காலடி மண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 6,906 
 

இதோ திரும்பி வந்து கொண்டிருக்கிறான் சென்ற பாதையின் தடம் மாறாமலும் வந்து கொண்டிருக்கிற பாதையின் வரைகோடுகள் பிடித்தும் மண்ணின் மணம் நுகர்ந்தவாறுமாய்/

கெட்டிப்பட்டமண்அல்ல,தூசியாகவே இருந்தாலும் காற்றில் பறந்து கலந்து திரிந்த போதிலும் பயணிக்கிற வேகத்தில் தன் மணம் மாறாமல் அப்படியே வந்து செல்கிறதாய்/

காடுதோட்டம்வீட்டுமனைஎதிலுமாய்பறந்துபாவியிருக்கிறமண்ணின்மணத்தைஅன்றாடங்களின்நகர்வில்நுகரக்கொடுத்துவைத்தவனாயும்நுகர்ந்து கொண்டு செல்கிறவனாயும்.

இடது பக்கமாகவே செல்,வலதுபக்கமாகவேதிரும்பிவா,,,,,,,,,அட்டன்ஸனில் நில்,ஸ்டாண்டர்டீஸ் காட்டு,அபர்டெர்ன் அடித்துதிரும்பிசல்யூட் சொல்லிச் செல் என்கிற குரலி வித்தைக்குள்ளெல்லாம் அடைபட்டுக் கொள்ளாமல் நெளிவு சுளிவாய் தப்பித்தாவி பறந்த இப்படியாய் வெளியே வந்து பயணித்துக் கொண்டிருக்கிறான்.

ஒன்றல்ல இரண்டல்ல, நான்கல்ல, ஐந்தல்ல, எத்தனையாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் அல்லது எத்தனையாவது முறையாக வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.

கடைகடையை ஒட்டிய வீடு, வீட்டிற்குள்ளிருந்த குடும்பம் என நான்கு பேர் இருந்தார்கள். அதற்கு மேல் இருக்க வாய்ப்பில்லை.

நான்கு பேரைத்தான் அடையாளம் காட்டிச்சொல்கிறது கடை.

கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் ஆணொண்றும் பெண்ணொண்றுமாக/ ஆண் பிள்ளை ஐந்தாவது படிக்கிறான், பெண்பிள்ளை ஏழாவது படிக்கிறாள். பெண்பிள்ளை மூப்பு என்பதில் கடைக்காரருக்கு எப்போதுமே ஒரு பெருமை இருந்ததுண்டு. இவன் அங்கு போய் டீ சாப்பிடப்போகிற பொழுதுகளிலெல்லாம் இவனிடம் சொல்லி பெருமை பட்டுக் கொள்வார். எனக்கிருந்தாலும் பொம்பளப் புள்ளைங்க தாய் தகப்பன நெனைக்கும். அதுக எங்கதான் போனாலும் அதுக்கு எத்தன வயசு ஆனாலும் அதுக நெஞ்சுக்கூட்டுக்குள்ள தாய் தகப்பன் நெனைப்பு ஈரம் கட்டிகுடியிருக்கும், ஆனா ஆம்பளப்பசங்க அப்பிடியில்ல சார், அத்து விட்டுட்டுப் போயிருவாங்க என்பார்.

இளமஞ்சளும் கரும் பச்சையுமாய் இலைகள் காட்டி நிற்கிற புளியமரத்திற்கு வயது ஐம்பதிற்கும் குறையாமல் இருக்கும் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம் என கடைக்கார் சொல்வார். அண்ணாந்து பார்கையில் தெரிகிற மரத்தின் ஊடுபாவானா சூரிய வெளிச்சம் இலைகள் மீது கிளைகள் மீதுமாய் பட்டு ஜொலிக்கிற அழகைப் பார்க்கிற சொந்தக்காரராய் அவ்வழியில் செல்கிற எல்லோருமாய்த்தான் தெரிகிறார்கள்.

“சுத்தி நின்னு நாலு ஆளு கட்டிப்புடிச்சாலும் இதப்புடிக்க முடியாது சார், அவ்வளவு அகலம்” என்பார். அந்த மரத்தோட பட்ட கனத்த வச்சே மரத்தோட வயச நீங்க கணிச்சிறலாம், இது வரைக்கும் இரு தன்னோட வாழ்நாள்ல எவ்வளவு புளிய குடுத்துருகும்ங்குறீங்க /சீசன்ல இது காய்க்கிற பழங்கள உழுப்ப நாலு ஆளா வது வேணும் சார், கொறஞ்சது,

மத்தமரம் மாதிரி இதுல கொஞ்சம் ஒயரத்துல ஏறி நின்னுக்கிட்டு மரத்த உலுப்புனா பழங்கவிழுகாது,மேல வரைக்கும் ஏறணும், போகணும் போயி ஊச்சாணியில நின்னுக்கிட்டு உலுப்புனாத்தான் பழங்கள பாக்க முடியும், ரோட்டுல போற வார எத்தன பேரு மண்டைய பதம்பாத்துருக்குங்குறீங்க, சீசன்ல,அப்பிடியே நெறமாத கர்ப்பிணி போல வுள்ள இருக்கும் பாக்குறதுக்கு. கண்ணுக்கு லட்சணமாயும் அடர்ந்து போயும்/

நான் சின்னப்புள்ளயா இருக்கும் போது எங்கப்பா ஏறி பழம் எறக்கிப்போடுவாரு, இப்பம் மரம் ஏறுறவுங்க அரிதா போனாங்க/ ஏணி வச்சி ஏறிப்போயி தான் உளுப்புறாங்க” என்பார் லேசான பெரு மூச்சு கலந்து/

நெடித்து உயர்ந்து தன் ஆகுருதி காட்டி நிற்கிற புளியமரத்தின் மஞ்சள் பச்சை இலைகள் கடைக்கு வெளியே கைகழுவுவதற்காய் வைக்கப் பட்ட தண்ணீர்வாளியில் மிதந்து காட்சிப்படுவதாய் இருக்கும். நிறை தண்ணீரானாலும் குறை தண்ணீரானாலும் தன் நிறம் காட்டியும்,பருவம் காட்டியும் மரத் தின் கதையை சொல்லி சென்று விடும்.

”மனுசன் சாகுற மாதிரிதான் சார், மரம் சாகுறதும் அத நாம வெட்றதும் என்பார் கடைக்காரர். ரோட்டோரக் கடைகளுக்கென இருக்கிற அடையாளங்கள் அவரது கடையில் எப்பொழுதும் பூத்துக்காய்த்து தெரிவுபடுகிற காலங்களாய் என்றும் இருந்தது உண்டு/

அந்தப்பூப்பு இனி இருக்குமா எனத் தெரியவில்லை எனவுமாய், கூடிய விரைவில் காணக்கிடைக்காமல் போகப் போகிற இந்தகடையின் அடையாளமிடல், இனி கேள்விக்குறியே என்கிறார் கடைக்காரர்/

சாலையை அகலப்படுத்த குறிக்கும் போது தன் கரம் விரித்துநிற்கிற புளிய மரமும் அதன் நிழலில் தன் அடையாளம் கொண்டு மனிதவாடையுனும், வாஞ்சையுடனுமாய் காட்சிப்பட்டுத் தெரிகிற கடையையும் குறித்துக் கொண்டு போயிருக்கிறார்கள். கூடிய விரைவில் அகற்றப்பட வாய்ப்பிருக்கிறது என்றார் கடைக்காரர்.

இட்லி, பூரி, மொச்சை வடை எப்பொழுதாவது பொங்கல்எனகாட்சிப்படுகிறது கடை இவன் போகிற தினங்களில்/

கை நிறைய காசு இருந்த போதும் புதுபஸ்டாண்ட் அல்லது சூலக்கரை போகிற தினங்களில் அங்கு அடையாளமாய் காட்சிப்பட்டு நிற்கிற ஹோட்டல் பக்கம் இவன் போனதில்லை. அது போலான கடைகள் இவன் மனதிற்கு எப்பொழுதுமே அந்நியமானதாக அல்லது அங்கு போக பிடிக்காதவனாக/

இது போலான ரோட்டோரக்க்கடைகளுக்கு வருவது விலைக்குறைவு என்பதற்காக மட்டுமல்ல, பெரியகடைகள் எல்லாம் ஒரு ஆடம்பரமும், வீண் செலவும், டாம்பீகமும் என்கிற எண்னமும், மனத்தாக்கமும் இவனுள்ளாக எப்பொழுதுமே இருந்ததுண்டு.

ஒரு தடவை யூனியன் மாநாட்டு தினத்தன்றுகாலையாய் அந்தக் கடையில் டிபன் சாப்பிட வேண்டும் என காளியப்பண்ணன் சொன்ன போது இவன் அவர்களையும் அவருடன் வந்தவர்களையுமாய் கடையின் உள்வரை சென்று விட்டு விட்டு அங்கிருந்த சப்ளையரிடம் அவரை நன்றாக கவனிக்குமாறு கேட்டுக் கொண்டும் வந்தான்.

சப்ளையர் இவனுக்கு தெரிந்தவர். கீழக்குடிக்காரர், நல்ல மனிதர், எப்பொழுது பார்த்தாலும் அன்புடனும் வாஞ்சை பொங்கவுமாய் பேசுவார்.

ஒரு நாள் இவனது நண்பன் அங்கு சாப்பிட்டு விட்டு பில் கொடுக்க நிற்கிற போது பில் மாறி நண்பனின் கைக்கு போய்விட பதறிப்போனான் நண்பன். என்ன நானும் எனது மனைவியும் குழந்தையும் வந்து உங்களது கடையில் அமர்ந்தற்கு அபராதமா எனக் கேட்டிருக்கிறான். இல்லை இவ்வளவு தான் என சாதித்து இருக்கிறார் நண்பனின் டேபிளுக்கு சப்பளை பண்ணிய சர்வர்.

இதைபார்த்துக்கொண்டிருந்த கல்லாவில்இருந்தவர்லாஜிக்காய் பார்த்தால் கணவன்மனைவி ஒரு குழந்தை இவ்வளவு சாப்பிட வாய்ப்பில்லை என்று அறிந்திருக்கிறார்.நண்பனின்கையில் இருப்பது வேறு பில்தான், நன்றாகத் தெரியும்தான்,ஆனால்கொடுபடாமல்போய் விட்டவேறு பில்லை யாரிடம் போய்வாங்கமுடியும்?ஆகவேமுடிந்தமட்டுமாய்பார்ப்போம்,,,எனகல்லாவில் இருப்பவரும்முடிவுசெய்துவிட பாவம் நண்பன் நனைந்த கோழியாய் ஆகிப் போனான்.இது தவிர்த்து கடையில் சாப்பிட வந்தவர்கள்,சாப்பிட்டு முடித்து விட்டுப்போனவர்கள் பார்த்தபார்வை ஈட்டியாய் துளைத்தது உடம்பில்/

ஆயிரம்துளைகள்விழுந்தஉடம்பின்வழியாய் ஊராரின் ஏளன பேச்சுக்களும், குத்தல்ப் பார்வைகளுமாய் ஊடுருவிச்சென்று வந்தவையாய்/

அவனிடம் பில்லில் குறிப்பிட்டிருந்த தொகையைக்கொடுக்க காசு இல்லை, 850 ரூபாய்க்குஎங்குபோவான் அவன். வீடு பக்கத்தில் இருந்தாலும் போய் எடுத்துக்கொண்டுவந்துகொடுத்துவிடலாம்.இனிகிராமத்திற்குப்போய் ரூபாய் எடுத்துக் கொண்டுவருவதென்பதுசாத்தியமில்லை.

அவசரத்திற்கு உதவுவதற்கு ரெடியாய் கைக்காசு வைத்திருக்கிற அளவுக்கு தெரிந்தநண்பர்கள்,உறவுகள் தோழமை என யாரும் இல்லை இங்கு அருகா மையாக/

நண்பனின் பழக்கமெல்லாம் அவனைப் போல உள்ள எளியவர்களிடம் மட்டுமே தான் இருந்திருக்கிறது, நண்பனும் போன் பண்ணி நிலைமையை விளிக்கிச் சொன்னதும் கூடி விட்டார்கள் அவனது தோழமைகள் பத்துப்பேர் வரை. கூடவே இவனும்/

பிறகென்ன கல்லாவில் இருப்பவர் நிலைமையை அவதானித்து நண்பரின் டேபிளு க்கு சப்ளை செய்தவரை கூப்பிட அவருக்குப் பதிலாய் கீழ்க்குடிக்கார சப்ளையர் தான் வந்திருக்கிறார் கல்லாவுக்கு. நிலைமையை எடுத்துச் சொல்லி விளக்கி நண்பனை அனுப்பி வைத்திருக்கிறார். கூடவே நடந்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார். உடன் வேலைபார்ப்பவர் செய்த தவறுக்காய் மன்னிப்புகேட்கிற பெரிய மனது இவனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட, நண்பனையும், நண்பனுக்காய் வந்து நின்றவர்களையும் பார்த்துவிட்டு கிளம்பியிருக்கிறான்.

பின் வந்த மறு நாளின் மறுநாட்களின் இவனை அந்த சப்ளையர் பார்க்க நேர்கிற நேரங்களிலும், இவன் அந்த சப்ளையரை பார்க்க நேர்கிறபொழுதுகளிலு மாய் ஒருவருக்கொருவர் அன்புடனும் வாஞ்சை மிகவுமாய் பேசிக் கொண்டிருப்பது வழக்கமாகிப்போகிறது,

இது நடந்த மறுநாள் அந்தக் கடையில்தான் சாப்பிட்டான்.கடைக்காரர் கூட கேட்டார்.”என்ன சார், நேத்து அந்தக்கடைக்குள்ள போனீங்க,இப்ப நீங்க மட் டும் இங்க வந்துட்டீங்களே” என இவன் கேட்ட பொங்கலை கொண்டு வந்து வைத்தார்,கடைக்காரர்/

“என்னசெய்யண்ணே,இதுமாதிரிதொடர்ச்சியாநாம்அங்கபோயிசாப்புட்டனுன் னாநம்ம சொத்துல ஒரு பகுதிய வித்துக்கொண்டு போகணும் போல இருக்கு எனநேற்றுநடந்தசம்பவத்தைச்சொன்னான்,அதற்கு கடைக்காரர் ”இது புதுசு ல்லசார்,இந்தவாரத்துல மட்டும் ஒங்களோட சேர்த்து இது மாதிரி சொல்லுறது மூணாவது ஆளுஎன்றார்,

ரொம்பபெரிய யெடங்கள்ல போகப்போக இப்பிடித்தான் இருக்கும் போல,,,,, என முற்றுப்புள்ளி வைத்தவர் பொங்கலை அள்ளிச்சாப்பிடும் போது சொன்னார்.

”நம் மகட பொங்கல் இப்பிடித்தாண்ணே, கொஞ்சம் பொலுபொலுன்னு இருக்கும், அதுக்காக வெதவெதையா இருக்காது. கொழஞ்சு போயி இருந்துச்சுன்னா அளவு கம்மியா தெரியும், அதுக்காகத்தான் இப்பிடி” என்பவர் ஆனாருசிக்கு பஞ்சமிருக்காது என்பார்.

அவர் சொன்ன படியேதான் இருக்கும் இட்லியும்,பூரியும்,பொங்கலும்/

காலையில் 11 மணி வாக்கில் சென்றால் பூரி கொஞ்சம் காய்ந்திருக்கும். இட்லி இருக்காது. இரண்டு பூரிகளை வைத்து சாம்பாரை ஊற்றி கொஞ்ச நேரம் ஊற வைத்து சாப்பிடுங்கள் என்பார். அவர் சொன்னது போலவே அந்த டேஸ்ட் கிடைக்கும்.

புது பஸ்டாண்டை நெருங்கி வருகிற போதே தென்படுகிற அவரது கடையின் கூரை முகப்பும் புளிய மரத்தின் ஆகுருதியும் கண்படுபவையாக/

மூன்று மரப்பெஞ்சுகளும், பத்து பண்ணி ரெண்டு பிளாஸ்டிக்ச் சேர்களும் கூடவே கட்டம் போட்ட கைலியுடன் டீக்கடைக்காரரும், அடர்க்கலர் புடவை யுடன் அவரது மனைவியும் அந்த டீக்கடையின் நிரந்தரச் சொத்தாய் ஆகித் தெரிகிறார்கள். இவன் அந்தப் பக்கம் போகும்போல்லாம் தவறாமல் கேட்டு விடுகிறார்கள் கணவனும் மனைவியும்.”என்ன சார் ஒங்க யூனியன் ஆபீஸீக்கா போறீங்க என/

ஒரு குளிர்கால இரவின் மென் பொழுதொன்றின் இரவு பண்ணிரெண்டு மணிக்கு மேலாயும் தூக்கம் வராத பொழுதாயும் மூட மறுத்த இமைகளும், இமைக்க மறந்த மனதிற்கும் ஊடாய் நாளைய தினம் கூட்டம் என்பது நினைவுக்கு வந்து போகிறது. வந்து போன தின்ம நினைவுகளில் அது பல் பட்டு சுமந்தும் அது அற்றுமாய்/

இருக்கட்டும், இருக்கட்டும் இருந்து விட்டுத்தான் போகட்டுமே அப்படியே என்ன தான் கெட்டு விடப்போகிறது இப்போது? நாளையதினம் விடுமுறை தானே? என்ன நடக்கவிருக்கிற கூட்டத்தில் போய் தூங்கி விடக்கூடாது. என்கிற சொல் தவிர்த்து தினசரியாய் இப்படியாய் நடு இரவில் தூக்கம் கெட்டுப் போவது ஒரு பெரும் பிரச்சனையாகவே இவனுள்ளாய் இன்று வரை உருவெடுத்து நிற்பதாயும் பெரும் இடைஞ்சல் காட்டி பயணிப்பதாயும்/

”சுந்தரி கண்ணால் ஒரு சேதியில் நாயகியின் மென் ஏக்கப்பார்வையுடனான ஏறிடலுனான காத்திருப்பும்,புனித்த புருவமுமான இசை கலந்த பரவசம் மனதை தாலாட்டுகிறது. ஒரு படப்பாடலாய் ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள் ஏதோ ஒரு இசைச்சேனலில்/

தூக்கம் வர மறுக்கிற இப்படியான இரவுகளில் இது போலான பாடல்களும், புத்தகங்களும் சமயத்தில் இணையமும் கைகொடுப்பது மிகப்பெரும் வரப் பிரசாதமாகவே/

அணிந்திருந்த வெள்ளைக்கலர் பேண்ட்டும், அடர்க் கலர் சட்டையுமே இவனது கனவில் வந்து போனதாய் இருந்தது. அது போலவே இவன் அறியாமல் எப்பொழுது எனத்தெரியாமல் இரவு 12 மணிக்கு மேலாய் வந்து போகிற தூக்கத்தை தூங்கி முடித்து விட்டு துடைத்தெழுந்து தூங்கி எழுந்தபோது இவனும்,மனைவி பிள்ளைகளுமாய் தூக்கம் குடி கொண்ட வீட்டிலும் இன்னும் இருள் கலையாத அதிகாலை முன் பொழுதிலுமாய் இன்னும் இன்னுமான நினைவுகளையும் நனவுகளையும்நெசவிட்ட ஞாபகத்துளிகள் சுமந்து சோம்பல் முறித்து எழுந்தவனாய் முகம் கழுவி விட்டு மணி பார்த்தபொழுது மணி 4.45 என மணி முன்னறிவித்துச் சென்றது கடிகாரம்.

சின்ன முள்ளையும்,பெரிய முள்ளையுமாய் தன் வட்ட வடிவத்திற்குள்ளாய் உள்ளடக்கி வைத்துக்கொண்டு அவை இரண்டின் துணைக்கு விநாடி முள்ளை ஓயாமல் ஓடி நேரமறிவிக்க உதவி புரியச்சொல்லி சென்ற நேரத்தில் டீக் கடைகள் இவன் குடிகொண்டிருக்கிற ஏரியாவில் எங்கும் திறந்திருக் காதுதான்.

அதெல்லாம்தெரியாது எனக்கு உடனே வேண்டும் எனக்கொரு டீ என மனம் கூவிச்சொன்ன சொல்லின் நுனி பிடித்துப்போவதென்றால் ரயில்வே கேட்டின் அருகிலிருக்கிற கடைக்குத்தான் போக வேண்டும்./

இந்நேரம் போனால் டீயுடன் மென் நடமாட்ட காலைப் பொழுதையும்,கூடு கலையும்அதிகாலைப்பறவைகளின் கிறீச்சிடல்களையும்கேட்கலாம்.

கையில்சூடானஒருடீயுடன்,பறவைகளின் கிறீச்சிடல்களையும்,மனிதர்களின் மென் நடமாட்டத்தையும் பார்க்கும் போது மனது குளிர்ந்துதான் போகிறது.

இதோ திரும்பி வந்து கொண்டிருக்கிறான் சென்றபாதையின் தடம்மாறாமலும் வந்துகொண்டிருக்கிற பாதையின் வரைகோடுகள் பிடித்தும் மண்ணின் மணம் நுகர்ந்தவாறுமாய்/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *