கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 13,697 
 

சந்தானலட்சுமிக்கு தினசரிகளில் தங்கத்தின் விலை நிலவரம் பற்றிப் பார்ப்பது சமீபத்திய பழக்கமாகி விட்டது. அது எப்போது ஆரம்பித்தது  எனபது ஞாபகமில்லை.இரண்டு வருடங்களுக்குள்தான் இருக்கவேண்டும். கைக்கெட்டா தூரத்தில் பறந்து கொண்டிருந்ததிலுருந்துதான் என்பது ஞாபகம்.சென்னை விலை, உள்ளூர் நிலவரம், டாலர் மதிப்பு எல்லாம் அத்துப்படி. கையிலிருந்த மோதிரத்தைப் பார்த்துக் கொண்டாள்.

சந்தியா வெற்றிலையைச் சுருட்டிக் கொண்டு வந்தாள். நாற்காலியில் உட்கார்ந்திருந்த உடம்பை நிமிர்த்திக் கொண்டு வாயைத் திறந்தாள் சந்தானலட்சுமி. அசைவம் சாப்பிடுகிற நாட்களில் சந்தியா கூட இருந்து விட்டால் வெற்றிலை அவசியம் தருவாள்.” இந்த வெத்தலை போடற பழக்கம் எப்போ ஆரம்பிச்சது சந்தியா”

“ என் கல்யாணத்துக்குப் பிந்திதா. மாமியார் வீட்லே தவறாமெ பண்ணுவாங்க. அதுவும் அசைவம் இருக்கற நாள்லதா.”

இளசாய் இரண்டு வெற்றிலை. லேசாய் துருவிய தேங்காய் பூ  கொஞ்சம். சுண்ணாம்பு ஓரத்தில். ஒரு துண்டு கிராம்பு. சிறு பாக்குத் துண்டு. மூடின வெற்றிலைக்குள் இதெல்லாம் இருக்கும். கண்களை மூடிக் கொண்டு வெற்றிலைச் சாறு தொண்டையில் இறங்குவது  சர்வ ரோக நிவாரணியாகப் படும்.

“ மாமியாருக்கு வெத்தலைதா சர்வரோக நிவாரணி. கொஞ்சம் சளின்னு இருமிட்டாப் போதும் இளசா வெத்தலையை நீட்டிருவாங்க. வெத்தலை சாறு குடிக்கறியான்னு பயமுறுத்தல் வேற இருக்கும்.வெத்தலைக்காம்பே அவங்க கிள்ளற லாவகமே தனி.”

“நான் எப்போ பத்திரிக்கையிலே தங்கம் வெலையை டெய்லி பாக்கற பழக்கத்தை ஆரம்பிச்சேன்னு தெரியுமா சந்தியா.”

“ இந்தப் பழக்கம் பத்தி எனக்கு எப்பிடி தெரியும். என்ன புதுசா இருக்கே”

“ என்னமோ தொத்திருச்சு.”

“யாருகிட்ட இருந்து …”

” யாருகிட்ட இருந்து.. ஞாபகம் வரமாட்டீங்குது. நிச்சயம் ஆபிஸ்ல யாராச்சுகிட்ட இருந்துதா இருக்கணும்.” வீட்டிற்கு வரும் தமிழ் தினசரி. அப்புறம் அலுவலக மனமகிழ் மன்றத்தில் இரண்டு ஆங்கிலப் பத்திரிக்கைகளும், இரண்டு தமிழ் தினசரிகளும். அதெல்லாம் போதாதென்று இப்போதெல்லாம் பல இதழ்களில் விவாதக் கட்டுரைகள். தங்கம் உற்பத்தி குறைவு. அதனால் விலை ஏறிக்கொண்டே இருக்குமாம். அழகு என்பது அணிகலன்களிலா இருக்கிறது என்று சமாதானம் வேறு.

சந்தான லட்சுமி ரொம்ப காலமாய் உடம்பில் மாட்டும் நகையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.காதுக்கம்மல், சின்னதாய் மூக்குத்தி, மெல்லிசான சங்கிலி. அவ்வளவுதான். காதுக்கம்மலை அவ்வப்போது மாற்றிக் கொள்வாள். அலிக்கம்ம்ல், மாங்காய் கம்மல் இரண்டும் அவளுக்குப் பிடிக்கும். மற்றபடி மூக்கும், கழுத்தும் எவ்வித மாற்றத்தையும் பார்த்ததேயில்லை. சமீபத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் இருந்து  திரும்பும் போது  மூக்குத்திக் கம்மல் நழுவிவிட்டதை லேசாக உணர ஆரம்பித்த்தாள். என்ன ஆகியிருக்கு. அனாவிசியமாய் மூக்கைத் தேய்த்ததால் வந்த வினையா, சளி என்னமோ பிடிக்கப் போகிறது என்று மூக்கு நமநமத்தது போல இருந்தது  நழுவிப் போகச் செய்து விட்டதா. மூக்கின் மேல் வைர மூக்குத்தி இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.அலுவலகத்தில் எல்லோரும் வைரமூக்குத்திக்கு மாறி விட்ட பின்பு கடைசியாய்  மாறியவள் சந்தான லட்சுமிதான். “ கவர்மெண்ட் உத்தியோம்ம்னா சும்மாவா. இத்லே கூட காமிக்காட்டி எப்படி என்று தனலட்சுமி  கேட்பாள்.ராசி பார்த்து வைரம் போட வேண்டும். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாயும், வர்ணமாயும்.நல்ல வேளை மூக்குத்தி தொட்டு நிற்கிறது. அதைக் கையில் பிடித்துக்கொண்டே பேருந்திலிருந்து இறங்கி  வீடு போக வேண்டுமா என்று பயமாக இருந்தது.” என்னம்மா சிறு மூக்கு உடஞ்சு போச்சா. ரத்தம் வழியுதா. “  பேருந்தில் அவளின் அருகில்

நின்று கொண்டிருந்த வயதானவள் கேட்டாள். “ அதெல்லாம் இல்லே அம்மா. மூக்குத்தி திருகாணி கழண்டு போயிருச்சு.”

“ இந்த பஸ்லே எப்பிடி தேடறதம்மா..”

“ ஸ்டாப்லே எங்காச்சும் நின்னாத்தா முடியும். . இந்த நேரத்தில எங்க நிக்கப் போகுது. போலீஸ்ஸ்டேசன்ல கொண்டு போய்  நிறுத்துனாத்தா உண்டு” சொல்லியபடி சிரித்தாள் முதியவள். “ இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேறே..நகை எதுவும் தொலஞ்சு போகக்கூடாது. அபசகுணமாப் போயிரும்”

“  மூக்குத்தி வுழுந்தாக்கூட வைரமிணுமிணுப்புலே கண்டு புடுச்சிரலாம். திருகாணியை எங்க போயித் தேடறது.வைரமூக்குத்தி தானே நீ போட்டுருக்கறது “ அவள் பரபரத்து  பேருந்தின் வேகத்தினை மீறி ஓடிக்கொண்டிருந்தாள். வீட்டிற்குப் போய் நுழைந்து விட்டால் போதும். வைரமூக்குத்தியைக் கழட்டி வைத்து விடலாம். அதையாவது காப்பாற்றிக் கொள்ளலாம்.பக்கத்தில் நின்றிருந்த பெரியவர் சொன்னார்: “ பஸ் கொஞ்சம் சாய்ஞ்சுட்டுதா போயிட்டிருக்கு. கவனிச்சீங்களா.  நிக்கறதிலே வலது பக்கம்தா உருண்டு போயிருக்கும். “ சொல்லியபடியே தேட ஆரம்பித்து விட்டார்.அப்புறம் கிடைத்த போது சொன்னார்: “ நீ மகாலட்சுமிதா. வெள்ளிக்கிழமையும் அதுவுமா கெடச்சுடுச்சு.”

அக்கா கலாவை எல்லோரும் தங்கம் என்றுதான் கூப்பிடுவார்கள். கலா தனது பெரிய மகளை அதன் பாதிப்பில்தான் வைரம் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.அவள் கணவன் இறந்த போது “ இந்த தங்கத்தோட கதியைப் பாத்தியா.  காலம் பூரா மங்கித்தா கெடக்கணும் போல.” இரண்டு குழந்தைகள் கலாவுக்கு. பிறந்த வீட்டிற்கு வந்து விடுவாளோ என்ற பயம் இருந்தது சந்தானலட்சுமிக்கு. வயதான மாமா, மாமியாரைக் கவனித்துக் கொள்ள வேறு யாருமில்லை என்பதால் அங்கேயே தங்கி விட்டாள். இரு அக்காக்களுக்கும் திருமணம் செய்து  வைத்ததில் அவளின் சம்பாத்தியம் முழுவதும் போய்விட்டது. அதனால் நகை என்று அதுவும் தனக்கென்று

வைத்ததில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்து விட்டாள். “ தங்கம் போடறது புடிக்கலே “ என்று சொல்லி வைத்திருந்தாள்..

“தங்கம் போடாட்டி என்ன. பிளாட்டினம் போடறது. இல்லே  .அதெல்லாம் தங்கத்தை விட விலை உசத்திதானே..”

“கல்யாணம்ன்னு வரும் போது பாத்துக்கலாம் “  அச்யதிதியை அன்று நகைக்கடை முன்பு கூட்டம் நிரம்பி வழிவது அவளுக்கு பார்க்க எரிச்சலாக இருக்கும்.உடம்பில் போட்டுக் கொள்ளாமல் இருந்தால் பரவாயில்லை. ஏதாவது சேர்த்து வைக்கலாம் என்று பிறர் சொன்ன அறிவுரையும் மனதில் ஏறவில்லை.

கலாவின் கணவன் டாஸ்மாக் பாரில் குடித்துக் கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில்  செத்துப் போனான். மழைக்காலம். குளிர் வேறு கூட்டத்தை அதிகமாக்கியிருந்தது. சுவர் இடிந்து விழுந்ததில்  வெளியூர் தொழிலாளிகள் அதிகம் இறந்திருந்தனர். . நேபாளிகள், ஒரியர்கள் கூட இருந்தார்கள். சமீபத்தில் அந்த சாவுகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அந்த பாருக்கு அனுமதி தந்த மேலாளர் சொன்னார்: “ எல்லாம் கடவுளின் செயல். இப்படி சாகணும்னு அவங்க தலையிலே எழுதியிருக்கு. “

நீதிபதியும் சொன்னார்: “ அப்படியா. அப்போ நீங்க ஜெயிலுக்குள்ள இருக்கறது கடவுளின் செயல் . ஜெயிலுக்குப் போங்க.” கலாவின் கணவன் இறந்த போது கூட  அப்படித்தான் பலர்  சொல்லிக்கொண்டிருந்தார்கள்.மேதைகளின் வார்த்தைகள் எப்போதும் ஒத்தே போகின்றன.

அன்றைக்கு வீட்டில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. உறவுகள் வந்திருந்தனர். கூட்டம் சேர்ந்து விட்டால்  அம்மாவுக்கு அலர்ஜி வந்து விடும். காலையிலேயே படுக்கைகுப் போய்விட்டாள். ஞாயிற்றுக் கிழமை வேறு . அசைவம்தான். ஆட்டுக்கறி முந்நூற்றைம்பது  ஆகி விட்டது. ஞாயிறில் அசைவம் இல்லாமல் யாருக்கும் சோறு இறங்காது. “ ஊறுகாய் அளவாச்சும்   இருக்கணும் என்பாள் ” அம்மா..அசைவம் சமைக்கிற நாட்களில் அதிகப்படியான வேலைகள் அவளுக்கு அலுப்பு தருவதாக

சொல்லி படுக்கையில் தஞ்சமடைந்து விடுவாள்.”ஊறுகா மாதிரி உடம்புலே நகை எனக்குப் போதும்மா “ என்று சந்தானலட்சுமி சொல்லிக்கொண்டிருப்பாள்.இரண்டு அக்காக்களை கரை சேர்ப்பதற்கு அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் பட்டிருக்கிறது. பெண்களை கரை சேர்ப்பது அவ்வளவு எளிதா.  அதற்கப்புறம் தனக்கான நகைகள் என்பதில் காலம் கரைந்து விட்டது.இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று காலம் கடந்து கொண்டிருந்த்து.

எதேச்சையாக குளியறைக்குப் போய் விட்டு வந்த சந்தான லட்சுமிக்கு அந்த மோதிரம் கண்ணில் பட்டது. எடுத்துப் போட்டுக் கொண்டாள். யாராவது காணவில்லை என்று கேட்கட்டும் .பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தாள். அவள் உடம்பில் எங்கும் ஒரு தம்பிடி நகைக் துணுக்கு கூடச் சேர்ந்து விடக்கூடாது என்றுஇருந்தவள் கையில் மோதிரம். அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.  அழகாக இருக்கிறமாதிரி பட்டது.

சந்தியா கொடுத்துவிட்டுப் போன வெற்றிலை வாயில் அடக்கி வைத்திருந்தது  ஏதோ நமநமப்பைத் தந்தது.  கொஞ்சம் கிராம்பு அளவு அதிகமாகியிருக்குமா. சுண்ணாம்பு அதிகமாகியிருக்குமா. நமநமப்பு வலியாய் வெளிப்பட்டது. மெல்ல ஈறுகளைப் பிடித்து இழுத்து. ஈறு பிய்ந்து போய் விடும் போல் இருந்தது. சற்றே அறைத்து சாற்றை விழுங்கி விட்டால் எல்லாம் சரியாகிப் போகும்.  வாயில் அடைபட்ட வெற்றிலை திடத்திலிருந்து கரையக் கரைய வலி கூடிக் கொண்டே போனது.இன்னும் தாங்கிக் கொள்ள முடியாது என்ற போது சொம்புத்தண்ணீருடன் வெளியே போனாள்.வெற்றிலைதுகள்கள் சிதைபட்டு விழுந்தன.

“ என்னாச்சு ..” சந்தியா அவளருகில் வந்து நின்றாள்.

வாயைத்திறந்து காட்டியபோது வலது பக்க ஈறு வீங்கியிருப்பதாய் சொன்னாள். ”சுண்ணாம்பு அதிகமாகியிருக்குமோ.  கிராம்பு கிழிச்சிருக்குமோ”

“எப்பிடியோ ஈறு வீங்கிப் போச்சு “

“ வலிக்குதாடா “

“ஆமா”

சித்தாப்பா மகள் கவிதா  சந்தானலட்சுமி அருகில் வந்து நின்றபடியே அவளின்  இடது கையைப் பார்த்தாள். ” பாத்துரூமிலே வெச்சுட்டன் போல. தேடி ஓஞ்சு போச்சு.”என்றாள் கவிதா.

“ :என்னடி பாம்பு விரல்லே மோதரம் போட்டிருக்கே “ சந்தியா அப்போதுதான் பார்தவள் புன்னகைத்தபடியே கேட்டாள்.” புதுசா போடறதுனாலே தடுமாற்றம் போல “ கவிதாவின் மோதிரம். கொடுத்து விட வேண்டும்.

மோதிரத்தைக் கழட்டுவது சிரமமாகத்தான் இருந்தது சந்தான லட்சுமிக்கு.அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது அந்த மோதிரம்.

– குமுதம் சிறுகதை மலர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *