கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 13,423 
 

சணகர் தன் குடிலில் அமைதியின்றிஅங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். எதிரேவந்து நிற்கும் மகன் சாணக்கியனை ஒருமுறைபார்த்துவிட்டு சாளரத்தின் வழியே வெளியேபார்த்தார். விந்திய மலைப் பகுதியின் ஏதோ ஒருசிகரம், பனிபடர்ந்து தெரிந்தது.

தந்தையின் தளர்ந்துபோன நடை, கண்களில் தெரிந்த கவலை. இதற்கு சாணக்கியனுக்குக் காரணம்தெரியவில்லை. சிறிது நேரம் சிகரத்தையே பார்த்துக்கொண்டிருந்தவர், சாணக்கியன் பக்கம்திரும்பினார்.

நந்தப் பேரரசுக்கு எதிராக, தட்சசீலப் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்று திரட்டி, கிளர்ச்சிசெய்வதாக அங்கிருந்து செய்திகள் வருகின்றனவே இது உண்மையா?’’

‘‘உண்மைதான். தனநந்த அரசின் இன்றைய ஆட்சி, எல்லா நிலைகளிலும் தோற்று விட்டது. தனநந்தனை எதிர்த்து மக்கள் புரட்சி செய்ய ஆயத்தமாகி விட்டார்கள். புரட்சிக்கு யார் தலைமைஏற்கப்போகிறார்கள் என்பதுதான், இப்போதைய முக்கிய கேள்வி!’’

‘‘இந்த தேசத்தின் புதிய தலைமையை நாம் உடனே கண்டுபிடித்தாக வேண்டும். அது பற்றிக்கூறத்தான், உன்னை அவசரமாக அழைத்தேன். அதற்கு முன் இதைப்படித்துப் பார்.’’

அவர் சமீபத்தில் எழுதி முடித்த ஓலைச்சுவடியொன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார். கிரகங்களின்சஞ்சாரங்களை வைத்து அவர் கணித்து எழுதியிருந்த ஓலை அது. தந்தையுடன் பேசிக்கொண்டேஅவைகளை ஒவ்வொன்றாகப் புரட்டிக்கொண்டே வந்தவன், கடைசி ஓலையைப் பார்த்துவிட்டு

பிரமித்துப் போய் நின்றான்.

‘நந்தப் பேரரசு வீழப்போகிறது. அடுத்து மெளரியப் பேரரசு அதிகாரத்தைக் கைப்பற்றும். அதைஉருவாக்க ஒரு அந்தணன் முன் நிற்பான். அவன் வழிகாட்டுதலின் பேரில்தான் அந்த அரசு கீர்த்திபெறப் போகிறது. இது சத்தியம். சணகர் கணிப்பு’ என்று அந்த ஓலையில் இருந்தது. இதைப் படித்தசாணக்கியன், ‘‘மெளரியப் பேரசை ஆளப்போகிற அந்த மகத்தான மனிதன் எங்கே இருக்கிறான்?அதை முன்னின்று செயல்வடிவம் கொடுக்கப் போகிற அந்த அந்தண வாலிபன் யார்?’’

‘‘அந்த அந்தணன் நீயாகக்கூட இருக்கலாம். அந்தப் பேரரசை ஆளப்போகிறவனையும் நீதான்தேர்ந்தெடுக்கவும் போகிறாய்.’’

‘‘தந்தையே…’’

‘‘உண்மைதான். இப்பொழுது உனக்கு மிக முக்கியப் பணியொன்று காத்திருக்கிறது. நீ உடனே‘பிப்பளி’ வனத்திற்குப் புறப்பட்டாக வேண்டும். உன்னிடம் நான் இரண்டு ஓலைகளைக்கொடுத்தனுப்புவேன். அதில் ஒரு செய்தி, அங்கிருக்கும் மூராதேவி என்கிற பெண்ணுக்கு. மற்றொன்றுதட்சசீலப் பல்கலைக்கழக பிரதம அத்யட்சகருக்கு (பிரின்ஸ்பால்). மூராதேவியைப் பார்த்துவிட்டு நீ அங்கிருந்தே தட்சசீலம் போகும்போது, உன்னுடன் மூராவின் மகன் சந்திரகுப்தனும் வருவான். அவனைதட்ச சீலப் பல்கலைக்கழகத்தில் அரசியல் பிரிவு மாணவனாகச் சேர்த்துவிடு. இந்த இரண்டாவதுஓலையில் அதன் விவரமிருக்கிறது.’’

‘‘யார் இந்த சந்திரகுப்தன்? யார் இந்த மூராதேவி?’’

‘‘தனநந்தனின் ஆசைநாயகி. அவளுக்குப் பிறந்தவன்தான் சந்திரகுப்தன். அரசியல் சதுரங்கத்தில்மூராவை வேறு ஜாதிப் பெண் என்று அவமானப்படுத்தி, அரண்மனையில் ஒதுக்கிவைத்துவிட்டார்கள்.மூராவுக்குப் பிறந்தது ஆண் குழந்தையென்பதால், அடுத்து அரசு பரம்பரை வாரிசுக்கு அவன் வந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு, அவர்கள் இருவரையும் ஒழித்துவிடவும் சதியாலோசனை நடந்தது.நந்தன் அரண்மனையில் மூராவின் இனத்தவர்களே அதிகம் பணி புரிவதால், அவர்கள் மூலமாக இந்தஅரசியல் ரகசியம் மூராவுக்குத் தெரிந்துவிட்டது. இனி அந்த அரண்மனையில் இருக்கும் ஒவ்வொருநாளும் ஆபத்தான நாளே என்பதைப் புரிந்துகொண்ட மூரா, இரவோடு இரவாகஅரண்மனையிலிருந்து வெளியேறி, எனது ஆஸ்ரமத்தில் தஞ்சம் புகுந்துவிட்டாள்.எனது ஆஸ்ரமத்தில் இருப்பதும் அவ்வளவு பாதுகாப்பில்லை என்பதால், அவளை அவளதுவிஸ்வாசிகள் சிலருடன் நான் அவளை ‘பிப்பளி’ வனத்திற்கு அவளது மகன் சந்திரகுப்தனுடன்அனுப்பிவைத்து விட்டேன். மகன் சந்திரகுப்தனுடன் மூரா அங்கேயிருப்பது இதுவரை யாருக்கும்தெரியாது. மூரா சந்திரகுப்தனைப் பற்றிய ரகசியம் எனக்குத் தெரியும் என்பதைப் புரிந்து கொண்டதனநந்தன், அரசியல் ரீதியில் எனக்கு மறைமுகமாகப் பல தொல்லைகள் தர ஆரம்பித்தான்.நான் எதற்கும் அஞ்சவில்லை என்றாலும், எனக்கும் மூராவுக்கும் நடுவே ரகசிய தொடர்புகள் அரசியல்ரீதியில் இன்னுமிருக்கிறது. சந்திரகுப்தன் இன்று வளர்ந்து வாலிபனாகி விட்டான். அவனை, அடுத்தஅரியணைக்குத் தயார்படுத்த வேண்டிய பொறுப்பு நம்மை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது’’என்றார் சணகர்.நகர எல்லை, நதியோரம், மலைப்பாதை என்று நீண்ட, சாணக்கியனின் பயணம், பிப்பளிவனப்பகுதியுடன் கூடிய நகரை அடையும்போது, மூன்று தினங்களாகி விட்டன.மூராதேவியின் இருப்பிடத்தை அங்கேயுள்ள விடுதியொன்றில் விசாரித்து விட்டு வெளியேவந்தபோது, நான்கு வீரர்கள் அவனை வழிமறித்து நின்றார்கள்.

‘‘யார் நீங்கள்? என்னையேன் மறிக்கிறீர்கள்?’’

‘‘வா எங்களுடன்!’’

‘‘எங்கே? ஒரு யாத்திரிகனான என்னைச் சுதந்திரமாகப் போகவிடுங்கள்.’’

‘‘யாத்திரிகனா! எங்கிருந்து வருகிறாய்?’’

‘‘பாடலிபுத்திரத்திலிருந்து வருகிறேன்.’’

‘‘சுங்கச் சாவடியில், உனக்கும், உன் குதிரைக்கும் அனுமதி முத்திரை வாங்கியிருக்கிறாயா?’’

‘‘பிப்பளி தனி தேசமில்லையே?’’

‘‘தனி தேசமல்லதான். என்றாலும், எங்களுக்கென்று பண்டகச் சாலை, கஜானா எல்லாம் இருக்கிறது.உன்னுடன் வீண் விவாதம் செய்ய எங்களுக்கு நேரமில்லை. பேசாமல் எங்களுடன் வா!’’ _ இரண்டுவீரர்கள் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு நிற்க, இருவர் சாணக்கியனுக்கு இருபுறமும்நின்று அவனை பலவந்தப்படுத்தாதக் குறையாக இழுத்தனர். என்னதான் நடக்கிறது பார்க்கலாமேஎன்று அவர்களுடன் நடந்தான்.

சுற்றிலும் ஏராளமான சந்தன மற்றும் பிப்பளி மரங்கள் வானுயர்ந்த தேவதாரு, நடுவே முற்றிலும்மரத்தினாலேயே வடிவமைக்கப்பட்டு உருவான இல்லத்தின் முன், சாணக்கியனை அழைத்துப் போய்நிறுத்தினார்கள். மரத்தினால் கட்டப்பட்ட வீட்டின்மேல் ஏராளமான கொடிகள் படர்ந்து அதன்கூரையையே மறைத்துக் கொண்டிருந்தன. பார்ப்பதற்கு லதாக்கிரகம் போன்றிருந்தது. அதைச் சுற்றிமயில்கள் சுற்றிக் கொண்டிருந்தன. இவர்கள் போய் நின்றவுடன், மரக்கதவைத் திறந்து சிவந்தநிறத்தில் அதிக உயரமும் குள்ளமுமில்லாத ஒரு பெண்மணி வெளியே வந்தாள். ஓரங்களில்மணிகளின் வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை மற்றும் நிறைய மாணிக்கக் கற்களில் ஆபரணங்கள்.தோற்றத்திலும் முகப் பொலிவிலும் ஒரு கம்பீரம் இருந்தது.

‘‘கேட்டால் பாடலிபுத்திரத்திலிருந்து வரும் யாத்திரிகன் என்கிறான். யாத்திரிகன் உங்களைப் பற்றிஏன் விசாரிக்க வேண்டும்? இவனைப் பார்த்தால் ஒரு யாத்திரிகன் போலத் தோன்றவில்லை. மகதஒற்றனாக இருப்பானோ எனச் சந்தேகிக்கிறோம். யார், என்னவென்று விசாரித்துவிட்டு எங்களுடன்அனுப்பிவையுங்கள். சென்ற முறை வந்த மகத ஒற்றர்களை நல்ல மரியாதை செய்து அனுப்பி வைக்க,விந்தியமலை உச்சிக்கு அழைத்துப்போனது போல இவனை அழைத்துப் போய் விடுகிறோம்.’’

‘‘நீங்கள் போங்கள். இவனை நான் விசாரிக்கிறேன்.’’

சாணக்கியனின் குதிரையை அங்கிருந்த மரத்தில் பிணைத்துக் கட்டிவிட்டு வீரர்கள் அகன்றனர்.

‘‘நல்லவேளை, உன் உருவம்தான் உன்னைப் பாதுகாத்திருக்கிறது. பார்த்தால் அந்தணன் போலத்தோன்றுகிறாய். உடம்பில் பூணுல், மேலே உத்தரியம், நெற்றியில் சந்தன இழைகள், தலையில் குடுமி,கழுத்தில் உருத்திராட்ஷ மணிமாலைகள். யார் நீ, எங்கிருந்து வருகிறாய்?’’

‘‘சாணக்கியன்.’’

பதற்றமடைந்த மூரா, கதவைச் சாத்தி விட்டு அவனுடன் உள்ளே வந்தாள்.

விருந்தோம்பலெல்லாம்நடந்து முடிந்தது.அவன் கொண்டு வந்திருந்த ஓலையை மூராவிடம் கொடுத்தான். மூரா ஓலையைப் படித்துக்கொண்டிருக்கும்போது, வெளியே குதிரையின் குளம்பொலியும் அது வாசலில் வந்து நிற்பதும் கேட்டது.எல்லாவிதமான நிகழ்வுகளுக்குமாகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு இடையில் உள்ள சிறியகத்தியின் பிடியில் கையைவைத்தபடி பரபரப்புடன் எழுந்து நின்றான் சாணக்கியன்.

‘‘பயப்படாதே. இந்த இடத்திற்குள் அவ்வளவு சுலபமாக யாரும் வந்து விட முடியாது.’’
மூரா பேசிக் கொண்டிருக்கும்போதே, கதவைத் திறந்துகொண்டு அந்த வாலிபன் உள்ளே வந்தான்.வானத்துச் சூரியனிலிருந்து ஒரு செதில் கீழே வந்துவிட்டது போன்றதொரு பிரகாசம். அந்த வீடேதிடீரென்று பளிச்சிட்டது. புஜங்களும் கைகளும் தசைப்பிடிப்புடன் காணப்பட்டன. விரிந்த மார்பு,கழுத்து வரை தொங்கும் கேசம். முகத்தில் அசாத்திய தேஜஸ். திடகாத்திரமான அந்த வாலிபனைப்பார்த்த நொடியிலேயே சாணக்கியன் பிரமித்துப் போய்விட்டான்.இந்த மாவீரன் யார்? _ கேள்வி மனதிற்குள்ளும் பார்வை மூராவின் பக்கமுமாகப் பதிந்தது.

‘‘என்ன சாணக்கியா அப்படிப் பார்க்கிறாய்? இவன் என் மகன் சந்திரகுப்தன்.’’

‘‘சந்திரகுப்தன்!’’

‘‘சந்திரா, இவன் பாடலிபுத்திர குருதேவர் சணகரின் புதல்வன் சாணக்கியன். தட்சசீலப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுகொண்டே மகதப் பேரரசை எதிர்த்து புரட்சிக் குரல் எழுப்பி,நந்தனின் நிம்மதியைக் குலைத்து அவனைச் சுட்டுக் கொண்டிருக்கும் நெருப்பு.’’

சந்திரகுப்தன் சிரித்துக் கொண்டே சாணக்கியனைத் தழுவிக் கொண்டான்.

‘‘வா நண்பா, உன் வரவும் அறிமுகமும் நல்லதாக மலரட்டும். நீ பிப்பளி வனத்திற்கு என் தாயாரைப்பார்க்க வரப் போகிறாய் என்ற செய்தி எங்களுக்கு முன்பே தெரியும்.’’

‘‘சந்திரா, இனி பேசுவதற்கு நேரமில்லை. நீ உடனே தட்சசீலம் புறப்படுவதற்கான ஏற்பாடுகளில்கவனம் செலுத்து. சாணக்கியனைப் பார்த்தபின் ஒரு நாள்கூட தாமதிக்கக்கூடாதாம். ‘சந்திரகுப்தனின்ஒவ்வொரு நாளும் இனி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்’ என்று ஓலையில் சணகர் குறிப்பிட்டிருக்கிறார்.உன்னுடைய நண்பனுடன் உட்கார்ந்து பயணகாலம், பயண வழி எல்லாவற்றையும் பேசி முடிவுசெய்து கொள். எல்லாவற்றிற்கும் உன்னுடைய எதிர்கால வழிகாட்டி, சாணக்கியன்தான். அவன்கட்டளைப்படிதான் இனி நீ நடக்க வேண்டும்.’’

தாயாரின் சொல்லுக்குக் கீழ்ப் படிந்தவன்போல, தாயாருக்கு சிரம் தாழ்த்தி வணங்கினான்.

மூராதேவியின் பிப்பளி வன இல்லத்திலிருந்து இரண்டு புரவிகள் புறப்பட்டன.

சாணக்கியனைத் தொடர்ந்து மகன் சந்திரகுப்தன் தட்சசீலம் நோக்கி தன் முதல் பயணம்தொடங்குவதைப் பரவசத்துடன் பார்த்தபடி நின்றாள் மூரா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *