கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 16,141 
 

1967/68

நாகர்கோவிலில் ஒரு நண்பர் வீட்டில் நான் குடும்பத்துடன் தங்க நேரிட்டது. சென்னையில் ஓரிரண்டு இலக்கியக் கூட்டங்களிலும் அவரை சந்தித்ததோடு எங்கள் பரிச்சயம் அப்போது நின்றது. ஆனாலும் அந்த வீட்டாரின் வரவேற்பு விருந்தோம்பலின் சிறப்பு பற்றி எள்ளளவும் சந்தேகமில்லை. என்றாலும் ஒரு சங்கோஜம் எங்களுக்கிடையே இடறிற்று. ஆனால் நண்பரின் தாயாரை சந்திக்கும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது. அந்த அம்மா என் நாவல் “புத்ர“ வைப் படித்திருந்தார் என்று சொன்னால் மட்டும் போதாது. ஆங்காங்கே வாக்கியங்களை ஒப்பித்து ரசித்து மகிழ்ந்தார். அதுவும் பெரிதல்ல. புத்திபூர்வமாக இலக்கிய ரீதியில் வாழ்க்கையையே நோக்கப் பழகிக்கொண்ட பக்குவ மனம் – அதுவும் பெண்டிரில் காண்பது மிக மிக அரிது என்று என் கருத்து. அந்த மூன்று நாட்களும் எனக்கு மிக சந்தோஷமான நாட்கள்.

கன்யாகுமரியின் காந்தம் சாதாரணமன்று. மறுவருடமும் ஆனால் நான் மட்டும் தஞ்சை திருச்சி மதுரை என்று ஆங்காங்கே தங்கி ரசிக நண்பர்களுடன் அளாவி.. அது தனிக்குஷி தான்.

தென்காசியில் ஒரு நண்பர் வீட்டில் மூன்று நாட்கள் காம்ப். ஜாலி டைம். அவர் பேச்சுவாக்கில் நாகர்கோயிலில் என் நண்பரின் தாயார் தவறி நான்கு மாதங்களாயின என்று சொன்னபோது நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். என் பிரயாணமே நாகர்கோயிலை நோக்கி அந்த அம்மாவுடன் மறு சந்திப்பை எதிர்நோக்கித்தானே! ஆனால் அவர் மறைவு பற்றி எனக்கு ஏன் தெரிவிக்கவில்லை? எனக்கு மன வருத்தம்தான்.

மறுநாள் நாகர்கோயிலில் நண்பர் வீட்டை அடைந்தபோது பிற்பகல் 3 மணி இருக்கும். என்னைக் கண்டதும் எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம்! அந்த உணர்ச்சியின் பரஸ்பரத்தை விஸ்தரிக்கவும் வேண்டாமா!

வாசல் அறையில் நண்பரும் நானும் பேசினோமோ பேசினோமோ நேரம் போய்க் கொண்டிருந்ததே தெரியவில்லை. அவர் தரையில் பாயில் படுத்தவண்ணம். எதிரே விசுப்பலகையில் தலையணையில் சாய்ந்தபடி நான்.

என்ன பேசினோம்? எல்லாவற்றையும் பற்றித்தான். மேனாட்டு இலக்கியம். நம்நாட்டு இலக்கியம். புதுக் கவிதை. புது வசனம். எழுத்தின் நுணுக்கங்கள். பங்சுவேஷனின் தனி பாஷை. மனிதர்கள். புவனம். வாழ் க்கை…

சினிமாவைத் தவிர இந்நாளில் தடுக்கி விழுந்தால் பேசுவதற்கும் கடிதங்களில் பரிமாறிக் கொள்ளவும் அதுதானே சப்ஜெக்டே!

அந்தியிறங்கி ஒருவருக்கொருவர் முகம் மறையுமளவிற்கு அறையிருண்டு விட்டது. விளக்கைப் போடத் தோன்றவில்லை. பேசிக் கொண்டிருந்தோம். இருள் அடர அடர அது படிப்படியாக எங்கள் பேச்சைத்தான் சுழற்றிக் கொண்டது. எப்போது மௌனமானோம? ஏதோ ஒரு உள் நிறைவின் பொங்கலில் எங்ffகளைப் பூரா வியாபித்துக் கொண்ட இருளின் இதவில் ஒரு சின்ன சம்புடத்தில் உருளும் இரு ஜின்டான் மாத்திரைகள் போல. ஒரே கோசத்தில் இரண்டு உயிர்த்தாதுக்கள் போல. கூடில் இரு குஞ்சுகள் போல் எங்கள் உள்ளங்களின் நெருக்கத்தில் ஒரு தனிக் கதகதப்பில் அது தந்த மகுதான்மத்தத்தில் திளைதுக் கொண்டிருந்தோம். இந்நிலை எங்கள் நட்பின் தன்மையால் அல்ல. இது அந்த சமயத்தின் மஹிமை.

சிருட்டியின் ஆயாத நூற்பில் இரண்டு இழைகளாக இழைந்து போய்விட்டோம். அல்லது அது தன் கோலத்தில எங்களை இழைத்துவிட்டது என்று சொல்லட்டுமா?

ஆனால் இதுபோன்ற நேரங்கள் காய்ப்பு காண நினைவைச் சூடிவிட்டுப் போமே தவிர நம்மோடு காயமாக இருத்தி வைத்துக் கொள்ளற் பாலன்று.

சற்று நேரம் கழித்து – எந்நேரமோ? அவர் புழக்கடைப் பக்கம் போனார். விளக்கைப் போடாமலே நான் அந்த அறையுள் இன்னொரு அறையுள் – இல்லை – அதன் வாசற்படியிலே நின்று சுற்றி நோக்கினேன்.

கட்டில் ஜன்னலோரமாக அதே மூலையில்தான் மெத்தையும் இரண்டு தலையணைகளும் – அவைகளும் அதே தாமோ? மற்றபடி பண்டங்கள் நாற்காலிகள் ஏற்கெனவே நான் அவைகளைப் பார்த்திருந்த இடங்களும் நிலையும் பெரிதும கலைந்த மாதிரி தெரியவில்லை.

“அம்மாவைத் தேடறேளா?” என் பின்னாலிருந்து என் செவியோரமாய் பேச்சே ஒரு மூச்சு.

தன் தாயாரின் மறைவை அவர் தெரிவிக்கும் விதமா?

எப்படியும் இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

இல்லை. அந்தக் கேள்வியை ஒரு பதிலாகவே நான் படித்தேன். அதுவும் அந்தத் தருண விசேடம் தானா?

அம்மா என்றால் ஒரு அம்மா தான். உன் அம்மா. என் அம்மா. தனித்தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா.

போனவருடம் இந்த வீட்டுக்கு நான் வந்திருந்த போது என் தாயின் முதல் வருடச் சடங்குகளை முடிந்த கையோடு.

ஆகவே இங்கே இப்போ நான் தேடியது அவர் தாயாரையா? என் தாயாரையா?

பதிலை எதிர்பார்க்காமால் ஆனால் ஏதோ இன்ப ரகசியத்தில் சீண்டிக்கொண்டேயிருக்கும் கேள்வி.

சிந்தாநதி ஓட்டத்தில் துள்ளு மீன்.

– தினமணியில் 1984-ல் தொடராக வந்தது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *