கிராமத்து வா(நே)சம்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,226 
 

“”அம்மா… நான் இந்த தடவை பாட்டி வீட்டிற்கு வரல,” உறுதியான குரலில் சொன்னாள் சங்கீதா.
“”ஏன்… ஏதாவது நொண்டி சாக்கு வச்சிருக்கியா? எந்த காரணமா இருந்தாலும் சரி… நாம எல்லாரும், நாளைக்கு காலைல பாட்டி ஊருக்கு கிளம்புறோம்,” விவாதத்தை தொடராமல், முற்றுப்புள்ளி வைத்தாள், சங்கீதாவின் தாய் சிவகாமி.
சங்கீதாவின் பாட்டி, விழுப்புரம் அருகிலுள்ள கீரமனூரில் வசிக்கிறார்.
கிராமத்து வா(நே)சம்!ஒவ்வொரு ஆண்டும், மாரியம்மன் திருவிழாவிற்கு செல்வதை, திருமணமான, 20 வருடங்களாக வழக்கமாக கொண்டிருந்தாள் சிவகாமி. இப்பயணம், தன் உறவினர்களை சந்திப்பதற்கான வாய்ப்பாக மட்டுமல்லாது, நெரிசல் மிகுந்த சென்னை நகரத்து வாழ்க்கை சூழலிலிருந்து, சிறிது நாட்கள் விலகியிருக்கவும் பயன்பட்டது.
சிவகாமி கிராமத்து சூழலில் வளர்ந்தவள் என்பதால், அவள் எப்போதும் கிராமத்தில் இருப்பதையே விரும்பினாள். ஆனால், தன் கணவன் பொறியியல் துறையில் பணியாற்றுவதால், அவர்கள் நகரத்திலேயே இருக்க வேண்டியதாயிற்று.
தன் இறுதி காலத்தில், கிராமத்தில் தங்க வேண்டும் என்ற தன் ஆசையை, தன் கணவனிடம் எப்போதும் வலியுறுத்திக் கொண்டேயிருப்பாள். இதில், அவளது கணவனுக்கும் விருப்பம் இருந்தது.
சங்கீதா, தன் தாய்க்கு நேர்மாறாக இருந்தாள். சிறுவயது முதல் நகரத்திலேயே வளர்ந்ததால், அவளுக்கு கிராமத்து வாழ்க்கை சுத்தமாக பிடிப்பதில்லை. ஒவ்வொரு முறை திருவிழாவிற்கு செல்லும் போதும், ஏதாவது காரணம் சொல்லி தவிர்க்கவே பார்ப்பாள். ஆனால், இறுதியில் வெல்வதென்னவோ அவளது தாய்தான்.
கிராமத்தில் தங்கியிருக்கும் ஒரு வார காலமும், சங்கீதாவிற்கு திருவிழாவின் மீது நாட்டம் இல்லாமல், தன் கல்லூரி நண்பர்களுடன் போனில் அரட்டை, இன்டர்நெட், பிரவுசிங், ஷாப்பிங் போன்ற நகரத்து பொழுதுபோக்குகளே நினைவில் வந்து செல்லும்.
கிராமத்தில் அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், தன் சம வயதை ஒத்த தன் மாமன் மகள் கலா தான். கலா, விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறாள். நிறைய விஷயங்களை பற்றி கலாவும், சங்கீதாவும் பேசுவர். அவர்களது பேச்சில், பொதுவாக கிராம மற்றும் நகர வாழ்க்கையின் தாக்கம் அதிகமிருக்கும்.
சங்கீதாவும், அவளது பெற்றோரும் சென்னையிலிருந்து, விரைவுப் பேருந்தில் விழுப்புரம் வந்திறங்கி, தன் பாட்டியின் ஊருக்கு, மினி பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
சங்கீதா பயண களைப்பால் உறங்கி கொண்டிருந்தாள். பஸ், பாட்டியின் ஊரை நெருங்கித் கொண்டிருந்தது. திருவிழாவிற்கான சான்றாய், ஒலிப்பெருக்கி ஓசையின் டெசிபல், அதிகரித்துக் கொண்டே இருந்தது.
ஒரு திருப்பத்தில் ஓட்டுனரின் திடீர் பிரேக்கால், குலுக்கலுடன் நின்ற பஸ், உறக்கத்தில் இருந்த சங்கீதாவை எழுப்பியது.
கண நேரத்தில், பஸ்சை நோக்கி ஆக்ரோஷமாக ஓடி வரும், ஒரு கூட்டத்தை கண்டு திடுக்கிட்டாள் சங்கீதா. அந்த கும்பல், ஓட்டுனரை கீழே இறங்க சொல்லி வற்புறுத்தவே, கீழே இறங்கிய ஓட்டுனருடன், காரசாரமாய் விவாதித்துக் கொண்டிருந்தது.
“”அப்பா… என்ன ஆச்சு?” சங்கீதாவின் குரலை கேட்டு திரும்பினார் சுந்தரம்.
“”அனேகமா, பஸ் யார் மேலேயோ மோதிடிச்சின்னு நினைக்கிறேன்…” சந்தேகமே பதிலாய் வந்தது.
அதற்குள், விவாதம் கைகலப்பாய் மாறியிருந்தது. சிலர், நடத்துனரை தாக்க முற்படுவதை கண்டு, அதிர்ந்தவாறே சங்கீதாவும், சுந்தரமும் பஸ்சிலிருந்து இறங்கினர்.
பிரச்னையின் காரணத்தை கண்டறிய, நாலாபுறமும் தீவிரமாய் கவனித்துக் கொண்டிருந்த சங்கீதா, தன் பின்னங்கால்களை தூக்கி வைத்து அலறிக்கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை கண்டு அமைதியானாள்.
ஒலிப்பெருக்கியின் சப்தத்தில், விவாதங்கள் ஏதும் சரியாகக் கேட்கவில்லை. இறுதியாக, ஓட்டுனரிடம் பணத்தை பெற்று, அக்கூட்டம் கலைந்து சென்றது.
சங்கீதாவின் பாட்டி வீடு, அருகிலேயே இருந்ததால், மேற்கொண்டு பயணத்தை தொடராமல், அங்கிருந்து நடக்கலாயினர்.
Œங்கீதா பேசத் துவக்கினாள்…
“”ஏம்பா… இந்த கிராமத்து ஆளுங்க, இப்படி காட்டுமிராண்டியா இருக்காங்க… கண்டிப்பா தவறு, அந்த ஆட்டுக்குட்டியோடதா தான் இருக்கும். ஆனாலும், அந்த டிரைவர் அடி வாங்கினது மட்டுமில்லாம, பணத்தை வேற கொடுக்க வேண்டியதாயிடுச்சி…”
“”இல்லம்மா… அந்த ஆட்டை வச்சித்தான், அவங்களோட வாழ்வாதாரம் இருக்கு… அதனால் தான், இப்படி உணர்ச்சிவசப்பட்டு சண்டை போடறாங்க.”
“”என்ன இருந்தாலும், அவங்க அணுகுமுறை ரொம்ப தப்பு பா…”
அதற்குள் பாட்டி வீடு வந்துவிடவே, இருவரும் அமைதியாயினர்.
பரஸ்பரம் நலம் விசாரிப்புகள் முடிந்த பின், “”சங்கீதா வர வழியில பார்த்தியா, மேலக்காட்டு கம்மாயி நெரம்பிருச்சி. பார்க்கறதுக்கு உங்க மெரினா பீச் மாதிரியே இருக்கு,” கிராமத்து பெருமை பேச துவங்கினாள் கலா.
“”இல்ல கலா… நான் தூங்கிட்டேன். அதவிட, இன்ட்ரஸ்டிங்கா ஒண்ணு பார்த்தேன்… நான் அப்புறம் சொல்றேன்.”
“”சரி… போய் ரெடி ஆயிட்டு வா… நாம கோவிலுக்கு போவோம்,” ஆயத்தமானாள் கலா.
சங்கீதா கோவிலுக்கு செல்ல, வீட்டிற்கு வெளியே வந்தாள், அப்போது பக்கத்து வீட்டு சுப்பிரமணி அண்ணன், அவளை கடந்து செல்வதை பார்த்து சிரித்தாள். ஆனால், சுப்பிரமணி அண்ணன், அவளை கண்டும் காணாததை போல், பதில் ஏதும் பேசாமல் கடந்து சென்று விட்டார்.
சங்கீதாவிற்கு ஒரே குழப்பமாய் இருந்தது. ஏனெனில், சுப்பிரமணி அண்ணன் எப்போதும் கலகலப்பாய் பேசக்கூடியவர். அதுவும், சங்கீதா என்றால் அவருக்கு கொள்ளை பிரியம், “எப்போதும் அன்பாய் நடந்து கொள்ளும் அவர், இன்று ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்…’ என்ற யோசனையுடன் நின்று கொண்டிருக்க, அங்கு வந்தாள் கலா .
“”கலா… இந்த சுப்பிரமணி அண்ணனுக்கு என்னாச்சு… என்னை பார்த்தும், பேசாமலேயே போயிட்டார்,” ஆர்வம் தாங்காமல் கேட்டாள் சங்கீதா.
“”அந்தாள பத்தி மட்டும் எங்கிட்ட பேசாத…” கோபமானாள் கலா.
“”போன வாரம் எங்கப்பாவுக்கும், அந்த ஆளுக்கும் வயக்காட்டு வரப்பு பிரச்னையில சண்டை வந்திடுச்சி… அந்த ஆளு அருவாளால வெட்ட வந்துட்டான். நல்ல காலம், அப்பா சின்ன காயத்தோட தப்பிச்சிட்டாரு…” ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் கலா.
“நாகரிகம் தெரியாத காட்டுமிராண்டிகள்…’ தனக்குள் முணுமுணுத்தாள் சங்கீதா.
“”இன்னமும் யாருக்கும் பக்குவமே வரல. நட்போட இருக்கிறதே, இங்க இருக்கிற மக்களுக்கு தெரியல,” தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை, சரியாக பயன்படுத்திக் கொண்டாள் சங்கீதா.
“”சிட்டியில வந்து பாரு… இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம், அறுவாள தூக்கிட்டு சண்ட போட மாட்டாங்க.
தே ஆர் ரிபைன்டு அண்ட் பொலைட்!”
பதில் சொல்ல முடியாமல், அமைதியானாள் கலா.
திருவிழா முடிந்து, ஊருக்கு கிளம்ப ஆயத்தமாயினர் சங்கீதாவும், அவளது பெற்றோரும். எப்படியாவது இறுதி காலத்தில், கிராமத்தில் வந்து தங்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என, உறுதியுடன் இருந்தாள் சங்கீதா. மேலும், ஊருக்கு செல்லும் இந்த பயண நேரத்தை, அதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்திருந்தாள்.
“”அம்மா… அப்பாவோட ரிடையர்மென்ட்டுக்கு அப்புறம், நீங்க கிராமத்துல தங்கும் ஐடியா எனக்கு சுத்தமா பிடிக்கல,” என்று பேச்சை துவங்கினாள் சங்கீதா.
“”அதுக்கு இன்னமும் இரண்டு வருஷம் இருக்கு… இப்ப என்ன?”
“”இல்லம்மா… நிலம் வாங்க அட்வான்ஸ் கொடுத்திட்டதா கலா சொன்னா… அதான், நான் இப்பவே, இந்த திட்டத்தை நிறுத்தணும்ன்னு சொல்றேன்.”
“”ஏன் கிராமத்துல இருக்கிறது, உனக்கு பிடிக்கலையா?” அப்பாவின் விசாரணை துவங்கியது.
“”அங்க இருக்கிறவங்கெல்லாம், இருபது வருஷத்துக்கு முன்னாடி இருக்காங்க. கரடு முரடா இருக்காங்க. எப்பவும், சண்டையும், சச்சரவுமா இருக்காங்க,” என காரணங்களை அடுக்கிக்கொண்டே போனாள் சங்கீதா.
“”சரிம்மா… நான் யோசிக்கிறேன்,” முற்றுப்புள்ளி வைத்தார் சுந்தரம்.
திருவிழா முடிந்து ஒரு வாரம் கழிந்திருந்தது. அதிகாலை, 4.00 மணிக்கு தன் மொபைல் போன் அலருவதை கேட்டு எழுந்தாள் சங்கீதா. அழைப்பு கலாவிடமிருந்து இருப்பதை கண்டு குழப்பத்துடனும், பதற்றத்துடனும் ஏற்க, மறுமுனையில் அழுதுகொண்டே பேசத் துவங்கினாள் கலா.
“”ராத்திரி அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்திடுச்சி…” சொல்லும் போதே அழுகையும் அதிகமானது.
“”அங்க இருக்கிற டாக்டர், உடனடியா சென்னைக்கு கொண்டு போக சொல்லிட்டார். இப்ப ராமச்சந்திரா மருத்துவமனைல, “அட்மிட்’ செஞ்சிருக்கோம்,” தழுதழுத்த குரலில் முடித்தாள் கலா.
“”அழாதே கலா… நாங்க உடனே கிளம்பி வர்றோம். நீ பயப்படாம இரு. மாமாவுக்கு எதுவும் ஆகாது.”
சுமார் 6.00 மணி அளவில் சங்கீதாவும், அவளது பெற்றோரும் மருத்துவமனையை அடைந்தனர். மருத்துவமனை வளாகம் வழக்கத்திற்கு மாறாக இருந்தது.
ஆம்புலன்ஸ் நிற்க வேண்டிய இடத்தில், இரண்டு டிராக்டர்கள் நின்றிருந்தன. வளாகம் முழுவதும் நிரம்பியிருந்த, கிராமத்து வாசனை வழக்கத்திற்கு மாறாக இருந்தது.
தன் மாமா அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையை அறிய, மருந்தக வரவேற்பு கூடத்தை நெருங்கிக் கொண்டிருந்த சங்கீதா, தன்னை யாரோ அழைப்பதைக் கேட்டு திரும்பினாள்.
“”சங்கீதாம்மா… உங்க மாமா ரெண்டாவது மாடியில, 42வது ரூம்ல இருக்காரு… இப்ப ஒண்ணும் பயப்படறதுக்கு இல்ல. நீங்க தைரியமா இருங்க. உங்க மாமாவுக்கு எதுவும் ஆகாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு…” படபடப்பாய் சொல்லி முடித்தார் சுப்பிரமணி அண்ணன்.
இரவு தூங்காததால், முகத்தில் இருந்த களைப்பை குரலில் காட்டாமல், பேசிக்கொண்டிருந்த சுப்பிரமணி அண்ணனை, கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா.
ஏதோ யோசனையுடன் படியேறிக் கொண்டிருந்த சங்கீதா, எல்லாம் உணர்ந்தவளாய், “”அப்பா…சாரிப்பா…” என்று சொல்ல, அனைத்தும் புரிந்தவராய், புன்முறுவலை மட்டுமே பதிலாக்கி நடந்து கொண்டிருந்தார் சுந்தரம்.

– கே. சக்தி நாகராஜன் (ஜூன் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *