சைடு பிசினஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 5,761 
 

ஆள் கம்பெனியில் உயர் பதவி. நல்ல சம்பளம். அப்புறம் ஏன் சைடு பிசினஸ். ஐந்து பத்து லட்சம் போட்டு வியாபாரம் ?

பணம் சம்பாதித்து என்ன செய்ய போகிறான் ?

சம்பாதிப்புக்கு வேலை. இருக்க ஒரு வீடு. திடீர் செலவிற்குக் கொஞ்சம் சேமிப்பு. மனைவி கழுத்தில் திருப்தியாய் நகை. போக வர இரு சக்கர வாகனம். சொகுசுக்கு ஒரு கார். பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு. இது போதாதா ?!

இவ்வளவும் கதிரேசனிடம் இருக்கிறது. அப்புறம் எதற்குப் பணத்திற்கு அலைச்சல்;; வியாபாரம் ? பிள்ளைகளுக்கென்று சேர்த்;து வைத்தாலும் அவர்கள் இருக்கும் சொத்தில் மஞ்சள் குளிப்பார்கள். வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் வராது. இன்னும் சொல்லப் போனால் சொகுசாய் வாழப் பழகி கெட்டுக் குட்டிச் சுவர் ஆவார்கள். அவர்களும் உழைக்க வேண்டும். வீடு வாசல் கார் பங்களா என்று பெருக வேண்டும்.

கதிரேசன் பணம் பணமென்று அலைகிறான். எத்தனை பெரிய பணக்காரர்களுக்கும் ஆறடிதான். பணத்தை வைத்துப் புதைக்கப் போவதில்லை. அப்படிப் புதைத்தாலும் பிணம் எடுத்துப் போவதில்லை. சொர்க்கத்திற்கும் கொண்டு செல்ல முடியாது. அங்கு சொகுசாய் வாழ எவருக்கும் எவரும் முதலீடும் செய்ய முடியாது. இப்படியெல்லாம் இருக்கும் போது கதிரேசன் பணத்திற்காக அலைகிறான். முட்டாள் ! மனசுக்குள் திட்டிக்கொண்டு எழுந்தேன்.

எதிரில் நண்பன் வந்தான். என்னை விட கதிரேசனுக்கு நெருக்கமானவன். இவனிடம் கேட்கலாமா என்று நினைக்கும் போதே….

‘‘என்ன பாலு ஒரு மாதிரியாய்ப் பார்க்கிறே ?‘‘ கேட்டான்.

‘‘ஒன்னுமில்லே. கதிரேசனைப் பத்தி நெனைச்சேன் நீ வந்தே.‘‘ என்றேன்.

‘‘என்ன நெனைச்சே ?‘‘

‘‘கையில வேலை இருக்கும் போது அவன் ஏன் வியாபாரம் ஆரம்பிச்சிருக்கான் ?‘‘ ஆரம்பித்து மனதிலுள்ளதைக் கொட்டினேன்.

கவனமாய்க் கேட்ட அவன் ‘‘அது ஒன்னுமில்லே. வேலையை வைச்சு பணக்கார இடத்துல பொண்ணைக் கட்டினவனுக்கு தான் பொண்டாட்டியை விட கீழே இருக்கிறோம்ங்குற தாழ்வு மனப்பான்மை. எப்படியாவது தான் அவளைவிட பெரிய பணக்காரனாகி நெஞ்சை நிமிர்த்தி நிக்கனும்ன்னு ஆசை.‘‘ அதான் நிறுத்தினான்.

‘‘அப்படியா ?‘‘ எனக்கு வியப்பாய் இருந்தது. அவன் சொல்கிற காரணமும் சரியாக இருந்தது,

‘‘ஆனா அது புள்ளையார் புடிக்க குரங்காய் மாறினதுதான் சோகம்‘‘ தொடர்ந்தான்.

புரியாமல் பார்த்தேன்.

‘‘வியாபாரத்துல பணம் போட போடக் கொள்ளுது… சமாளிக்க இவன் திரும்பவும் பொண்டாட்டி மூலமா மாமனார்கிட்ட அடிக்கடி கையேந்துற நிலைமை. அதன் காரணமா உனக்கு ஏன்ய்யா வீணத்த வேலைன்னு அப்பப்ப அவகிட்ட வைப்பாட்டு. முகச்சுளிப்பு.‘‘ நிறுத்தினான். நியாயம்தான். மனைவி மக்கள் சரி சமமென்று நினைக்காமல் அவர்கள் உயர்வு தாழ்வென்று நினைத்தால் இப்படித்தான் எனக்குள் பட கதிரேசனை நினைக்கப் பாவமாக இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *