வீட்டில்….. நூறு வயது தொட்ட மூத்த விஞ்ஞானி முத்துசாமி….
சாய்வு நாற்காலியில் ரொம்ப இறுக்கம், கலக்கமாக அமர்ந்திருந்தார்.
உள்ளே நுழைந்த இளம்விஞ்ஞானி விஸ்வேஸ்வரனுக்கு அவரைப் பார்க்க அதிர்ச்சி.
” அப்பா…! ” அழைத்து அருகில் தாவி அமர்ந்தான்.
அவர் எதுவும் பேசாமல் இவனைப் பாவமாய்ப் பார்த்தார்.
” ஏன்….. என்னாச்சுப்பா.. ? ” பதறினான்.
” தொ….தொலைக்காட்சியில் இன்னையச் செய்தியைப் பார்த்தியா ? ”
சொல்லும்போதே அவருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
” பார்த்தேம்பா. இங்கே…நீங்க வேலை செய்து ஓய்வு பெற்ற நம்ம விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடத்தில் இன்னைக்கு அதைப்பத்தித்தாம்ப்பா பரவலாய்ப் பேச்சு. பூகம்பம், மழை, புயல், வெள்ளம், நெருப்பு, சுனாமி….என்கிற மொத்த அழிவு சக்திகளினாலும் பூமி எங்கள் கண்ணெதிரிலேயே சிதைஞ்சி சின்னாபின்னாமாகி அழிஞ்சதை அப்படியே நிகழ்வாய்ப் பார்த்து உறைந்து போய்ட்டோம்பா. இன்னைக்கு….எல்லா ஜீவராசிகளும் அழிஞ்சு அது ஒரு கிரகமா இருக்கு. பயங்கரம் ! ” – சொல்லி சிலிர்த்தான்.
”விஸ்வேஸ்! என் முப்பது வயதில் இந்திய ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து பத்து விஞ்ஞானிகள், தொன்னூறு ஆண் பெண் மக்கள்ன்னு மொத்தமாய் நூறு பேர் இந்த செவ்வாய்க் கிரகத்துக்குக் குடியேறினோம். எங்கள்..முயற்சி , உழைப்பால……இன்னைக்கு இந்த செவ்வாய் பூமி விஞ்ஞானத்தாலும், மக்கள் தொகை, நாகரீகத்தாலும்… வளமாய் இருக்கு. ஆனா… எங்களை இங்கே அனுப்பி வாழ வைச்ச பூமி என் கண் முன்னாலேயே சிதைஞ்சி சின்னாபின்னமாகிப் போனதைப் போச்சு! எனக்குத் தாளலை. செவ்வாயை வாழ வைச்ச பூமியை
முயற்சி செய்து நீங்க வாழ வைச்சு நம்ம வேரை, தாய் மண்ணைக் காப்பாத்துங்கப்பா.” என்று சொல்லி சட்டென்று மகன் கையைப் பிடித்து கண்ணீர் விட்டார்.
அவரின் தாய் மண் பாசத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஸ்வேஸ்….
”ஆகட்டும்ப்பா..!” சொல்லி அவரை ஆறுதலாக அணைத்தான்.