கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 10,188 
 

“”வசுந்தரா… என்னம்மா இது… அம்மா என்னமோ சொல்றாளே?” என, படபடத்தார் சதாசிவம்.
பூ கட்டிக் கொண்டிருந்த வசுந்தரா, அவரை நிமர்ந்து பார்த்து, மீண்டும், “டிவி’யைப் பார்த்தாள். “டிவி’யில் ஏதோ உபன்யாசம் ஓடிக் கொண்டிருந்தது.
“”இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டியேம்மா… எதுக்காக விவாகரத்து நோட்டீசுலே கையெழுத்துப் போட்டே? அவசரப்பட்டுட்டியேம்மா!” அவர் குரல் உடைந்து தழுதழுத்தது.
வசுந்தரா, “டிவி’யிலேயே கவனமாக இருந்தாள்.
தன்வினை !“தசரத மகாராஜா தவிக்கிறார். கண்ணால ஜலம் விடறார். ராமரோ காட்டுக்குப் போக முடிவு பண்ணிட்டார். வனவாசம் போயே தீரணுமுன்னு தீர்மானமே எடுத்துட்டார். ஏன்னா, அப்பதானே, ரிஷி குமாரனுடைய பெற்றோர் தந்த சாபம் பலிக்கும். புத்திர சோகத்துல தசரதனும், தவிக்கணும்ங்கறது தானே அவங்க தந்த சாபம். அப்போ, ராமர் வனவாசம் பண்ணினா தானே சாபம் பலிக்கும்… முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுங்கறது, சக்கரவர்த்திக்கும், சாமான்யனுக்கும் ஒண்ணுதான்!’
இந்த இடத்தில் காட்சி நிற்க, விளம்பரம் துவங்கியது.
“”கேட்டீங்களாப்பா தசரத மகாராஜா சோகத்துலே தவிக்கணும்ன்னா, ராமர் அவரைப் பிரிந்து காட்டுக்குப் போய்த்தானே ஆகணும்; அது விதிப்பா!” என்றாள்.
“”வசுந்தரா… நான் கேட்கறது என்ன… நீ சொல்றது என்ன?” சதாசிவத்துக்கு லேசாக எரிச்சல் கிளம்பியது.
அம்மா பார்கவியும், மகள் பேசுவதின் முழு தாத்பர்யமும் புரியாமல், அவளையே பார்த்தாள்.
“”சரியா தான் பேசறேன்ப்பா… என்னோடா ஐதராபாத் பயணம் தான், எனக்கு பல விஷயங்களை புரிய வச்சதுப்பா… அதனால தான், அந்த பத்திரத்துலே கையெழுத்தை போட்டு, அனுப்பி வச்சிட்டேன். என்னை தள்ளி வச்சுட்டு, அவர் தன்னிஷ்டப்படியே ஒரு ஷீலாவையோ, நீலாவையோ கட்டிக் கடட்டும். இதுதாம்ப்பா சரி,” என்றாள்.
“”வசு… உன் பேச்சே புரியலைடீ… நீ என்னதான் பேசுற, என்னதான் செய்றேன்னு உனக்காவது புரியதா? அப்படி என்ன அவசரம்ன்னு கையெழுத்து போட்டு அனுப்பின, உனக்கென்ன குறைச்சல்? அழகா, அறிவா, படிப்பா, ஆஸ்தியா, அந்தஸ்தா… எதுலடீ நீ கொறைஞ்சு போயிட்டே… அவன் உன்னை விலக்கி வைக்க?” சலிப்பும், ஆத்திரமுமாய் தொண்டையடைக்கக் கேட்டாள் பார்கவி. ஒரே மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்ட அவலம் கண்ணில் தெரிந்தது.
“”புண்ணியந்தான் கொஞ்சம் கொறஞ்சு போச்சு அம்மா… சுவத்துலே பந்தை அடிச்சா அது திரும்ப, நம்ப பக்கமாத்தானே வரும். அதே சிம்பிள் லாஜிக்தான்மா. நாம என்ன விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடை பண்ண முடியும். புண்ணியத்தை விதைச்சா புண்ணியம்; பாவத்தை விதைச்சா பாவம்தானே விளையும். பகவான் சரியாத்தான் காயை நகர்த்தரார்.”
“”இப்ப, இங்க பாவ புண்ணியம் கணக்கு எங்க வருது? நாங்க பாவத்தை விதைச்சோம்கறீயா, புண்ணியத்தை விதைச்சோம்கறீயா? சொல்றதை கொஞ்சம் புரியறாப்பல சொல்லு,” பார்கவி சிடுசிடுத்தாள்.
சில நிமிடங்கள், மவுனம் பூக்களாய் அங்கே உதிர்ந்தன… பார்கவியும், சதாசிவமும் ஏதோ உள்ளுணர்வில் தாக்கப்பட்டவர்களாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கண்ணுக்குத் தெரியாத ராட்சத நகம் ஒன்று மனதின் மெல்லிய சுவர்களை ரத்த விளாறாய் பிராண்டுவது போல நூதன வலி ஏற்பட்டது.
அவளே சொல்லட்டும் என்பது போல இருவரும் அவள் முகம் பார்த்தனர்.

வசுந்தரா, தன் கணவரின் போக்கு பிடிக்காமல், சென்னையில் தாய் வீடு வந்திருந்த நேரம். கணவன், வேறு பெண்ணோடு குடும்பம் நடத்துவதை கண்கூடாக கண்டபின், மனசொடிந்து போய் இருந்தவளுக்கு, கணவன் அனுப்பிய டைவர்ஸ் நோட்டீஸ் இன்னும் நோகடித்தது. அந்த சமயத்தில் தான், தோழி வர்ஷிணி, ஐதராபாத்தில் தனக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று வற்புறுத்தி, தன்னுடன் ஐதராபாத்துக்கு அழைத்துச் சென்றாள். வசுவிற்கும் மனதளவில் ஒரு மாற்றம் தேவையாயிருக்கவே புறப்பட்டு போய் விட்டாள்.
வர்ஷிணி ஆபிசுக்கு புறப்பட்டு போனதும், வசு கடைவீதிக்கு கிளம்பினாள். பொருட்களை பார்த்து வாங்கிக் கொண்டிருக்கும் போதே, “சடார்… சடார்…’ என்று ஷட்டர்களை இழுத்து மூடினர். திடீரென உருவான, “பந்த்’தில், “கலகல’வென இருந்த அந்த இடமே அசாதாரண அமைதியாய், அலங்கோலமாய், இழவு விழுந்த வீடு போல களையிழந்து விட்டது. செயற்கையான அமைதி நிலவியது. தெருவில் நடந்து செல்லும் சிலரிடம் கூட பதட்டமும், அவசரமும் தெரிந்தது.
வசுந்தரா திடுக்கிட்டு போனாள். அந்த அழகான கடைவீதி, சட்டென ஒரு மவுனப் போர்வையை போர்த்திக் கொண்டு, வித்தியாசமாய் விழித்தது. ஆட்டோ கூட ஓடாது என்பது புரிந்த போது, திகைத்துப் போன மனசுக்குள் கலக்கம் புகுந்தது.
ஐதராபாத் கொஞ்சம் சென்சிடிவ் ஊர்தான். பந்த்களும், 144களும், கர்ப்யூக்களும் அங்கு சாதாரணம்தான் என்றாலும், வசுவுக்கு எல்லாமே புதிசாயிருந்தது. யோசித்து, மெல்ல மெயின் ரோடிலிருந்து பக்க சந்துக்குள் நுழைந்தாள்.
தமிழில் யாரோ பேசிக் கொண்டே முன்னால் போவதைக் கண்டதும், ஓட்டமும், நடையுமாய் அந்த முதியவளை எட்டிப் பிடித்தாள்.
அந்த வயதான மாது, தனக்குத்தானே, “ஹூம்… பாதி சாமானை கூட வாங்கலை, அதுக்குள்ளார கடையடைச்சிட்டாங்க… திரும்பவும் சாயந்திரம்தான்
வரணும் போல…’ என்று பேசிக் கொண்டே நடந்தவள், அருகில் மூச்சு வாங்க வந்து நின்ற இவளைக் கண்டதும் நிமிர்ந்து பார்த்தாள்.
“ஏமிம்மா… ஏமியாயிந்தி?’ என்று தெலுங்கில் ஆரம்பித்தவளை, “நான் வசுந்தரா… தமிழ்தான், சென்னையிலிருக்கேன்…’ என்று இடைமறித்த வசுந்தராவை சந்தோஷமாய் ஏறிட்டவள், “ஒரு டீ சாப்பிட்டுவிட்டு போகலாம்!’ என்று, பக்கத்து தெருவிலிருக்கும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.
“உட்காரும்மா… இங்க இப்படித்தான். ஆனா, நல்ல மனுஷங்க. டீ போட்டு எடுத்துட்டு வரேன்…’ என்று உள்ளே போக, வசுந்தரா மெல்ல கண்களைச் சுழற்றி வீட்டை ஆராய்ந்தாள். சுவற்றில் நிறைய போட்டோக்கள். அதில், மாலையும், கழுத்துமாய் இருந்த கல்யாண புகைப்படம் ஒன்று, அவளை ஈர்த்தது. ரொம்ப பரிச்சயமான முகம். ஆனால், அதற்கு இரண்டு போட்டோக்கள் தள்ளி இன்னொரு படம், இரண்டு பெண்கள், அழகும், இளமையும், பழைய பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ. ஒருவர் தோள் மேல் ஒருவர் சாய்ந்து, தோழமையும், அந்நியோன்னியமுமாய். “இது, இது சாத்தியமா?’
“என்ன வசுந்தரா… அப்படி பார்க்கறே, அதுல ஜடையை முன்னால் போட்டுகிட்டு ஸ்டைலா நிக்கிறது நான் தான். நம்ப முடியலை இல்லே?’ என்று டீ கோப்பையை நீட்டினாள்.
“இது, என் தோழி மஞ்சு. இது என் அம்மா, அப்பா, இது என் கல்யாண போட்டோ…’ என்று முதியவள் பேச, வசுந்தரா, இன்னமும் சற்று அருகில் சென்று, கண்ணை இடுக்கி அந்த போட்டோக்களை உற்று பார்த்தாள். சந்தேகம் தீர்ந்தாற் போலவுமிருந்தது; சந்தேகமாகவும் இருந்தது. இரண்டுங் கெட்டானாய் தவித்தாள் வசுந்தரா. சின்ன வயது இளைஞனாய் இந்த படம் இங்கே… அது எப்படி?
“அம்மா… இங்கே நீங்களும், உங்கள் கணவரும் தானா?’ என்று மெதுவாக கேட்டாள்.
சிரித்தார் அந்த அம்மா.
“வசுந்தரா… இங்க, நான் மட்டும் தான்; என் கணவர் இல்லை!’ குழப்பமாய் பார்த்தாள் வசு,
மஞ்சள் பூசிய முகத்தில், அரக்கு நிற குங்குமமும், கொண்டையில் பூவும், அலங்காரமாயிருந்தன.
“என்னடா குழப்பமா… அவரும், என் தோழியும், சென்னையில சவுக்கியமா இருக்காங்க…’ என்றாள் எங்கேயோ பார்த்துக் கொண்டு.
“பட்டென்று’ சந்தேக முடிச்சு ஒன்று அவிழ்ந்தது வசுவிற்குள்.
“என்னம்மா சொல்றீங்க?’
“பச்… அது ஒரு பெரிய கதை. அது எதுக்கு இப்ப, விடு…’ என்றாள் அசுவாரசியத்துடன்,
“ப்ளீஸ், பளீஸ் சொல்லுங்கம்மா… இவங்களை பார்த்த மாதிரி இருக்கு!’
“சென்னை தானே… பார்த்திருக்கலாம்…’ என்றவள், “வழக்கமான கதைதான். அவர், என் கல்யாணத்தின் போது, கலெக்டர் ஆபிசுலதான் வேலை பார்த்துட்டு இருந்தார். சாதாரண வேலை தான். ஆனா, படிச்சு பரீட்சை எழுதி, எழுதி பாசாகி, டெபுடி கலெக்டர் உயரத்துக்கு வந்துட்டார்…
“நானும், மஞ்சுவும் சின்னக் குழந்தை யிலிருந்தே சிநேகிதிகள். மஞ்சுவுக்கு, அம்மா இல்லே, பாட்டிகிட்டே தான் வளர்ந்தா. எங்கம்மாவும், அவகிட்ட தாயில்லாத பொண்ணுன்னு, ரொம்ப பாசமா இருப்பாங்க. எனக்கு வாங்குவது போலவே அவளுக்கும் துணிமணி, பூ, பொட்டுன்னு வாங்கித் தருவாங்க…
“அவ படிப்பை முடிச்சு உள்ளூரிலேயே டீச்சர் ஆகிட்டா… நானும் கல்யாணமாகி கொஞ்ச நாள்லேயே, கும்பகோணம் போயிட்டேன். ஆனாலும், அவ வரப் போக இருந்தா. ரெண்டு பேருமே நல்லா பழகுவாங்க… நானும் விகற்பமா ஏதும் நினைக்கலை…
“பஞ்சும், நெருப்பும் எப்படி, எங்கே பத்திக்கிச்சோ… இவரு ஒருநாள், “சென்னைக்கு மாத்தலாயிடுச்சு. நான் போயி வீடு பார்த்துட்டு, உன்னை பிறகு கூப்பிட்டுக்கிறேன். நீ அதுவரைக்கும் அம்மா வீட்டுல இரு…’ என்றார்.
“ரெண்டு வாரம் கழிச்சு, மஞ்சுவை காணோம். எல்லாருமே தேடினோம். எங்கம்மா ரொம்ப கவலைப்பட்டாங்க. ஊருலே ஏதேதோ பேசுனாங்க. அவங்க பாட்டி வெளியவே வர்றதில்லை. இவரும் சாக்கு போக்கு சொல்லியே ஆறு மாதமாயிடுச்சு…
“அப்புறம்தான் மஞ்சுவும், இவரும் சென்னையிலே குடித்தனம் பண்றதா… பார்த்தவங்க சொன்னாங்க. நானும், அம்மாவும் நம்பலை. அப்பா நேர்லேயே போய் விசாரிச்சார். உண்மைதான்னு தெரிஞ்சுகிட்டு வந்து, “கேஸ் போடறேன்… வேலையே இல்லாம பண்ணிடுவேன்னு…’ கத்தினார்.
“எங்கம்மாவுக்குத்தான் தாங்கலே… தான் அன்பு செலுத்தின பொண்ணே, பெத்த மகளுக்கே சக்களத்தியா மாறிட்டாங்கறதைத் தாங்க முடியலை. அந்த அதிர்ச்சிக்கப்புறம், அம்மா ரொம்ப நாள் உயிரோட இல்லை.
“அப்பாவை நான் தடுத்திட்டேன். கேஸ் போட்டா மட்டும் அவர் என்னோட வாழப் போறாரா என்ன… ஆனா, சிநேகிதம் கூட துரோகம் பண்ணுமான்னு, ஆத்தாமையா இருந்தது.
“என்னைப் பத்தின கவலையிலேயே, அப்பாவும் போய் சேர்ந்திட்டார். தனிமையா நின்னப்போ, நிலைமை பயங்கரமா இருந்தது. நிழலுக்கு வீடும், சாப்பிட நிலமும் இருந்தாலும் வெறுமையும், தனிமையும் என்னை பயமுறுத்திடுச்சு…
“அப்ப தான் நம்ம ஊர்க்கார பையன் ஒருத்தனுக்கு சமைச்சுப் போடணும்ன்னு கேள்விபட்டு இங்க வந்தேன். புது ஊர், புது சூழல், என்னை புதுப்பிச்சுக்கிட்டேன். அவனோட சேர்த்து, பத்து பேருக்கு தினமும் சாப்பாடு, டிபன்னு மெஸ் மாதிரி, ஏதோ ஒப்பேத்திக்கிட்டு இருக்கேன்…’
நெடுமூச்செறிந்தாள் முதியவள்.
“ஏம்மா… அப்புறமா நீங்க, அவங்களை பார்க்கவில்லையா?’
“இல்லேம்மா… பார்க்கவும் பிடிக்கலை. ஒரு பொண்ணு இருக்கறதா கேள்விப்பட்டேன்… ம்… ம்… இதுல இன்னொரு விஷயம் என்னன்னா… எங்கம்மா அவளை, “மஞ்சு’ன்னு தான் செல்லமா பேரு வச்சு கூப்பிடுவாங்க. அவ பேரு பார்கவி. கூப்பிட்ட பழக்கம், நாங்களும், “மஞ்சு… மஞ்சு…’ன்னு பழகிட்டோம்.
“ஆனா, இப்படியானதிலே, என்னை விட, எங்கம்மா தான் மனசுல ரொம்ப அடிபட்டு போனாங்கன்னு அப்பப்போ தோணும்!
“எங்கம்மா என்னென்ன சாபமிட்டாங்களோ… நான் மட்டும், எங்கே இருந்தாலும், ஷேமமா இருந்தா சரின்னு நெனச்சுக்குவேன்; என் விதி இப்படி… யாரைக் குறை சொல்றது…’ கண்களைத் துடைத்துக் கொண்டாள் முதியவள்.
பிறகு, சின்னப் புன்முறுவலுடன், “என்னவோ போ… ஏதோ <உன்னைப் பார்த்ததும் உன்னிடம் மனசு விட்டு பேசலாம்ன்னு தோணுச்சு… வசுந்தரா ரொம்ப போர் அடிச்சுட்டேனோ…’ அந்த அம்மா மெல்ல சிரித்தாள்.
வசு தலையாட்டினாள். மனசுக்குள் கொஞ்சம் நஞ்சமிருந்த சந்தேகமும், சுத்தமாய் மறைந்தது.
திடீரென்று விம்மினாள் பார்கவி. “”நான் செய்தது தப்புதான் வசுந்தரா… தப்பு தான்! அதுக்காக கடவுள் என்ன வேணா தண்டனைய எனக்குத் தரட்டும்! நீ உன்னை தண்டிச்சுக்க வேணாம்!” சதாசிவம் தலை கவிழ்ந்தார்.
வெறுமையாகச் சிரித்தாள் வசுந்தரா.
“”அம்மா… அந்த முகத்துலே கவிந்திருந்த கண்ணீரும், சோகமும் அப்படியே என் மனசுலே நிக்குது. அதை அப்படியே நீங்க ரெண்டு பேரும் அனுபவிக்க வேணாமா… அதை என் முகத்துலே, என் கண்ணுலே நீங்க பார்க்கணும்… நம்பிக்கையை அப்பாவும், சிநேகத்தை நீயுமா குழிதோண்டி புதைச்சிட்டீங்களே… உயிரோட பறிகொடுத்தவங்களோட மனசு எப்படி பதைபதைச்சிருக்கும்.
“”அந்த பதைப்பும், துடிப்பும் உங்களுக்கும் தெரியணும். உன் மகளுக்கு ஒண்ணுன்னதும் உன் உடம்பும், மனசும் எப்படி தவியாய் தவிக்குது? இப்படித்தானே அந்தப் பெண்ணைப் பெத்த தாய்க்கும் பதற்றம் இருந்திருக்கும். அந்த மனசு தந்த சாபம் நிறைவேற வேணாமா… அந்த பெத்த வயிற்றோட ஆதங்கத்தை, நீயும் அனுபவிக்க வேண்டாமா?
“”தெரியாமல் அம்பு விட்ட தசரதனுக்கே சாபம் பலித்ததே… தெரிஞ்சே நீங்க செய்த துரோகத்துக்கு, நான் இப்படி வாழறது தானே நியாயம்…
“”ஒரு பெண்ணோட வாழ்க்கையை துள்ள, துடிக்க பறிச்சுகிட்டீங்க நீங்க ரெண்டு பேரும். நீங்க பெத்த பெண்ணோட வாழ்க்கையை இன்னொருத்தி பறிச்சுக்கிட்டுப் போயிட்டா. “தன் வினைத் தன்னைச் சுடும்!’ என்னப்பா… நான் சொல்றது சரிதானே?” வசுந்தாரவின் குரல் கணீரென்று ஒலித்தது.

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *