சன்னலின் உள்ளே வந்த வெளிச்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2023
பார்வையிட்டோர்: 1,802 
 

“சங்கமித்ரா நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா?” என்றாள் வர்ஷணி தன் தோழியிடம்.

முகநூலில் மூழ்கி இருந்த சங்கமித்ரா தன் முகத்தை வர்ஷணி இருந்த பக்கம் திரும்பியவாறு, ”முட்டாள் புருஷன். காது கேட்காத மாமியார். அவங்களோடு கஷ்டப்படற எனக்கு வடிகால் இது மட்டும்தான். நான் என்ன செய்யட்டும்” என்று பதிலிறுத்தாள் பைரவி.

சங்கமித்ராவும் வர்ஷணியும் திருச்சியில் உறையூரில் ஒரு வீட்டின் அடுத்தடுத்த போர்ஷனில் வசிக்கும். நெருங்கிய தோழிகள். மனம் விட்டுப் பேசும் வழக்கம் உண்டு… சங்கமித்ரா ஒரு தனியார் கம்பெனியில் பணி செய்கிறாள். வட்டமான முகம், பார்ப்பவரைத் திகைக்க வைக்கும் செழிப்பான மார்பகங்களுடன். செப்புச் சிலை போல் அழகாக இருப்பாள்., அவளைப் பார்த்தால் கல்லூரியில் படிக்கும் பையனுக்கு அம்மா என்று யாராலும் சொல்ல முடியாது.

பூப்போல மென்மையானவள். கணவனுக்குச் சொற்ப வருமானம் கூட இல்லை. சங்கமித்ராவின் வருமானத்தில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. வர்ஷணி இல்லத்தரசி. இருவரும் நெருங்கிய தோழிகள்.

சங்கமித்ரா முகநூல், வாட்ஸ் அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் யூடியூப், ஆகியவற்றில் தன் நேரத்தைச் செலவிடுவாள். அவளை முகநூலில் பின்பற்றுவர்கள் அதிகம். குறைந்தது ஆயிரம் பேர்களாவது இருக்கும். ஒரு பெண் அனுமதி கொடுத்தால் எந்த ஒரு ஆணும் அவள் அழகைப் பாராட்டலாம் அதில் தவறு எதுவுமில்லை என்பது அவள் எண்ணம். அவள் அழகாய் இருக்கிறாள் என்று மற்றவர்கள் பாராட்டுவதைக் கேட்டு குதூகலம் அடைவாள். அதனால் வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோ வாட்ஸ் அப் ஸ்டேடஸ்ஸில் தன் புகைப்படத்தை மாற்றிக் கொண்டிருப்பாள். ”அப்படிச் செய்யாதே” என்பாள் வர்ஷணி. அது பற்றித் தான் அவர்களுக்குள் அடிக்கடி உரையாடல் நடக்கும். பக்கத்து போர்ஷன் என்பதால் சங்கமித்ராஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது வர்ஷணி வீட்டுக்குப் போவாள். வர்ஷணியும் அதுபோல் இவள் வீட்டுக்கு வருவாள். சங்கமித்ரா வரும் போதெல்லாம் வர்ஷணியின் கணவன் ராம்குமார் அவளிடம் ஆவலுடன் பேசுவான். அவனுக்கு வயசு முப்பத்து ஐந்து. சங்கமித்ராவை விட வயதில் சிறியவன். மனைவி பக்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவளை நல்லா சைட் அடிப்பான்.. அதற்கு வர்ஷணி ஆட்சேபனை செய்யவில்லை. அவள் அழகைப் பாராட்டுவான்.. அவள் அழகுக்கு சரண்டர் ஆகி விட்டான். சங்கமித்ராவுக்கு அது தெரியும். அவனை வேற்று மனிதனாக கருதாமல் சொந்த உறவு போல் கருதினாள்.

“நீ பார்ப்பதற்கு அழகாய் கவர்ச்சியாய் சினிமா நடிகை போல் இருக்கிறாய் ? உன்னுடைய புகைப்படத்தை ஸ்டேஸ்ஸில் போட்டு வம்பை விலைக்கு வாங்காதே. உன் அழகால் உனக்கு ஏதாவது பாதிப்பு உண்டாகலாம். எதற்கு வம்பு ?” என்பாள் வர்ஷணி.

“ஆஹா, நீ சொன்னபடியே செய்கிறேன்” என்று கிண்டலாகக் கூறி நகைத்து விட்டு சங்கமித்ராஅகன்றாள்.

சங்கமித்ராவுக்கு இப்போது வயசு நாற்பது…அவளுக்கு பதினெட்டு வயது ஆகும்போது திருமணம் ஆகிவிட்டது. கல்யாணம் ஆகும்போது ப்ளஸ் டூ தான் படித்திருந்தாள். கணவன் சிங்காரம் ஒரு தனியார் கம்பெனியில் கேண்டினில் வேலைசெய்து கொண்டிருந்தான். அவன் பிளஸ் டூ பாஸ் செய்யவில்லை. முன்னேற வேண்டும் என்னும் துடிப்பு இல்லாதவன். சங்கமித்ரா அஞ்சல் கல்வி மூலம் பி.காம் பட்டப் படிப்பை முடித்தாள். அவனுடன் அவளை ஒப்பிடும்போது அவன் சுமார்தான். கல்யாணம் ஆன மறு ஆண்டே அவளுக்குக் குழந்தை பிறந்து விட்டது. பத்து வருடம் வாழ்க்கைப் படகு இன்பமாய்தான் சென்று கொண்டிருந்தது. அடுத்த பத்து வருடங்கள் அவர்களுக்குத் துன்பமாய் கழிந்தது. மாமனார் வானுலகம் சென்று விட்டார்.. அடிக்கடி விடுமுறை எடுத்ததால் சிங்காரத்தை வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள். பரம்பரை சொத்தான வீட்டில் வசிப்பதால் வாடகை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.. ஆனால் மற்ற செலவுகள் இருக்கின்றனவே. எதையும் குறைக்க முடியாதே.சங்கமித்ரா எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். எந்த வேலைக்கும் முயற்சி செய்யமாட்டான். , குள்ளம், தலை வழுக்கை. தாடி வைத்து பார்க்க சகிக்க முடியாது. சொன்னதை செய்வான். புரிந்து கொள்ளும் திறன் குறைவு… இரவு ஒன்பது மணிக்குக் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்து விடுவான். காலை எட்டு மணிக்கு மேல்தான் எழுவான்..சங்கமித்ராமுதலில் அவன் போக்கை எண்ணி மிகவும் கவலைப் பட்டாள். பிறகு தன்னுடைய தலை எழுத்து அவனுடன் வாழ்வதுதான் போலும் என்று நினைத்து, முகநூல், வாட்ஸ் அப்பில் தன் நேரத்தைச் செலவிட்டாள். இரவு உணவு முடிந்தவுடன் அறையின் சன்னல் அருகே படுக்கையில் அமருவாள். அவள் வீட்டு சன்னல் எப்பொழுதும் மூடிதான் இருக்கும். மொபைல் பார்த்துவிட்டு அவள் உறங்கும்போது இரவு சுமார் பன்னிரண்டு மணி ஆகி விடும்…

பையன் ராகுல் தஞ்சாவூரில் ஹாஸ்டலில் சேர்ந்து முதல் வருடம் பொறியியல் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்கிறான்.

சங்கமித்ராவுக்குத் தான் அழகாய் இருப்பதில் அலாதிப் பெருமை. அதோடு நின்றால் பரவாயில்லை. தன் அழகை மற்றவர் மெச்சினால் குதூகலம் அடைவாள். அடிக்கடி புதியப் புகைப்படத்தை முகநூலில் சேர்ப்பாள். நண்பர்களிடம் வரும் லைக்ஸ் மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும். முகநூலிலே அதிக நேரத்தைச் செலவிட்டு போதாததிற்கு வாட்ஸ் அப்பில் கொஞ்ச நேரம் ஆண் நண்பர்கள் சிலருடன் வாட்ஸ் அப்பில் உவகையுடன் சேட்டிங் செய்து விட்டு இரவு வெகுநேரம் கழித்து உறங்கச்செல்வாள். அந்த நண்பர்கள் அனைவரும் பைரவியிடம் அழகை பார்த்து ஜொள்ளு விடுகிறவர்கள். அவளின் திமிரும் முன்னழகில் மயங்கி “உன்னிடம் சரண்டர் ஆகி விட்ட முட்டாள்கள். … இரவு பத்து மணி என்று தெரிந்தாலும் இங்கிதம் தெரியாமல் சேட்டிங் செய்வார்கள். சிலர் அத்து மீறி அசிங்கமாக வழிவார்கள். சிருங்கார ரச கவிதைகளால் அவளைத் திணற அடிப்பார்கள். .சங்கமித்ரா மறுப்பேதும் சொல்லாமல் ரசிப்பாள். அவளுக்கு அது பிடித்திருந்தது. அவள் செய்வது சரியானது என்று நினைத்ததால் தப்பு செய்கிறோம் என்று அவளுக்குத் தோன்றவில்லை. எதுவும் தெரியாத கணவன், மருமகள் எதோ மொபைல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மாமியார் ஆக இருவருமே அவள் தப்பு செய்கிறாள் என்று எண்ணவில்லை.

சங்கமித்ராவுக்கு அவள் அழகை யாராவது புகழ்ந்தால் மகிழ்ச்சியாக இருக்குமே. அதை அடுத்த நாள் வர்ஷணியிடம் சொல்லிக் குதுகளிப்பாள். ஆண் நண்பர்களைப் பற்றி அவளிடம் கூறி கணவனால் கவனிக்கப் படாத பெண்களுக்கு வாட்ஸ் அப் தான் சிறந்த வடிகால் என்று கூறி சிரிப்பாள்..

உன்னை என்னால் திருத்த முடியாது. நீ போற வழி நேர் வழியில்ல என்று எனக்குத் தோன்றுகிறது ஜாக்கிரதை அத்து மீறாதே என்று வர்ஷணி அறிவுரை கூறுவாள். சங்கமித்ரா அதை காதில் போட்டுக் கொள்ள மாட்டாள்.

அவள் கணவன் ராம்குமாரும் சங்கமித்ராவுடன் எப்பவாது வாட்ஸ் அப்பில் சேட்டிங் செய்கிறான் என்பது வர்ஷணிக்கு தெரியாது.

எப்போதும் சங்கமித்ரா ஸ்மார்ட் போனே கதி என்று இருந்தாள்..காலை எழுந்ததும் அவளின் முதல் வேலை முகநூல் பார்ப்பதும் வாட்ஸ் அப் பார்ப்பதும்தான். வீட்டில் காலை மாலை இருவேளைகளிலும் மாமியார் சமைத்து விடுகிறாள். வீட்டு வேலைகளை வயதான மாமியார் செய்கிறாளே என்ற கவலை அவளுக்குத் துளி கூட இல்லை. கணவனையும் கவனிப்பதில்லை. ஆனாலும் மாமியாரும் கணவனும் அவள் மீது பாசமாக இருந்தார்கள். அவள் எதோ மொபைல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தார்கள். வீட்டில் நல்ல மருமகள் மாதிரி நடித்து கொண்டு அடக்கமுடன் இருப்பாள். மற்றொருப்புறம் வாட்ஸ் அப்பில் சேட்டிங்கில் வரம்பு மீறிச் செயல்பட்டாள் வர்ஷ்ணியிடம் சொல்வாள். எனக்கு அந்த மாதிரி வேட்கை இருக்கிறது. நான் என்ன செய்யறது?

அவளுக்குக் குறும்பு அதிகம். ஒருமுறை தன் புகைப்படத்தில் ஒரு செயலி மூலம் உதட்டுக்குக் கூடுதல் வண்ணத்தைப் பூசி முகநூலில் பதிவிட்டாள். அதனால் புகைப்படத்தில் மிகவும் வசீகரத்துடன் காட்சி தந்தாள்.. அவள் அழகால் கவரப்பட்ட கார்த்திக் என்பவன் முகநூலில் அவள் அழகைப் பாராட்டினான். வாட்ஸ் அப்பில் சேட்டிங் செய்ய ஆரம்பித்தான். பல முறை முயற்சி செய்து அவள் செல் போன் நம்பரை வாங்கி அவளிடம் பேசினான். அவள் கழுத்தில் ஒரு தங்க செயின் தாலி இருப்பதே தெரியாத மாதிரி அணிந்திருப்பாள். அதனால் அவளுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்று அவன் நினைத்து விட்டான்.. அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டதா என்று அவன் கேட்கவில்லை. இவளும் தனக்கு கல்யாணம் ஆகி விட்டதென்று சொல்லவில்லை. முகநூலில் அடிக்கடி எட்டிப் பார்ப்பான். எப்பவாது அலைபேசியிலும் பேசுவான். குழைந்து குழைந்து பேசுவான். அவளும் உற்சாகமாக இனிய குரலில் பேசுவாள். அவன் அவளிடம் கவர்ச்சியாய் ஒரு செல்பி அனுப்பு என்று கோரிக்கை விடுத்தான். அவள் மெளனமாக இருந்து விட்டாள்…

காலத்திற்கேற்பவும் இடத்திற்கேற்பவும் ஒரு பொருளின் தன்மை மாறும் என்பது விஞ்ஞான விதி . மாறுபட்ட உடைகளில் அழகு கூடுகிறது அல்லது வித்தியாசமாகத் தெரிகிறது என்பதைசங்கமித்ரா உணர்ந்தாள். பட்டுப்புடவை அணிந்து. சுடிதார் அணிந்து, டீசர்ட், ஜீன்ஸ் அணிந்து லெகின்ஸ் டாப்ஸ் அணிந்து, தலைவாரி, தலை விரித்துப் போட்டு, தலை மயிரை மார்பில் போட்டு, மையிட்டு, மலரிட்டு, நெற்றியில் குங்குமமிட்டு திலகமிட்டு, மூக்குத்தி அணிந்து, காதில் வளையம் அணிந்து விதவிதமாக தோழி வர்ஷணியைப் போட்டோ எடுக்கச் சொல்லி முகநூல், வாட்ஸ் அப், டெலிகிராம் எல்லாவற்றிலும் வலம் வரச் செய்தாள். பல வண்ண ஆடையில் கோலமாய் காட்சி அளித்து பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தினாள்.

“என் போட்டோவை பார்த்து என் அழகை வர்ணிப்பது எனக்கு நிரம்ப சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எல்லா நண்பர்களும் என்னை விரும்புகிறார்கள்” என்றாள் சங்கமித்ரா.

“அழகா, கொழு கொழுன்னு இருக்கிற பெண்ணை யார்தான் விரும்பி மாட்டார்கள்? ஏண்டி உன் அழகால் கவரப்பட்டு யாராவது மோசமான கமெண்ட கொடுத்தால் என்ன பண்ணுவே?”.

“அதை ரசிப்பேன்” என்றாள் வெகுளித்தனமாக.

நிறைய நண்பர்களிடமிருந்து விமர்சனம் வரும். நைஸ், அழகோவியம், கண்கள் பேசுதடி….,பொற்சித்திரம், அழகு தேவதை என்று நாசுக்காகப் புகழ்ந்திருந்தனர். அவள் உவகையடைந்தாள். சிலர் அனுப்பிய கமெண்ட்ஸ் எழுத முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது. சீ ! இவங்களுக்கும் புத்தி போகிறதே என்று நினைத்து சிரித்தாள்.. முகநூலில் மேலும் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டுமென்று அவாவினாள்.

அன்று இரவு கார்த்திக் போன் செய்து வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசினான். அவள் அழகை கண்டு அவளிடம் சரணாகதி அடைந்து விட்டேன் என்றான். அவன் புகழ்ச்சியில் பெருமிதம் அடைந்தாள். அவனுடைய கட்டான உடலை கண்டு அவளும் மயங்கினாள்.

”நமக்குள் அன்பு மலர்ந்து விட்டது. உன்னுடைய போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பு” என்றான்.

அவளுடைய படத்தை அவன் கேட்டுக் கொண்டபடி அனுப்பினாள். அது போதாது. இன்னும் தாராளமாக, கவர்ச்சியா சும்மா ஒரு செல்பி போட்டோ எடுத்து அவனுடைய மின்னஞ்சலுக்கோ அல்லது வாட்ஸ்அப்கோ அனுப்பச்சொல்லிக் கெஞ்சினான். அவள் மனசு அனுப்பு என்றது. புத்தி வேண்டாம் என்றது. பைரவிக்கு அந்தக் கணம் பெருத்த தடுமாற்றமாக இருந்தது. அனுப்பலாமா அல்லது வேணமா என்னும் குழப்பத்தில் இருந்தாள். மனம் குழம்பி இருந்தால் பிறகு அனுப்பறேன் என்று அப்போதைக்குச் சமாளித்து விட்டாள்.

அன்று விடிந்ததும் சங்கமித்ராவுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. குளித்து உடை மாற்றி அலுவலகம் போய் விட்டாள்.

அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்துசங்கமித்ராதனக்கு அடுத்து இருக்கையில் அமரும் பூமிகா வந்துவிட்டாளா என்று பார்த்தாள். அவள் இன்னும் வரவில்லை. பூமிகாவுக்குச் சினிமாவில் நடிக்க வேண்டுமென்று அளவு கடந்த ஆசை. அதனால் அவள் இன்று மட்டம் போட்டுவிட்டு சினிமா சான்ஸ் கேட்க யாரையாவது பார்க்கப் போயிருப்பாள் என்று நினைத்து கணினியை ஆன் செய்தாள். வந்திருக்கிற மின்னஞ்சல் எல்லாவற்றையும் பார்த்து பதில் கொடுக்க வேண்டியதிற்குப் பதில் கொடுத்தாள். அப்போது உள்ளே வந்த பூமிகா தன் இருக்கையில் அமர்ந்தாள். பூமிகாவுக்குச் சொந்த ஊர் கோயம்பத்தூர். சினிமா நடிகை அனுஷா சாயலில் இருப்பாள். சினிமாவில் நடிக்க வேண்டும் என்னும் இலட்சியம் உடையவள். அதுக்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தாள்..

”நான் இன்னைக்கு குஷியாக இருக்கேன் சங்கமித்ரா ” என்றாள்.

”என்ன விஷயம்?”

“நேற்று போட்டோகிராபர் கார்த்திக் என்னை விதவிதமாக போட்டோ எடுத்து ஆல்பம் தயாரித்திரிக்கிறார்.. சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். சீக்கிரம் சினிமாவில் நடிப்பேன் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருக்கேன்“என்றாள். அவள் சொன்ன போட்டோகிராபர் கார்த்திக் மொபைல் நம்பரும் தன் நண்பன் கார்த்திக் மொபைல் நம்பரும் ஒன்றாக இருந்ததால் இருவரும் ஒருவரே என்றுசங்கமித்ராஉறுதி செய்துகொண்டாள். அவளிடம் “ஆல் த பெஸ்ட்” என்றாள் .

பிறகு முகநூல் பக்கம் சென்றாள். பார்த்துக் கொண்டே வரும்போது அவள் ஒரு புகைப்படத்தைப் பார்த்துத் திடுக்கிட்டாள். அது பூமிகாவின் கவர்ச்சியான படம். அவள் உதடு துடித்தது : கண் கலங்கியது. இதயத் துடிப்பு அதிகரித்தது. இரவு படுக்கையில் படுத்தப்படி வெகுநேரம் சிந்தித்தாள். தனக்கும் ஒரு நாள் அந்த நிலைமை உண்டாகும் என்று பயந்தாள். நடுநிசியில் கணினியில் தன் முகநூலில் நுழைந்து அங்கிருந்த அவளுடைய எல்லாப் புகைப்படங்களையும் நீக்கினாள். வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகிய செயலிகளுக்குச் சென்று தன்னுடைய புகைப்படத்தை நீக்கி விட்டு ஒரு சின்ன பாப்பா படத்தை இடமாற்றம் செய்தாள்..

தன் கணவனிடம் சென்று, மாமா நான் தப்பு செஞ்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க என்று நடந்த விஷயங்களைக் கூறினாள்.

அவள் கணவன் பெருந்தன்மையுடன், “எனக்கு வாட்ஸ் அப் பத்தி எதுவும் தெரியாது. என் கிட்ட இருக்கிறது சாதாரண மொபைல் தான். நீ எது செய்தாலும் சரியாக இருக்கும். என் கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம். நீ செய்தது தவறு என்று உணர்ந்து விட்டால் போதும். கடவுள் உன்னை மன்னித்து விடுவார் “ என்றான்.

வர்ஷணி வண்டிக்காரனிடம் காய்கனி வாங்க வீட்டுக்கு வெளியே வந்தபோது அண்ணாந்து நோக்கும் போது ஆதவனின் கதிர்கள் திறந்திருந்த சன்னல் வழியாக சங்கமித்ராவின் வீட்டுக்குள்ளே ஊடுருவிப் பாய்ந்து கொண்டிருந்தை கவனித்தாள்..

அப்போது சங்கமித்ராவும் காய் வாங்க வீட்டுக்கு வெளியே வந்தாள்.

“சங்கமித்ரா, என்ன ஆச்சு உனக்கு? உன்னிடமிருந்து முகநூல் வரவில்லை. புதியப் புகைப்படம் வரல. எப்படி இப்படி மாறிட்டே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

நான் முகநூல், வாட்ஸ் அப்பில் புதைந்து விட்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன். அது ஒரு போதை. ஜாக்கிரதையாய் இல்லாவிட்டால் ஆபத்தில் கொண்டு விடும்….. நல்ல வேளைத் தடுமாறினாலும் சமாளித்துக் கொண்டு வெளியே வந்து விட்டேன். .

”கண் தெரியாம தடுமாறலாம் ஆனால் கண் தெரியாமலேயே இருக்கக் கூடாது. அதாவது நம் ஒழுக்க சீலங்களை விட்டுக் கொடுக்கக்கூடாது. ஆமாம், நீ ஏன் மாறிட்டேன்னு சொல்லு? என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

”சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட என்னுடைய அலுவலக தோழி பூமிகாவை போட்டோகிராபர் கார்த்திக் நிறைய போட்டோகள் எடுத்திருக்கிறார். அவற்றில் சிலதை முகநூலிலும் பதிவிட்டிருக்கிறார். என்னுடைய முகநூலில் அவளுடைய போட்டோ ஒன்றை யாரோ அனுப்பியிருந்தார்கள்.. படுகவர்ச்சியாக மறைக்கவேண்டிய இளமை எடுப்பாக தெரியும்படி எடுக்கப்பட்ட அவளின் அரை நிர்வாண புகைப்படத்தைக் கண்டு அதிர்ந்தேன். அவளும் எனக்குப் போன் செய்து தான் கார்த்திக்கிடம் ஏமாந்து விட்டதாய் சொன்னாள். அவன் என் கவர்ச்சி படங்களை இணையத்தில் போட்டு விடுவதாக சொல்லி என்னை பிளாக் மெயில் செய்கிறான் என்று புலம்பினாள். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்கிறாளாம்.. “சினிமா ஆசையினால்தான் பூமிகாவுக்கு இந்தத் துன்பம் வந்திருக்கு.”

”அவளுடைய அதீத அழகு மற்றும் சிறிதும் யோசிக்காமல் தன்னை கவர்ச்சியாய் போட்டோ எடுக்க அனுமதித்தது … போன்றவைதான் அவள் துன்பத்துக்குக் காரணம் என்று நான் சொல்வேன்…எனக்கு பயமாயிருந்தது. என்னுடைய புகைப்படம் அவனிடம் இருக்கிறது. அவன் தவறாக உபயோகிக்கூடாது என்பதால் போலீசில் அவனைப் பற்றிக் புகார் கூட கொடுத்திருக்கிறேன். ஒரு பெண் அனுமதித்தால் ஆண் அவள் அழகைப் புகழலாம், கமெண்ட் அடிக்கலாம், காதலோடு பேசலாம் என்று தவறாக நினைத்திருந்தேன். அது சரியில்ல. பெண்ணிடம் ஆண் கண்ணியமாக நடக்க வேண்டும். அதற்குப் பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும் என்று தெளீந்தேன். பொம்பளை சிரிச்சா போச்சு …… என்று அதுக்காகத் தான் சொல்லியிருங்காக போல இருக்கு. பெண்கள் தன்னுடைய கவர்ச்சியான படங்களை முகநூல் அல்லது வாட்ஸ் அப்பில் போடக் கூடாது என்பதை உணர்ந்து உஷாரானேன். முன்னால் போனவர் குழியில் விழுந்தால் பின்னால் போகிறவர் உஷாராகி விடுவதில்லையா?

நீ சொல்வது ரொம்ப சரி.

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று வள்ளுவர் சொன்னதை அனைவரும் பின்பற்ற வேண்டும். அது மட்டுமல்ல, செல்போனில் கூட யார் பார்க்கப் போகிறார்கள் என்று பெண்களின் கவர்ச்சியான படங்களை வைத்திருக்க கூடாது. செல்போன் ரிப்பேருக்குக் கொடுக்கும் போது தவறாகப் பயன் படுத்த வாய்ப்புள்ளது என்பதை மறக்கக் கூடாது. எப்படியோ உன் அறியாமை நீங்கி விட்டது. எனக்கு ரொம்ப திருப்தியாக இருக்கு” என்றாள் வர்ஷணி.

முகநூலில் நான் பதித்திருக்கும் புகைப்படங்களையும் யாராவது தவறாக உபயோகிக்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்து எல்லாவற்றையும் டெலிட் செய்து விட்டேன். மொபைல் சிம் கார்டை வெட்டி தூக்கி எறிந்து விட்டேன். வேறு சிம் கார்ட் வாங்க வேண்டும்.. இவ்வளவு நாள். என் கணவரைக் கவனிக்காமல்,.மாமியாருக்கு உதவி செய்யாமல் இரவு பதினோரு மணி வரை ஏன் சில நாட்கள் பன்னிரண்டு மணி வரை முகநூல், வாட்ஸ் அப்பில் முழுகி இருந்தேன். முகநூலை விட்ட பிறகு இப்போது எனக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. குடும்பத்தோடு செலவழிக்கிறேன். தினந்தோறும் என் வளர்ச்சிக்காகக் குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்கிறேன்” குறுநகை புரிந்தாள் சங்கமித்ரா..

”உன்னுடன் வாட்ஸ் அப்பில் சேட்டிங் செய்தவர்களுக்கு எல்லாம் உன் ஆப்சென்ஸ் ஏமாற்றத்தை கொடுக்கும் என்று சொல். அப்பா! உனக்கு வரவிருந்த ஆபத்து…தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று நீ சொல்றதைக் கேட்கிறதுக்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி சங்கமித்ராவை இறுக்கிக் கட்டித் தழுவி முத்தமிட்டாள்.

”சங்கமித்ரா” என்னும் குரல் மிகவும் மெதுவாக உள்ளிருந்து கேட்டது.

”என் மாமியார் கூப்பிடுகிறார்கள். நான் வரேன்” விரைந்து வீட்டினுள் விரைந்து சென்றாள் சங்கமித்ரா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *