கலர் கனவுகள்

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 4,662 
 

மாலை வெய்யில் மலைகளின் பின்னே மறையும் நேரம்.

கம்பி வேலியில் கால் வைத்தபடி அந்த அஸ்தமனத்தை வெகுநேரம் வெறிக்கத்
தோன்றியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைதொடர்கள். காலையில் பசுமை
போர்த்தி இருந்தவை, இப்போது கரும்பொன் நிறத்தில் மின்னுகின்றன. மாலை
நேரங்களில் பல முறை இந்த இடத்திற்கு வந்து நின்றிருக்கிறேன். அது ஏனோ
தனிமையில் கிடைக்கும் ஏகாந்தம் ஒரு சுற்றுலாவிலோ, அல்லது வேறெதிலோ
கிடைப்பதில்லை. கடைக்காரன் கடையை மூடுவதற்குமுன் கணக்கு பார்ப்பதுபோல,
மாலை நேரங்களில் இங்கு வந்தால் செய்த செயல்களை நினைத்து பார்க்கத்தோன்றும்.
கம்பி வேலிக்கும் எதிரே இருக்கும் மலைத்தொடருக்கும் இடையே உள்ள இடைவெளி
ஏனோ ஒருவித தனிமையை மனதிற்குள் கொண்டு வரும். இந்த இடம் பல
சமயங்களில் பல சிந்தனைகளை தோற்றுவிக்கும். வெற்று இடைவெளிக்கும் எனக்கும்
ஏதோ வார்த்தை பரிமாற்றம் நடப்பதாய் மனது உணரும். நாம் சொல்வது அத்தனையும்
முழுமையாய் பொறுமையுடன் கேட்கும் ஒரு நண்பனாய் மனது உணரும். இன்னும்
பலப்பல. சில நேரங்களில் “இன்று என்ன பெரிதாகச் சாதித்தாய் ?” என்று கேட்கும்.
இவை, சோர்வுற்று ஆறுதல் தேடும் மனதின் குழப்பங்களா, இல்லை வித்தியாசம் தேடி
அலையும் மனது விரும்பிச் செல்லும் இடமா ? .. தெரியாது. ஆனால் தெரிந்து சில
சமயங்களிலும், அறியாமல் சில சமயங்களிலும் கால்கள் என்னை இங்கே கொண்டு
வந்துவிடும்.

ஒன்றல்ல இரண்டல்ல, பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. காலத்தின் மாற்றத்தை என்
தளர்ச்சி சொன்னாலும், மனது மட்டும் மாராத ஏக்கத்தோடே இன்றும் அலைகிறது.
ஸ்குவாஷ் கோர்ட்டிற்குள் அடிக்கப் பட்ட பந்தாய் எல்லா திசைகளிலும் சென்று
திரும்பி வரும். காரணம் மட்டும் விளங்காத ஒன்று.

“என்ன சீனா, ரிஸல்ட் என்ன ஆச்சு ? ” .. பாலா கேட்டான்.

“1073 அவுட் ஆப் 1200” ..என்றேன். “சூப்பர் மார்க்குடா ! கலக்கு போ! நான் 1003.
ஆயிரம் எடுத்ததே பெரிய விஷயம்… நீ கலக்கு”. அம்மாவின் முகத்தில், நான் ஒரு
தடை தாண்டியதில் மகிழ்ச்சி.

“நீ சொன்ன மாதிரி என்டரன்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டோம் மா.. நானும் பாலாவும்
சேர்ந்துதான் போகப்போறோம்..” பொருட்காட்சியை பார்க்கப் போன ஒரு மனநிலையில்
இருவரும் சென்று, எதற்கு இதை எழுதுகிறோம் என்று அப்போது நினைத்ததுண்டு.
மூன்று மாதங்கள் கழித்து முடிவுகளும் வந்தது. பாலா ஒரு தனியார் கல்லூரியில்
சேர்ந்தான் முதலில். இடம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் சிறிதும் இருந்ததில்லை
எனக்கு. சொல்லப்போனால் ரொம்ப இதமான நாட்கள் அவை. காலையில் மெதுவாக
எழுந்து, எல்லோரும் அரக்க பறக்க ஓடுவதை வேடிக்கைப் பார்த்தபடி காபி குடிப்பதில்
ஒரு தனி சுகம் இருந்தது. ஏதோ ஜெயித்த மாதிரி ஒரு நினைப்பு. எனக்கு அப்போது
சினிமாவில் ஏதாவது செய்ய ஏதோ ஒரு மோகம். ஆனால் வீட்டில் கேட்பதற்கு ஏதோ
பயம்.

கொஞ்ச நாட்களிலேயே அம்மா என்னை ஒரு கல்லூரியில் சேர்த்து விட்டாள். தினமும்
விடியலில் சென்று பின்னிரவில் திரும்பினேன். பல நாட்கள், ஓடும் ரயிலின் ஜன்னல்
கம்பியின் வழியே வெளியே வெறித்தபடி ப்ரயாணித்திருக்கிறேன். ஏன் இப்படி தினமும்
ஓடுகிறேன் ? எதற்காக இந்த போராட்டம் ? யாரிடம் அங்கீகாரம் தேடுகிறேன் ?
இன்னும் கேள்விகள் ஓராயிரம். வயதுக்கோளாருகளும் சேர்ந்துகொள்ள பல நேரங்களில்
யாரும் அற்ற ரயில்வே ப்ளாட்பாரங்களில் தனியே அமர்ந்திருக்கிறேன். பலர் என்னை
பார்ப்பதுபோல் ஒரு நினைவு தோன்றும் அப்போது. “உனக்கு என்ன ஹீரோன்னு
நெனப்பா? இது ஒண்ணும் சினிமா இல்லை.. உன்ன பாத்துகிட்டிருக்கவங்க.. யாரும்
இல்லை …அவனவன் அவனவ வேலைய பார்த்துக்கிட்டிருகாண்டா .. சும்மா கனவுலகதுல
மெதக்காதே..”

கற்பனைகளில் சுகம் கண்ட பல நாட்களில், என்னை பாலா தரைக்குக் கொண்டு
வந்தான். வருடங்கள் நான்கு, இப்படியே கழிந்தது. வித்தியாசம் என்னவென்று
தெரியவில்லை. ஏதேதொ கற்று கொடுத்ததாய் சொன்னார்கள்.. காசு மட்டும் தண்ணீர்
போல செலவாகியது. (அப்போது இவ்வளவு தண்ணீர் பஞ்சம் இல்லை). பட்டம் பெற்று
மூன்று மாதங்கள் ஓடியும், வேலை ஏதும் கிடைக்கவில்லை. எழுதிய நுழைவுத்
தேர்வுகளையெல்லாம் ஒன்றுமே தோன்றாமல் எழுதினேன். பெயர் வராதபோது சற்றும்
வருத்தம் இல்லை. ஏனென்று தெரியவில்லை. அந்த 6 மாதங்கள் மீண்டும் சுகமான
வாழ்க்கை. உண்பதற்கும், உறங்குவதற்கும் மட்டுமே வீடு எனக்கு இடமாகியது.
ஆனால் ஏனோ மிகவும் இதமான நாட்கள் அவை.

உச்சந்தலையில் ஐஸ் வைத்தது போல், மழைத்துளி ஒன்று மண்டையிலும்,
மனக்குளத்திலும் விழுந்து நினைவலைகளை கலைத்தது. இருட்டத் துவங்கி இருந்தது.
மங்கி காப்பை தலையில் மாட்டினேன். இந்த இடம் நான் நினைவுகளை அசை
போடும் நிலையமாகவே மாறிவிட்டது ஆச்சர்யமாக இருந்தது. முன்பெல்லாம் அந்த
அஸ்தமனத்தை பார்ப்பதற்காகவே இங்கே வரத்தோன்றும். மெதுவாக வீட்டை நோக்கி
திரும்ப நடக்க ஆரம்பித்தேன். ஏனோ ஒரு ஏமாற்ற உணர்வு,. முதுகின் பின்னால் நின்று
கொண்டு அடக்க முடியாமல் சிரித்துக் காண்டிருப்பது போல தோன்றும். நடந்து
கொண்டே வந்ததில், என் வீடு இருந்த தெருவை அடைந்து விட்டிருந்தேன். பக்கத்து
வீட்டு மாமி தன் மகனை திட்டிக் கொண்டிருந்தாள்.

வாசல் வரை கேட்டது மாமியின் சப்தம்.

“இத பாரு ரகு, அங்க வந்தேன் பிச்சிடுவேன்.. சொல்லிட்டேன்.. என்ன
நினைச்சிக்கிட்டிருக்க நீ ? நாளான்னக்கு எக்ஸாம் வச்சிக்கிட்டு இன்னிக்கு உனக்கு
சினிமா கேக்குதா ? மரியாதையா வந்து புஸ்தகத்த எடு ..”

“நான் படிச்சுட்டேன் மா …”

“கிழிச்ச .. அதான் நீ வாங்கற மார்க்கு சொல்லுதே .. ஒவ்வொரு தடவையும் இதத்தான்
சொல்ற .. இந்த தடவை நான் விடமாட்டேன் ..”

அவர்களின் வாக்கு வாதம், பெய்யத் துவங்கிய மழையைப் போல வலுக்க ஆரம்பித்ததால்,
ஓட்டமும் நடையுமாய் என் வீட்டிற்குள் சென்றேன்.

தலையைத் துவட்டிக் கொண்டே சன்னலை மூடப்போனேன். எதிர் சன்னலில், கையில்
புத்தகத்துடன் சொட்டும் மழைத்துளியை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான் கார்த்திக்.

“கார்த்திக் ..”

அவன் பார்வை மழைத்துளியின் மேல் குத்திட்டு நின்றது.

“கார்த்திக் ,, ஏய் .. உன்னதான்..”

நினைவு கலைந்து நிமிர்ந்தான். கண்கள் லேசாக பனித்திருந்தது. அதை மறைப்பதற்காக
கீழே ஏதோ தேடுவது போல குனிந்தபடி, கைகளால் கண்ணீர் துளிகளைத்
துடைத்துக்கொண்டான். நிமிர்ந்து

“என்ன அங்கிள் , எப்ப வந்தீங்க ? வாக்கிங் முடிச்சாச்சா ?”

“முடிச்சாச்சு.. ஆமா ஏதோ சத்தம் கேட்டதே.. அம்மா திட்டினாங்களா ? ”

முதலில் பதில் சொல்ல முடியாமல் தவித்து, பின்னர் “எப்ப திட்டலை ” என்று எனக்கு
கேட்கும்படி முணுமுணுத்தான். கோவத்தில் வெறிக்கும் அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.

“அம்மா சொல்றது நியாயம் தானே பா ?”

“சும்மா இருங்க அங்கிள்..உங்களுக்கு தெரியாது ..”

“இல்லப்பா அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்றாங்க.. எனக்கு உன் வயசு இருக்கும்
போது எங்கம்மாவும் இத மாதிரி தான்..” என்றதை அவன் சுத்தமாய் நம்பவில்லை
என்பது அவன் பார்தத பார்வையிலேயே தெரிந்தது.

“நீ பத்தாவது எக்ஸாம் பாஸ் பண்ணினாத்தான் அடுத்த ஸ்டெப்.. ”

“அதுக்கு அப்புறம் ..” என்றான். ஏதோ கிண்டல் செய்வது போல தோன்றினாலும் மேலும்
தொடர்ந்தேன்.

“அப்புறம் 12த் பாஸ் பண்ணினாத்தான் இன்ஜினியராகவோ இல்ல டாக்டருக்கோ படிக்க
வாய்ப்பு இருக்கு..”

“ஆகி என்ன செய்ய அங்கிள் ..”

“ஆகி .. ஆகி ..” லேசாக தடுமாறித்தான் போனேன்.. சமாளித்து ..” கை நிறைய
சம்பாதிக்கலாம்.. டீ.வீ, டெக் , கார் எல்லாம் வாங்கலாம். இன்னும் நிறைய ..”

அவன் ஏனோ மவுனம் சாதிக்க, “அந்த சினிமா எங்க போகப் போவுது ? இன்னிக்கு
இல்லன்னா நாளைக்கு.. எப்ப வேணும்னாலும் பாத்துக்கலாம்.. எக்ஸாம் அப்படி இல்ல ..”

“நீங்க வேற அங்கிள்.. எக்ஸாம் நாளான்னைக்கு தான்.. அது தவிர நான் ஏற்கனவே 70
பர்சென்ட் படிச்சிட்டேன்.. மிச்சதை நாளைக்கு படிக்க வச்சிருக்கேன்.. எங்கம்மா
கத்தறதை கேக்குறவங்களுக்கு நான் ஏதோ படிக்கவே இல்லாத மாதிரி பீல்
பண்ணுவாங்க..ரெண்டாவது , நான் பாக்கப் போறேன்னு சொன்னது இங்க ஒரு
தியேட்டர்ல வந்திருக்கிற இங்லீஷ் படத்தை. கேள்வி பட்டிருபீங்க.. ‘ஷின்ட்லர்ஸ்
லிஸ்ட்’ன்னு நாலு ஆஸ்கர் வாங்கி இருக்கு அது..இந்த கலர் பிலிம் ஜெனரேஷன்ல
முழுக்க முழுக்க ஒரு ப்ளாக் அந்த் ஒயிட் பிலிம். நாசி சர்வதிகாரத்தை தத்ரூபமா
படம் பிடிச்சிருக்காங்களாம். நம்ம ஊர் தியேட்டர் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே..
இன்னிக்கி தான் கடைசி.. ஒரு வாரம் கூட ஓட்டலை .. இந்த கொடைக்கானல்ல
அந்த படம் வீடியோ கடைக்கு வர ரொம்ப நாளாகும்.. அப்படியே வந்தாலும்,
தியேட்டர்ல பாக்குற எ-பக்ட் வராது.. அதுவும் இந்த படத்துல விஷ¤வல் எபெக்ட்
நல்லா இருக்குன்னு ரிவ்யூல படிச்சேன்.. ஆனா அதெல்லாம் இவங்களுக்கு எங்க
புரியப் போவுது ? ” என்றபடி மூச்சு வங்கியவனை பார்க்கும் போது ஆச்சர்யமாக
இருந்தது. கோலியும் கில்லியும், கிரிகெட்டும் மட்டும் என்ஜாய் பண்ணும் விளையாட்டுப்
பிள்ளை என்று நினைத்த எனக்கு, இவன் முதன் முறையாய் இவ்வளவு பேசியது
ஆச்சர்யமாக இருந்தது. இவனுடைய வயதில் இவன் அறிந்திருந்தவற்றில் பாதியை
அறிந்திருப்பேனா என்பது சந்கேம். ஆச்சர்யத்தில் வார்த்தைகள் வரவில்லை எனக்கு.

நான் திகைத்து நிற்பதை பார்த்த அவன் “அங்கிள் , நான் இவ்வளவு விரிவா சினிமா
பத்தி பேசினேன்னு எங்கம்மா கிட்ட சொல்லிடாதீங்க.. அப்புறம் வீட்ல எப்பவாவது
பாக்க சான்ஸ் கிடைக்கிற படங்களும் இல்லாம போயிடும். அம்மாவுக்கு சினிமான்னாலே
பிடிக்காது..”

“அப்ப உனக்கு சினிமான்னா அவ்வளவு பிடிக்குமா ?”

“பிடிக்குமாவா ? ஐ லவ் இட்..எப்ப பாத்தாலும் வர ஸ்டான்டர்ட் லவ் மூவீஸ் மாதிரி
இல்லாம ஏதாவது புது தீம்ல மூவீஸ் பாக்க இன்ட்ரெஸ்ட்.”

“அப்போ உனக்கு பிலிம் லைன்ல போக இன்ட்ரெஸ்ட் இருக்கா ?”

“நிறைய இருக்கு.. கொஞ்சம் புக்ஸ் கூட வாங்கி வச்சிருக்கேன்… ஆனா எங்க…
எல்லாம் பேச்சோடத்தான்..”

“கார்த்திக் அங்க என்ன கத அளந்துகிட்டிருக்க ? ”

“இல்லம்மா .. அங்கிள் கிட்ட டவுட் கேக்கறேன் ” என்றுவிட்டு கண்ணடித்தான்.

அதற்கு மேல் ஏதுவும் பேசத் தோன்றவில்லை. அறிவுரைகள் அவனுக்கு தரவேண்டுமா
இல்லை நான் பெற வேண்டுமா என்று குழப்பம் தோன்ற

“ஓக்கே பா நான் சமைக்கணும்.. அப்புறம் பாக்கலாம்” என்றுவிட்டு உள்ளே வந்தேன்.

டின்னரை முடித்து, படுக்கையில் விழுந்து வெகு நேரம் ஆகியும் உறக்கம் வரவில்லை.
ஏனோ கார்த்திக்கை நினைக்கும் போது என் சிறு வயதை நானே பார்ப்பது போல
தோன்றியது. புத்தகங்களை புரட்டியதில் உடனே உறக்கம் வர எப்போது உறங்கினேன்
என்று தெரியும் முன் உறங்கிப் போனேன். நீதிமன்ற அறையின் குற்றவாளிக் கூண்டில்
நான் நிற்க என் எதிரே கார்த்திக் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்து “நீங்கள்
எல்லோரும் இதுபோலத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். கடமையை செய்கிறோம்
என்று கூறி, உங்களுக்கு கிடைப்பதை உங்கள் கடமையாக்கிக் கொள்கிறீர்களே !
தினப்படி தேவைகளை பூர்த்தி செய்வதே நீங்கள் பிறந்ததின் நோக்கமாய் நினைத்து
வாழ்கிறீர்கள். அதை தொடர்ந்து செய்பவர்களை, இந்த சமுதாயமும் மதிக்கிறது. ஆனால்
இந்த வாழ்க்கை முறையில் என்னை தள்ள உங்களுக்கு அனுமதி இல்லை. செய்ய
விரும்பியதை விட்டு ஏதோ ஒன்றை செய்யும்படி என்னை பணிக்க உங்களுக்கு
உரிமையில்லை. பசியும், இடமும் ஆட்டி வைக்கும் பொம்மைகளாகி, விரும்பியதை விட்டு,
கிடைத்ததை -சய்து, இறுதியில் இறந்தும் போகவா நாம் இங்கே வந்தோம் ? “கார்த்திக்
கைகளை ஆட்டிப் பேசியதில், கனவு கலைந்து திரும்பினேன். பக்கத்தில் இருந்த
விளக்கைப் போட்டு, மேஜை மேல் இருந்த காகிதத்தில், அவன் சொன்ன பெயர் மறந்து
போயிருந்ததால், எஸ்.லிஸ்ட் என்று எழுதினேன். இதை எங்காவது தேடி வாங்கி வைக்க
வேண்டும். “கார்த்திக் ! கோடைக்கால விடுமுறையில் நீ இந்த படத்த பாக்குற.. அதுக்கு
நான் காரண்டி..” மனசுக்குள் முணுமுணுத்தபடி, விளக்கை அணைத்து படுக்கையில்
சரிந்தேன்.

– ஸ்ரீனி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *