சுந்தரேசன் C/O விஜயா

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 13,516 
 

பெருந்துறை சானடோரியத்தில் புறநோயாளிகள் பிரிவில் சுந்தரேசன் நின்றிருந்தான். எந்தப் பக்கம் வரவே கூடாது என்று முடிவெடுத்து மறந்துபோயிருந்தானோ, அங்கேயே வந்து நிற்க வேண்டியதாகிவிட்டதே என்று வேதனையாக இருந்தது.

மருத்துவமனை சூழலில் எந்த விதமான புதிய மாற்றமும் இந்த மூன்று வருட காலத்தில் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இலை உதிர்க்கும் மரங் கள், துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவமனைத் தாதிகள் எல்லாம் அதே அதே. அப்போது திருமணம் ஆகாமல் சிவந்த நிறத்தில் ‘புன்னகை மன்னன்’ ரேவதியை ஞாபகப்படுத்தும் விதமாக இருந்த தாதிக்குத் திருமணம் ஆகிவிட்டதுபோலும். வயிறு மேடிட்டு இருந்தது. ”இந்த ஊசியை எல்லாம் கையில போடக் கூடாதுங்க. பவர் மருந்து இது. பின்னாடி காட்டுங்க… சின்னப் பையனாட்டம் ஊசி போட்டுக்கறதுக்கு இப்பிடிப் பயப்படறீங்களே”- அவளின் இனிமையான குரல் மூன்று வருடங்களுக்குப் பின் ஞாபகம் வந்தது.

முன்பு வந்திருந்தபோது பத்து நாட்கள் தனி அறையில் தங்கி சிகிச்சை எடுத்திருந்தான். வந்து சேர்ந்த ஐந்தாவது நாளே காசத்தின் தீவிரம் குறைந்து விட்டதான உள்ளுணர்வில் படுக்கையில்கிடந்திருக்கிறான். ‘அதற்கு இந்த சானடோரியத்தின் சுற்றுச்சூழல் அமைப்பும் மருந்துகளின் வீரியமும் சரியான உணவு நேரமும்தான் காரணம்’ என்று நினைத்திருந்தான். தவிர, ‘புன்னகை மன்னன்’ ரேவதி ரவுண்ட்ஸ் வரும்போது எல்லாம் நெஞ்சு படபடத்து ‘லொக்கு லொக்கு’ என்று இருமினான். காலை, மாலை இருவேளையும் அவளே வந்தால், மேலும் ஒரு வாரம்கூட இங்கேயே படுத்துக்கொள்ளலாம் என்றுகூடத் திட்டமிட்டு இருந்தான். ஆனால், மாலை வேளையில் மனோரமா மாதிரியான தாதி வந்து இவன் புட்டத்தைக் காட்டச் சொன்னபோது, ”பார்த்து வலிக்காமக் குத்துங்கம்மா” என்றான்.

Sundaresan1

27 வயதில் வெறும் 35 கிலோ உடம்பை வைத்துக்கொண்டு, தீவிரமான காச நோயின் பிடியில் இருப்பவனுக்குத் தாதி மீது காதல் மாதிரியான ஒன்று வரலாமா?

”இன்னிக்கு எத்தனை தடவை ஆய் போனீங்க சுந்தரேசன்?”- குறிப்பேட்டில் குறிக்க கேள்வி கேட்டபடி நின்ற’புன்னகை மன்னன்’ ரேவதியிடம் கூச்சமாக, ”ரெண்டு தடவ மேடம்!” என்றான்.

வெளித் திண்ணையில் எப்போதடா என்று காத்திருந்த காகங்கள் இரண்டு அப்போதே தாதி வெளியேறுகையில் இவன் காதலைக் கொத்திக்கொண்டு சண்டையிட்டபடி பறந்துபோயின. இதில் ஒரு விஷயம் என்னவென்றால், அந்த அழகான தாதியின் உண்மையான பெயரும் ரேவதிதான்.

