ஸெல்லின் செல்வர் அப்புசாமி

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 12,091 
 

அப்புசாமி மட்டும் ஒரு தீவிர கட்சித் தொண்டனாக இருந்திருந்தால் நிச்சயமாக மனைவி சீதாவின் புகைப்படத்தை எல்லாச் செய்தித் தாள்களிலும் குறைந்த பட்சம் அரைப் பக்கத்துக்காவது போட்டு, ‘ஒலி கொடுத்த தெய்வமே! ஒப்பில்லா மணியே! ஸெல்லு கொடுத்த ஸெகதீஸ்வரியே! என் காது உன் காலில் அம்மா! நீயே இல்லத்தரசி! நீயே ஸெல்லுத்தரசி!

இவண்

உன் ஊழியனும் கணவனுமான ஸெல்லுசாமி (பழைய பெயர் – அப்புசாமி) என்று புகழ்மாலை சூட்டியிருப்பார்.

பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிற அளவுக்கு அவருக்கு வசதி இல்லாததால் பூசலார் நாயனார் மனசுக்குள்ளேயே இறைவனுக்குக் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்த மாதிரி, மனைவியைப் பலவாறு தோத்திரம் செய்து, அனைத்துப் பத்திரிகைகளிலும் மானசீகமாகப் பிரசுரித்து மகிழ்ந்தார்.

ஒரு பத்திரிகையில் இரண்டு முழுப்பக்கத்துக்கு சீதாப்பாட்டியின் முகத்தை மட்டும் க்ளோஸப்பாகப் போட்டு, ஓர் ஜாதகக்தில் ஸ்டாம்பு சைஸில் அடக்க ஒடுக்க முகபாவத்துடன் பயம் முக்கால் பக்தி கால்வழியும் அப்புசாமியின் தலை!

‘தலைவியின் காலடியில் தொண்டன் அப்புசாமி? என்று நாலே நாலு வார்த்தை மட்டும்தான் இரண்டு பக்கத்திலும். இன்னொரு பத்திரிகையில் அதனுடைய பதினாறு பக்கங்களிலும் ஓரொரு பக்கத்திலும் சீதாப்பாட்டியின் தலை. ஒரே மாதிரியான தலை. கம்பீரமான அதே சிரிப்பு. ஏன் பதினாறு பக்கத்திலும் ஒரே தலை? ஆமாம். இன்னும் பதினாறு பக்கம் இருந்தாலும் போடுவேன். கேட்க நீ யார்? ஸெல்லு வழங்கிய என் செல்லம்மா என் சீதை! உனக்கேன் கும்பி எரிந்து குடல் கருகுது. வெந்த என் உள்ளத்தை சொந்த ஸெல்லு கொடுத்து, ரணம் ஆற்றிய குணமே! உன் கருணையே மறவேன் தாயே மறவேன்!

தன் மனசுக்குத் தோன்றிய வசனத்தையெல்லாம் மனைவி மீது மானசீகமாகக் கொட்டி மகிழ்ந்தார்.

ஒரு சாண் வயிறு வளர்க்கப் பல சாண் நீளத்துக்குப் புகழ்வதுதான் மரபாகிவிட்டது! அப்புசாமி ஓர் ஆறங்குல நீள ஸெல்லுலர் போனுக்காகத்தான் மனைவியைப் புகழ்ந்து கொண்டாடினார்.

அவரது நெடுநாளைய ஆசையைச் சீதாப்பாட்டி நிறைவேற்றி விட்டாள். ‘உங்களுக்கு பர்த்டே ப்ரெசென்ட்டாக என்ன வேண்டும்? உங்கள் சாய்ஸ்!’ என்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வார்த்தை மரியாதைக்குக் கேட்டதும் டகாரென்று பிடித்துக் கொண்டு விட்டார்.

“சீதே! நீ போகிற இடத்திலெல்லாம் கையில் வெச்சிக் கொண்டு பேசறியே! அது மாதிரி எனக்கும் ஒரு ஸெல்போன் வாங்கிக் குடுத்துடு! என் ஆயுசுக்கும், ஏன் அவசியமானால் ஆயுசு முடிஞ்சவுட்டுக் கூட ஆவியா இருந்து உன்னை வாழ்த்திக் கொண்டிருப்பேன்! இதுவே என் இறுதி ஆசை!” என்று அவர் சொன்னது சீதாப்பாட்டியின் மனசை ‘டச்’ செய்து விட்டது.

“ஓய் டு யு டாக் ரப்பிஷ்! வாயைப் போய் வாஷ் செய்யுங்க!” என்று செல்லமாகக் கடிந்து கொண்டு பிறந்த நாளன்று ஞாபகமாக அவருக்கு ஒரு ஸெல் போன் வாங்கித் தந்து விட்டாள்.

அது வந்ததிலிருந்து அப்புசாமி ‘சொல்லின் செல்வர்’ மாதிரி ‘ஸெல்லின் செல்வர்’ ஆகிவிட்டார் – முழு நேரத்துக்கும்.

பாட்டி காரில் போய்க் கொண்டிருக்கும் போது வீட்டிலிருந்து அப்புசாமி கூப்பிட்டு நலம் விசாரிப்பார்.

கழகக் குரலாக இருக்கும் என்று பாட்டி காதில் வைத்தால் அரை நிமிஷத்துக்கு முன் பேசிய கணவரேதான். “ஹி ஹி! சீதே! எப்படி இருக்கே! கார் ஓட்டிண்டிருக்கியாக்கும்! இப்போ எந்த இடத்திலே இருக்கே!” என்று மினிட்டுக்கு மினிட் அவள் இருக்குமிடத்தை விசாரிப்பார்.

“பனகல் பார்க் பக்கமா? சீதே! பசுபசுன்னு கொத்தமல்லி இருக்கும்! ஒரு கட்டு வாங்கிப் போட்டுண்டு வா!” என்று உத்தரவிடுவார்.

“இங்கே மழை தூறுகிறது! துணியையெல்லாம் எடுத்து மடிச்சு வெச்சிட்டேன். ஆமாம். பட்டுப் புடவையை இன்னிக்கே கொண்டு போய் அயர்னுக்குக் கொடுத்துடட்டமா? மணி மூணாகிறது. அவன் பாட்டுக்கு வண்டியைத் தள்ளிகினு போயிட்டான்னா… ஹஹஹ! எதுக்குக் கேட்கிறேன்னா…”

“ப்ளீஸ்!” என்று சீதாப்பாட்டி அலறுவாள். “போனைக் கட் பண்ணுங்க. ஸெல்லில் பேசறீங்க ஜாக்கிரதை! உங்க இடியாடிக் அரட்டைக்கெல்லாம் நான் பே பண்ணியாகணும்!”

சிகரம் வைத்தாற்போல் ஒரு காரியம் ஆகிவிட்டது. டிரைவ் செய்து கொண்டே ஸெல்லில் பேசியதற்காக சீதாப்பாட்டியை ஒரு சார்ஜண்ட் மடக்கிவிட்டான். ஆன் த ஸ்பாட் ஆயிரம ரூபாய் அபராதம் போட்டே தீருவேன் என்று சார்ஜ் ஷீட்டைக் கூட எடுத்து விட்டான்.

சீதாப்பாட்டி தான் ஓர் ஆனரரி மாஜிஸ்திரேட்டாக இருந்ததை விசிட்டிங் கார்டை எடுத்துக் காட்டிக் கூறியதால் ஒரு சலாமடித்து சார்ஜண்ட் அபராதம் விதிக்காமல் விட்டு விட்டான்.

“இனி மேல் நெவர் யூஸ் யுவர் ஸெல், ஐ ஸே” என்று கடுமையாக எச்சரித்து வைத்தாள் பாட்டி.

ஆனால் அவள் ஆணையால் அப்புசாமியின் ஆவலுக்கு அணையிடமுடியவில்லை.

பாத்ரூமில் இருந்து கொண்டு ஸெல்லில் நண்பன் ரசகுண்டுவின் ஓட்டலுக்கு பேசுவார். “சப்ளையர் ரசகுண்டு அங்கே இருக்காரா?” என்பார். “அவரு டூட்டியிலே இருக்கார்” என்று முதலாளி கடுகடுத்தால், “அர்ஜெண்டா கூப்பிடுங்க சார். அவுங்க அம்மாவை ஜெனரல் ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்குது” என்றார்.

ரசகுண்டு லைனில் வருவதற்கு ஐந்து நிமிஷமாவது ஆகும்.

“என்னடா ரசம்! ரொம்ப வேலையோ? உங்க முதலாளி என்ன ரொம்பத்தான் அலட்டிக்கிறான்!” என்று சாவகாசமாகப் பேசுவார். “இன்னிக்கு பீச்சுக்கு வர்ரியா? பீமனையும் தள்ளிகிட்டு வா. முடிஞ்சா எதுனா மிக்ஸர், பக்கோடா அழுக்கிக்கினு வா… ஏண்டா துடிக்கிறே? உங்க முதலாளி என்ன தலையை வாங்கிடுவானா?” இந்தத் தினுசில் சாவகாசமாகப் பேசுவார்.

மாதத்துக்கு அறுநூறு ரூபாய் கட்டியது போக சீதாப்பாட்டி இப்போது அப்புசாமியின் ஸெல்லுக்கும் சேர்த்து, அவர் வீணாகக் கூப்பிடும் கால்களுக்கும் சேர்த்து ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் கட்ட வேண்டியிருந்தது.

ஸெல்லை ஒரு வினாடியும் பிரியாது, செல்லுகிற இடமெல்லாம் எடுத்துக் கொண்டு போவார். நடந்து கொண்டே பேசுவார். குளித்துக் கொண்டே, ஏன் தூங்கிக் கொண்டே கூடப் பேசுவார். ‘என் குறட்டை சத்தம் கேட்டியா? ஹஹஹ! சிம்ம கர்ஜனை மாதிரி இல்லே? சீதேக் கிழவி இது ஒண்ணுக்குத்தான் என்கிட்டே பயப்படறா?” என்று ரசகுண்டிடம் பேசிப் பெருமைப்பட்டு மகிழ்வார்.

குரங்குகிட்டே, கொடுத்த வாழைப் பழத்தைப் பிடுங்குவதை விட, அப்புசாமியிடம் தந்த ஸெல்லைப் பறிப்பது படு கடினமான வேலை என்பதை சீதாப்பாட்டி உணர்ந்தாள்.

நைஸாக அவரிடமிருந்து ஸெல்லை வாங்கி உள்ளேயிருக்கிற ஸிம் கார்டைக் கழற்றிச் செயலிழக்கச் செய்து விடலாமென்று பார்த்தாள். ஆனால் ஸெல்போனை இரவும் பகலும் இருபத்து நாலு மணி நேரமும் நல்ல பாம்பு மாணிக்கத்தைப் பாதுகாக்கிறது என்ற கதையாக, சந்தேகக் கணவன் மனைவியை நாள் பூரா உஷாராகப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஆட்டோப் பிரியாணி மீட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போல ஸெல்போன் நினைவாகவே இருந்தார்.

“பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு ஒரு ப்ராவர்ப் உண்டு. அது சரியாயிருக்கு” என்றாள் சீதாப்பாட்டி.

“என்னைப் பிச்சைக்கார நாயி என்கிறே? அப்படித்தானே?” என்ற சீறினார் அப்புசாமி.

“ஏறக்குறைய” என்றாள் சீதாப்பாட்டி.

அப்புசாமியின் ரோஷப் பகுதிகளில் ஏவுகணையாக அந்த வார்த்தை பாய்ந்தது.

“இனிமேல் ஒரு பைசா என் ஸெல்லுக்காக நீ தரத் தேவையில்லைடி. ஸெல் பில்லுக்காக நான் வண்டி இழுத்தோ, சென்ட்ரல் ஸ்டேஷனிலே போய் லைசன்ஸ் இல்லாத போர்ட்டராக உழைத்தோ, கட்சி ஊர்வலங்களிலே கலவரத் தொண்டனாகக் கலந்து கொண்டோ சம்பாதிக்கிறேண்டி.”

“வெல்கம். ஆம்பிளையாக இருந்தால் செய்யுங்கள்.”

அப்பு¡சமியிடம் ரோஷத் தீயை மூட்டிவிட்டு சீதாப்பாட்டி ஷாப்பிங்குக்குப் புறப்பட்டு விட்டாள்.

சென்ட்ரல் ஸ்டேஷன். ஸதாப்திக்குப் போகும் பெங்களூர்க் கும்பல் விடியற்காலையில் விரைந்து கொண்டிருந்தது.

வயசான ஒரு போர்ட்டர் – வித்தவுட் யூனிபார்ம், “சார், சார்! லக்கேஜு சார்! மூட்டை முடிச்சு அம்மணி! குடுக்கறதைக் குடுங்க! போணிபண்ணுங்க தாயி!” என்று சகல பிரயாணிகளிடமும் ஓடி, ஓடி வேட்பாளர் ஓட்டுக்குக் கொஞ்சுவது போல் கார்களை வழிமறித்துக் கரடிப் பொம்மை விற்பவன் போல கெஞ்சிக் கொண்டிருந்தார்.

“யோவ பெரீவரு!” என்று இரும்புக் கரம் ஒன்று அப்புசாமியைக் கப்பென்று பற்றியது.

சிவப்பு உடையும் லைசன்ஸ் பட்டையும் அணிந்த அதிகார பூர்வமான கொழுத்த போர்ட்டர்!

“எடுமே கையை!” என்றார் அந்த யூனிபாரம் அணியாத கிழவர்.

“ஏய்யா பெரிசு! நாங்க இங்கே உட்கார்ந்திருக்கிற வங்கள்ளாம் புய்யனுங்களா? மரியாதியா ஏரியாவைக் காலி பண்ணிகிட்டு ஓடிரு!”

“ஓடாட்டி?”

“மவனே! கிராஸ் பண்ணாதே! கிழிஞ்சு பூடுவே! ஒரு எலும்பு கூட வேலைக்கு ஒதவாது.”

“மேலே கையை வெச்சிப்பாரு.”

“போடாங்க சொன்ட்டி! கையை வைக்கற தென்ன தூக்கித் தண்டவாளத்திலேயே கடாசிடுவோம்…”

“தைரியமிருந்தா செய்யி! முதல் அடி என்னுதா இருக்கட்டும்!” அப்புசாமி போர்ட்டரை ஓர் குத்து விட்டார்.

தனது பலத்தையும், சட்ட மீறுதலையும் கொஞ்சமும் எண்ணிப் பார்க்காமல் உரிமம் பெற்ற போர்ட்டரிடம் அவர் காட்டிய வீரம் சில சிமிட நேரமே நீடித்தது. கலாமை எதிர்த்த லட்சுமி ஸஹாய்போல வலுவில்லாத எதிர்ப்பு.

போர்ட்டர் ஒரு ·ப்ரீ கிக்கொடுத்தான் அப்புசாமிக்கு!

இலவச இணைப்பாக மூக்கில் ஒரு குத்து. ‘ஹா’வென்று மல்லாந்தார் அப்புசாமி. சக போர்ட்டர்களும் அப்புசாமிக்குத் தங்களாலான உதைகளைத்தந்தனர்.

கும்பல் கூடிவிட்டது. அப்புசாமி நினைவு இழக்கு முன் ஸெல்லில் வீட்டு எண்ணை அழுத்தினார். “சீ… சீ… சீதே! இங்கே சென்ட்ரல் ஸ்டேஷன்… ஸதாப்தி… நான் நான்… ஸமாப்தி! போர்ட்டர் வெள்ளம்… ரத்தம் அடிச்சி… நீ… வா… வா…”

அப்புசாமியின் மூக்கு மேல் பயங்கரமான பிளாஸ்திரி போட்டிருந்தது. டிரிப்ஸ் இறங்கிக் கொண்டிருந்தது.

ஒரு தனியார் நர்ஸிங் ஹோமில் செளகரியமான படுக்கையில் இதமான ஏர்கண்டிஷனுடன் தான் இருப்பதை உணர்ந்தார் அப்புசாமி. அருகே ஆவி பறக்கும் சூப்புடன் சீதாப்பாட்டி காத்திருந்தாள். அப்புசாமி அந்த ஆவி தன்னுடையதா சூப்புடையதா என்று சந்தேகாஸபதமாகப் பார்த்து மூக்கைத் தடவிக் கொண்டார். மூக்கு இருந்த இடத்தில் ஒரு ஸ்பீடு பிரேக்கர்!

“சீதே! சீதே! என் மூக்கு?” அலறினார்.

சீதாப்பாட்டி, கவலையுடன் “ஓய் த ஹெல் நீங்கள் ஸ்டேஷனுக்கெல்லாம் போய…” என்று அனுதாப்பட்டாள்.

“சீதே! ரோஷமில்லாமல் பல வருஷம் வாழறதைவிட, ரோஷத்தோடு சில மணி நேரம் வாழ்ந்தாலும் போதும்னு தோணிதது. ஆண்டவன் கொடுத்த கை, கால் உழைக்கறதுக்கு இருக்கு. மூட்டை தூக்கத் துணிஞ்சிட்டேன்!

மூக்கு தேவலையானதும் லைசன்ஸ் பட்டை வாங்கிகிட்டு முழு நேரப் போர்ட்டராக வேலை செய்யப் போறேன். என்னுடைய ஸெல் போனுக்காக நான் உழைக்கத் தீர்மானித்துவிட்டேன். நீ என் கண்ணைத் திறந்துட்டே. ஆனால் மூக்கை உடைச்சுட்டான் பாவி போர்ட்டர். ஆனால் நான என் ஸெல்லுக்காக உழைப்பதை மக்கள் சக்தி வந்தாலும் சரி, மகேசன் சக்தி வந்தாலும் சரி தடுக்க முடியாது. என் உயிரைக் கொடுத்து ஸெல்லைக் காப்பேன்!”

உங்கள் ஸெல்போன் பக்தியைப் பாராட்டறேன். ஆனால் என்றாள் சீதாப்பாட்டி. “உங்கள் ஸெல்போன் உங்க ஸெல் போன்… திணறினாள் சீதாப்பாட்டி.

“ஐயோ சீதே! என் ஸெல் எங்கே?” அவரை அவசரமாகத் தன் இடுப்பின் பக்கவாட்டுப் பகுதி, சுற்றுப் பகுதி மேல் கீழ் இடங்களைச் சோதித்துக் கொண்டார்.

வேறு ஏதேதோ தட்டுப்பட்டது! ஸெல் கிடைக்கவில்லை. “என் ஸெல்! என் ஸெல்!”

“பதட்டப்படாதீர்கள் டியர்! மனசைத் திடம் பண்ணிக்குங்க. எக்ஸைட் ஆகாதீங்க. உங்க ஸெல்… உங்க ஸெல்…”

“சீதே! என்னாச்சி என் ஸெல்போனுக்கு… எங்கே என் ஸெல்?”

“எனக்கு ஸெல்லை விட நீங்கதான் முக்கியம்…” கைக்குட்டையை உதடுகளில் ஒத்திக் கொண்டு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் சீதாப்பாட்டி.

“சீதே! இன்னாடி இழவு சொல்றே?”

“உங்க ஸெல்லைக் கொடுத்துத்தான் உங்களை மீட்டுக் கொண்டு வந்தேன். நீங்க மோதினது, தாக்கினது, போர்ட்டர்ஸ் யூனியன் தலைவரைப் பெரிய இடத்துலே மோதிட்டீங்க! விவகாரம் போலீஸ் வரைக்கும் போயிடும் போலிருந்தது. சரி, அவன் பெரிசு பண்ணாமல் இருக்க என்ன பண்றதுன்னு பார்த்தேன். நூறு இருநூறுக்கு காம்ப்ரமைஸ் ஆகிறவனாக இல்லை. உங்க செல் உங்க ஜிப்பாப் பையிலே இருந்தது.

சட்டென்று ஒரு ஐடியா ·பிளாஷ் ஆச்சு! இந்தாப்பா போர்ட்டர். கோபிச்சுக்காதே. கேஸைப் பெரிசு பண்ணாதே! சாரோட ஸெல் ·போனை நீ வெச்சுக்கோ’ன்னு சொல்லிட்டேன். உங்களை மீட்டுக் கொண்டு வர எனக்கு வேறு வழி தெரியலே. சென்ட்ரல் ஸ்டேஷன் பூராவும் ஜே ஜே என்று போர்ட்டர் கும்பல். உங்களை அடிப்பேன், வெட்டுவேன் குத்துவேன்னு… நீங்க மயக்கம் போட்டு விழுந்திருந்ததால் யு ஆர் நாட் அவேர் அ·ப்த ஸீனரி!”

“சீதே! ஸெல்லை அவனுக்குத் தாரை வாத்துட்டியா? அக்கிரமம்டி!” அலறினார்.

“ஸாரி மைடியர் சார்! யுவர் ஸெல்·ப் இஸ் மோர் ப்ரிஷியஸ் தேன் யுவர் ஸெல்,” என்றாள் சீதாப்பாட்டி அமைதியாக.

அப்புசாமிக்கு உடம்பு குணமாகி வீடு வந்து சேர்ந்து சில நாட்களாயிற்று.

“ஊம்… நடுவிலே வந்தது, நடுவிலே போய் விட்டது. வரும்போது என் கொண்டு வந்தோம். போகும்போது என்ன கொண்டு போகப் போகிறோம். இது என்னுதுதான்னு உலகத்திலே எதை எண்ண முடியுது. நேத்தைக்கு வேறொருத்தனது. இன்னிக்கு இன்னொருத்தனது. நாளைக்கு அது வேறொருத்தனது ஆகுது…”

துக்கம் கேட்க வந்த நண்பன் ரசகுண்டுவிடம் வேதாந்த பரமாக அங்கலாய்த்தார் அப்புசாமி.

ரசகுண்டு சொன்னான். “தாத்தா! நேத்துகூட உங்க ஸெல்லுக்கு போன் செய்தேன். அது எங்கியோ இருக்கு தாத்தா… அடிக்குது! ஆனால் ரீச்சபிளா இல்லை. ரீச்சபிளா இல்லைன்னு பதில் வர்றது. ஆ·ப் பண்ணி வெச்சிருக்காங்களோ என்னவோ” என்றான். “இப்பக்கூட போன் பண்றேன் பாருங்க” என்று டெலிபோனைச் சுழற்றினான்.

‘கிணு கிணுங்! கிணு கிணுங்!’ என்ற சன்னமான ஓசை சீதாப்பாட்டியின் காட்ரெஸ் பீரோவுக்குள்ளிருந்து மிக மிக மெல்லிசாக்க கேட்டது!

“அடியே கிழவி! போர்ட்டர்கிட்டே என் ஸெல்லைக் கொடுத்துட்டதெல்லாம் உன் ரீலா? பாவி…” சீதாப்பாட்டி சிரித்துக் கொண்டே, “உங்க ஸெல்·போனை நீங்க எனக்கு ப்ளெட்ஜ் பண்ணியிருக்கிறதாக நினைச்சுக்குங்க. உங்க மூக்கு வைத்தியத்துக்கு செலவான மூவாயிரம் ரூபாயை நீங்க மாசம் டென் ருபீஸோ ட்வென்ட்டி ருபீஸோ உங்க மன்த்லி பேட்டாவிலிருந்து கொடுத்துக் கழிச்சி முடித்ததும் உங்க ஸெல்லை நான் உங்களுக்குத் தந்துடறேன்!” என்றவாறு அவர் பதிலைத் தெரிந்து கொள்ள விரும்பாமல் கழகத்து வேலைக்குப் புறப்பட்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *