மருந்துக்கடை மகேஸ்வரனுக்கு உடம்பு சரியில்லாததினால், டாக்டர் அவரை ஒரு வாரம் பெட் ரெஸ்ட் எடுக்கச் சொன்னார்
கல்லூரி விடுமுறையிலிருந்த மகன் தமிழிடம் ஒரு வாரம் கடையைப் பார்த்துக் கொள்ளும்படி கூறி மகேஸ்வரன் அவனிடம் பொறுப்பை ஒப்படைத்தார்,
ஒரு வாரம் செல்ல உடல் நலமாகி, கடைக்கு வந்த மகேஸ்வரன், ‘பில்’ புக்குகளை எடுத்து வியாபார நிலவரத்தைப் பார்த்தார்
தமிழ் பொறுப்பிலிருந்த ஒரு வாரமும் கடை வியாபாரம் கூடியிருந்தது. அவன் பில் போட்டதுதான் சற்று முரண்பாடாக இருந்தது.
மருந்து வாங்கியவர்களில் ஒரு சிலருக்கு 10 சதவிகிதம் தள்ளுபடியும், ஒரு சிலருக்கு 11 சதவிகிதம் தள்ளுபடியும் தமிழ் கொடுத்திருந்தான்
”எதற்காக அவன் ஒரு சிலருக்கு கூடுதலாக 1 சதவிகிதம் கொடுக்க வேண்டும்?’’ என முகவாயில் கை வைத்தபடி யோசித்த மகேஸ்வரனின் கண்களில் மருந்துக்கடை அலமாரியிலிருந்த ஓர் அறிவிப்பு அட்டை தெரிந்தது.
அதில், ”மருந்து வாங்குபவர்கள் ஆங்கிலம் கலக்காத தமிழ் பேசினால் கூடுதலாக ஒரு விழுக்காடு விலைச்சலுகை கிடைக்கும் – தமிழ்’’ என்றிருந்தது.
தமிழ், கடை வியாபாரத்தை மட்டும் பெருக்கவில்லை. தமிழையும் வளர்த்துள்ளான் என்ற விவரம் மகேஸ்வரனுக்கு தெரிய வர, மகனை நினைத்து அவர் பெருமிதம் கொண்டார்.
– விருதை ராஜா (ஜனவரி 2013)