நோயாளிகள் அமர்ந்திருந்த நீளமான பெஞ்ச்சில் அமர்ந்திருந்த சுந்தரேசன், ரேவதி ஐந்து மாதக் கர்ப்பமாக இவனைக் கடந்து சென்றபோது புறங்கையைக் கழுத்தில் வைத்துக் காய்ச்சல் இப்போதே வந்துவிட்டதா? என்று தொட்டுப்பார்த்துக் கொண்டான். எதிர் சுவரில் காசநோயாளி களுக்கான குறிப்புகள் பெரிய சைஸ் போஸ்டர் போன்று ஒட்டியிருந்தார்கள் விதவிதமாக. காச நோயாளிகள் இருமும் போது கையில் கர்ச்சீப் வைத்துக்கொண்டு இரும வேண்டும் என்றிருந்தது. பக்கத்தில் கோட்டுச் சித்திரத்தில் கர்ச்சீப் வைத்து ஒருவர் இருமிக்கொண்டு இருந்தார். சுந்த ரேசனுக்கு இருமல் வரும்போல் தொண்டை உறுத்தியது. கர்ச்சீப்பை இவன் வருகையில் எடுத்து வந்திருக்க வில்லை. அம்மாவை வெளியே மரத்தடியில் அமரவைத்துவிட்டு வந்திருந்தான். அவளிடம் போனால் பையில் துண்டு இருக்கும்.

வேறு ஒரு போஸ்டரில் ஒரு டி.பி. நோயாளி கட்டிலில் படுத்திருப்பதை வண்ணத்தில் பிரின்ட் போட்டிருந்தார்கள். அவரின் நெஞ்சுக் கூட்டு எலும்புகளை வரிசையாக எண்ணலாம்போல் இருந்தது. இவனுக்குப் பயமாக இருந்தது. ஊரில் எல்லோருமே நன்றாக இருக்க தனக்கு மட்டும் எப்படி இந்த வியாதி தேடி வந்து ஒட்டிக்கொண்டது? அப்படி என்ன பெரிய பாவத்தைச் செய்துவிட்டேன்? அடுத்தவன் நாசமாகட்டும் என்று சதிவேலை செய் தேனா… இல்லை, திருட்டு வேலை செய் தேனா… இல்லை, இளம் பெண்ணைஏமாற்றி னேனா? ஆயிரத்தெட்டு யோசனைகள் சுந்தரேசனை அலைக்கழித்துக்கொண்டே இருந்தன.

உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர், ”வெட் டியா ஏன் போய் காசு அத்தனை குடுத்து தனி ரூம் எடுத்து மருந்து மாத்திரை சாப்பி டறே சுந்தரேசா? எம்.எல்.ஏ-கிட்ட லெட்டர் பேடுல கையெழுத்து வாங்கித் தர்றேன்… சாப்பாட்டுல இருந்து எதும் காசே இல்ல” என்று நேற்றுகூட இவனிடம் சொல்லி யிருந்தார். அவர் 50 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்காக ஒரு மாதம் இரவு பகல் பாராமல் அவர்கூடவே இருந்துஉதவி இருந்தான்.

”ட்ரீட்மென்ட் ஏனோதானோன்னுதான் இருக்கும்ங்க… மாசக்கணக்குல அங்கேயே படுத்திருக்கிறவங்களுக்குத்தான் அது ஆகு முங்க. நான் ஒரு வாரம் மட்டும் இருந்துட்டு வரப்போறனுங்க” என்று சொல்லி அவரிடம் இருந்து நழுவியிருந்தான்.

தனி அறையில் இவன் போன முறை படுத்திருந்தபோது நாள் ஒன்றுக்கு 70 ரூபாய் வாங்கினார்கள். இதுபோக டீலக்ஸ் ரூம் என்று ஒன்று இருந்தது. அது பணக்கார வியாதியஸ்தர்கள் தங்கி வைத்தியம் பார்த்துக்கொள்ள. ஆனால், அந்த அறை களில் ஆட்களை இவன் பார்த்தது இல்லை. அவர்களுக்குச் காசம் வருவதில்லை போலும். லுக்கோமியாடோமியா என்று வேடிக்கையான வியாதிகள்தான் அவர் களுக்கு ஸ்பெஷலாக வருமோ என்று நினைத்துக்கொண்டான்.

முன்பு இங்கு படுத்து எழுந்து போன பிறகும் எப்படியும் பிழைத்துக்கொள்வோம் என்றுதான் வருடம் முழுவதும் 15 நாட் களுக்கு ஒருமுறை வந்து உடலைப் பரி சோதித்து மருந்து புட்டிகளையும் மருந்து வில்லைகளையும் வாங்கிப் போய் சாப் பிட்டுக்கொண்டு இருந்தான். ஆறு மாதத்தில் காசம் போய்விடும் என்று போட்டி ருந்தார்களே ஒழிய இவனுக்கு அப்படித் தீரவில்லை. இதற்காக புகைபிடிக்கும் பழக்கத்தைக்கூடப் பல்லைக் கடித்துக் கொண்டு விட்டிருந்தான். ”ஒரு பீடி குடிச் சின்னா, ஒரு மாசம் நீ சாப்பிட்ட மருந்து எல்லாம் வேஸ்ட்!” என்று டாக்டர் இவனை எச்சரித்து இருந்தார். முன்பு இவன் பார்த்த டாக்டர் கோவையில் இருந்து வந்துகொண்டு இருந்தார். இப் போதுஅவர் பெயர்ப் பலகையே இல்லை.

”நல்லா இருந்தியே சாமி… அந்த முருகம் பாளையத்தான் காது குத்து விசேஷத்துக்குப் போய் கெடுத்துப்போட்டியே கதையை. ரெண்டு வருஷமா தண்ணி போடாம சுத்தமா இருந்தியே சாமி… ரெண்டு டம்ளர் குடிச்சிருப்பியா? ஆசைக்குக் குடிச்சுட்டு வந்து எட்டு நாளா இப்படி இருமுறியே சாமி” என்று அம்மா அழத் துவங்கவும், இவனுக்குத் தன் மீதே வெறுப் பாக இருந்தது. அம்மா சொன்னது மாதிரி அது நப்பாசையில் நடந்துவிட்ட சம்பவம் தான்.

”என்ன மாப்ள… கெடாக்கறிய வாயைத் துளி நனைச்சுக்காம எப்படி மாப்ள சாப்பிடறது?” என்று தூண்டிவிட்டுப் பேச சில மாமாக்கள், கருப்பராயன் கோவிலில் இருக்கத்தானே செய்தார்கள்.

முன்பு இவன் நெஞ்சுக்கூட்டு எக்ஸ்- ரேவை க்ளிப் மாட்டி டியூப்லைட் போட் டுக் காட்டிய கோவை டாக்டர், ”எலும்புல மூணு ஓட்டை தெரியுது பார்… இங் கொண்ணு இருக்குது பார்… இதான் காச நோய்க் கிருமிகள் உன் எலும்பை அரிச்ச அடையாளம். நீ நடந்தா மூச்சு வாங்குதுங் கிறே… வாங்கத்தான் செய்யும். கனமான ஒரு பொருளைத் தூக்க முடியாது. மாடிப் படி ஏற முடியாது. டி.வி.எஸ்-50யை ஸ்டார்ட் பண்ணினா மூச்சு வாங்கும். காலம் முடியும் முட்டும் இனி பத்திரமாத் தான் இருந்துக்கணும் சுந்தரேசன். யோகா சனம் கத்துக்க. தினமும் மூச்சுப் பயிற்சி செய். ஓரளவுக்குச் சிரமம் தெரியாது!” என்றார். அவர் சொன்னது மாதிரியோகா சனப் புத்தகங்கள் வாங்கி தினமும் காலை யில் சம்மணம் போட்டுப் பயிற்சி செய் தான். 15 நாட்கள்தான்… சலிப்பாக விட்டு விட்டான்.

Sundaresan2கடைசியாக இவன் எடுத்த கோழை டெஸ்ட் ரிப்போர்ட்டில் கிருமிகள் இல்லை என்றானதும், நாட்டு வைத்தியப் புத்தகங் களை நாடினான். இவனுக்குத் தெரிந்த இலை, வேர்களைப் பிடுங்கி வந்து அரைத் துக் குடித்தான். வீட்டின் முன் தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி என்று தினமும் தண்ணீர் ஊற்றிப் பாதுகாத்தான். ஒரு கட்டத்தில் இவனது நாட்டு வைத்தியம் இவனுக்கு ஓ.கே. சொல்லிவிட்டது. உடல் எடையை 55 கிலோ ஆக்கிக்கொண்டான். வயது 30 என்பதால் அம்மா கல்யாணப் பேச்சை ஆரம்பித்து இவன் ஜாதகத்தை எடுத்துக்கொண்டது.

காங்கேயத்தில் தூரத்துச் சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்துவர சுந்தரேசனும் இவன் மாமாவும் இரண்டு பங்காளிகளும் போனார்கள். பெண்ணுக்கு அம்மா இல்லை. குடிகார அப்பா மட்டும் இருந்தார். இவர்கள் சென்றபோது காலை மணி 9. இவர்கள் வரும் தகவலை முன் தினமே தெரிவித்திருந்தபடியால், பக்கத்து வீட்டு அம்மாக்கள் பெண்ணை அழகுபடுத்தியிருந் தார்கள். காங்கேயம் என்பதால், அவர்கள் கேஸ் அடுப்பு பற்றவைக்கவில்லை. டீக் கடையில் வடை, பஜ்ஜி, இனிப்புக்காக லட்டு ஒரு பாக்கெட் வாங்கி வந்து இவர் கள் சாப்பிடத் தட்டில்வைத்தார்கள். இவன் மாமாதான், ”பொண்ணு என்ன வேலைக்குப் போகுது? சொந்தபந்தம் எல் லாம் எந்த எந்த ஊர்ல இருக்குது?” என்று விசாரணையில் இறங்கியிருந்தார். பங்காளி கள் பஜ்ஜியையும் வடையையும் காலி செய்வதில் குறியாக இருந்தார்கள்.

பெண் பிள்ளைக்கு வயது 25 ஆகிறதாம். செவ்வாய் தோஷம் என்பதால் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டு இருப்பதாகப் பிள்ளையின் தந்தை பேசினார். நேற்று நல்ல சரக்கு போலிருந்தது. கண்கள் சிவந்து இருந்தன. ”பத்து பவுன் நகை இருக்குது. இந்த வீடு இருக்குது. ஒரே பொண்ணு. கட்டிக் குடுத்துட்டா நிம்மதி. இவ அம்மா டி.பி-யால செத்துப்போய் எட்டு வருசம் ஆச்சு” என்றார்.

சுந்தரேசனுக்கு அவர் டி.பி. என்ற வார்த் தையை உச்சரித்ததுமே பயம் பிடித்துக் கொண்டது. ”ஏம்மா சும்மா நிற்கிறே?ஏதாச் சும் பேசும்மா” என்றார் இவன் மாமா.

”நான் என்னங்க தனியா சொல்றது… என்னைக் கட்டிக்கிறவரு என்னை அன்பா வெச்சுக்கலைன்னாலும் பரவாயில்லைங்க. குடிகாரரா இல்லாம இருந்தாப் போதும். என்னோட அப்பாவை காங்கேயத்துல எல்லா வீதியில இருந்தும் இழுத்துட்டு வந்திருக்கேன். ஒவ்வொரு விசுக்கா எச்சா போச்சுன்னா, ‘யாரு நீ? என்ன வேணும் உனக்கு?’னு என்னையவே கேட்பாருங்க. உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன… என் னைப் பார்க்க வந்த அம்பதாவது மாப் பிள்ளை நீங்க. ஊருக்குப் போய்ச் சொல் றோம்னு போவாங்க. ஒரு பதிலும் இருக் காது. நீங்களாச்சும் பிடிக்குது, பிடிக்கலைனு சொல்லிட்டாவது போங்க!” என்று பெண் பிள்ளை பேசி முடிக்க… மாமா இவன் முகத்தைப் பார்த்தார்.

”டோக்கன் நம்பர் 27” என்று குரல் கேட்கவே சுந்தரேசன் எழுந்து டாக்டர் அறைக்குள் நுழைந்தான். டாக்டர் மேஜை யின் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந் தான். டாக்டர் ஆங்கிலத்தில் அலைபேசியில் யாரிடமோ குசுகுசுப்பாகப் பேசியபடி இருந்தார். சுந்தரேசன் காலையில் எடுத்த சளி டெஸ்ட், ரத்த டெஸ்ட் காகிதங்களையும் எக்ஸ்-ரே படத்தையும் கையில் எடுத்துப் பவ்யமாக டாக்டரின் மேஜையில் வைத் தான். டாக்டர் இவனிடம் எதுவும் பேசா மல் அவற்றைக் கையில் எடுத்துப் பார்த் தார். கடைசியாக இவனிடம்,

”என்ன பண்ணுது?” என்றார்.

”பத்து நாளைக்கு முன்னே கூல்டிரிங்ஸ் குடிச்சுட்டேன் சார்… சளி பிடிச்சுப் பயங் கர இருமல். கால் வலி எந்த நேரமும் பயங் கரமா இருக்குங்க. மூணு வருஷம் முன்னாடி இங்க வந்துதான் மருந்து மாத்திரை வாங்கிச் சாப்பிட்டேன் சார்!” ‘நீங்க இல்ல, ஆனா உங்க கடையிலதான் சார் ஒரு வருஷமா இட்லி சாப்பிட்டேன்!’ என்பது மாதிரி சொன்னான்.

”பயப்படும்படியான சளி இல்லை. உடம் புல சத்துமானக் குறைதான். நோய் எதிர்ப் புச் சக்தி உன் உடம்புல சுத்தமா இல்ல. சளிக்கு மாத்திரை எழுதித் தர்றேன்… டானிக் எழுதுறேன்… வலிக்கு தனியா எழுதித் தர்றேன்… பதினஞ்சு நாளைக்கு!”

”சார், இங்க ஒரு வாரம் தங்கி வைத்தியம் பார்த்துக்கறேனுங்க!”

”நீ பயப்படும்படியா ஒண்ணும் இல்ல… வீட்ல இருந்து சாப்ட்டினா போதும்.”

”இந்தக் கால் வலி என்னை ரொம்பப் பயமுறுத்துதுங்க சார்… முன்ன ரொம்ப சிரமப்பட்டு இருக்கேன். இங்க இருந்துட்டா நீங்க ரவுண்ட்ஸ் வர்றப்ப உங்ககிட்ட சொல்லலாம்.”

”சரி… சரி…” என்று தங்குவதற்கு சீட் எழுதிக் கொடுத்தார். இவன் வணக்கம் போட்டுவிட்டு எழுந்து வெளியே வந்தான். மரத்தடி நிழலில் அமர்ந்தபடி, மண்ணில் விரலால் கோடு கிழித்துக்கொண்டு இருந் தது அம்மா. இவனைப் பார்த்ததும், ”டாக் டர் என்னப்பா சொன்னாரு?” என்று எழுந்துகொண்டது.

”ஒண்ணும் பயப்பட வேண்டியது இல் லைனு சொல்லிட்டாரும்மா?” என்றான்.

”அப்புறம் ஏண்டா ரத்தம் வந்துச்சு?” என்றது.

”அது தொண்டையில புண்ணாம். வா, ஆபீஸ் போய் ரூமுக்கு, சாப்பாட்டுக்குப் பணம் கட்டிட்டுப் போலாம்?” என்று நடந்தான்.

சென்ற முறை தங்கிய அதே 43-ம் எண் அறையே இந்த முறையும் கிடைத்தது. மருந்துக் கடையில் டாக்டர் சீட்டைக் கொடுத்து மருந்துகளை வாங்கிக்கொண்டு அம்மாவோடு தார் சாலையில் நடந்தான். அம்மா இவனுக்காகச் சாப்பாட்டுத் தட் டும் குடம், டம்ளர் என்று சின்ன சாக்குப் பையில் போட்டுத் தூக்கிக்கொண்டு வந்தி ருந்தது. மரங்கள் சூழ்ந்த வனப் பிரதேசத் துக்குள் செல்வதுபோலத்தான் இருந்தது. வெயில் காலம் என்றாலும் எல்லா அறை களிலுமே ஆட்கள் தங்கியிருந்தார்கள். ஒவ் வொரு அறையைக் கடக்கும்போது எல் லாம் இருமல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

தாதிகள் தங்கியிருந்த அறையில், புது அட்மிஷன் என்று சீட்டு நீட்டி ஊசி போட்டுக்கொண்டான். மருத்துவமனை சேவகன் புது படுக்கை உறை, தலையணை உறை, சாவியை எடுத்துக்கொண்டு இவர் களைக் கூட்டிப்போனான். சேவகனுக்குக் கையில் 100 ரூபாய் கொடுத்து தாட்டி விட்டுப் படுக்கையில் நீட்டி விழுந்தபோது தான் அம்மா இவனிடம் அந்த விசயத்தைச் சொன்னது, ”காங்கேயத்துப் பொண்ணு போனு பண்ணிச்சுடா. ஆஸ்பத்திரியில இருக்கோம்னு சொல்லிட்டேன்… புறப் பட்டு வர்றேன்னு சொல்லிடுச்சு!” என்று.

”ஆஸ்பத்திரியில இருக்கோம்னு ஏம்மா சொன்னே? ஏற்கெனவே அதோட அம்மா இந்த நோவுலதான் செத்துடுச்சு. எனக்கும் அந்த மாதிரினு தெரிஞ்சுட்டா, அந்தப் பொண்ணு என்னைக் கல்யாணம் பண்ணிக்கு மாம்மா”- இவன் கேட்டபோதே அம்மா அழத் துவங்கிவிட்டது. ”திடீர்னு வாயில வந்துட்டுதுடா சாமி. உன்னை எங்கேனு கேட் டதும் டாக்டரைப் பார்க்கப் போயிருக்கான்னு சொல்லிட்டேன் சாமி…”

”வுடும்மா… தலையில எழுதினப்படிதான் நடக்கும். அழுவாதே… இங்கேயும் வந்து கண் ணைக் கசக்கிட்டேதான் இருப்பே. ஆடுகள் எல்லாம் பட்டியிலயே கட்டிப்போட்டுக் கெடக்கும். வீட்டு போனுக்கு ராத்திரி பண் றேன்… நீ கிளம்பும்மா. அந்தப் பொண்ணு வர்றப்ப நீ இங்க இருக்காதே. உன் லொட லொட வாய் நீ சும்மா இருந்தாலும் பூராம் ஒப்பிச்சுடும். உன்கிட்ட எல்லா விசயத்தையும் அந்தப் பொண்ணு கறந்துட்டு காங்கேயம் போய் காறித் துப்பும்.”

இவன் சுவர் பார்த்துப் படுத்துக்கொண்டதும் அம்மா குடத்தை எடுத்துப்போய் பைப்பில் தண்ணீர் பிடித்துக்கொண்டுவந்து உள் அறை யில் வைத்துவிட்டு, ”போனு பண்ணு சாமி… நான் கிளம்பறேன்” என்று கிளம்பிவிட்டது.

2 மணிக்கும் மேல் அறை வாசலில் சைக்கிள் பெல் சத்தம் கேட்க… எட்டிப் பார்த்தான். சாப்பாட்டுக்காரர். இவன் வட்டிலையும் கிண்ணத்தையும் எடுத்துக்கொண்டு வெளித் திண்ணைக்கு வந்தான். வட்டிலில் சாப்பாடு, காய்கறி போட்டபடி ”இன்னிக்குத்தான் வந் தீங்களா?” என்றார் அவர். ”அடையாளம் தெரியலீங்களா… மூணு வருஷம் முன்னாடி வந்திருந்தேனே” என்று இவன் சொன்னதும் உற்றுப் பார்த்தவர், ”அட, நீங்களா? என்னமோ தெரியல இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தவங்க திரும்பத் திரும்ப வந்துட்டேதான் இருக்காங்க. மோரைக் கிண்ணத்துல ஊத்துறேன்…” என்ற வர் ஊற்றிவிட்டு, மறுபடியும் பெல் அடித்தபடி அடுத்த அறைக்கு சைக்கிள் ஏறிச் சென்றார். வட்டிலையும் கிண்ணத்தையும் எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தான். மோர் மட் டும் ஊற்றிக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, மீதச் சாப்பாட்டைப் புற்கள் மீது கொட்டி னான். தூரத்து அறையின் பின்னால் சண்டை யிட்டுக்கொண்டு இருந்த நாய்கள் புயல் வேகத்தில் ஓடி வந்தன.

அறை எண்ணை விசாரித்துத் தேடியபடி வந்து அறைக்குள் விஜயா நுழைந்தபோது மணி 2. சுந்தரேசன் தூங்கிக்கொண்டு இருந்தான். படுக்கையில் அவன் அருகில் அமர்ந்தவள் அவன் தோளைத் தட்டி, ”என்னங்க…” என்று எழுப்பினாள்.

சுந்தரேசன் திரும்பி விழித்துப் பார்த்து, விஜயா என்றதும் எழ முயற்சித்தான். ஆனால், விஜயா அவன் தோளை அழுத்தி அப்படியே படுத்திருக்கும்படி செய்தாள். ”காலையிலயே ஒரு போன் பண்ணி என்னிடம் சொல்வதற்கு என்ன?” என்று கோபித்துக்கொண்டாள். இவன் பழைய தன் வியாதிக் கதையை அவளிடம் ஒப்பித் தான். எல்லாவற்றையும் கேட்டபடி இவனின் எக்ஸ்-ரேவைக் கதவை நோக்கிப் பிடித்து டாக்டர் மாதிரியே பார்த்தாள். பொம்மை பார்க்கிறாளா? என்றுநினைத்துக் கொண்டான். இவன் சளி ரிப்போர்ட் டையும் பார்த்தவள் மாத்திரைகளையும் என்ன என்ன என்று பார்த்தாள்.

”எத்தனை நாள் தங்கணும்?” என்றாள்.

சுந்தரேசன் ஒரு வாரம் என்றான். ”ஒரு வாரமும் உங்ககூடத்தான் இருப்பேன்!” என்று விஜயா சொன்னதும் மிரண்டான். காலை நேரத்தில் இருமும் இருமலைப் பார்த்தாள் என்றால், சளியில் ரத்தம் கலந்திருப்பதைப் பார்த்தாள் என்றால்? ”வேண்டாம் விஜயா நான் தனியா இருந்துடுவேன்” என்றான்.

”உங்களை இப்படிப் படுக்கப் போட்டுட்டு வீட்ல என்னால நிம்மதியா இருக்க முடியாது!” என்றவள், அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

”இப்படி எல்லாம் முத்தம் குடுக்கக் கூடாது விஜி. உனக்கும் இந்தச் சளிஒட்டிக் கிச்சுன்னா, ரொம்பத் துன்பம். இந்த ஆஸ்பத்திரியே உனக்கு வேண்டாம் விஜி… நீ போயிடு” என்றான்.

விஜயா எழுந்து போய் நாற்காலியில் அமர்ந்து முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டாள்.

தாதி ரேவதி படியேறி இவன் அறைக்குள் வரவும் எழுந்து படுக்கையில் கால்களைத் தொங்கவைத்து அமர்ந்தான் சுந்தரேசன். அலமாரியை நீக்கி ஊசியையும் மருந்தையும் விஜயா எடுத்து டேபிளில் வைத்தாள். மருந்துப் புட்டியின் முனையை வேஸ்ட் கூடையில் பட்டெனத் தட்டிவிட்டு சிரிஞ்சை உள்விட்டு மருந்தை உறிஞ்சிக் கொண்டதும் சுந்தரேசன் புட்டத்தைக் காட்டினான்.

”இந்தப் பொண்ணு யாரு சுந்தரேசன்?” என்றாள் ரேவதி.

”நான் கட்டிக்கப்போற பொண்ணு மேடம். அடுத்த மாசம் கல்யாணம்… உங்களைத்தான் மூணு வருஷம் முன்ன வந்தப்ப ரொம்ப விரும்பினேன் மேடம்… மிஸ் ஆயிடிச்சு…” என்றான்.

”அடடே, சொல்லியிருந்தீங்கன்னா… உங்களையே நான் மேரேஜ் பண்ணி யிருப்பேனே!”- உபயோகித்த ஊசியை வேஸ்ட் டப்பாவில் போட்டுவிட்டுப் படி இறங்கிப்போனார் தாதி. சுந்தரேசன் விஜயாவைப் பார்த்தான்.

”இவளையே கட்டியிருக்க வேண்டியது தானே… காங்கேயம் ஏன் வரணும்?” உர்ர் என்று முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள்.

”தமாஸ்கூடப் பண்ணக் கூடாதுங்கிறியா? ஆமா… எல்லாம் தெரிஞ்சமாதிரி எக்ஸ்-ரே பாக்குறே… சளி ரிசல்ட் பாக்குறே… நர்ஸுக்கு மருந்தும் ஊசியும் குடுக்குறே?”

”நானும் நாலு வருசத்துக்கு முன்னாடி பத்து நாள் படுத்து எந்திரிச்சுப் போனவதான்!” என்றாள் விஜயா.

– ஜூலை 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *