப்பா ! +த்தனை சாதிகள்!! எத்தனை குரல்கள்……..

ஆனால் பொறிக் கெட்டுகின்ற இத்தனை இரைச்ச லுக்கும் மேலாக, யாரோ பரதேசி ஒருவன் சொல்லிய அந்த வரிகள், அவர் புலனைத் தொட்டு, அவர் அந்தராத் மாவில் எதிரொலித்துக் கொண்டு இருந்தன. ‘காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே’ என்று, அந்த ஒலிப்பிலேயே, வீதியின் இரு மருங்கிலும் வெள்ளம்போல வழிந்துகொண்டு இருக்கும் ஜனக் கும்பலினூடாகத் தண்ணீரில் மிதக்கும் எண்ணெயைப் போலச் சென்று கொண்டு இருந்தார் செட்டியார். பொருளைப் பொன் னாக மாற்றுவதற்காகத் தொண்டை வரளக் கத்திக் கொண்டிருந்த அங்காடிக்காரர்களிடம் அவருக்கு ஓர் அனுதாபம், ஓர் பரிவு ஏற்பட்டது. இவர்கள் ஏன் இப்படிக் கத்திக்கொண்டிருக்கிறார்கள்? யாருக்காகச் சம் பாதிக்கிறார்கள்? ஏன் சம்பாதிக்க வேண்டும்? என்ற கேள்விகள் அவர் உள்ளின் உள்ளே ஒன்றன்பின் ஒன்றாய் சங்கிலிக் கோவையாய், அந்தமே இல்லாத சூக்கும தத்துவமாய் எழுந்து கொண்டேயிருந்தன. அந்தக் கேள்விகளாற் குட்டை குழம்பிய அவர் மனதிலே, சேற் றிலே பட்டும் படாமலும் வேர்விட்டு, நீர்க் கீழ்ப்பரப்பில் அசைந்தாடிக் கொண்டு இருக்கும் பாசித் திரையைப் போல அந்தப் பரதேசியின் வார்த்தைகள் அசைந்தாடிக் கொண்டு இருந்தன. ‘காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே ‘.

இந்த வேதாந்த நடையிலேயே செட்டியார் சத்தமும் சந்தடியும் நிறைந்த அங்காடி வீதியை விட்டு வைசியர் வதியும் வீதிக்கு வந்து விட்டார். அஸ்தமனச் சூரியனின் செங்கிரணங்கள் வீதியின் இருமருங்கும் நிறைந்து நின்ற வேயாமாடங்கள் மீதும், மாளிகைகளின் மீதும், மான் கண்கள் போலக் கோலஞ் செய்த சாளரங்களினூடே தோன்றும் சந்திரவதனங்கள் மீதும் பட்டு, அக்காவிரிப் பூம்பட்டினமே பசந்து பொன்னிற மூட்டப்பட்டதாய் அழகாகத் தோன்றிற்று! நேற்றுவரை செட்டியாருக்கு மாலைச் செவ்வானம் தன் இளம் மனைவியின் நாணிய முகத்தைத்தான் நினைவூட்டிற்று. அதே செவ்வானம் இன்று கொழுந்து விட்டெரியும் சிதைத் தீயாய், மனிதனின் ஆசாபாசங்களைச் சுட்டெரிக்க வல்ல நியமத்தீயாய், எப்படியெல்லாமோ – அவருக்குப் பட்டது.. ஆனாலும் தன்னைத் தானே பொசுக்கிக் கொள்ள மாட்டாத தீயைப்போல அவர் மனதிற் தோன்றிய விசாரங்களே ஒரு பேராசையாய், கட்டுக்குள் சிக்கிவராத சித்து விளையாட்டாய், எவ்வி எவ்விக் குதித்து அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. நேற்று இருந்த மன அமைதி இன்றைக்கில்லை. நித்திய மோனத்தை, மகா சாந்தியை அடைந்து விட அவர் மனது பண்ணும் சேஷ்டைகளில் அவருக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. பேரமைதிக்கு முன் சீறியடிக்கும் பெரும் புயலா இது? ஒன்றுமே விளங்கவில்லை. செட்டியார் நடந்து கொண்டே இருந்தார்.

‘வீட்டிலே தலை வாயிலிலே ‘அவள்’ காத்துக் கொண்டு நிற்பாள். அவள் அன்பு எனனை இடைமறிக் கும்……. சை! அன்பாவது மண்ணாவது; எல்லாம் வெறுஞ் சாகசம்… அவர் மனம் வெறுத்துக் கொண்டது. மறுபடியும்……. |

பெற்று வளர்த்துப் பேராகிக்விட்ட அன்னை, அவள் கண்ணீர் என் லட்சியத்திற்குக் குறுக்கே நிற்கும்? தங்கை… அவள் பிள்ளைகள்… வேண்டாம் சம்சார பந்தத்தில் அல்லாடும் மனிதனுக்கு அவை வேறு இரட்டை தாழ்ப்பாள்கள்! எல்லாம் மாயை. ஒன்றுமே சதமல்ல… திரும்பவும் அவர் உள்ளச் சுவரிலே அந்த வரி மோதி எதிரொலிந்தது. ‘காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.’

நடந்து கொண்டே வந்த செட்டியார் வீட்டுவாயிலை அடைந்து விட்டார். தலைவாயிலிலே அவர் மனைவி பூசி மினுக்கிய குத்துவிளக்கைப் போல அவர் வரவைக் காத்து நின்று கொண்டிருந்தாள். ஆனால் செட்டியாரின் ‘ஞானக் கண்களில்’ புழு நெளியுந் தசைக் கூட்டம் ஒன்று தான் பட்டது!

செட்டியாரின் குறாவிய முகத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அம்மையார் வியப்போடு கேட்டாள்: “மரக் கலங்கள் இன்னும் வரவில்லையா?”

“ஏன் வர வேண்டும்? இந்தப் பொன்னும் மணியும் யாருக்கு வேண்டும்?” என்று விரக்தியோடு பதிலளித்து விட்டு மான்தோலிற் சம்மணங்கட்டிக் கொண்டு இருந்தார் செட்டியார்.

அவர் எதிர்பாராத போக்கைக் கண்ட மனைவி “ஏன் இப்படிக் கீழே இருந்து விட்டீர்கள். கட்டிலில் இருங்கள். காலைப் பிடித்து விடுகிறேன்” என்றாள் பணிவோடு.

“கட்டிலும் பஞ்சணையும் ஏன்? இந்த ஊத்தைச் சரீரத்தைக் கிடத்துவதற்குக் கட்டாந்தரையே போதும். நீ போ; முன்னால் நிற்காதே; போ” என்று சீறி விழுந்தார் செட்டியார்.

உரிமையோடு, ஊரறிய, ஒரே தலையணையில் தலை வைத்துப் படுக்க அனுமதி பெற்ற ஜீவனுக்குத்தான் அன்று தொடங்கிய வாழ்வு எந்தக் கதியில் போகும் என்ற உண்மை தெரிந்திருக்குமாம். அது எந்தக் கதியில் போனா லும், இந்தக் கதிக்குப் போகுமென்று செட்டியாரின் மனைவி கனவுகூடக் காணவில்லை. இன்று அவர் போக்கைக் கண்டபோது அவள் தவியாய்த் தவித்தாள்.

செட்டியாரின் தங்கை ஒரு சந்தேகப் பிராணி. அண்ணனுக்குச் சித்தம் சுவா தீனத்தில் இல்லை என்றே தீர்மானித்து விட்டாள். காலங் காலமாக அரும்பாடு பட்டுத் தேடிய திரவியமனைத்தையும், பிச்சைக்காரர் கட்கும், கோயில்கட்கும், பக்தர்கட்கும் அள்ளிக்கொடுத் துக்கொண்டு இருப்பதை அவளாற் தாழ முடியவில்லை. அநியாயமாக அள்ளிக் கொடுத்தது போக மீதிப் பொருளையாவது காப்பாற்ற அண்ணனைக் கூண்டோடு கைலாயம் அனுப்பிவிட முயன்ற நாட்களும் உண்டு.

மகனின் போக்கு அன்னையின் அடிவயிற்றிலேயே நெருப்பைக் கொட்டியதுபோல இருந்தது. ‘பொன் போகட்டும். குடும்பத்தின் கௌரவயே தொலையட்டும்;

ஆனால் மகன் மட்டும் அந்தரத்தியானமாகி’ விடாமல் வீட்டோடு இருந்து விட்டால் அது ஒன்றே போதும், என் றிருந்தது அவளுக்கு.

ஆனால்…….

இப்பொழுது செட்டியார், காவிரிப்பூம்பட்டினத்திலே வைசியருக்குள்ளேயே பெரிய கையாய், லகாரம் பொன் னுக்கதிபதியாய், திரைகடலெல்லாம் கப்பலோட்டும் வணிகர் அல்ல. அவர், மனைவி, அன்னை , உற்றார் சுற்றம் எல்லாவற்றையுமே உதறித் தள்ளிவிட்டுச் சட்டை கழற்றிய பாம்பைப் போலக் கிளம்பியும் வருடமாகி விட்டது! நாலுமுழத் துண்டோடு, கையிலே கப்பறையை ஏந்திக்கொண்டு. கிடைத்ததைத் தின்று, மடத்துக்கு மடம் கொடுங் கைக்குக் கீழ் தலையை வைத்துத் தூங்கும் ‘கட்டையாக’ மாறிப் போனார். இந்த சூக்குமமான காரியம் இவ்வளவு சுலபத்தில் எப்படிக் மைகூடிற்று என்பது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. சீனத்துப் பட்டையும், ஈழத்து முகத்தையும், யவனத்துப் பளிங்கை யும், தமிழ்நாட்டுப் பொன்னுக்கு மாற்றுவதை எண்ணிக் கனத்துப் போயிருந்த அவர் நெஞ்சு, காற்றைக் கிழித்துக் கொண்டு ‘ஜிவ்’வென்று பறக்கும் அடைக்கலாங் குருவி யைப் போல இலேசாகச் சுதந்திரமாகப் போய் விட்டதே என்ற ஓர் ஆத்ம திருப்தி அவருக்கு.

ஆனாலும் பிரம்மச்சாரியின் மனதே தசமக்கடமாம். செட்டியார் பிரமச்சாரிகூட இல்லை. இளமையிலே பெண்ணின்பத்தை நுகர்ந்தவர். ஆறு உட்பகையையும் கடிந்து நிர்மலனாகி விட்டதாக எண்ணிக்கொண்டாலும் அவர் ஐம்புலன்களாலும் அனுபவித்த பெண்ணாசை, வைக்கோற் போருக்குள் மறைந்து கிடந்த நெல்மணியின் முளை போலப் பீறிக்கொண்டு தோன்றத்தான் செய்தது. அந்த ஆசையை முளையிலேயே கிள்ளிவிட அந்தக் கட்டை பட்ட கஷ்டங்கள்… அப்பாடா!

யாக்கை, அதன் நிலையாமை, தன்னையறியாமலே தன்னில் வளரும் மூப்பு, அதன் தொடர்ச்சியாகக் ‘கதும் மென’ வரும் மரணம் என்றெல்லாம் தத்துவங்களை உள்ளே எழுப்ப வேண்டியிருந்தது. உலகின் இயற்கையாய், இயற்கையின் நாளாந்த விளையாட்டாய் அந்த விளையாட்டே விளங்கிக்கொள்ள முடியாத சூட்சுமமாய் மாறி மாறி வரும் மரணதத்துவத்தில் தன்னையிழந்து, மூண்டெழும் காமத் தீயை அடக்க எதிராறு நீந்தினார் செட்டியார். தோல்வி மனப்பான்மை, பெண்ணைப் பற்றி விபரீத தத்துவங்களை எல்லாம் சிருட்டித்தது. ‘பெண் பேய், மனிதனைப் பாசவலையிற் பிணித்து, அவனை நேரே நரகக் குழிக்கு இட்டுச் செல்லவந்த பைசாசத் தூ தன்’ என்றெல்லாம் அவர் மனம் ஆற்றாமையாற் குமுறியது. ஆனாலும் அவருக்குத் தான் வெற்றி பெற்று விட்ட தாகவே நினைப்பு. நினைவிலிருந்து பெண் ஆசையை நீக்கி விட்டேன் என்ற கர்வம்! எல்லாம் கழி யது காமுறும் ஈயைப் போலப் பேய் என்று வெறுத்துத் தள்ளிய பெண்ணையே இச்சிக்கும் அவர் மனத்தின் செய்கையை மறைத்துக் கொள்ள, அவர் இதயம் எழுப் பிய ஆற்றாமையின் எதிரொலி. இந்த எதிரொலிகட்கு இடையே ஆயிரஞ் சங்குகட்கிடையே முழங்கும் பாஞ்ச சன்யச் சங்குபோல அந்தக் குரல் கேட்டது, “அப்பா; போறியாடா மகனே” என்று.

உள்ளத்தில் அந்தக் குரல் ஒலித்ததும் அந்தக் ‘கட்டை ‘ முடக்கிக் கொண்டு கிடத்தியிருந்த தன் கட்டையை நிமிர்த்தி எழுந்து உட்கார்ந்தது. ஒன்றையும் காண வில்லை! “அம்மாவாவது என்னை அழைப்பதா வது? என்னைத்தானே அம்மையப்பன் அழைத்துக் கொண் டானே. அவனழைப்பை விடவா? எல்லாம் வெறும் பிரமை, மாயை” என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டது கட்டை.’

மடத்தின் எதிர்த்த மூலையில் தூணில் சாய்ந்து கொண்டு சிவமூலிகை’ப் பிரயோகம் செய்துக் கொண்டு இருந்த இன்னொரு கட்டை, “ஆமாம் என்னமோ பேசிக் கொண்டிருந்தீர்களே யாரோடு?” என்று கேட்டது • சிலிம்பியைக் கையிலெடுத்துக் கொண்டு.

“யாரோடுமில்லையே’ என்று வெட்கந் தோய்ந்த குரலில் பதிலளித்தார் செட்டியார்.

“ஓகோ; பஞ்சகத்துக்காண்டியா? சம்சாரத்தோடு கோவிச்சுக் கொண்டு வந்ததோ?” என்று சிரித்துக் கொண்டே கேட்டது இரண்டாவது கட்டை,

செட்டியாரின் மனதிற்குள் திக்கென்றது. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என்றார்.

“எல்லாம் சரியாய்ப் போயிடும். இதில் ஒரு ‘தம்’ பிடி” என்று சிலிம்பியை நீட்டியது பரம்பரைச் சாமி!

“சை! பாசபந்தங்களில் உழலும் மனதை ஒரு நிலைப்படுத்தி மோன திலையை அடைவதற்கு இது ஒரு குறுக்கு வழியா?” என்று சொல்லிக்கொண்டே வெறுப்போடு எழுந்து நடந்தார் செட்டியார். அவர் மனது சாந்தி பெறவில்லை.

குடமுடைத்து, கொள்ளிவைத்துப் பிதிர்க்கடனை நிறைவேற்றி, தன் குலத்தையே விளங்க வைக்க வந்த பிள்ளை கண்காணாமற் போய்விட்டானே என்ற ஏக்கம் கிழவியைப் படுக்கையில் கிடத்திவிட்டது. முதுமை யினால் தளர்ச்சியடைந்திருந்த அவள் பேரிடி போன்ற இந்தச் செய்தியில் எமனையே எதிர்கொண்டழைக்கத் துணிந்து விட்டாள்! சத்திரங்கள், சாவடிகள் தோறும் ஆள்விட்டுத் தேடித் தேடி அலுத்துப் போன அவள், அன்று செத்தே போய்விட்டாள்!! அவள் மகனை எங்கு இருந்து எப்படிக் கொண்டு வந்து அவளுக்குக் கொள்ளி – வைப்பது என்ற கவலை கிழவியின் இனத்தவர்களை எல்லாம் வாட்டி வதைத்தது. மூன்று வருடங்களாக அகப் படாதவன் இன்றைக்கா வந்துவிடப் போகிறான்? ஆனாலும் கிழவிக்கு அதிர்ஷ்ட மிருந்தால்…? – தேடிக்கொண்டு வந்தவர்கள் அந்தச் சத்திரத்தில் இருந்த கட்டையைக் கண்டு மயங்கி நின்றனர். குழி விழுந்த கண்கள், விலாவெலும்பெடுத்துப் போயிருந்த உடல், சில நரை மயிர்களோடு கூடிப் பன்றிமுள்ளைப் போலச் சிலிர்த்துக் கொண்டு இருந்த கறுத்தத் தாடி, கொம்பன் புளியங்காயைப் போலச் சடையடித்துப் போய்க் கிடந்த தலை, எல்லாமே ஆளை உருக்குலைத்து வைத்திருந்தன. ஆனாலும் இவன் தான் அவன் என்று அவர்கள் மனம் காரண மற்றுக் கூறியது. பேரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்!

வந்தவர்கள் இன்னார் என்று தெரிந்து கொண்ட கட்டைக்கு ஏனோ அழவேண்டும் என்றிருந்தது. சிரிக்க வேண்டும் போலவும் தோன்றியது. ஆனாலும் தன்னை வெளிக்காட்டினால் பந்தத்திலுழல வேண்டுமே என்ற நினைப்பு மேலிடவே “எனக்கு அப்படியெல்லாம் பேர் இல்லை. சும்மா கட்டை என்றே சொல்லுங்கள் அப்பா” என்றது.

குரல் செட்டியாரைக் காட்டிக் கொடுத்து விட்டது! வந்தவர்கள் இரு மணிக்கட்டுகளையும் பிடித்துக்கொண்டார்கள் பலமாக. செட்டியார் திமிறினார்.

“உன் அம்மா செத்துப் போயிட்டா. நீ கொள்ளி வச்சிட்டு போறமாதிரிப் போ” என்றார்கள் பிடித்திருக்தவர்கள்.

“ஆ! உண்மையாகவா?” என்று தன்னை மறந்து அலறியது கட்டை. ‘அம்மா செத்துப் போய் விட்டாள்’ என்ற அந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மூன்றாண்டுகளாக அசாத்திய சாதனையோடும் துணிச்சலோடும், போராட்டத்தோடும், அறுத்தெரிந்த எல்லாப் பாசங்களும் அந்தக் கட்டையிற் தொத்திக் கொண்டன! கண்களில் நீரை வழிய விட்டபடியே முன்னே ஓடிப் போனார் செட்டியார். இப்போது ‘காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே’ என்ற பரதேசிக் குரல் அவர் உள்ளத்தில் ஒலிக்கவில்லை. தான் முன்னறிந்து பின் மறந்த தெய்வமான அன்னை செத்துப் போய்விட்டாள் என்ற யதார்த்த உண்மைதான் அவர் மனதில் நிறைந்திருந்தது. வேகமாக வேகமாகவே நடந்தார் செட்டியார்.

அடுக்கப்பட்ட சிதையிலே அன்னை கிடத்தப்பட்டு இருந்தாள். அந்தக் குறுகிய உருவத்தைப் பார்த்து ஆறாகக் கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தார் செட்டியார். ‘முகத்தோடு முகத்தைப் பொருத்தி, மகனே என்றழைத்த இந்த வாய்க்கா அரிசியிடப் போகிறேன்? இந்த உடலுக்கா கொள்ளி வைக்கப் போகிறேன். ஐயோ …!’

எல்லாச் சடங்குகளும் முடிந்து விட்டன! கடைசியாய்ச் சிதையிலே கொள்ளி வைத்துக்கொண்டே அவர் பாடினார்:

முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங் கையில் அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே யானுமிட்ட தீ மூள்க மூள்கவே! ஆம்; திருவெண்காடர் இட்ட தீ அவர் அன்னையின் சடலத்தைச் சுட்டெரித்தது. ஆனால் அவர் அன்னையிட்ட தீ, அவருக்குள் எதைச் சுட்டெரித்ததோ?

* சிலிம்பி-கஞ்சா புகைக்கும் குழல்

– சுதந்திரன் 1953 – ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது, ஐம்பது சிறுகதைகள், மித்ர வெளியீடு, முதற் பதிப்பு ஒக்டோபர் 1996

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *