இரண்டாம் திருமணம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 24, 2022
பார்வையிட்டோர்: 5,139 
 

அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் உள்ளே நுழைந்த சுமதியைப் பார்த்ததுமே தாய்க்கும் மகளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

“என்னம்மா…?”

“என்னக்கா…?” பதறி வரவேற்றார்கள்.

“ஓ…. ஒண்ணுமில்லே..!..” சொல்லி வந்து தூணில் சாய்ந்து சுமதிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

‘கோ’ வென்று அழுதாள்.

“என்னடீ..! சொல்லிட்டுத்தான் அழேன்.” தாய் துடித்து அதட்டினாள்.

வித்யா தன் பங்கிற்கு அக்காவின் அருகில் வந்து வாஞ்சையாய் அமர்ந்தாள்.

“என்னக்கா..?” சுமதி தலையை வருடினாள்.

“அவர்…. அவர்…”கேவினாள்.

“என்ன சொல்லு..?”

“அவர் இரண்டாம் கலியாணம் பண்ணிக்கப்போறாராம்…!” சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது.

“ஏன்…?” இருவரும் ஒரே கேள்வி கேட்டு அவளை அதிர்ச்சியாய்ப் பார்த்தார்கள்.

“திருமணம் முடிஞ்சி அஞ்சு வருசமாச்சு. புள்ளை இல்லே. இனியும் உனக்குப் பொறக்காது. இன்னொருத்தியைத் தேடி பெத்துக்கிறேன் என்கிறார்.” அழுதாள்.

தாய் சிலையானாள். அதிர்ந்த வித்யாவும் கொஞ்சம் சுதாரித்து…

“நீ என்ன சொன்னே…?” கேட்டாள்.

“யார் ஒத்துப்பா..?! அதெல்லாம் முடியாது. புள்ளை வேணும்னா தத்தெடுத்துக்கலாம் சொன்னேன்.”

“அதுக்கு அவர் என்ன சொன்னார்…?”

“அதெல்லாம் முடியாது. அது என் வாரிசாகாது. எனக்கே எனக்குப் பொறக்கனும் என்கிறார்.”

“அப்புறம்…?”

“வர்றவள் எப்படி இருப்பாளோ…? அவ என்னை வேலைக்காரியாக்கி சீராமாற அடிச்சா என்னால தாங்கிக்க முடியாதுன்னு அழுதேன்..”

“ம்ம்….” தாய்.

“அதுக்கு அவர் ஒத்துக்கிட்டாரா..?” வித்யா.

“இல்லே. அந்த பயம் உனக்கிருந்தா… உன் தங்கச்சியை எனக்குக் கட்டி வை. உன்னைக் கண் கலங்காம பார்த்துப்பாள். சொன்னார்.”

“ஓஓ……”வித்யாவிற்குள் ஏதோ ஒன்று உறைத்தது.

“நான் ஒத்துக்கல. இரண்டாம்தாரமாய் வாழ்க்கைப்பட அவளுக்கு எதுவும் தலையெழுத்தில்லே…சொன்னேன்.”

“சரியாய்ச் சொல்லி இருக்கே…!”

“அதுக்குத்தான் எனக்கு அடி, உதை” அழுதாள்.

தாய்க்குள் திக்கென்றது.

வித்யாவிற்கும் அப்படித்தான். அதே சமயம் விசயம் வேறொன்றாகவும் புரிந்தது.

எல்லா அக்கா கணவன்கள் போல வெங்கடேசுக்கும் வித்யா மேல் ஒரு கண். ஆள் மாமியார் வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவளை வம்பிழுப்பது மாதிரி தட்டுவதும், கொஞ்சுவது போல தொடுவதும், கிள்ளுவதும் வேண்டுமென்றே பல்லிளிப்பதும் பேசுவதுதான் வாடிக்கை.

இவளுக்கு இது கட்டோடு பிடிக்கவில்லை. அக்காள் கணவன் என்று பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டாள்.

அதோடு மட்டுமில்லாமல்…

“உன்னை கட்டிக்கப் போறேன்டீ…” என்று வேறு சீண்டல். அதையும் இவள் அக்காவிற்காகப் பொறுத்துக் கொண்டாள்.

இப்போது தனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளைப் பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும்… ஆள் கை நழுவிப் போய்விடுவாள் என்கிற பதைப்பில் பிள்ளை சாக்கு வைத்து அக்காளை அடித்து துவைத்து அனுப்பி இருக்கிறான். – புரிந்தது.

வாழ்வில் குழந்தை அவசியமா…? குழந்தைதான் வாரிசு, வாழ்க்கையா..? வாரிசு ஒன்று வந்தால்தான் வாழ்க்கை சிறக்குமா..? நிறைவாகுமா..? மக்கள் பெருக்கம் அதிகம் உள்ள இந்த கால கட்டத்தில் வாரிசு ஒன்று வரத்தான் வேண்டுமா..?

‘ அது என்ன எல்லா அக்காள் கணவன்களும் மச்சினிச்சி மேல் கண்ணாக இருக்கிறார்கள்..? ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம் போல் அக்காளைக் கட்டினால் தங்கையும் தன் வசம் என்று எதிர்பார்க்கிறார்கள்..? ‘ – என்று நினைக்கும்போதுதான் சுமதி இவள் கையைப் பிடித்தாள்.

“என்னக்கா…?”

“நீதான் உதவி செய்யனும்…” பரிவுடன் சொல்லி தங்கையைப் பாவமாகப் பார்த்தாள்.

“என்ன உதவி…?”

“அவரைக் கட்டிக்கிட்டு என்னை மட்டுமில்லே….என் வாழ்க்கையையும் காப்பாத்தனும்..” என்றாள்.

“அக்கா…!!…” வித்யா அலறினாள்.

“என்ன…?”

“உன் வாழ்க்கையைக் காப்பாத்த நான் ரெண்டாம்தாரமாய் வாழ்க்கைப் பட்டு என்னை பாழ் பண்ணிக்கனுமா..? எனக்கும் புள்ளை இல்லாமல் போனால்…வாழ்க்கைப்பட இங்கே இன்னொரு தங்கச்சி இல்லே. இன்னொருத்தியைத் தேடுவீயா..? அப்படி மூணாம் மனுசி வந்தால்…நீயும் நானும் மூலையில் முடங்கிய செல்லாக் காசு தெரியுமா…?” படபடத்தாள்.

சுமதிக்கு வாய் பேச்சு வரவில்லை. உறைந்தாள். விட்டத்தைப் பார்த்தாள்.

வித்யாவிற்கு இது சரி படாது.! புரிந்தது.

“சரி. நான் உன் புருசனுக்கு வாழ்க்கைப் படனும்!! அவ்வளவுதானே…!? நாளைக்கே அத்தானை இங்கே அழைச்சு வா நான் பேசறேன்!” என்றாள்.

“சரி” அகன்றாள்.

அடுத்த நாளே…. அவள் கணவனுடன் வந்து நின்றாள்.

மச்சினிச்சி தன் வழிக்கு வந்துவிட்டாள் என்கிற நினைப்பு.

வெங்கடேசுக்கு முகமெல்லாம் பூரிப்பு. வாயெல்லாம் புன்னைகை. நாற்காலியில் அமர்ந்தான்.

அம்மாவும் அக்காவும் அருகில் இருக்க….

“அத்தான்! நான் உங்ககூட கொஞ்சம் பேசனும்…” என்றாள் வித்யா.

“உன் மனசுல உள்ளதை சொல்லு வித்யா. நான் அப்படியே நடக்கிறேன்.!”

இவனும் ஆள் பவ்வியமாக நிமிர்ந்து அமர்ந்தான்.

“அத்தான்! உங்க அஞ்சு வருட தாம்பத்திய வாழ்க்கையில் அக்காவைப் பிடிக்கலையா..? இல்லே அவள் எதுக்கும் ஒத்துவரலையா..?” கேட்டு தீர்க்கமாகப் பார்த்தாள்.

இந்த திடீர் கேள்வி, பார்வை

யை எதிர்பார்க்காத வெங்கடேஷ் துணுக்குற்று நெளிந்து….

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேயே ஏன் கேட்குறே..?” பார்த்தான்

“பின்னே நீங்க ரெண்டாம் கலியாணம் முடிவெடுக்கக் காரணம்..?

“அக்கா சொல்லலையா..?” சுமதியைப் பார்த்தான்.

“சொன்னாள். நீங்க சொல்லுங்க..?”

“எனக்கு ஒரு வாரிசு வேணும்…”

“ஆக… ஒரு குழந்தைக்காக என்னை திருமணம் செய்யுறீங்க..?”

“ஆமா…?”

“உங்க ரெண்டு பேருக்கும் ஏன் குழந்தை இல்லே…”

”………………………”

“உங்க ரெண்டு பேர்கிட்ட யாருக்கு குறைன்னு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தீங்களா…?”

“இல்லே… சுமதிக்குத்தான் குறை இருக்கும்..?”

“அப்போ… நீங்க கலியாணத்துக்கு முன்னாடியே குழந்தை பெத்திருக்கீங்களா…?”

பதில் சொல்ல முடியாத முரட்டுக் கேள்வி. வெங்கடேஷ் ஆடிப்போனான்.

“சுமதீ…!” தாய் அதட்டினாள்.

“நீங்க சும்மா இருங்கம்மா. இது எங்க ரெண்டு பேர்க்குள்ளே உள்ள பிரச்சனை. மருத்துவ பரிசோதனை செய்யல. அக்கா மேலதான் குறைன்னு அத்தான் அடிச்சி சொல்றார்ன்னா… அவர் ஏற்கனவே குழந்தை பெத்திருக்காருன்னுதானே அர்த்தம். ?!”

‘ ஆமாம்! ‘ என்று சொல்ல யாருக்கும் வாய் வரவில்லை.

தாயும் மகளும் கம்மென்றிருந்தார்கள்.

“சரி. நீங்க யோக்கியன். அந்த விசயத்தை விடுங்க. இப்போ உங்க ரெண்டு பேர்ல யாருக்குக் குறைன்னு மருத்துவப் பரிசோதனை செய்யலாமா..?”

“ம்ம்….”

“மருத்துவ பரிசோதனையில் யாருக்குக் குறை இருந்தாலும் சிகிச்சை எடுத்து அதை குணப்படுத்திக்கலாமா..?”

கம்மென்றிருந்தான்.

“சரி. அதுக்கு சம்மதமில்லே. அக்காவுக்கு குறைன்னா…நான் உங்களைக் கட்டிக்க சம்மதம். உங்களுக்குக் குறைன்னா…அவளை வேறொருத்தருக்கு கட்டி வைக்கிறீங்களா……?”

“வித்யா…?!” கோபத்தில் எழுந்தான்.

“என்ன பேச்சுடீ பேசறே..?” தாய் ஓடி வந்தாள்.

“உஸ்!” என்று அவளை கை நீட்டி மறைத்து தடுத்த வித்யா…

“அத்தான்! கோபப்படாதீங்க. பொறுமையா கேளுங்க..” அமைதியாய் சொன்னாள்.

அமர்ந்தான்.

“உங்க மனைவியை இன்னொருத்தருக்கு கட்டி வைக்கனும்னு சொன்னபோதே உங்களுக்குக் கொதிக்கிதே..? அது போலத்தானே நீங்க இன்னொருத்தியைக் கட்டிக்கிறேன்னு சொன்னதும் அக்காவுக்குக் கொதிச்சிருக்கும்..? அத்தான்..! உங்களுக்கு வந்தால் ரத்தம். சுமதிக்கு வந்தால் தக்காளிச் சட்னியா..? மாமியார் உடைச்சா மண்சட்டி. மருமகள் உடைச்சா பொன் சட்டியா..?

அத்தான்! குழந்தை இல்லே என்கிற கவலை வருத்தம் கணவன் மனைவி ரெண்டு பேருக்குமே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அந்த கவலையும் வருத்தமும் அதிகம். அதை உணர்ந்து, குழந்தைதான் வாழ்க்கையான்னு நினைச்சி பிரச்னையை சுலுவாக்கி, இந்த பிறப்பில் நான் உனக்குக் குழந்தை. நீ எனக்குக் குழந்தைன்னு ஒருத்தருக்கொருத்தர் மேல் அன்பு வைச்சு ஆறுதலாய் வாழனும். அதிலும் மனசு சமாதானமடையலேன்னா…அநாதை ஆசிரமம் போய் தத்தெடுக்கலாம்.

இன்னொருத்தர் குழந்தை எப்படி வளருமோன்னு பயம் வேணாம். பிஞ்சு குழந்தைங்க கள்ளம்கபடு அறியாதவங்க. எடுப்பார் கை பிள்ளைங்க. எப்படி வளர்க்கிறோமோ அப்படி வளரும்.

அதுக்கும் சரி படலையா..? இருக்கிற சொத்தை இல்லாதவங்களுக்குக் கொடுங்க. அவுங்க வாழ்ந்து வாழ்த்துறது பத்து புள்ளைங்க பெத்ததுக்குச் சமம்.

அப்புறம்… குழந்தை இல்லே என்கிறதுக்காக இரண்டாம்தாரமெல்லாம் சரியான தீர்வு இல்லே அத்தான். உங்ககிட்ட குறை இருந்தால் உங்க ஒரு உயிரணுவை ஊசி மூலமா அக்கா கருப்பையில் செலுத்தி குழந்தை பெத்துக்க வாய்ப்பிருக்கு. அக்காவுக்குக் குறைன்னா… வாடகைத் தாய் மூலம் உங்க உயிர் அணு மூலமே நீங்க குழந்தை பெத்துக்கலாம். என்ன பணம்தான் அதிகம் செலவாகுமேத் தவிர குழந்தை பெத்துக்க முடியாது என்கிற பேச்சுக்கே வேலை இல்லே.

இப்படி எல்லாம் வாய்ப்பு வசதி இருக்கும்போது எதுக்கு வீண் ஆசை. ரெண்டு பெண்டாட்டி. வாழ்க்கையில் குழப்பம் திண்டாட்டம் ?” நிறுத்தினாள்.

“சுமதி! வா போகலாம்!” சொல்லி வெங்கடேஷ் இருக்கையை விட்டு எழுந்தான்.

“என்ன அத்தான் பதில் சொல்லாம கிளம்புறீங்க..?” கேட்டாள் வித்யா.

“பதில் சொல்றதுக்கு அவசியம் இல்லே வித்யா. நல்ல நேரத்துல நல்லது சொல்லி எனக்குக் கண் திறந்திருக்கே. இனி எங்க வாழ்க்கை நாங்க பார்த்துக்கிறோம். உனக்கு நன்றி. உன் நல்ல மனசுக்கு நானே உனக்கு நல்ல மாப்பிள்ளை தேடுறேன்.” சொல்லி அருகில் வந்த மனைவி சுமதி கையை இறுகப் பற்றிக்கொண்டு..

“வர்றேன் அத்தை!” சொல்லி தெளிவாய் நடந்தான்.

வித்யா, தாய் முகங்களில் மலர்ச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *