இதுதான் சரி – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 17, 2023
பார்வையிட்டோர்: 3,287 
 

(2016 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என் பையன் ஒன்பதாவது படிக்கறான் இல்லே… முழுப் பரீட்சை அவன் சரியா செய்யலே. அந்த ஹெட்மாஸ்டர் உனக்கு ரொம்ப தெரிஞ்சவர் தானே. கொஞ்சம் பாஸ் போட்ற சொல்லுப்பா.”

என் நண்பன் ரவி என்னிடம் கேட்டான்.

“அது சரி… நீ வீட்டிலே அவனை கவனிக்கிறதில்லையா?… டியூஷன் எல்லாம் வச்சிருக்கக் கூடாது?”

“எல்லாம். வச்சேன். திருட்டுப் பய… ஊர் சுத்தறான். ஒழுங்கா படிச்சாத்தானே!”

“அதை கவனிக்காம நீ என்ன பண்ணறே?”

“என்னப்பா எல்லாம் தெரிஞ்ச நீ இப்படி கேக்கறே?. எனக்கு நேரம் இருக்கா நீயே சொல்லு. எத்தனை பிசினஸ் பார்க்கறேன். எவ்வளோ பிஸியா அலையறேன். ஏதுப்பா நேரம்.?”

“உன்னோட மனைவியும் அவனை கவனிக்கிறதில்லையா?”

“ஆமா. அவ பார்ட்டி, கிளப்பு, மீட்டிங்னு அலையறா.”

“செய்யுப்பா இதை…நான் வேணும்னா அந்த ஹெட்மாஸ்டரை கவனிச்சுக்கறேன்”.

தங்கவேலு தலைமையாசிரியர் அப்படிப்பட்டவர் இல்லை. நேர்மையானவர் என்பதை அறிவேன்.

“சரி, போன வருஷம் எப்படி படிச்சான். எப்படி பாஸ் பண்ணினான்?”

“அப்பவும் பெயிலுதான். அந்த தலைமையாசிரியர் பாஸ் போடமாட்டேனுட்டார். அவரை கவனிச்சு பாஸ் போட்டு டிசி யாவது குடுய்யா… வேற பள்ளிகூடத்துலே சேர்த்துடறேன்னு டி.சி வாங்கிட்டு வந்து இங்கே சேர்த்தேன். சரி… சரி… எப்படியாவது முடி”.

அடுத்த நாள் நான் தங்கவேலு தலைமையாசிரியரை தொடர்பு கொண்டேன்.

அவனே பேசினான்.

“உன்னோட பிரெண்டுன்னு ரவின்னு ஒருத்தர் வந்தார்ப்பா… என்ன சொல்லறே சொல்லு. அந்த பையன் பாஸாக மாட்டான். ஏதாவது செய்யட்டா…சொல்லு? அடுத்த வருஷமாவது நல்லா படிப்பானா?”

“தங்கவேலு… உன் பேர் கெடக்கூடாது. யாருக்காகவும் நீ எதுவும் செய்யக்கூடாது. அவனை பெயிலே ஆக்கிடு. டி.சி.கேட்டா கூட பெயில்னு போட்டே கொடு…”

“சரிப்பா… தேங்ஸ்”.

கேட்டுக்கொண்டிருந்த என் மனைவி,

“என்ன இப்படி சொல்லிட்டீங்க…?” எனவும்,

“சந்திரா, பெத்த அப்பனுங்களுக்கெல்லாம் பல விஷயம் தெரியலே. பிள்ளைங்களை கெடுக்கறாங்க. பசங்க நம்ம என்ன கூத்தாடிச்சாலும் அப்பா எப்படியும் நம்மளை பாஸ் பண்ண வச்சுடுவார்னு. வளர்ந்தான்னா நாளைக்கு அவன் உருப்படாம போய் எதையும் எப்படி வேணும்னாலும் செய்யலாம்னு கேடியாயி இன்னும் பத்து பேரை கெடுப்பான். தேர்ச்சியடையாம கஷ்டப்பட்டாத்தான் புத்தி வந்து திருந்துவானுங்க. இதெல்லாம் நிறைய அப்பனுங்க யோசிக்கிறதில்லை”.

“இதுதாங்க சரி”- என்றாள் என் மனைவி

– அத்திப்பூ – மார்ச் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *