முதல் மாடி ரிஸப்ஷனிஸ்ட் ரஞ்சிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 1,679 
 

முதல் மாடி ரிஸப்ஷனிஸ்ட் ரஞ்சிதம் சொன்ன அழகியைக் கண்டு அழகி மூர்ச்சையான அதிசயக் கதை

“கேளாய், போஜனே! இந்தியாவின் அதி முக்கிய அவசரத் தேவையை முன்னிட்டு இப்போது ‘இந்திய அழகிப் போட்டி’ என்று ஒன்று அவ்வப்போது இங்கே நடந்து வருவதை நீர் அறிவீர் அல்லவா? அந்த மாதிரிப் போட்டி ஒன்று அண்மையில் அலங்கார் மாளிகையிலே, பல நீதிபதிகளின் முன்னிலையிலே நடைபெற, அதில் கலந்து கொண்ட அழகிகளில் ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து, ‘நீதான் இந்தியாவிலேயே சிறந்த அழகி’ என்று நீதிபதிகளில் ஒருவர் அவளுக்கு முடி சூட்ட முன் வர, அதை இன்னோர் அழகி எதிர்த்து, ‘அவளுடைய மார்பின் சுற்றளவும் நாற்பது அங்குலம்; என்னுடைய மார்பின் சுற்றளவும் நாற்பது அங்குலம், அவளுடைய தொடையின் சுற்றளவும் முப்பத்தாறு அங்குலம்; என்னுடைய தொடையின் சுற்றளவும் முப்பத்தாறு அங்குலம். அப்படியிருக்க, என்னை விட்டு விட்டு அவளுக்கு மட்டும் நீர் எப்படி முடி சூட்டலாம்?’ என்று தன் இன்ன பிற உறுப்புக்களின் அழகை அங்குலம் அங்குலமாக அளவிட்டுக் கூறிப் போர் முரசு கொட்ட, நீதிபதிகள் அத்தனை பேரும் அதற்கு மேல் செய்வது இன்னதென்று அறியாது அயர்ந்து போய்த் தவிக்க, ‘இந்த அழகிகள் இருவரில் ஒருத்தியை இவள்தான் சிறந்த அழகி என்று இன்னொருத்தி ஒப்புக்கொள்ளும்படியாகத் தேர்ந்தெடுத்து முடி சூட்ட இவ்வளவு பெரிய உலகத்தில் ஒருவரும் இல்லையா? என்று அந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் கதற, ‘இதோ தந்தோம், தந்தோம், தந்தோம் அபயம்! இந்தச் சிக்கலான விஷயத்தில் தக்க முடிவு காண இந்தத் தரணியில் இருவரே உண்டு. அவர்களில் ஒருவர் விக்கிரமாதித்தர் ஏ டு இஸ்ட்; இன்னொருவர் அவருடைய காரியதரிசி சிட்டி. ஓடிப்போய் அழைத்து வாருங்கள், அவர்களை!’ என்று அங்கிருந்த அபயப் பிரதானி ஒருவர் கூற, அதை அந்தப் போட்டியின் தலைமை நீதிபதி அப்படியே ஏற்று, இந்த முப்பத்திரண்டு அடுக்கு மாளிகையை உடனே தன் சக நீதிபதிகளுடன் முற்றுகையிட்டு, மிஸ்டர் விக்கிரமாதித்தரையும் சிட்டியையும் அலாக்காகத் தூக்கித் தங்கள் ‘இம்பாலா’ காரில் போட்டுக் கொண்டு, அலங்கார் மாளிகையை நோக்கி விரையலாயினர்.

பார்த்தார் விக்கிரமாதித்தர்; தம்முடைய காரியதரிசி சிட்டியுடன் கலந்து ஆலோசித்தார். அவர் விக்கிரமாதித்தர் காதோடு காதாக ஏதோ சொல்ல, ‘அத்தனை அழகிகளும் மீண்டும் மேடைக்கு வந்து தங்கள் அழகைப் பளிச், பளிச் சென்று காட்டட்டும்!’ என்றார் விக்கிரமாதித்தர். அவ்வளவு தான்; ‘அன்ன நடையில் என்ன புதுமை இருக்கிறது?’ என்று நினைத்த அழகிகள் அத்தனை பேரும் ‘வான்கோழி நடை.’ நடந்து மேடைக்கு வர, சண்டைக்கு நின்ற அழகிகள் இருவரையும் சக நீதிபதி ஒருவர் மிஸ்டர் விக்கிரமாதித்தருக்கும் சிட்டிக்கும் சாடையாகச் சுட்டிக் காட்ட, ‘உதித்துவிட்டது, உதித்தே விட்டது!’ என்று சிட்டி துள்ளிக் குதிக்கலாயினர்.

‘என்ன உதித்து விட்டது?’ என்றார் விக்கிரமாதித்தர் மெல்ல.

‘யோசனை!’

‘என்ன யோசனை?’ ‘அதை இத்தனை பேருக்கு எதிரே சொல்லக்கூடாது இப்படி வாருங்கள்; நாளை இதே போட்டி இங்கே நடப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டை உடனே செய்யச் சொல்லுங்கள். அதற்குள் நான் இன்னோர் அழகியைத் தேடிப் பிடித்து, இவர்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறேன். அவளையும் அவள் அழகையும் பார்த்து இந்த இருவரில் எவள் மூர்ச்சை போட்டுக் கீழே விழாமல் இருக்கிறாளோ, அவளுக்கு முடி சூட்டி விடலாம். அதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயாரா?’ என்று சிட்டியாகப்பட்டவர் கேட்க, ‘தயார், தயார்!’ என்றனர் அழகிகள் இருவரும்.

அதன்படியே அழகிப் போட்டி அன்று தள்ளி வைக்கப்பட்டது. காண்க… காண்க… காண்க…

மறு நாள்…..

பழைய அழகிகளோடு புதிய அழகியும் சேர்ந்து மேடைக்கு வந்ததுதான் தாமதம், சிட்டி சொன்னது சொன்னபடி அந்தச் சண்டையிட்ட அழகிகள் இருவரில் ஒருத்தி ‘தடா’ரென்று மூர்ச்சை போட்டுக் கீழே விழலாயினள். அவளை வீட்டுக்குக் கொண்டு போங்கள்; முகத்தில் சில்லென்ற காற்று பட்டவுடன் அவள் மூர்ச்சை தெளிந்து விடும்’ என்ற சிட்டி, உடனே மிஸ்டர் விக்கிரமாதித்தரை அழைத்து, இன்னொருத்திக்கு முடி சூட்டச் சொல்வாராயினர்.

அதைக் கண்டு முதல் நாள் நீதிபதிகள் அத்தனை பேரும் மூக்கின்மேல் விரலை வைப்பது பழமை என்று கருதி, வேறு எதன்மேல் வைப்பது என்று தெரியாமல் தவிக்க, அதற்குள் அங்கே வந்த ‘மிஸ் இந்தியா’ அவர்களைப் பார்த்து ‘மிஸ்’ பண்ணாமல் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு செல்வாளாயினள்.

வழியில், ‘உண்மையில் நீ அழைத்துக் கொண்டு வந்த அழகியைப் பார்த்தா அவள் மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்தாள்?’ என்று சிட்டியைக் கேட்டார் விக்கிரமாதித்தர்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை; அந்த மூர்ச்சை போட்டு விழுந்த அழகியை ஏற்கெனவே தெரியும் எனக்கு. கரப்பான் பூச்சி என்றால் அவளுக்கு ஒரே பயம் என்பதையும், அதைக் கண்டால் அவள் உடனே மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்து விடுவாள் என்பதையும் நான் அறிவேன். ஆகவே, புதிய அழகியிடம் அதைக் கொடுத்து, மெல்ல அவள் மேல் விடச் சொன்னேன். அவ்வளவுதான் என்று சிட்டி விளக்குவாராயினர்.

‘அப்படியா சேதி? அந்தப் பெருமை உன்னைச் சேருவதற்குப் பதிலாக இப்பொழுது என்னையல்லவா சேர்ந்திருக்கிறது?’ என்று விக்கிரமாதித்தர் உள்ளது உள்ளவாறு சொல்ல, ‘அதுதான் கிவ்வையார் அருளிச் செய்த கிலக நீதி!’ எனச் சிட்டி உரைப்பாராயினர்.

இத்தகைய பெருமை வாய்ந்த எங்கள் விக்கிரமாதித்தரை நீங்கள் வந்தவுடன் பார்த்துவிட்டால் அதில் அவருக்குத்தான் என்ன பெருமை, எனக்குத்தான் என்ன பெருமை? இப்போது வேண்டுமானால் போய்ப் பாருங்கள்!’ என்று முதல் மாடி வரவேற்பறைக்குப் பொறுப்பேற்றிருந்த வனிதாமணி ரஞ்சிதம் சொல்ல, அப்போது அங்கே வந்த ஆபீஸ் பையன், ‘அவர் கிளப்புக்குப் போய்விட்டார்!’ என்று அறிவிக்க, “நாளை வந்து பார்த்துக் கொள்கிறோம்’ என்று போஜனும் அவருடைய நண்பர் நீதிதேவனும் கீழே இறங்கிப் போவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…….

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *