வழிகாட்டி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 12,455 
 

சமுதாயத்தை மூடி இருக்கும் பகட்டை நீக்கி, உண்மை நிலைகளை அம்பலப்படுத்தும் ஒரு புதுமை எழுத்தாளன் போல, இரவின் இருள் திரையை நீக்கி உலகின் சோக நாடகத்தை வெளிக்காட்ட ஆரம்பித்தான் உதயசூரியன். அவன் ஒளியில் முதலில் உயர் மரங்களின் பொன் கொம்புகள் அசைந்தாடின. மாரிக் காலம். ஆனால் வசந்தத்தின் செந்தளிர்கள் பெற்றவை போல் மரங்களெல்லாம் அவன் மந்திர ஸ்பர்ஸத்தில் மாயஞ் செய்தன. இரவு பெரு மழையிலே குளித்திருந்த உலகம் ஒரு புதுமை எழில் கொண்டு ஸ்நானம் முடித்து வந்த ஒரு கன்னிப் பெண்ணின் அழகு கொண்டு விளங்கிற்று.ஆனால் போலிக் கலைஞர் போல உலகை ஒரு முகப் பார்வையில் சித்தரிப்பவனல்ல சூரியன். நாட்டைச் சூழ்ந்துள்ள சகதி, சேறு, வறுமை, துன்பம் எல்லாவற்றையும் எடுத்துக் காட்ட ஆரம்பித்தான். அந்தக் குட்டிப் பட்டணத்தின் செல்வ மாளிகைகளின் பக்கத்திலே ஒடிந்து கிடக்கும் குடிசைகளையும், குமைந்து கிடக்கும் ஏழைகளையும் தன் ஒளிக்கரத்தினால் சுட்டிக் காட்டினான். இரவு மழையினாலும் புயலினாலும் சின்னா பின்னப் படுத்தப் பட்டு சிதறிக் கிடந்த ஓலைக் கூரைகளையும், , அவற்றைக் கொண்ட வீடுகளின் சில்லிட்ட ஈரத்தன்மையயும் அவன் கதிர்கள் கெளவிப் பிடித்தன.

அப்படிப்பட்ட ஒரு ஈரத்தெருத் திண்ணையில் தான் இன்றும் நித்திரைக் கூட்டில் அடைபட்டுக் கிடந்தான் அந்தக் கபோதி. இரவு முழுவதும் கூதிரின் வெட வெடக்கும் சில்லிட்ட குளிர். வருண தேவனின் வெறியாட்டுக் கடுமையாயிருந்தது. இடியின் பயங்கர மத்தளமும், அதற்கிசைய மின்னல் மோஹினியரின் நடனலாகவமும், வான் மேடைக்குக் கோர அழகொன்றை ஊட்டின.

திண்ணையில் கொட்டும் மழையின் சுக விசாரணை. விடியுமட்டும் ‘ஏகாதேசி’. மழை ஓய்ந்த பிறகு தான் அந்தகனுக்கு நித்திரை வந்தது. விடிவெள்ளி கிழக்கிலே விழித்தெழுந்து விட்டது. கோழிகள் கூவ ஆரம்பித்து விட்டன, அவன் துயில் போகும்போது. அயர்ந்து ஆறுதலான நித்திரையில் ஆழ்ந்து விட்டான். அவன்.

* * *

காலையில் வீட்டுக்காரர் விஸ்வநாதர் திறந்ததும் கண்ணெதிர்ப்பட்ட காட்சி இது தான். கூனிக் குறுகிப் படுத்திருக்கும் வற்றல் கபோதி. அருகே அவனைப் போலவே வளைந்து மெலிந்த தண்டு. அவனது பிரியாத பிரிய நண்பனான ஒரு கோல்- அவனுக்கு வழிகாட்டி நடத்தும் அனபன் – ஆம், சொல்லப் போனால் கண்ணற்ற அவனுக்குக் கண்ணாய் விளங்கிய கழி – கிடந்தது. தலைப் புறத்தில் ஒரு தகரம், சில மூட்டை, முடிச்சுகள்- இவைதான் அவனது சர்வ சொத்தும்.

இன்றுமட்டுமல்ல அவர் கண்ணெதிரில் அவன் காலையில் பட்டது. எத்த்னையோ தடவை அவன் முகத்தில் விழித்திருக்கிறார் அவர். ஆனால் அவன் அப்பொழுதெல்லாம் கைக்கெட்டாத தூரத்தில் வீட்டின் எதிரேயிருந்த தேநீர்க்கடை அண்டை காட்சி அளிப்பான். ஆனால் இன்று தன் வீட்டுத் திண்ணைய்யில்! பக்கத்தில்!

எரிமலை வெடித்தது போன்ற ரெளத்திராகரமான ஆத்திரம் அவருக்கு. “காலை சகுனமாகப் பள்ளி கொள்ளும் கபோதி!” அவரால் தாங்க முடியவில்லை. எள்ளும் கொள்ளும் வெடித்தது அவர் முகத்தில். தன் குடுமியைத் தட்டி முடிந்து கொண்டு வாய்க்கு வந்த செந்தமிழில் திட்ட ஆரம்பித்தார் அவர். கையில் அகப்பட்ட குச்சி ஒன்றை அவன் மீது விட்டெறிந்தார் கோபத்தில்.

இயற்கையில் விஸ்வநாதர் சாந்த சொரூபி அல்லாவிட்டாலும் குரூர சுபாவம் படைத்தரென்று கூற முடியாது. இன்றைக்கு அவர் உள்ளம் ஆத்திரத்தில் ஏற்றுண்ணும் ஒரு தெப்பம் போல் இருந்தது. காரணம் அவர் வயிற்றுப் போராட்டத்தோடொட்டிய ஒரு சேதி.

அவர் ஒரு கல்யாண தரகர். சென்ற இரு மாத காலமாக அவர் ஊரில் எந்த ஜதையையும் சேர்த்து வாழ்க்கைப் படகில் ஏற்றவில்லை. மன்மதன் தன் கரும்புவில்லில் புஷ்ப பாணங்களைத் தொடுத்து ஜதை சேர்ப்பதாக கஞ்சா மயக்கத்தில் கவிஞர்கள் கூறுவது வழக்கம். அதில் சரி பிழை தெரியாதவருக்கும் ஒன்று மட்டும் தெரியும். விஸ்வநாதர் போன்ற தரகர்கள் வானத்தை வில்லாக வளைக்காது நடத்தப்படும் கல்யான வாணிபம் அபூர்வம்.

அவரது கண்ணியில் ஒரு மாத காலமாக ஒருவரும் சிக்கவில்லை. இரண்டு தினங்களின் முன்பு தான். ஒரு ‘பெரிய’ இடத்தில் மோப்பம் பிடித்திருந்தார். இது விஷயத்தில் விஸ்வநாதர் கை தேர்ந்த வேட்டை நாய் என்று கூற வேண்டும். அது சம்பந்தமாகத் தன் கண்ணியை விரித்து ஏதாவது அகப்படுத்துவதற்கு ஆயத்தமாக சில முக்கியஸ்தர்களைக் காண்பதெற்கென்றே காலையில் பஞ்சாங்கம் பார்த்து ராகு காலத்தின் முன் கிழம்பியிருந்தார் அவர்.

அந்த வேளையில் குருடன் சகுனமாகக் காட்சி அளித்தால்…?

வீசி எறிந்த குச்சி உடம்பில் பட்டதும் அவன் விழித்தான். விழிகளல்ல. அவைதான் நிரந்தரமாக மூடி விட்டனவே! அவன் உணர்வுகள், கோபதாப, பசி துக்கங்கள் விழித்தன. காதூடே வைரம் போல் ஊடுருவி அறுத்துச் சென்றன கர்ணகடூர வசை மொழிகள்! நீண்ட நேர நித்திரை கொண்டு விட்டதை உணர்ந்து அவசர அவசரமாகத் தடுமாறி எழுந்தான். அவன்.

விஸ்வநாதர் அவ்வளவுடன் நிற்கவில்லை…’டாங்க்’ என்ற சப்தம்…அருகிலிருந்த கழி ஆகாயத்தில் பறந்து சென்று வீட்டுத் தகரக் கூரைமேல் மோதி நாதம் எழுப்பிற்று. சப்தத்தின் உண்மை அர்த்தம் புரியவில்லை குருடனுக்கு. எழுந்து நடப்பதற்காகக் கழியை அங்குமிங்கும் தடவித் தேடினான் அவன்.

வேகத்தோடு நுரை கக்கி வீசி வந்த ஆத்திர அலை மோதி வெடித்து விட்டதால் விஸ்வநாதருக்குத் திருப்தி. சீறிக் கொண்டே போய் விட்டார் அவர்.

* * *

முகந்தெறியாத காரிருளில் வெளியே செல்வதற்கு அறையின் வாயிலைத் தேடி நடக்கும் கைகள் போல, தடுமாறியும் அவசரமாகவும், அலைந்தன கபோதியின் கரங்கள். ஆம. அவன் வாழ்வு நிரந்தரமான ஒரு காரிருளில் தான் கழிகிறது. கன்னங்கருத்த சூன்யமான பேயிருள்! அதில் அவன் அப்படியே சொக்கி துக்க சொரூபமாக, நம்பிக்கை இழந்தவனாக, ஆகிவிடாது காப்பாற்றிய தன் நண்பனைத் தான் ஆசையோடு தேடுகிறான் அவன். ஆனால், தேடுகிறான், தேடுகிறான் காணவில்லை!

இரண்டு மூன்று நிமிஷங்கள் நிலத்தைத் தடவித் தடவித் தேடியாய் விட்டது. காணவில்லை! இருந்தால் கைக்கு அகப்பட வேண்டுமே! காணாது போகவே அவனால் தாங்க முடியவில்லை. திகைத்தான். யாரோ சதிகாரர்கள், ஒருபோதும் உபகாரம் அல்லாது அபகாரம் செய்வதறியாத தன் நண்பனை நீண்ட வருட காலமாக அவனை விடாது தொடர்ந்த உண்மைத் தோழனை தன்னிடமிருந்து பிரித்து விட்டார்கள் என்பதை உணர்ந்தான் அவன்.

தன்னைத் திட்டிய பிரமுகராகத்தான் இருக்க வேண்டுமென்பதை யூகித்தறிந்து கொண்டான். அவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. கண்ணோரத்தில் ஒரு கண்ணீர்த் துளி வெடித்தது. உள்ளத்தின் பொருமல்தான் அவ்வெடிப்பினால் பாய்ந்தது போலும்.

* * *

அவன் உயிரின் ஓர் அம்சம் அந்தக் கழி. அது பிரிந்தால் தன் வாழ்வின் கொடியே துவண்டு வாடிவிடும் என்றெல்லாம் சில சமயம் அவன் எண்ணுவதுண்டு. நன்றி அறிதலோடு அதனை அணைத்து முத்தம் இடுவது கூட உண்டு. இன்று அது பிரிந்து விட்டது. உள்ள வானில் சோக கருமேகம் கவிந்து முகத்தையே இருளடையச் செய்து விட்டது.

அந்தக் கழி அவனோடு பொருந்திய வரலாறே அதிசயம். அதன் பின்னே மனிதனின் அன்புணர்வுச்சியின் காவியம் இருந்தது.

ஆறு வருடங்களின் முன் திருவிழாத் தினமொன்று. அன்றுதான் யந்திர யமனொன்று – ஒரு மோட்டார் லொறி- அவன் கண்களைக் காணிக்கையாகப் பறித்துப் பெற்றுக் கொண்டது. விபத்து நடந்த வீதியில் ஒரு வாலிப வைத்தியர் அவன் மீது இரக்கம் காட்டி இலவசமாக அவன் கண்ணிலுள்ள புண்ணை சொஸ்தப்படுத்தினார். அந்த வைத்தியரின் இனிய வார்த்தைகள், மறக்க முடியாத உயர்ந்த சங்கீதம் போல, இன்னும் காதில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தன. அவர் முகம்! – அதனைத் தான் அவனால் பார்க்க முடியாதே!

கண் சொஸ்தமான பின்னர் கழியையும் அவர்தான் உதவினார். உண்மையான பதிவிரதை ஒருவளைப் போல அது அவனோடு விடாது தொடர்ந்தது. கணங்கூடப் பிரிந்ததில்லை. பார்க்கச் சகிக்காத பாவிகள் அதனிப் பிரித்து விட்டார்கள். அது எங்கே, எங்கே என்றலறிய துள்ளம.

* * *

மாலை மயங்கி விட்டது. தெரு லாம்புகள் மினுங்க ஆரம்பித்தன. வீதியில் ஜனப் புழக்கம் குறைந்தது. சப்தங்கள் குறைந்தன.

சேர்ந்த சல்லிகளை எடுத்து எண்ண ஆரம்பித்தான். போவதற்காயத்தமாகினான் குருடன். ஆனால் வழக்கம் போல் அவன் நண்பன் வந்து விட்டான். இருவரும் கதைக்க ஆரம்பித்தார்கள். இவ்இருவருள் நட்பு வளர்ந்ததே ஆச்சரியம். ஒருவன் ஐம்பதின் ஓரத்தைத் தொட்டு விட்ட வயோதிபக் கபோதி. மற்றவன் ஒன்றுமறியாத பத்து வயதுச் சிறுவன்.

இவை வேற்றுமைகள். ஆனால் ஒற்றுமைகள் பல இருந்தன. பிச்சையில் ஜீவிப்பவர்கள், அரைப்பட்டினி கிடப்பவர்கள், யாருமற்ற அநாதைகள் என்பன சில. இவ் ஒற்றுமை அடிப்படையில்தான் போலும் வேற்றுமையின் வேலிகளைத் தாண்டி இரு உள்ளங்களும் ஒன்றுபட்டு நட்பு ஜனித்தது.

இருவருள்ளும் சில்லறைக் கொடுக்கல், வாங்கல், பரஸ்பர உதவிகள் என்பன உண்டு. கிழவனுக்கு சிறுவன் மீது குழந்தை ஆச்சே என்று இரக்கம். சிறுவனுக்கு அவன் மீது வயோதிபராச்சே, குருடராச்சே என்ற அனுதாபம். இந்தப் பரஸ்பர நல்லெண்ணம் பற்றிப் படர்ந்து ஒருவிதப் பாசமாக இரு உள்ளங்களையும் இறுகப் பிணைத்தது. கொழுகொம்பற்ற கொடிகள் இரண்டு தோட்டத்தில், தம்முள் தாமே பிணைந்து படர்வது போல.

கிழவன் உணர்ச்சி விம்மும் குரலில் தனது அன்றைய அபாக்கிய அனுபவங்களைக் கூறினான். கண் இழந்ததை விட கழி இழந்ததால் தான் பட்ட துன்பம், அது தனக்குக் கிடைத்த வரலாறு, அதை உதவிய வாலிப வைத்தியர் பற்றிய விபரங்கள் எல்லாவற்றையும் ஒன்றன்பின்னொன்றாகக் கூறி வந்தான்.

சிறுவன் உள்ளத்தை அது தொட்டது. “வருத்தப்படாதே. நான் இன்னோர் கழி நாளைக்குத் தருகிறேன்” என்றான் அவன். எப்படியாவது கிழவனுக்கு ஒரு நல்ல கழி பெற்ருக் கொடுத்து விடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். அவன்.

கிழவனுக்குத் திருப்தி ஏற்பட ஆரம்பித்தது. “அதையும் இந்த மாதிரி யாராவது பாவி எடுத்து வீசி விடாதிருக்க வேண்டும்” என்று கூறிக்கொண்டான் அவன்.

இதைக் கேட்டதும் மின்னல் போல் ஒரு யோசனை சிறுவன் உள்ளத்தில் வீசி அடித்தது. துடிதுடிப்போடு அவன் சொன்னான்:” அப்படியானால் நானே வழிகாட்டியாய் இருக்கிறேனே! என்னை யாராலும் தூக்கி வீச முடியாதல்லவா?” என்றான் அவன். “அது மட்டுமல்ல, வீதி எல்லாம் சுற்றிப் பணம் சேர்ப்பதும் முடியும். இருவரும் பங்கு போட்டுக்கொள்ளலாம்” என மேலும் தொடர்ந்தான்.

கிழவனால் நம்ப முடியவில்லை. தன்மீது இத்தகைய அன்புணர்ச்சி கொண்ட உள்ளமும் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டான். சிறுவனின் கள்ளங்கபடமற்ற அன்பு அவன் இதயத்தைக் கெளவியது. அவன் பேச விரும்பினான்.

முடியவில்லை. குரல் தளதளத்தது. “ஆகட்டும்!” என்று தன் தலையை அசைத்தான் கிழவன்.

அவனது குருட்டுக் கண்ணின் சூன்யத்திலும் அன்பின் உணர்ச்சி மின்னல் ஒரு கணம் ஜொலித்தது போல் தோன்றிற்று. ஒருவிதப் பரவச உணர்வால் அவன் நரம்புகளில் எல்லாம் இன்ப மின்சாரம் படர்ந்து சென்றது. “இழந்த வழிகாட்டிக்கு இது குறைந்த வழிகாட்டியல்ல” என்று கூறிக் கொண்டான் அவன். பொலபொலவென்று காற்ரில் உதிரும் பூக்கள் போல கண்ணீர்த்துளிகள் அவன் கபோலத்தைத் தடவிச் சென்றன. அக்கண்ணீர்த்துளிகளில் துக்கத்தின் பாரமில்லை. ஆன்ந்த உணர்ச்சி நிறைந்திருந்தது.

இருவரும் மெளனமாக எழுந்தார்கள். சிறுவன் கையைப் பிடித்து வழிகாட்டத் தேநீர்க் கடைக்கு சென்றான் கிழவன். தேநீர் அன்று அமிர்தம் போல் இனித்தது. காரணம்: அதில் இன்பத்தின் மதுரமும் கலந்து கரைத்திருந்தது.

[ ‘பாரதி’ இதழிலிருந்து..நவம்பர் 2003]

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *